5. பிற்கால மார்க்சியம்

5. பிற்கால மார்க்சியம்

இருபதாம் நூற்றாண்டின் இறுதிநிலையில் சில அடிப்படை மாற்றங் களை ஏற்றுக் கொண்டதாக நாம் நோக்கும் சற்றே புதிய விதமான மார்க்சியத்தைப் பிற்கால மார்க்சியம் எனலாம். பிற்கால மார்க்சியத்தை முதன்மையாக உருவாக்கியவர்களாக அண்டோனியோ கிராம்சி, அல்தூசர், ஃப்ராங்பர்ட் சிந்தனைப் புலத்தினர் என்னும் மூன்று தரப்பினரைக் குறிப் பிடலாம். அண்டோனியோ கிராம்சி (1891-1937) முன்வைத்த முக்கியக் கொள்கை, ஆதிக்கத்தைப் (hegemony-ஹெகிமனி) பற்றியது. இச்சொல் கிரேக்க மொழியிலுள்ள hegemon என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. இதன் அர்த்தம் தலைவன்/ஆட்சியாளன்/வழிகாட்டி என்பது. நம் சமகால முதலாளியத்தில் ஆதிக்க வகுப்பினர் செலுத்தும் கட்டுப்பாட்டினைக் குறிக்க இச்சொல்லை கிராம்சி கையாண்டார். இதனைப் பின்னர் கலாச்சார ஆய்வாளர்கள் ஏற்றனர்.

வெறும் வன்முறை அல்லது உடல் சக்தியின் மூலமாக மட்டும் ஆதிக்க வகுப்பினர் தங்கள் கட்டுப்பாட்டினை இன்று நிலைநாட்டிவிட முடியாது. தொழிற்சங்கம் போன்ற அழுத்தம் தருகின்ற குழுக்களின் தோற்றம், வாக்களிப்பது உள்ளிட்ட சிவில் உரிமைகளின் பரவல், கல்விப் பரவல் போன்ற காரணிகளால் ஆட்சி என்பது மக்கள் உடன்பாட்டின்மேல் அமைய வேண்டிய ஒன்றாகிவிட்டது. மக்கள் உடன்பாட்டினை அடையும் முக்கியக் கருவியாகப் பிரச்சாரம்/விளம்பரம் கையாளப்படுகிறது.

எனவே ஆட்சிக்குச் சாதகமானவர்கள், முதலாளித்துவத்தின் நன்மை களைப் பிரச்சாரம் செய்ய முற்படுகிறார்கள். இன்றைய மத அமைப்புகள், பள்ளிகள், குடும்பம், வெகுஜன ஊடகங்கள் போன்றவை ஆட்சியமைப் பிற்குச் சாதகமான கருத்துகளை மட்டுமே பிரச்சாரம் செய்கின்றன, நியாயப் படுத்துகின்றன. ஒடுக்கப்படும் மக்கள் இவற்றைச் செயலூக்கமின்றி உடன்பட்டு ஏற்றுக் கொள்வது கடினம். எனவே அவர்களுடைய அனுபவங் களுக்கும் நலத்திற்கும் ஒத்தவை போல் இக்கருத்துகள் மாற்றியமைக்கப் படுகின்றன. இவற்றைக் கீழவகுப்பினரும் ஓர் ஈரடி மனப்பான்மை யுடன்தான் ஏற்கிறார்கள். ஒரே சமயத்தில் ஆதிக்கத்திற்கு உடன்பட்டும், எதிர்த்துச் சிந்தித்தும் அவர்கள் இயங்குகிறார்கள். கீழ்வகுப்பினர், அரசு ஆதிக்கக் குழுவினர்க்கும் கருத்தியலுக்கும் செயலூக்கமின்றி ஆட்பட்ட வர்கள் என்ற கருத்தை மாற்றி, அவர்கள் அரசியல் பொருளாதார ஆதிக்கத்தை எவ்விதங்களில் எதிர்கொள்கிறார்கள் என்பதை நுணுக்கமாக ஆராய ஆதிக்கக்கொள்கை உதவிவருகிறது.

ஃபிரெஞ்சு மார்க்சியத் தத்துவஞானி அல்தூசர், ஐஎஸ்ஏ, ஆர்எஸ்ஏ என்னும் முக்கியக் கருத்துகளை உருவமைத்தார். ஒடுக்குமுறைக் கருவி கள் (ஆர்எஸ்ஏ-Repressive State Apparatus) என்பது அரசின் நேரடிக் கட்டுப் பாட்டிலுள்ள ஒழுங்கமைக்கும் ஒடுக்கும் சக்திகள் எல்லாவற்றையும் குறிக் கும் சொல். சட்ட மன்றங்கள், நீதிமன்றங்கள், காவல் துறை, இராணுவம், அரசு நிர்வாகம் போன்ற, நேரடியான, மறைமுகமான தண்டனையளிக்கும் ஆற்றல்பெற்ற எல்லா நிறுவனங்களையும் இச்சொல் குறிக்கும். மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்களை நேரடியாக ஒடுக்கித் தண்டனை தரும் அமைப்புகளாக இவை உள்ளன. இவற்றினுடைய மேலாதிக்கம் சட்டபூர்வமானது.

பொதுமக்கள்(சிவில்) சமூகத்திற்குள்ளாகவே உருவாகும் அமைப்புகள் கருத்துருவ அரசுக்கருவிகள் (ஐஎஸ்ஏ-Ideological State Apparatus) ஆகும். இவையும் சமூகத்தை ஒழுங்குபடுத்தும்/கட்டுப்படுத்தும் பணியையே செய்கின்றன. ஆனால் தண்டிப்பதன் மூலமாக அல்ல. பெரும்பாலும் மறை முகமாக. அரசாங்கத்தின் சார்பாக அதன் கருத்தியலை இவை பிரச்சாரம் செய்கின்றன. இக்கருவிகளில், கல்வி, குடும்பம், மதம், சட்ட அமைப்பு, கட்சி அரசியல் போன்ற யாவும் அடங்கும். மக்களின் ஒப்புதல்/ஏற்பு வாயிலாகத் தங்கள் பணியைச் செய்கின்றன. இன்றிருக்கும் உற்பத்தி உறவுகளைக் காப்பாற்றித் தக்கவைத்துத தொடரச் செய்யும் நிலைக்கு ஏற்றமாதிரியாகத் தங்கள் சார்பியல் தன்னிச்சைத் தன்மையால் (Relative Autonomy) நமது தன்னிலைகளைக் கட்டமைக்கின்றன. உற்பத்தி உறவுகள் இயற்கையானவை, நடுநிலையானவை என மக்களை நம்பவைத்து, நாம் என்றும் அடிமைப்பட்டிருக்குமாறு போதித்துத் தயார்ப்படுத்துவதே இவற்றின் வேலை.

இவை அரசு எந்திரத்துடன் ஒத்துச் செல்ல எப்படி மக்களைத் தயார் செய்கின்றன என்பதைக் காண்போம். கல்வி என்பது நடுநிலையானது என்பது மக்கள் மத்தியில் பொதுவாக நிலவும் கருத்து: காரணம், அது எல்லார்க்கும் உரியது. யாவரும் பொதுவான தேர்வு எழுதியே வெற்றி பெற்றாக வேண்டும். இதேபோல் சட்ட அமைப்பும் நடுநிலையானது: காரணம், யாவரும் சட்டத்தின் முன் சமம்! வெகுஜன ஊடகங்கள் நடுநிலையானவை: காரணம் அவை இருப்பதை அப்படியே செய்திகளாக முன்வைக்கின்றன. கட்சி அமைப்பு, அதனால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு என்பவை நடுநிலையானவை: காரணம், எவரும் அவற்றிற்கு எதிராகக் கருத்துச் சொல்லமுடியும். இவ்வாறு “ஜனநாயகம்” என்பதன் வாயிலாகவே கருத்தியல் ஒடுக்குமுறை நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளர்களுள் ஜெர்மனியைச் சேர்ந்த ஃப்ராங்பர்ட் சிந்தனைப் புலத்தினருக்குத் தனி இடமுண்டு. இவர்கள் ஃப்ராங்பர்ட் நகரிலிருந்த சமூக ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த அறிஞர்கள். இவர்களுள் தத்துவஞானிகளும் கலாச்சார விமரிசகர்களும் சமூக விஞ்ஞா னிகளும் உண்டு. இச்சிந்தனைப் புலத்தைச் சேர்ந்தவர்களாக உடனடியாக அடை யாளம் காணப்படுபவர்கள், மாக்ஸ் ஹார்க்ஹைமர், தியோடர் அடார்னோ, ஹெர்பர்ட் மார்க்யூஸ், எரிக் ஃபராம், வால்டர் பெஞ்சமின் போன்றவர்கள். இவர்களுக்கு அடுத்த தலைமுறையினருள் முக்கியமானவர் யூர்கன் ஹேபர்மாஸ். 1924இல் இப்புலம் தொடங்கப்பட்டது. மார்க்சியக் கொள்கையைப் புதியதொரு நோக்கில் செழுமைப்படுத்தியவர்கள் இப்புலத் தினர்.

சமூகத்தின் எல்லா விஷயங்களும் பொருளாதாரத்தினால் மட்டுமே நிர்ணயிக்கப் படுகின்றன என்பது செருப்புக்கேற்றவாறு காலை வெட்டுவது போல உள்ளது. இந்தப் பொருளாதார நிர்ணயவாதத்தைச் சூத்திரமாக வைத்து வறட்டு மார்க்சியவாதங்கள் உலகின் பல இடங்களில் சமூக நடை முறைகளை விளக்கிக் கொண்டிருந்த வேளையில் ஒரு புதிய திருப்பத்தை இவர்கள் உண்டாக்கினார்கள். இருபதாம் நூற்றாண்டின் மிக வளர்ந்த முத லாளித்துவத்தினை எதிர்கொள்ளத் தக்க ஒரு ஹெகலிய மார்க்சியத்தை உருவாக்குவது இவர்கள் நோக்கம். ஜியார்ஜ் லூகாச்சின் தாக்கம் இவர்கள் மீது மிகுதியாக இருந்தது. மார்க்சியத்தோடு உளப்பகுப்பாய்வினையும் இணைத்து நோக்குவது இவர்கள் முறையியலாக அமைந்தது.

அமைப்புவாதிகள், பின்னமைப்புவாதிகள் போல யாவற்றையும் வெறும் மொழியாகக் குறுக்கிவிடாமல், அதேசமயம் மார்க்சியத்தின் அடிப்படையான பொருளாதார நிர்ணயத்தன்மையையும் மறக்காமல், கலாச்சாரச் சக்திக ளாகிய மேற்கட்டுமானங்களும், இலக்கியம் கலை போன்றவையும் அடித் தளத்தை எவ்விதம் பாதிக்கின்றன அதன் பலகூறுகளை எவ்விதம் தீர்மானிக்கின்றன என்று இவர்கள் எடுத்துக்காட்டினார்கள். பொருளாதார, கலாச்சார, அரசியல் ஊடாட்டத்தினை சரிவர கவனித்ததாலேயே இவர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். ஃப்ராங்பர்ட் சிந்தனைப் புலத்தினரைப் பற்றி எஸ்.வி. ராஜதுரையும் வ. கீதாவும் இணைந்து ஒரு நூலெழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“உலகின் பிறபகுதிகளில் நடைபெற்றுவரும் கருத்தாடல்களிலிருந்து இந்திய மார்க்சியர்கள், குறிப்பாகத் தமிழக மார்க்சியர்கள் பலகாத தூரம் பின்தங்கிவிட்டனர். இதற்கு இங்குள்ள மார்க்சிய இயக்கங்களின் அக்கறை யின்மையும் ஒரு காரணம்” (முன்னுரை) என்னும் எஸ்.வி. ராஜதுரையின் ஆதங்கம் இந்நூலின் வாயிலாக வெளிப்படுகிறது. ஏற்கெனவே மார்க்சின் முக்கியக் கருத்தாகிய அந்நியமாதல் பற்றியும், சார்த்தர் போன்றோரின் எக்சிஸ்டென்ஷியலிசத் தத்துவம் பற்றியும் பின்நவீனத்துவ, மார்க்சியச் சிந்தனையாளரான அல்தூசர் பற்றியும் நூல்கள் வெளியிட்டவர் எஸ். வி. ராஜதுரை.

ஃப்ராங்பர்ட் சிந்தனைப் புலத்தினர் சமூகக் கொள்கைகளுக்குள் மையமான ஒன்றாக வெகுஜனச்சாதனங்களின் பங்கினை மதிப்பிட்டனர். உலகம் முழுவதும் மரபுவழி மார்க்சியம் பெரும் மாற்றங்களுக்குள்ளான நிலையில், அதன் கணிப்புகள் பொய்த்துப்போன நிலையில், ஃப்ராங்பர்ட் சிந்தனைப் புலத்தினரின் கருத்துகள் பெரும் வரவேற்புப் பெற்றன.

இப்புலத்தினரின் சிந்தனை, மரபுக் கொள்கைக்கு எதிராக “விமரிசனக் கொள்கை” (க்ரிடிகல் தியரி) என்று பொதுவாக அறியப்படுகிறது. பதினே ழாம் நூற்றாண்டிற்கு முன்பிலிருந்தே, அதாவது அறிவொளிக் காலத்தி லிருநதே “அறிவியலாளன் தனது ஆய்வுப் பொருளிலிருந்து விலகியவன்” என்ற கருத்தை மரபுக் கொள்கை முன்வைத்தது. ஒரு நல்ல விஞ்ஞான முறையியலின்படி, விஞ்ஞானி, உலகத்தை உற்றுநோக்கி, உள்ளதுபோலவே புறவயமாக வருணிக்கிறான். பிறகு அதன் வாயிலாகக் கருதுகோள்களை உருவாக்கி, அவற்றிலிருந்து விதிகளுக்குச் செல்கிறான். ஆனால் சமூக வரலாற்றுச் சக்திகளின் விளைவே ஒரு விஞ்ஞானி (விஞ்ஞான நிறுவனமும் கூட) என்பதை இந்த நோக்கு மறந்துவிடுகிறது. தான் வாழும் சமூகத்திலிருந்தும் கலாச்சாரத்திலிருந்தும் விஞ்ஞானி விட்டு விடுதலை யாகி நிற்பவன் அல்ல. அவனும் அக்கலாச்சாரத்தினால் உருவாக்கப் படுபவன்தான். எனவே ஒரு விஞ்ஞானி உலகை நோக்கும் விதமே, நோக்கிப் பெற்ற தரவுகளிலிருந்து விதிகளுக்குச் செல்லும் முறையே, அவனது கலாச்சாரத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று. (இக்கருத்தைப் பின்னர், பின்னமைப்புவாதிகள் எடுத்துக்கொணடனர்). மேலும அறிவியலா ளன் ஆராய்கின்ற பொருளும் சமூக மாற்றத்தினால் உருவாகிய ஒன்று தான்.

விமரிசனக் கொள்கை இக்கருத்துகளை ஏற்று, அனுபவவாத விசாரணை, பகுப்பாய்வு ஆகியவற்றில் பயன்படுத்துகிறது. ஒரு விமரிசனக் கொள்கை யாளன், உலகினைத் தான் நோக்கும் விதம், குறைந்த பட்சம், சமூகத்தின் அரசியல் கருத்தியல் அமைப்புகளால் உருவானது என்பதை அறிந்தவன். எனவே விமரிசனக் கொள்கை சுயஆழ்நோக்குடையது (self-reflexive). எனவே ஃப்ராங்பர்ட் சிந்தனைப்புலம், “அதோ! வெளியே எனது ஆய்வுக்காக ஓர் உலகம் காத்திருக்கிறது” என்று நினைப்பதில்லை. தனது பார்வையைச் சமூகம் உருவாக்கி வளைக்கவும் செய்கிறது என்பதை அப்புலத்தின் அறிஞர்கள் நன்கு அறிவர். எனவே அறிவுச் சமூகவியலில் காணப்படுவது போல, சமூகம் எப்படி அறிவை நிலைப்படுத்தியுள்ளது என்று ஆராய்வது மட்டுமல்ல, அவ்வாறு நிலைப்படுத்துவதில் என்னென்ன ஆதிக்க அமைப்புகள் உள்ளடங்கியுள்ளன என்பதையும் அவர்கள் சிந்தித்தனர். ஆகவே விமரிசனக் கொள்கை ஆய்வு, கருத்தியல் ஆய்வாகவும் மாறுகிறது. மேலும் அரசியல் சமமின்மையும், வர்க்க முரண்களும் நிலவும் ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதில் அறிவுக்குள்ள பங்கினையும் இந்தச் சிந்தனைப் புலத்தினர் ஆராய்ந்தனர்.

ஜியார்ஜ் லூகாச்சும், ஆதிக்க சக்திகள் பற்றியும், கருத்தியல் பற்றியும் நன்கு ஆராய்ந்தவர்தான் என்றாலும், உழைப்பாளர் சமூகத்தில், குறிப்பாகப் பொதுவுடைமைக் கட்சியின் முன்னணியினரிடத்தில் கருத்தியல் சிதைப் புக்கு ஆட்படாத நோக்கு இருபபதாக அவதானித்தார். இப்படிப்பட்ட யூகத்தை ஃப்ராங்பர்ட் புலம் புறக்கணித்தது. ஏறத்தாழ 1930களின் இறுதிக்குள் இப் புலத்தினர் கண்ட முன்னேறிய முதலாளித்துவத்தில் “உழைப்பாளர்களுக்குப் புரட்சிச் சக்தி இருகக முடியும்” என்ற நம்பிக்கையே அற்றுப் போய்விட்டது. பிற எல்லா வகுப்பினரையும் போலவே முன்னேறிய முதலாளித்துவத்தில் பாட்டாளிகளும் ஈர்க்கப்பட்டுவிடுகிறார்கள். எனவே முதலாளித்துவ அமைப் பிற்குள் தனித்த பார்வையைக் கொண்டவர்கள் பாட்டாளி வர்க்கத்தினர் என்ற பார்வை அடிபட்டுப்போய்விடுகிறது.

விமரிசனக் கொள்கை மூன்று விஷயங்கள் பற்றி முக்கியமாகக் கவனித்தது.
1. முன்னேறிய முதலாளித்துவம், அல்லது பிந்திய முதலாளித்துவம் பற்றிய ஆய்வு
2. சமூக ஒருங்கிணைப்பு பற்றிய சமூக உளவியல் ஆய்வு
3. வெகுஜனக் கலாச்சாரம் பற்றிய ஆய்வு

வரலாறு, மனித குலத்தைக் காலப்போக்கில் மேம்படுத்தக்கூடிய ஒன்றல்ல. மாறாக, மனித இனம் முழுமையையும் தொழில்நுட்ப, நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக்கூடிய ஒன்று. கடந்த நூற்றாண்டின் முக்கியமான சமூக விஞ்ஞானி வெபரின் கொள்கையைப் பின்பற்றி,

ஃ அரசியல் ஆதிக்கம் எல்லா வகுப்பினர்மீதும் திணிக்கப்படுகிறது
ஃ அதிகாரம் அல்ல, பொருட்செல்வமே வர்க்கங்களை உருவாக்குகிறது

என்று இக்குழுவினர் கூறினார்கள். முழு உண்மை என ஒன்று கிடையாது என்பது இவர்கள் கொள்கை. இது பின்நவீனத்துவத்திற்கு முன்னோடியாக அமைந்தது. முழு உண்மை அல்லது முழு அறிவைப் பெற்றதாகச் சொல்பவர்கள், ஸ்டாலினிய வாதிகளாகவோ, நாஜிகளாகவோ, இன-மத தீவிரவாதிகளாகவோ ஆகிவிடுகின்றனர். தங்கள் கொள்கைக்கு மாறானவர்க ளாகக் கருதப்படுகின்றவர்களை அழித்துவிட முயல்கின்றனர். அறிவொளித் தன்மையே வளரவளர இப்படித்தான் ஆயிற்று. அதேசமயம், அறிவொளித் தன்மையின் நன்மைகளையும் இவர்கள் புறக்கணிக்க விரும்பவில்லை. அறிவைப் பயன்படுத்துவதில் ஒரு நுட்பமான சமநிலையை இவர்கள் கையாள நினைத்தார் கள். அது சுய ஆழ்தலைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

அடார்னோ, மார்க்யூஸ் போன்றோர், கலைத்துறையைச் சலுகை பெற்ற ஒன்றாகக் கண்டனர். ஏனெனில் இன்றைய ஒற்றை வல்லாதிக்கத்தை எதிர்த்துத் தடைசெய்யக்கூடிய இயல்பு பெற்றது கலை ஒன்றுதான். கலையை உயர்தரக் கலை, ஜனரஞ்சகக் கலை என இரண்டாகப் பிரித்தனர். ஜனரஞ்சகக் கலை, சமூகத்தின் ஆதிக்கத்திலுள்ள சித்தாந்தங்களோடு ஒருங்கிணைந்து மக்களை ஏமாற்றுகிறது. ஆனால் உயர்தரக் கலை, யதார்த்தத்திற்கு அப்பால் நின்று யதார்த்தத்தை விமரிசிக்கக் கூடியதாக அமைகிறது. இந்த விமரிசனம் நேர்முகப் பிரதிபலிப்பின் விளைவல்ல. எதிர்மறையான பிம்பங்கள் வாயிலாகத்தான் நவீன சமூகத்தின் அந்நிய மாகிப்போன, சிதைந்துபோன நிலையை அது சுட்டிக்காட்டுகிறது. கலையும் இலக்கியமும் சமூக உண்மைகளாக இருந்தாலும், தன்னிச்சையான தன்மையையும் கொண்டிருக்கின்றன. அவை தங்கள்கால அரசியல், சமூக, பொருளாதார நிலையின் ஆக்கங்கள் என்றாலும், அழகியல் மதிப்பைக் கொண்டிருக்கின்றன. கலை, பொருளாதார நுகர்ச்சிக்கென மட்டுமே படைக்கப்படுவதில்லை. அதனால் அது சந்தைவிதிகளுக்கு முழுவதும் உட்பட்டதல்ல. கலைஞர்கள், இம்மாதிரியான தன்னிச்சைத் தன்மை பெற்றிருப்பதால் சமூகத்தை விமரிசனப்படுத்த அவர்களால் முடிகிறது.

ஃப்ராங்பர்ட் சிந்தனையாளர்கள் குழுவில் மிக முக்கியமான இன்னொரு வர் வால்டர் பெஞ்சமின். அவர் மேற்கண்ட சிந்தனைக்கு மாறுபட்டார். கலைப் படைப்பின் தன்மையை இன்றைய புதிய தொழில்நுட்ப உத்திகள் முற்றிலுமாக மாற்றிவிட்டன. ஒரு காலத்தில் உயர்கலை என ஒரு ஒளி வட்டம் கலைப் படைப்புகளைச் சுற்றிலும் இருந்தது. வெகுஜனச் சாதனங் கள் உயர்கலை பற்றிய நம்பிக்கையைத் தகர்த்தெறிந்துவிட்டன. தொழில் நுட்பமே இன்று கலைப் பொருளகளை உருவாக்குகிறது.

வெகுஜனச் சாதனங்கள் கலைப்படைப்புகளை மலினப்படுத்துகின்றன என்று நோக்கிய ஒற்றைப் பார்வைக்கு முரணானது இது. பிரெஹ்ட்டைப் போலவே பெஞ்சமினும் கலை உற்பத்திச் சக்திகளைப் புரட்சிகர மாற்றங்களுக்கு உள்ளளாக்கியே இன்றைய நவீன நிலைமைகளைக் கலைஞர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றார். சமூக, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஒத்ததாகவே கலைப் படைப்புகளிலும் உத்தி ரீதியான புதுமைகள் நிகழ்கின்றன என்பது பெஞ்சமின் கருதது.

ஹார்க்ஹைமரும் அடார்னோவும் இணைந்து எழுதிய முக்கியமான நூல், ‘அறிவொளியின் முரண்வளர்ச்சி/அறிவொளியின் இயங்கியல்’ (Dialectic of Enlightenment) என்பது. “மேலை அறிவும் விஞ்ஞானமும பொருள் உற்பத்தியும் தொழில் உற்பத்தியும் மானிட விடுதலையையோ சமத்துவத்தையோ நிலைநாட்ட வில்லை. மாறாக, ஆஷ்விட்ஸ், டாகாவ் போன்ற கொலைக்கூடங்களைத்தான் உருவாக்கின” என்று இவர்கள் கூறுகிறார்கள். மனித குலம் நாகரிகம் அடைவதாகிய செயல்முறை, இயற்கையை மனிதன் வெற்றிகண்ட முதல் செய்கையிலிருந்து தொடங் கியது. படிப்படியாக வளர்கின்ற பொருளுறவாக்கலின் (மனிதனைப் பொரு ளாக்கலின்) தர்க்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. இப்பொருளுறவாக்கலின் தர்க்கம், தன் இறுதி விளைவான பாசிசத்தில் முடிகிறது என்பதுதான் அறிவொளியின் முரண் வளர்ச்சி என்னும் நூலின் மையக்கருத்து. ஹெபர்பர்ட் மார்க்யூஸ், ஹேபர்மாஸ் இருவரும் இந்நூலில் முன்வைத்த மிக முக்கியமான கருத்து கலாச்சாரச் சந்தை (Culture Industry) என்பது. வெகுஜனக் கலாச்சார உற்பத்தியை இச்சொல் குறிக்கிறது.

பிந்திய முதலாளித்துவக் காலத்தில் (இதில்தான் நாம் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம்) எல்லாப் பொருட்களும் சந்தை மயமாக்கப்பட்டு விடுகின்றன. இந்நிலையில் கலையும் மிகுதொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் சந்தைப் பொருளாக மாறிவிடுகிறது. இதில் விளம்பரம், திரைப்படம், தொலைக்காட்சி போன்ற யாவும் அடங்குகின்றன. இவை யாவும் தனிப்பட்ட பொருட்களை விளம்பரப்படுத்துகின்றன எனபதை விட ஒரு முதலாளித்துவ வாழ்க்கை முறையை விளம்பரப் படுத்துகின்றன என்பது பொருந்தும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெற்ற பயன்மதிப்பின் சதந்திரம், மானிடத் தன்னிலைக்குச் சுதந்திரத்தையும், முதலாளித்துவ நுகர்வுக்கெதிரான கட்டுப்பாட்டையும் அளித்தது. இப்போது இச்சுதந்திரம் அடியோடு இல்லாமல் போய்விட்டது. உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமான முரண்பாடு, முதலாளித்துவத்தைக் காலப்போக்கில் வீழ்ச்சியடையச் செய்யும் என்று மார்க்ஸ் நினைத்தது இன்று பொய்யாகிப் போய்விட்டது. கலாச்சாரச் சந்தையில் மனிதன் காணாமல் போய்விட்டான்.

கலாச்சாரச் சந்தையினால் மேட்டுக்குடியினர் பயன்பெற்றாலும், சாதா ரண மக்களைப் போலவே அதன் சக்தியால் அவர்களும் ஆட்கொள்ளப் பட்டவர்களே. அதன் ஊடாகவே பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெகுஜனக் கலையாக இருப்பினும் கலைகள் யாவற்றிற்கும் உள்ள சுயஆழ் தன்மை (கலைத்)திரைப்படத்திலும் இருப்பதை ஆர்சன் வெல்ஸ், மைக்க லேஞ்சலோ அண்டோனியானி போன்ற இயக்குநர்கள் நிரூபித்திருக்கி றார்கள்.

எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் மார்க்சியத் தின்மீது தமிழகத்தில் பிரக்ஞை, படிகள், இலக்கிய வெளிவட்டம் போன்ற இதழ்கள் ஒரு குறித்த வகையிலான நவமார்க்சியத்தை முன்வைப்பதற்கு இச் சிந்தனைகள் அடிப்படையாக இருந்தன. எஸ்.வி. ராஜதுரை, தமிழவன், ராஜாராம் போன்ற பலர் இச்சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் எஸ்.வி. ராஜதுரை பின்னர் பெரியாரியத்திற்கு மாறினார், தமிழவன் அமைப்புவாதியானார். பொதுவாக மார்க்சியச் சிந்தனைப் போக்கில் ஃப்ராங்பர்ட் சிந்தனைப்புலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ புதிய நோக்குகளை அளித்தது. சிறுபத்திரிகை உலகில் இச்சிந்தனைகள் ஓரளவு பேசப்பட்டன.

அந்நியமாதல்
மனித சமூகத்திலிருந்து மனிதத்தன்மை, அதன் சாராம்சம், பிரிந்து விடும் நிலையைக் குறிப்பதற்கு மார்க்ஸ் பயன்படுத்திய சொல் அந்நியமாதல் என்பது. இச்சொல், மார்க்சியச் சிந்தனைக்கு முன்பிருந்தே தத்துவ, இறையியல் சிந்தனைகளில் காணப்பட்ட ஒன்று. குறிப்பாக ஹெகலின் தத்துவத்தில் காணப்பட்ட ஒன்று. அல்தூசர், மார்க்ஸின் சிந்தனைகளை இளம் மார்க்ஸுக்குரியவை, பிற்கால மார்க்ஸுக்குரியவை எனப் பகுத்தார். அந்நியமாதல் பற்றிய சிந்தனை, மார்க்ஸின் எழுத்துகளில் முதற்பகுதியில் மிகுதியாகக் காணப்படுகிறது. 1844இல் எழுதப்பட்ட பொருளாதாரத் தத்துவக் கையெழுத்துப் படிகளில், முதலாளித்து வத்தின் உழைப்புப் பிரிவினை காரணமாக அந்நியமாதல் ஏற்படுவதாகச் சொல்கிறார். பிற விலங்கினங்களிலிருந்து மாறுபட்டு, மனித இனம் தனது சூழ்நிலையை மாற்றும ஆற்றல் பெற்றிருப்பதால் வேறுபடுகிறது. சூழலை மாற்றுவதை வெறும் இயல்பூக்க உந்துதல் என்ற அடிப்படையில் அன்றி, பிரக்ஞை பூர்வமான செயல் மூலம் மாற்றுகிறது. உழைபபினால் சூழல் உருவாகத் தொடங்கிய பிறகு, அது இயற்கையான சூழலாக இருப்பதில்லை. பல தலைமுறை மக்களின் உழைப்பால் உருவான உலகத்தோடு நிகழ்த்தும் இடைவினைகள், மனித இனத்திற்குத் தனது சூழலை மட்டுமல்ல, தன்னையும் மாற்றிக்கொள்ளும் ஆற்றலை அளிக்கிறது. இப்படிப் புறப்பொருளை உருவாக்கும் செயல்பாடே உற்பத்தி எனப்படுகிறது. ஏனெனில் மனிதனின் உள்ளார்ந்த ஆற்றல் உற்பத்திப் பொருளின் புற வடிவத்தினை அடைகிறது. அப்போது மனிதத் தன்னிலையும் மாற்றம் பெறுகிறது. அந்நியமாதல் என்பது இப்புறப்பொருள் உற்பத்தியைக் கெடுத்து மானிட இனத்தின் சுயபுரிந்துகொள்ளலை அழிப்பதாகும்.

முதலாளித்துவ வளர்ச்சியினால் தொழிற்சாலைகள் பெருகிய பிறகு உழைப்பாளர்கள் ஒவ்வொரு திறனை மட்டுமே பெற்றவர்களாக, சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள். அதேபோலத் தொழில் உற்பத்தியும் முன்னைப்போல முழுமையாகச் செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு பகுதியாகப் பொருள்கள் செய்யப்பட்டு இணைக்கப்படுகின்றன. எனவே தொழிலாளிக்குத் தான் என்ன உற்பத்தி செய்கிறோம், எதற்காக, அதன் பயன் என்ன என்பதெல்லாம் தெரியாமற் போகிறது. உழைப்பு உடலுழைப்பாகவும் மன உழைப்பாகவும் பிரிக்கப்படுகிறது. பொருளைப் பகிர்ந்து விநியோகம் செய்வதும் இப்படியே பிரிவினைக் குள்ளாகிறது. இம்மாதிரிப் பிரிவினைகள் நான்கு விதமான அந்நியமாதல்களை உருவாக்கு கின்றன.

ஃ முதலில், உழைப்பாளனுக்குத் தன்னால் உருவான பொருளின்மீதும் அதன் பயன்பாட்டின்மீதும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை என்பதால் அந்த உற்பத்திப் பொருளிலிருந்து அவன் அந்நியமாகிறான்.

ஃ இரண்டாவதாக, உற்பத்திச் செயல்மீதும் அவனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதால், உழைப்பினால் ஏற்படும் மனநிறைவு அவனுக்குக் கிடைப்பதில்லை. எனவே உழைப்பாளன் தனது உழைப்புச் செயலிலிருந்தும் அந்நியமாகிறான். உழைப்பும்கூட ஒரு விற்பனைப் பொருளாக மாறிவிடு கிறது. சுரண்டல் நிலைக்குட்பட்டு, அதன் பரிமாற்றத்திற்கேற்ப அதன் மதிப்பு அமைகிறது.

ஃ மூனறாவதாக, உழைக்கும் மனிதன் தன் சக உழைப்பாளரிடமிருந்தும் சமூகத்திலிருந்தும் அந்நியமாக்கப்படுகிறான். உழைப்பாளன் தனிமனிதனாகப் பிரித்து நோக்கப்பட்டு, முன்னரே உற்பத்திச் செயல்முறையில் விதிக்கப் பட்ட ஒரு பணியை நிறைவேற்றுவதில் அவன் காட்டும் திறமையின் வாயிலாக மட்டுமே மதிக்கப் படுவதால், உற்பத்தி ஒரு சமூகச் செயல் முறையாகவோ, மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து படைக்கும் நிகழ்வாகவோ இல்லாமல் போகிறது.

ஃ இறுதியாக, மனிதன் தன் இன இருப்பினின்றும் தொடர்பற்றுப் போகிறான். இன இருப்பு என்ற சொல்லை மார்க்ஸ் ஃபாயர்பாக்கிடமிருந்து பெற்றார். மனித இனம் தன்னைத் தானே கூட்டாகவும் தனிமனித நிலையிலும் தன் விதியை நிர்ணயித்துக் கொள்ளும் ஆற்றலைக் குறிக்கி றது இச்சொல்.

சமூகவியலிலும் சமூக உளவியலிலும் அந்நியமாதல் என்பது நவீன வாழ்க்கையின் நிலைமையத் தன்வயமாக அறிதலின் அனுபவமாகக் கொள்ளப்படுகிறது. ராபர்ட் பௌமரின் கருத்துப்படி, நகர்ப்புற வாழ்க்கை யிலும் பணியிலும் மனிதன் நான்கு வகையான (அளவீடு செய்யக்கூடிய) அந்நியமாக்கல்களை அடைகிறான்.

ஒன்று, ஆற்றலின்மை. தனது சூழலின்மீது தனக்கு எவ்விதப் பங்குமில்லை, யார்மீதும் எவ்விதச் செல்வாக்கையும் தன்னால் செலுததமுடியவில்லை என்று ஒருவன் தெரிந்துகொள்ளுதல்.

இரண்டு, அர்த்தமின்மை. தான் என்ன செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்ற உணர்வின்மையால் இது ஏற்படுகிறது.

மூன்று, தனிமைப்படல். பணிக்கோ, பணிநிறுவனத்திற்கோ, குடும்பத்திற் கோ, நண்பர்களுக்கோ, உலகிற்கோ தான் எவ்விதத்திலும் சம்பந்தப்படாதவன் என்பதுபோலத் தனிமையை, வெறுமையை உணர்தல்.
நான்கு, சுயவிலக்கம். தனது பணியிலிருந்து எவ்வித உளவியல் பயனும் அடையாமையை இது குறிக்கிறது.

பௌமர் கூறும் அந்நியமாதல், மார்க்ஸ் கூறும் அந்நியமாதலிலிருந்து சற்றே வேறுபடுகிறது. மார்க்ஸ் இதை முதலாளித்துவ அமைப்பின் ஒரு பகுதியாக, தொழிலாளர் நிலையாகப் பார்க்கிறார். பௌமர், இன்னும் பொது மைப்படுத்தி, நவீன நகர்ப்புறத் தொழில்மய வாழ்க்கையின் அம்சமாகப் பார்க்கிறார். மேலும் இதை அவர் அகவய அனுபவமாகவும் பார்க்கிறார்.

அகவய அனுபவம் என்ற முறையில், அந்நியமாதலில் அந்நியன் ஒருவனுடைய உணர்வு என்ற அடிப்படை இருக்கிறது. ஒரு புதிய சமூகத் திற்குள் புகுந்த அந்நியன் எப்படித் தன்னை உணர்வானோ, அவ்வித உணர்வை இது குறிக்கிறது. ஏறத்தாழ இருத்தலியம் உரைக்கும் அனுபவமும் இப்படிப் பட்டதாகவே இருக்கிறது. இருத்தலியம் கூறும் கவலை, அதிகாரபூர்வநிலையின்மை (inauthenticity) போன்ற கருத்துகளோடு அந்நியமாதல் ஒத்துச் செல்கிறது. மேலும் எமில் டர்க்ஹீம் கூறும் பெயரிழப்பு நிலை (அனாமி)யோடும், வெபர் கூறும் முதலாளித்துவ இரும்புக் கூட்டோடு மனிதன் மோதும் நிலை என்பதோடும் அந்நியமாதல் ஒத்துச் செல்கிறது.

அந்நியமாதல் கோட்பாட்டை மார்க்சியர்கள் தங்கள் படைப்புகளில் நன்கு பயன்படுத்தியிருக்கவேண்டும் என்பது ஞானியின் கருத்து. மார்க்ஸின் கொள்கையான இதனைத் தாங்கள் பயன்படுத்துவதற்கு மாறாக, பயன் படுத்திய எழுத்தாளர்களை நசிவுவாதிகள் என்று அவர்கள் கேவலப் படுத்தினார்கள். இதனால் தமிழில் மார்க்சியப் படைப்புகள் வளம்பெறாது போயின.

பொதுவாகத் தமிழ்ப் புதுக்கவிதைகள் அந்நியமாதலை நன்கு சித்திரிப்பன வாக உள்ளன. குறிப்பாக, சி. மணி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, ஆத்மாநாம், சுகுமாரன், ஆனந்த், நாரணோ ஜெயராமன் போன்ற கவிஞர் படைப்புகளில் அந்நியமான மனிதச் சித்திரிப்பினை நன்கு காண இயலும். சான்றாக, ஞானக் கூத்தனின்,

நீ ஒரு தொழிற்சாலையில் ஒளிந்துகொண்டாய்
நான் ஒரு தொழிற்சாலையில் ஒளிந்துகொண்டேன்
நான் உன்னைப் பார்க்க வந்தேன்
நீ என்னைப் பார்க்க வந்தாய்
இருவரையும் காணவில்லை

என்ற கவிதை, “சூளைச் செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது” என்ற கவிதை, விடுமுறை தரும் பூதம் – இது போன்ற கவிதைகள் நேரடியாகவே இந்தப் பிரச்சினையை வெளிப்படுத்துகின்றன. புனைகதை களிலும் அந்நியமாதல் உணர்வு இந்திரா பார்த்தசாரதி, ஜி. நாகராஜன், ந. முத்துச்சாமி போன்றவர்களால் நன்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இலக்கியம்