6. ஃப்ராய்டியமும் தமிழிலக்கியமும்

6. ஃப்ராய்டியமும் தமிழிலக்கியமும்

நனவிலி மனம் அல்லது ஆழ்மனம் பற்றிய கொள்கைகளால் இலக் கியத்தில் ஒரு புரட்சியை உருவாக்கியவர் சிக்மண்ட் ஃப்ராய்டு. தன்னைத் தானே அந்நியமாக்கிக் கொள்ளும் தற்கால மனிதன் பற்றிய கவலை பிளெய்சி பாஸ்கல் முதல் காஃப்கா, சாமுவேல் பெக்கெட் போன்றோர் வரை நீண்டிருக்கிறது. உலகைப் பற்றிய பார்வை என்பது மட்டுமின்றி, மருத்துவச் சிகிச்சை முறை, உளவியல் கொள்கை, படைப்பு முறை பற்றிய சிந்தனை, போன்ற பலவிதங்களில் இலக்கிய மனத்திற்கு ஃப்ராய்டியச் சிந்தனை ஒத்துச் செல்கிறது.

மனநோயாளி ஒருவனின் தன்னிச்சையான இயைபுறுத்தல் (free association), சொல்லாடல்மீது பகுப்பாளர் செலுததும் கவனமுறை, திறனாய் வாளனுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக அமையக்கூடியது என்று சொல் கிறார் கென்னத் பர்க். “திறனாய்வாளர் ஒருவர், படைப்பிலிருந்து ஏதோ ஒரு பகுதியைத் தனிமைப் படுத்தி விளக்கும்போது ஒருவர் அந்த ஆசிரியரை – குறிப்பாக மறைந்துவிட்ட ஆசிரியரை வரவழைத்து அது சரியா என உறுதிப்படுத்திக் கொள்ளமுடியாது. ஆனால் படிமத்தன்மை, சிந்தனை ஆகியவற்றின் சூழலில் ஒரு குறிப்பிட்ட படிமம் என்பது எவ்வாறு இடம்பெறுகிறது என்பதைத் திறனாய்வாளர் ஆராயமுடியும். படைப்பினுள் காணும் உறவுகளின் அமைப்பிற்குப் படைப்பின் உந்துசக்தி சமமானது” என்கிறார் அவர். ஓர் உளப்பகுப்பாய்வாளர் தன் வாடிக்கையாளர் கூறுவதன் உள்ளடக்கம் மட்டுமன்றி, தொனிமீதும் கவனம் செலுத்துவது போலவே ஒரு திறனாய்வாளரும் பிரதியின்மீது ஆழ்ந்த கவனம் செலுததுகிறார். ஏனெனில் இரண்டு இடங்களிலுமே, கூறுவதன் வெளிப்படையான அர்த்தம் நிராகரிக்கப்பட்டு, உள்ளார்ந்த அமைவுகள் எப்படிக் ‘கதையை’ வடிவமைக் கின்றன என்பதுதான் ஆராயப்படுகிறது.

ஃப்ராய்டின் சிந்தனைகள் பலவும் இலக்கியக்காரர்களை பாதித்திருக் கின்றன என்றாலும், குறிப்பாக, ஒடுக்குதல் (ரிப்ரஷன்)-தற்காப்பு (டிஃபென்ஸ்), வெளிப்படையான x உள்ளடங்கிய உள்ளடக்கம், முதன்மை நிலை x இரண்டாம்நிலை செயல்முறைகள் பற்றிய அவரது சிந்தனைகள் (இவை யாவும் Interpretation of Dreams என்னும் அவரது நூலில் நன்கு விளக்கப்பட்டுள்ளன) சிறப்பாக பாதித்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை.

ஃப்ராய்டின் கொள்கைப்படி, கனவு என்பது முன்நிகழ்ந்த, ஆழ்மனத்தில் ஒடுக்கப்பட்ட, பாலியல்சார் விழைவு. இவ்வகையில் ஒவ்வொரு கனவுக்கும் அர்த்தம் இருககிறது. அவ்விழைவுதான் கனவைத் தூண்டுகிறது. கனவின் வாயிலாக அந்த இச்சையைப் பூர்த்திசெய்கிறது. ஆனால் நனவு மனத் துக்குப் புரியாத அல்லது வெளிப்படாத வகையில் அப்படிச் செய்கிறது. விருப்பப்பூர்த்தி என்ற வகையில் கனவு ஏதோ ஓர் உள்நோக்கத்தைக் கொண்டுள்ளது. இவ் உள்நோக்கம் அறிவுக்குப் புலப்படா மனத்தை (நனவிலியைச்)சார்ந்தது. இந்த இச்சை/விழைவு மறைந்து காணப்படுவதால், கனவுக்கு ஓர் குறிப்பிட்ட பரிமாணம் உருவாகிறது.

முதல்நிலைச் செயல்முறை என்று ஃப்ராய்டு குறிப்பதன் இன்றிய மையாக் கூறு, ஒரு கனவு வடிவிலான இச்சைப் பூர்த்திக்கு நனவிலி வழிசெய்கிறது. சான்றாக, தண்ணீர் தாகத்தோடு ஒருவன் களைத்துத் தூங்கும்போது ஒரு குளிர்ந்த நீரோடையில் பருகுவதுபோலக் கனவு காண்கிறான். இரண்டாம்நிலைச் செயல்முறை என்பது (உடனடியான இச்சைப்பூர்த்திக்கான செயல்பாடாக அன்றி) கனவை யதார்த்தநிலைக்கு ஒத்ததாகக் காட்டும் ஒன்று. கனவுக் கற்பனையின் வாயிலாக இச்சைப் பூர்த்தியில் ஈடுபடுவதும், பகற்கனவு காண்பதும் ஒன்றுதான். கனவு வாயிலான இச்சைப்பூர்த்தி தூக்கத்தில் நாம் அறியாமல் நிகழ்கிறது. அவ்வாறு நனவிலும் நடப்பதாகக் கற்பனை செய்தல் (fantasizing), உலகத் தையே அவ்வாறிருப்பதாக மனிதர்களை நினைக்கவைக்கிறது. அதுதான் பகற்கனவு.
முதல்நிலைச் செயல்முறையின் ‘முதன்மை’, பலவிதங்களில் ஏற்படுகி றது. காலத்தினால் அது முக்கியமானது என்பது ஒன்று. குழந்தைப் பருவத் திலிருந்தே அது தொடங்கிவிடுகிறது. நமக்கு ‘முந்திய’ பழங்குடி மக்களின் சிந்தனைப் போக்கினை அது பிரதிபலிக்கிறது. நனவிலிப் போராட்டங்களில், உடனடி அறிவார்ந்த சிந்தனைப் போக்குகளின் தேவையற்றபோது, நாம் தஞ்சமடையும் இடமும் அதுதான். ஆனால் அது ஒரு குறித்த-நாம் கடந்து செல்கின்ற நிலையும்-அல்ல. அறிவுசார் சிந்தனைக்குத் தாழ்ந்ததும் அல்ல. மனித மனத்தின் உறுதியான தளம் அது. படைப்பாற்றல் பயன்படுத்திக் கொள்ளும் ஒன்று. படிமம் சார்ந்தது. உள்ளார்ந்த ஒத்திசைவுகளின் தேவையற்றது. செறிவுறுதல் (condensation), இடப்பெயர்ச்சி (displacement) ஆகிய தன்மைகளைக் கொண்டது.

செறிவுறுதல் என்பது பலவிதப் படிமங்களும் சிந்தனைகளும் ஒன்றியைந்து தொகுப்பாதலைக் குறிக்கும். இடப்பெயர்ச்சி என்பது நனவிலி நிலையில், எது முக்கியமானதோ, அல்லது உண்மையானதோ அதிலிருந்து கவனத்தை விலக்கி வேறிடத்தில் மையப்படுத்துவது. உதாரணமாக, இறந்து போன ஒருவரை நாம் கனவில் உயிரோடிருப்பதாகக் காணலாம். இந்த ஒருவர், பலபேரின் குறியீடாக உள்ளார் (செறிவுறுதல்) என்பதைத் தன்னிச்சையான இயைபுறுத்தல் (உரையாடல்) மூலமாக அறியக்கூடும். கனவில் அவர் முக்கியமான நபராகக் காணப்படுவது அதன் வெளிப் படையான பொருள். ஆனால் கனவின் முக்கியப்பொருள், உள்ளர்த்தம் வேறு ஏதோ ஒன்று (இடப்பெயர்ச்சி).

படிமங்களைவிட, சொற்களே வெவ்வேறு சிந்தனைகளுக்கான முக்கி யப் புள்ளிகளாக இருப்பதை ஃப்ராய்டு கண்டார். சொல்லாமல் நழுவுதல், தவறிச் சொல்லுதல் (slip of the tongue), ஒன்றுக்கு பதிலாக மற்றொன்றைச் சொல்லுதல் போன்றவற்றால் உண்மையான பொருள் மறைக்கப்படுகிறது. இடப்பெயர்ச்சிக்குத் தற்காப்பு ஒன்றுதான் முதன்மையான பணி. ஆனால் செறிவூட்டலுக்கு மறைப்பதை அன்றி வேறு பணிகளும் இருக்கின்றன. வில்லியம் எம்சன், கென்னத் பர்க், லயனல் டிரில்லிங், லக்கான் போன்ற பலரும் செறிவூட்டலுககு மறுபெயர் உருவகம் என்பதைக் குறிப்பிடு கிறார்கள். இவ்வகையில் மனித மனத்திற்குக் கவிதை மிக நெருங்கியது, இயல்பானது என்பதை உணர்த்தியமை ஃப்ராய்டின் முக்கியச் சிந்தனை என்று டிரில் லிங் குறிப்பிடுகிறார்.

ஃப்ராய்டின் கனவுக் கொள்கையில், மொழி பற்றிய வேறு சிந்தனைக ளும் உள்ளன. பழங்காலத் தொடர்புகோள் முறையில் தங்களுக்குள் எதிர் மாறான அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தைகள் பரிமாறப்படுவதை அவர் எடுத்துக்காட்டுகிறார். கனவுகள் இப்படிப்பட்ட பழங்காலத் தொடர்பு கோள் முறைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன என்றால், அவை எதிர்மாறான படிமங்களை இணைத்து ஒன்றாக ஒருமைப்படுத்திக் காட்டுவதற்கான அடிப்படையை அறியமுடியும் என்கிறார். மேலும், குழந் தைகளின் சொற்கள் உணர்வுப் படிமங்களிலிருந்து, அவற்றின் சார்பாகப் பிறப்பவை. வளர வளர நாம் பகுத்தறிவு வெளிப்பாட்டிற்கு முதன்மை தருகிறோம். கலைஞர்களோ, பகுத்தறிவுச் சிந்தனை பிறந்த பிறகும் இந்த உணர்வாற் றலைப் பெற்றுள்ளனர் என்று அவர் சொல்கிறார்.

கனவில், முதல்நிலை, இரண்டாம்நிலைச் செயல்பாடுகளுக்கிடையில் காணப்படும் இடைவெளியை இரண்டாம்நிலை விரித்தல் என்ற செயல்பாடு கடந்து, நமது பகுத்தறிவுக்கேற்ற வடிவம் தருகிறது. இதனால் ஒடுக்கப்பட்ட இச்சைகளையும் அடிமன உணர்வுகளையும் மறைப்பதோடு, அதனை ஒரு கதை போல எடுத்துரைப்பதற்கான வடிவத்தையும் தருகிறது. உளவியல் பகுப்பாளர்கள் சிலர், கலையின் வடிவக்கூறுகளுக்கும் இரண்டாம்நிலை விரித்தலுக்குமான உறவினைப் பற்றி ஆராய்ந்துள்ளார்கள்.

‘ஹிஸ்டீரியாவின் கட்டமைப்பு’ என்பதைப் பற்றிய குறிப்பில், ஃப்ராய்டு, “நோயறிகுறிகள், நினைவுகள், உளக்கட்டமைவுகள் ஆகியவற்றின் நோக்கம் முற்கால அடிப்படைக் காட்சிகளுக்குக் கொண்டுசெல்வதாகத் தோன்றுகிறது” என்கிறார். இந் நினைவுகளை மறைப்பனவாகப் புனைவுகள் செயல்படுகின்றன. முரண்நிலை இச்சைப் பூர்த்தியாகப் புனைவை ஃப்ராய்டு காண்பதனை இலக்கிய வாசகர்கள் பலரும் ஏற்றுப் பாராட்டியிருக்கிறார்கள். உதாரணமாக, ஷேக்ஸ்பியரின் ‘லியர் அரசன்’ நாடகத்தின் இறுதியில், லியர் அரசன் தன் அன்பிற்குரிய மகள் கார்டீலியாவைக் கையில் ஏந்திச் செல்கிறான். (அவள் கணவனான ஃப்ரான்ஸ் அரசன் அல்ல.) ஆனால் அவள் அப்போது பிணமாகிவிட்டாள் என்பது, அவனது முன்குற்றங்களுக்காக அவனை மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டவன் ஆக்குகிறது.

இம்மாதிரி நோக்கு, இலக்கியப் படைப்பினை ஒடுக்கப்பட்ட நனவிலி யின் இச்சைப் பூர்த்தியாகக் காண்கிறது. அதன் வாயிலாக எழுத்தாளனும் வாசகனும் இன்பமடைவதாகச் சொல்கிறது. ஒடுககப்பட்ட நனவிலிக்கு (படைக்கும் செயலினூடாக மாற்றங்களைச் செய்துகொண்டே) வடிவம் தருவதுதான் இலக்கியத்தின் பணி.

குறியீடுகள் ஆதிநிலைச் சிந்தனையை மறைபொருளாகக் கொண்டுள் ளன. வடிவம் என்பது இரண்டாம் நிலை விரித்தலைப் போல், வேறு வழி யிலான இன்பத்தை அளிக்கிறது. இது ஆழ்நிலையில், சிக்கலான நிலையில் நிகழும் இச்சைப் பூர்த்திக்கான மறைப்பாக உள்ளது. திறனாய்வின் பணி, ஒரேசமயத்தில் இச்சைப் பூர்த்தியாகவும் மறைப்பாகவும் உள்ள புனைவுகளின் களத்தை விளக்கி நனவிலியை நனவுக்குக் கொண்டு வருவதாகும். இவ்வாறு செய்வதில் ஒரு திறனாய்வாளனின் பணி, உளப் பகுப்பாய்வாளனின் பணியை ஒத்துளளது.

கவிதை என்பது ஒரு தனிவகை மொழியைக் கையாளுதல். அதன் மதிப்பு அறிவார்த்தமானது என்பதைவிட, உணர்வார்த்தமான மனப்பாங்கு களை எழுப்புகின்ற சிலவகை அனுபவங்களை உணர்த்துவதில் உள்ளது என்ற ஐ. ஏ. ரிச்சட்ஸின் கருத்தை ஒத்ததாக ஃப்ராய்டின் சிந்தனை உள்ளது. பிளேட்டோ காலமுதலாகவே இலக்கிய ஆய்வு, இலக்கியம் உணர்த்தும் உண்மை பற்றியதாகவும், வாசகர்மீது அதன் தாக்கம் பற்றியதாகவும் இருந்துவருகிறது. ஃப்ராய்டின் சிந்தனை இந்த நோக்கில் பயனுளளதாக உள்ளது. அதேபோல் இலக்கியப் பிரதியின் அர்த்தம், அதளை விளக்கப் படுத்தல், உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமான உறவு, ஆசிரியரின் உள் நோக்கம் போன்றவற்றில் வெளிச்சமளிப்பதாக உள்ளது.

ஈட், ஈகோ, சூப்பர்ஈகோ என்னும் முத்திற அமைப்புக் கொண்ட மனம் பற்றிய அமைப்புமாதிரியை வெளிப்படுத்தும் முன்னரே கலை பற்றிய கருத்துகளைப் பெரும் பாலும் வெளியிட்டுவிட்டார் ஃப்ராய்டு. நனவிலி மனத்தைப் பற்றி நமக்கு ஆர்வமூட்டும் விஷயம், அது சமூகத்தினால் ஏற்கப்படாத, மறைத்துவைக்கவேண்டிய சிந்தனைகளைக் கொண்டது என்பதனால் அல்ல, அது ஒடுக்கப்படும் உணர்வுகளைக் கொண்டது என்பதனால்தான். ஒடுக்கும் முனைப்பே நனவிலியாக உள்ளது. ஒடுக்குதல், நனவிலிக் குற்றவுணர்வு போன்றவை ஃப்ராய்டின் மற்றொரு சிந்தனைக்கு இட்டுச்செல்கின்றன. டே கார்ட்டே, ஃபிக்டே, ஹுஸர்ல் போன்றோரி டமிருந்து, ‘அந்த நான்’ (it/Id) -அதாவது ‘சிந்திக்கும், பேசும் நான்’ – ‘அப்படிச் சிந்திப்பதனாலேயே இருக்கும் நான்’ (ஈகோ)-அதனால்தான் பேசும் திறனை இழந்துவிட்ட சுயமாக மாறுகிறது என்ற சிந்தனையை ஃப்ராய்டு பெற்றார். இந்த சுயம் என்பது பிறரிடம் ஒன்றிப் போவதால் (identification with others) உருவாகிறது. அவர் தொடக்க காலத்தில் உந்து சக்திகளின் வடிவ மாதிரியை அமைத்தார். அதில் கூறிய உந்துசக்திகளின் முதன்மையைப் புறக்கணிக்காமலே ஈகோ, ஈட் கொள்கை புறவுலகிற்கு முதன்மை அளிப் பதாக இருக்கிறது. நனவிலி மனச் செயற்பாடுகள், இந்த முன்மாதிரியில் வெறும் தற்காப்பு முறைகளாக மட்டும் நோக்கப்படாமல், இணைப்புச் செயல்முறை உள்ளனவாகவும் நோக்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த ஒரு சுயத்தை, யதார்த்தத்திற்கு நெருக்கமாக ஒத்துச் செல்லும் சுயத்தை உருவமைக்கின்றன.

உளவியல் நோக்கில் இலக்கியத் திறனாய்வு மேற்கில் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. சான்றாக, எர்னஸ்ட் ஜோன்ஸ், ஹாம்லெட் நாடகத்தைப் பற்றி எழுதிய கட்டுரை மிகப் புகழ்பெற்றது. ஃப்ராய்டின் மாணவரான யூங்கும்உளவியல் திறனாய்வு வளர்வதற்கு மிகவும் துணைபுரிந்தவர். உளவியல் ரீதியான குறியீடுகள் பற்றியும் கூட்டு நனவிலி மனம் பற்றியும் அவர் எழுதிய நூல்கள் புகழ்பெற்றவை.

உளவியல் திறனாய்வுக்கு வித்தாக அமையக்கூடிய கட்டுரைகளில் ஃப்ராய்டு எழுதிய ‘படைப்பாசிரியர்களும் பகற்கனவும்’ என்ற கட்டுரை சிறப்பானது. புறஉலகில் பெறமுடியாத இன்பங்களை குழந்தை தன் விளையாட்டு உலகத்தில் கண்டு அனுபவிக்கிறது. ஆனால் குழந்தையாகவே எவரும் இருந்துவிடமுடியாது. வளர்ந்து இளைஞனாகிவிட்ட பிறகு குழந்தையைப் போல் விளையாட முடியாத சூழலில், படைப்பை நோக்கி கவனம் திரும்புகிறது. அதாவது குழந்தை விளையாட்டுக்கு பதிலீடாக அமைவது படைப்புச்செயல் என்கிறார் ஃப்ராய்டு.

இக்கட்டுரையை மறுத்து எழுந்தது ‘ஃப்ராய்டும் இலக்கியமும்’ என்ற கட்டுரை. லயனல் டிரில்லிங் எழுதிய இதுவும் முக்கியமானது. கலையைத் தீங்கு செய்யாதது, நன்மை மட்டுமே செய்கின்ற பொய்த்தோற்றம் என்று ஃப்ராய்டு சொல்கிறார். படைப்பு பொய்த்தோற்றம் என்றால் அதன் விளைவுகளும் போலித் தோற்றங்களாகவே அமையும். ஆனால் படைப்பு அப்படியில்லை. வாசகனிடம் போலியான விளைவைப் படைப்பு ஏற்படுத்து வதில்லை. படைப்பாளி, வாசகன் இருவரிடமும் படைப்பு ஒரு சிறு தெளிவையேனும் ஏற்படுத்துகிறது.

பகற்கனவு, மனநோய், படைப்பு மூன்றையும் இச்சைப்பூர்த்தி என்ப தன் அடிப்படையிலான புனைவுகள் என்ற முறையில் ஒன்றாக நோக் கினார். இவற்றிற்குக் காரணம் ஒடுக்கப்பட்ட விழைவுகளிலிருந்து கிளம்பும் நனவிலி உணர்வுகள். இதில் டிரில்லிங்குக்கு ஒருசார் உடன்பாடுதான் உண்டு. ஏனெனில், விருப்பப் புனைவுகள் மூவரையும் பாதித்தாலும், படைப்பாளி தன் புனைவுகளை ஆள்பவன். மனநோயாளி, தன் புனைவு களால் ஆளப்படுபவன்.

ஃப்ராய்டுக்குத் தமது கோட்பாட்டின் எல்லை தெரியும். எனவே அவர் படைப்புச் செயலை முழுமையாக விளக்கும் முயற்சியில் உளவியலின் போதாமையைப் பல இடங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலக்கிய வகைகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் உளவியல் அக்கறை காட்டுவ தில்லை. சிறந்த எழுத்தாளர்களின் எழுத்து எப்படி உருவாகிறது என்று யூங் கூறியிருக்கிறார். காலம் கடந்து நிற்கும் படைப்புகளைக் கலைஞன் உருவாக்குவதில்லை. மாறாகக் கலைஞனைப் பயன்படுத்திக் கொண்டு அவை தாமாகவே தோன்றுகின்றன என்கிறார்.

தமிழ் இலக்கியத்தில் ஃப்ராய்டியச் சிந்தனை முக்கியமான எந்த இடத்தையும் பிடிக்கவில்லை. காரணம், தமிழ் இலக்கியத்தில் காலம் காலமாக அற இயக்கத்தில் ஊறிய பிரக்ஞை மனம் ஆட்சிசெய்வதுதான். இலக்கியம் அறத்தை போதிப்பதாக இங்கு நோக்கப்பட்டதே ஒழிய ஆழ்மனத்தின் வெளிப்பாடு என்றோ, ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்றோ இங்கு நோக்கப்படவே இல்லை. பொதுவாகத் தமிழ்க் கவிஞர்களோ, புனைகதை ஆசிரியர்களோ உளவியல் தன்மைகளைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தவர்கள் அல்ல. இருப்பினும் பல தற்கால எழுத்தாளர்கள் தங்களை அறியாமலே பல சிறந்த புனைகதைகளை உருவாக்கியிருக் கிறார்கள். ஃப்ராய்டியக் கொள்கைக்கு அணுககமான நிலையில் நின்று படைத்தவர்கள் இருககிறார்கள். புதுமைப்பித்தன், கு.ப. இராஜகோபாலன் இருவரும் முதலில் நம் நினைவுக்கு வருபவர்கள். பெண்களின் உள்ளத் தைத் துல்லியமாகக் கு.ப. ரா.வினால் சித்திரிக்க முடிந்திருக்கிறது. அண்மையில் நீல. பத்மநாபன் புனைகதைகளில் உளவியல் நோக்கிற்குச் சிறப்பான இடமிருக்கிறது.

இந்திரா பார்ததசாரதி, ஜெயகாந்தன், தி. ஜானகிராமன் ஆகிய நாவலா சிரியர்கள் சில கதைகளையேனும் ஃப்ராய்டிய நோக்கில் படைத்திருக் கிறார்கள். ஜெயகாந்தனின் ரிஷிமூலம், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, தி. ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு ஆகிய நாவல்கள் குறப்பிடத் தக்கவை. Obsessive compulsive neurosis போன்ற சில உளவியல் நோய்க்கூறுகள் எவ்விதம் மனிதரிடம் வெளிப்படுகின்றன என்பதைச் சில புனைகதைகள் தெளிவாகக் காட்டியிருக்கின்றன. ஆனால் பொதுவாகத் தமிழ் நாவலாசிரியர்களை ஆராயும் எவரும் ஈடிபஸ் சிக்கலை மையமாக வைத்தே நோக்குகிறார்கள்.

தமிழில் ஃப்ராய்டிய நோக்கிலான விமரிசனம் சற்றும் வளரவே யில்லை. இதற்கும் அற நோக்கின் ஒடுக்குமுறையே காரணம். மானிடச் செயல்பாடுகளுக்கு ஆழ்மனத்தின் ஒடுக்கப்பட்ட பாலியல் உந்துதல்கள்தான் காரணம் என்பதைத் தமிழ்ச் சமூகத்தினர், குறிப்பாகப் படித்த, கல்விசார் சமூகத்தினர்கூட ஏற்பதில்லை. பாலியல் உந்துதல் என்பதை ஃப்ராய்டு மிகப் பரந்த பொருளில் ஆள்கிறார் என்ற உணர்வுகூட அவர்களுக்குக் கிடையாது. மேலும் தமிழ் போன்ற மொழிகளில் பக்திசார்ந்த் இலக்கியமே மிகுதி. அவற்றை ஃப்ராய்டிய நோக்கில் அணுக முயன்றால் அவ்விமரிசகர்கள் சமூகத்தின் வெறுப்புக்கே ஆளாகிறார்கள். எனவே ஃப்ராய்டிய அணுகுமுறை இலக்கிய விமரிசனத்தில் வளர்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

ஃப்ராய்டிய அடிப்படைகளையும் உள்ளடக்கிய ஒரு பொதுவான உளவியல் நிலைப்பாட்டிலிருந்து புதுவைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நலங்கிள்ளி போன்ற திறனாய்வாளர்கள் சில நல்ல ஆய்வுகளைச் செய்துள்ளனர். வ. சுப. மாணிக்கம், தமிழ்க் காதல் என்ற நூலை உருவாக் கியுள்ளார். உளவியல் நோக்கிலிருநது பெருந் திணை, கைக்கிளை, ஆகிய வற்றிற்கு அவர் தந்துள்ள விளக்கங்கள் புதுமையானவை. பல சங்கப் பாக்களுக்கும் அவர் உளவியல் அடிப்படையில் விளக்கம் தந்துள்ளார். இம்மாதிரி ஒருசில ஆய்வுகளே தோன்றியுள்ளன.

இலக்கியம்