7. இலக்கியமும் இருத்தலியமும்

7. இலக்கியமும் இருத்தலியமும்

நிகழ்வியல் என்பது எட்மண்ட் ஹுஸர்ல் (1895-1938) என்னும் ஜெர்மன் தத்துவஞானியினால் உருவாக்கப்பட்ட சமூக, தத்துவ அணுகு முறையைக் குறிக்கும். இப்போக்கு பலவித அணுகுமுறைகளைக் கொண்டி ருப்பதால் மிகச் சுருக்கமாக விளக்குவது அசாத்தியம். மார்ட்டின் ஹை டெக்கர், மாரிஸ் மார்லோ போண்டி, ழான் பால் சார்த்தர், ஆல்பிரட் ஷூட்ஸ் போன்ற சிந்தனையாளர்களின் கருத்துகளை நிகழ்வியல் உள்ளடக்கியிருக்கிறது. அடிப்படையான மானிட அனுபவத்தைப் பற்றிய அக்கறைகொண்ட தத்துவம் இது. (எனவே, நிகழ்வுகளைப் பற்றிய துறை. நிகழ்வுகள்-phenomena என்ற சொல், கிரேக்க மொழியில் தோற்றங்கள், புலன் சார்ந்த அனுபவங்கள் என்பதைக் குறிக்கும்.) இது ஒரு அகவயக் கருத்து முதல்வாதப் போக்கு. சமகாலத் தத்துவத்தில் பெரிய பாதிப்பினை ஏற்படுத் திய சிந்தனைத் துறை இது.

அறிவியல்களும் பிற துறைகளும் உலக அனுபவத்தை அடிப்படை யாக வைத்து அறிவு என்பதைக் குறித்துப் பேசுகின்றன. இப்படியான அறிவு என்ற ஒன்று உண்டா, அது எப்படிச் சாத்தியமாகிறது எனபது நிகழ்வியல் எழுப்பும் அடிப்படைக் கேள்வி. எவ்விதமான முன்யூகங்களும் கலாச்சாரம் தருகின்ற எதிர்பார்ப்புகளும் போன்றவையும் அற்ற ஒரு சாதாரணப் பார்வை யாளனுக்கு இவ்வுலகம் எவ்வாறு காட்சி தரும் என்பதை இது விவரிக்க முனைகிறது. ‘பொருள்கள்-தமக்கே’ (things themselves) திரும்பவேண்டும் என்ற நிகழ்வியல் குறிக்கோளில் இது எதிரொலிக்கிறது. அறியும் தன்னிலை இன்றிப் பொருள் என ஏதும் இல்லை என்பது இதன் அடிப்படை வாசகம். பிரக்ஞையின் உள்நோக்கத் தன்மைக்கு மைய இடமளிக்கிறது.

நிகழ்வியல் ஆய்வு அடைப்புக்குள்ளிடல் (bracketing) வாயிலாக நிகழ் கிறது. அடைப்புக்குள் இடுதல் என்பது ஒரு நம்பிக்கையை ஏற்பதைத் தற்காலிகமாகத் தவிர்த்தல். இயற்கையான மனப்பாங்குடன் பொருள்களை நோக்கவேண்டும் என்று ஹுஸர்ல் சொல்கிறார். நமது அன்றாட வாழ்வில் எந்தப் பொருளையும் இப்படி ஆராய்வதில்லை. முன்சொல்லப்பட்ட கருத்துகளை நாம்ம அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். நமது ஒருமித்த சுயங்கள் இப்படியான அனுபவத்தை உருவாக்குகின்றன. ஆனால் அகவயக் கருத்துமுதல் வாதம் சொல்வதுபோல, இந்த உலகம் பொய் என்று ஹுஸர்ல் கூறவில்லை. மாறாகச் சில விஷயங்களை நம்பமறுததல் (அடைப்புக்குள்ளிடுதல்) பொருள்களின் உண்மை இயல்பைப் புரிந்துகொள்ள அவசியம் என்கிறார்.

எல்லாப் பிரக்ஞையும் சுயமானதே. அதாவது நாம் எப்போதும் பிரக்ஞை யோடிருக்கிறோம். ஆனால் பிரக்ஞை என்பது தனியானதல்ல. அது ஏதோ ஒரு பொருளைக் குறித்துத் தான் ஏற்பட இயலும். (இந்தப் பொருள் உண்மையாகவும் இருக்கலாம், அல்லது இல்லாமலும் இருக்கலாம். பார்வையாளனைப் பொறுத்தே பொருள் என்பதும் இருககிறது. இருட்டில் கயிற்றைப் பாம்பு என்று நினைக்கும் போதும் நமக்கு அச்ச உணர்வு ஏற்படவே செய்கிறது. அட்ரினலின் சுரக்கிறது, வேகமாகச் செயல்படுகிறோம்.)

ஹுஸர்லின் மேற்கண்ட கருத்தைப் பின்வந்தோர் ஏற்க மறுத்தனர். ஹைடெக்கரும் சார்த்தரும் மனித அனுபவத்தில் காணும் நிஜமான பிரச்சினைகளிலிருந்தே தொடங்கவேண்டும் என்றனர். உலகில் நடை முறைப் பிரச்சினைகளில் நாம் ஈடுபடும்போது அனுபவமும் அர்த்தமும் வரலாற்றுரீதியாக உருவாகின்றன என்று ஹைடெக்கர் கருதினார். உதாரணமாகச் சம்மட்டி என்ற பொருளின் அர்த்தம், அச்சம்மட்டியை எப்படி மனிதர்கள் வரலாற்றுரீதியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதிலிருந்துதான் பிறக்கிறது. எனவே அனுபவ அர்த்தங்கள் உலகப் பொதுமை வாய்ந்தன அல்ல.

மரம் என்பதை நாம் பழம் தருகின்ற ஒன்றாகவோ கதவுக்குப் பயன் படுவதாகவோ-இப்படித்தான் பார்க்கிறோம். நீரைக் குடிப்பதற்குரியது, மின்சாரம் தயாரிப்பதற்குரியது, படகு செல்வதற்குரியது என்பது போலப் பார்க்கிறோம். காற்று என்பது மரங்களில் வீசும் தென்றலாகவோ, காற்றா லையைச் சுற்ற வைக்கும் பொருளாகவோ-இப்படித்தான் உணரப்படுகிறது. உடலுணர்வின் வாயிலாகவே பொருள்களின் அர்த்தங்களை நாம் உணர் வதால், உடலின்மீதான நம்பிக்கையை நாம் அடைப்புக்குள் இடமுடியாது என்கிறார் மார்லோ போண்டி.

பின்னால், நிகழ்வியலின் வெளிப்படையான கருத்துமுதல்வாதச் சிந்தனைகள் அதற்குள்ளாகவே எதிர்ப்பை உருவாக்கின. இதிலும் இடது சாரிச் சிந்தனையாளர்கள் உண்டு. அவர்கள் அறிவின் மையத்தன்மையைக் காப்பாற்றி, அகவய வாதத்திலிருந்து நிகழ்வியலைக் காப்பாற்ற முயன் றார்கள். நிகழ்வியலின் தொடர்ச்சியாக உருவானது இருத்தலியம். நிகழ்வியல் போன்றதொரு தத்துவம், வேதாந்தம், இந்திய மண்ணில் ஏற்கெனவே உண்டு. அதனால் வேதாந்தச் சிந்தனை உடையவர்களை இருத்தலியம் கவர்ந்ததில் வியப்பில்லை.

இருத்தலியத்தில் இரு பிரிவுகள் உண்டு. மதம் சார்ந்த இருத்தலியம் என்ற வகையில் கீர்க்கேகார்டு, மார்சல், யாஸ்பர்ஸ், பெர்தியேவ், போன் றோரின் சிந்தனைகள் அடங்கும். நாத்திக இருத்தலியம் என்பதில் ஹைடெக்கர், சார்த்தர், காம்யூ போன்றோரின் சிந்தனைகள் வரும்.

மேற்கத்திய உலகாயத முதலாளித்துவச் சிந்தனைகளின் உலக முன்னேற்ற நோக்கினை இருத்தலியம் கேள்விக்குட்படுத்தியது. வரலாற்றுப பூர்வமான அவலங்களால் (உலகப்போர்கள் முதவியவற்றால்) முதலாளித் துவ நம்பிக்கைகள் தகர்ந்த பிறகு எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது பற்றி விவாதிப்பதாக இது அமைந்தது. எனவே ஒருவித துயர்நோக்கையும் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத் திலிருந்த அறிவொளி சார்ந்த பகுத்தறிவு வாதம், நேர்க்காட்சி வாதம், காண்ட்டிய வாதம் போன்ற வற்றுக்கு எதிரானதாக இது நின்றது.
அருவப்படுத்தல்களுக்கு எதிரான இயக்கம் இருத்தலியம். ஒழுங்குறுத்தல் களுக்கு எதிரான தொடர்ந்த போராட்டம். உதாரணமாக, டெ கார்ட்டேவின் “நான் சிந்திக்கிறேன், அதனால் இருககிறேன்” என்ற கோஷத்தை பாஸ்கல் மாற்றி, “நான் சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன்” என்பதுதான் மெய் என்றார். மானிடத்திற்கான சாராம்சம் என்பது முற்காலத்திலிருந்தே இருந்துவரும் எண்ணம். இதைத்தான் கருத்துமுதல் வாதம் என்கிறோம். மனிதனின் இருப்பு (existence)தான் முதலில் உருவாகிறது. பிறகுதான் மனித சாராம்சம் என்பது அமைகிறது என்பது இருத்தலியத்திற்கும் பொருள்முதல் வாதங்களுக்கும் பொதுவான கொள்கை.

நிஜமான மெய்ம்மைகளினால் உருவாகும் அறிவும் தத்துவமும் இதில் எதிரெதிராக நிறுததிப் பார்க்கப்படுகின்றன. பகுத்தறிவுச் சிந்தனையின் அடிப்படையான குணம், தன்னிலை-பொருள் இவற்றின் முரண்பாட்டிலி ருந்து பிறக்கிறது. இறை நம்பிக்கை, விசுவாசம் பகுத்தறிவிற்கு எதிரானது என்றாலும், பாஸ்கல் நம்பிக்கையைப் பகுத்தறிவுக்கு எதிர்துருவமாக வைக்கவில்லை. எல்லா முரண்பாடுகளும் கரைந்தழிகின்ற இடம்தான் கடவுள் என்பது அவர் கொள்கை. விசவாசம் புலன்களுக்கு அப்பால் உள்ளது. எனவே பகுத்தறிவிற்கு முரண்பட்ட தல்ல. “புரியாதவையாகப் பொருள்கள் இருக்கவேண்டும் என்பதுதான் புரியாதது” என்றார் அவர். இம்மாதிரி முரண்கூற்று(paradox)களில் இருத்தலியலாளர்களுக்கு எப்போது மே ஈடுபாடு உண்டு. எல்லா முரண்களிலும் இறுதியான முரண் கடவுளுக் கும் மனிதனுக்குமான தொடர்புதான் என்றார்கள், சமய நம்பிக்கை சார்ந்த இருத்தலியலாளர்கள்.

தற்சார்பற்ற, புறநிலையிலான ஆய்வு என்பது பகுத்தறிவு சார்ந்த கருதுகோள். இதனை இருத்தலியம் ஏற்பதில்லை. தத்துவத்திற்கு அறிவியல் முரண் நிலையிலுள்ளது. உதாரணமாக, அறிவியலின் அக்கறை ஜீவித்தல் (being). ஆனால் தத்துவத்தின் அக்கறை இருத்தல் (existence) என்றார் ஹைடெக்கர். “ஜீவித்தல் என்பது அனுபவப் புறவுலகு சார்ந்தது. இதனை இருத்தல் என்பதோடு குழப்பிக்கொள்ளக்கூடாது. மனிதன் பகுத்தறிவின் வாயிலாகத் தான் ஜீவிப்பதை அறிவதில்லை. நேரடியாகத் தனது இருப்பின்மூலமாகவே அறியமுடியும். ஆனால் தன் இருப்பை அன்றாட நிலையில் மனிதன் அறிவதேயில்லை. அதனை அறிய அவன் எல்லைக் கோட்டுச் சூழல்களுக்கு (மரணத்தறுவாய் போன்றவைகளுக்கு)ச் செல்ல வேண்டும்” என்கிறார். தனது மெய்யான இருப்பினை மனிதன் அறியும் போது அவனுக்குச் சுதந்திரம் உருவாகிறது. உண்மையான விடுதலை பிறக்கிறது. இப்படிப்பட்ட மனிதன் தன் எல்லாச் செயல்களுக்கும் தானே பொறுப்பேற்கிறான். பிறர்மீதும் சூழல்களின் மீதும் குற்றம் சுமத்துவதில்லை. ஆனால் தன்னைச் சுற்றி நிகழ்வனவற்றினால் ஒரு விதக் குற்றவுணர்வு அடைகிறான்.

இப்படிப்பட்ட ஒரு மனிதனை (மெர்சே) மிகச் சிறப்பாகத் தமது நாவல் ‘அந்நியன்’ என்பதில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார் ஆல்பர்ட் காம்யூ. (இந்நாவல் தமிழில் மொழிபெயர்ப்பாக வெளிவந்திருக்கிறது.)

எல்லாவகையிலும் மரபோடு ஒத்துச்செல்கின்ற பெரும்பான்மை மக்களுக்கு எதிரான விஷயமாக இருத்தலியம் நிற்கிறது. வரலாற்றில் நிகழ்ந்த, நிகழ்கின்ற யாவற்றிற்.கும் மனிதனே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது. ஆனால் இருத்தலியம் கூறும் சுதந்திரம் என்பது முற்றிலும் அகவயமானது. அறவியல் அடிப்படை சார்ந்தது. சமூகத் தளத்திலிருந்து இதில் மனித விடுதலை விவாதிக்கப்படவில்லை. அகவயமான அறிவின் தன்மையை வலியுறுத்துவதால், இத்தத்துவம் அறிவியலைவிடக் கலைகளுடன் உறவு கொள்வதாக அமைந்துள்ளது.

கீர்க்கேகார்ட், ஒழுங்கமைவு (சிஸ்டம்)களை முற்றிலும் வெறுத்தவர். எனவே ஒழுங்கமைவுகளை ஒழுங்கமைக்கும் ஹெகலின் தத்துவத்திற்கு அவர் எதிரி. ஒரு பொருளின் இயல்பு அதன் சாராம்சம் என்றால், இருப்பு அந்தப் பொருளேதான். எனவே இருப்பினின்றும் ஒரு பொருளின் சாராம் சத்தைப் பிரித்தல் என்பது ஒரு நினைவுச்சாத்தியம்தான். கீர்க்கேகார்டைப் பொறுத்தவரை, எந்த ஒரு மானிட சந்தர்ப்பமும் இதுவா-அதுவா (either/or) என்னும் தேர்வில்தான் கொண்டுசெல்கிறது. இத்தேர்வு, சுதந்திர விருப் பத்தின் (free will) தேர்வு. தேவையின் தேர்வு. ஆனால் பெருமபாலும் மானிடத் தேர்வுகள் தோல்வியிலேயே முடிகின்றன. இதற்குச் சமூகமோ, சூழலோ, நம்மோடிருப்பவர்களோ காரணமாகிறார்கள். எனவே “மற்றமை என்பது நரகம்” (The Other is hell) என்றார் சார்த்தர்.

விசுவாசம் என்பதும் ஒரு தேர்வுதான். விசுவாசம், பகுத்தறிவின்மீது கட்டப்படுவதில்லை. ஆனால் பகுத்தறிவு விசுவாசத்தின்மீது அமைந்துள் ளது. இதன் தொடர்ச்சியாக, அழகியல்-அறவியல் சார்நத் மனிதனை ஒருபுறமும், சமய நம்பிக்கை உடைய மனிதனை மறுபுறமும் நிறுத்துகிறார் கீர்க்கேகார்டு.

“மனிதன்தான் எல்லாவற்றிற்குமான அளவுகோல்” என்ற மறுமலர்ச்சிக் கருத்து (மனிதமைய வாதம்)தான் நமது துயரங்களுக்கெல்லாம் காரணம் என்றார் கீர்க்கேகார்டு. பாஸ்கலும் கீர்க்கேகார்டும் கடவுளில் நம்பிக்கை கொண்ட இருத்தலியவாதிகள். எனவே அவர்களுக்கு இருத்தலியம் என்பது கிறித்துவ அனுபவத்தை வருணிக்கும் ஒன்றாகவே இருந்தது. மலரும் ஒவ்வொன்றிற்கும் சுதந்திரம் என்பது அடிப்படையானது. மனிதன் படிப்படியாக மலச்சியடைபவன் ஆதலால் அவனுக்கும் சுதந்திரமே அடிப்படை. ஆனால் அவன் சமூகத்தின் ‘சப்ஜெக்டாக’ (கீழ்ப்பட்டவனாக) இருக்கிறான். ‘சப்ஜெக்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு விஷயம், பாடம், பொருள், எழுவாய், தன்னிலை, செய்பவன் அல்லது கர்த்தா, குடிமகன், கீழ்ப்பட்டவன், அடிமை எனப் பல அர்த்தங்கள் உண்டு. பொதுவாகத் தத்துவ நூல்களில் இந்தச் சொல் ஆளப்படும்போது ‘தன்னிலை’ என்று மட்டும் மொழிபெயர்த்துவிடுகிறார்கள். ஆனால் இந்த எல்லா அர்த்தங்களையும் இந்தச் சொல்லில் பொருத்திப் பார்க்கவேண்டும். முழு அடிமைத்தனம் என்பது பைத்தியநிலையை ஒத்தது. காலமற்றதை, அழியாததை எந்தச் சில கணங்களில் மனிதன் காண்கிறானோ, கடைப்பிடிக்கிறானோ அந்தச் சமயத்தில் அவன் சுதந்திரத்தை அடைகிறான்.

இருத்தலியம், தமிழ்க் கவிதைகளிலும் நாவல்களிலும் ஓரளவு தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. இந்திரா பார்த்தசாரதியின் தந்திர பூமி, சுதந்திர பூமி போன்ற நாவல்கள், ஆதவனின் காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன், ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே, குறத்தி முடுக்கு ஆகிய புனைகதைகள் யாவும் இருத்தலிய அடிப்படையிலான சுதந்திர வாழ்க்கைக்கான போராட்டத்தை எடுததுக்காட்டுவனவாக உள்ளன. இருத்தலியம் அவ்வளவாகச் சிறுகதைகளில் வெளிப்படவில்லை. காம்யூ சிசிபஸ் தொன்மம் என்ற கட்டுரைத் தொகுதியினை உருவாக்கியதுபோலத் தமிழில் எவரும் இருத்தலிய அடிப்படையிலான கட்டுரைத் தொகுதியை வெளியிடவில்லை. ‘காலிகுலா’ என்னும் நாடகத்தையும் இருத்தலிய அடிப்படையில் படைத்தார் காம்யூ. சார்த்தரின் நாவல்களும் சிறுகதைகளும் அபத்த நோக்கில் எழுதப்பட்டடவை. அபத்தநோக்குப் படைப்புகள், சுதந்திரத்தை எய்தமுடியாத வாழ்க்கையின், எந்த வாய்ப்பும் தவறாகவே முடிகின்ற வாழ்க்கையின் அபத்தத்தன்மையை-இருத்தல் சார்ந்த முரண் பாட்டை எடுத்துக்காட்டுவதற்காக இயற்றப்பட்டவை. சார்த்தரின் ‘நாசியா’ என்னும் சிறுகதைத்தொகுதி மிகப் புகழ்பெற்ற ஒன்று.

மேற்கில் அபத்த நாடகங்கள் (அப்சர்ட் தியேட்டர்) உலகப்போர்கள் காலத்தில் உருவாகிப் புகழ்பெற்றன. சாமுவேல் பெக்கெட் எழுதிய ‘கோடோவுக்காகக் காத்திருத்தல்’ (Waiting for Godot) போன்ற அபத்த நாடகங்கள் மிகப் புகழ் பெற்றவை. இந்த வடிவத்தைத் தமிழ் நாடகங்களிலும் பின்பற்றியிருக்கிறார்கள். தமிழில், ‘காலம் காலமாகி’, நாற்காலிக்காரர்கள், நட்சத்திரவாசிகள் போன்ற நாடகங்களில் இந்நோக்கு முதன்முதலில் வெளிப்பட்டது. இந்திரா பார்த்தசாரதியின் பல நாடகங்களும் (பசி போன்றவை) இருத்ததலிய நோக்கினை வெளிப்படுத்துகின்றன. ஆனால் தமிழுக்கே உரிய அசலான நாடகப்படைப்புகளை விட பிற மொழிகளிலிருந்து படைப்புகளில்தான் இருத்தலியல் சாயைகள் அதிகம்.

கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நாடகமான ‘ஹயவதன’, விஜய் டெண்டூல்கரின் மராட்டி நாடகமான ‘அமைதி அமைதி கோர்ட் நடக்கிறது’, பாதல் சர்க்காரின் நாடகங்களான ‘பிறகொரு இந்திரஜித், ‘மீதி சரித்திரம், ‘இந்தியச் சரித்திரம்-ஓர் அபத்த நாடகம் போன்றவற்றில் இருத்தலியத் தத்துவ அடிப்படைகள் மிக நன்கு வெளிப்படுகின்றன. செய்ததையே திரும்பத் திரும்பச் செய்துகொண்டு, பெரும்பாலும் பணத் தையே குறியாக எண்ணி வாழும் சுயசிந்தனை அற்ற நடுத்தர வர்க்க அவலங்களை இத்தகைய நாடகங்களும் நாவல்களும் வெளிப்படுததுபவை யாக உள்ளன. இத்தகைய நாடகங்க ளைத் திருச்சி நாடகச் சங்கம் 1980-1990களில் மிக நன்கு தயாரித்து அரங்கேற்றியது குறிப்பிடத்தக்க செய்தி.

இலக்கியம்