வீழ்ச்சி

ஆல்பர்ட் காம்யூ அல்ஜீரியாவில் பிறந்த ஃபிரெஞ்சு தத்துவஞானி. இருத்தலியக் கோட்பாட்டாளர். இருத்தலியம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இவரையும் ழான் பால் சார்த்தரையும் கண்டிப்பாகப் படித்தே ஆக வேண்டும்.

1913இல் பிறந்தவர். 1960இல் மறைந்தார். 1957இல் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அந்நியன், காலிகுலா, வீழ்ச்சி என்பன இவரது நாவல்கள். தி மித் ஆஃப் சிசிஃபஸ், அந்நியன் போன்ற படைப்புகளில் இருத்தல் சார்ந்த அபத்தக் கோட்பாட்டினைத் திறம்பட முன்வைத்தவர். இக்கதை, காம்யூவின் நாவலான தி ஃபால் என்பதன் சுருக்கம்.

இதன் நாயகன் கிளமன்ஸ் என்பவன். கதையின் தொடக்கத்தில் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் மெக்சிகோ சிட்டி என்ற மதுஅருந்தகத்தில் ஓர் அறிமுகமில்லாத நபரிடம் ஒரு மதுபானத்தை எப்படி வருவிக்க வேண்டும் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறான். ஏனெனில் அந்த நபருக்கு டச்சு மொழி தெரியவில்லை. பார் காரனோ டச்சு மொழியைத் தவிர வேறு மொழி எதையும் அறியாதவன். ஆக அவனுக்கு உதவ வேண்டி கிளமென்ஸ் முன்வருகிறான். பேச்சினூடாக, அப் புதியவனும் இவனைப் போலவே பாரிஸ்-காரன் என்பது தெரிகிறது.

கிளமென்ஸ், பாரிசில் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞன். அவன் அதிகமாக எடுத்துக் கொள்வது விதவைகள், அநாதைகள் வழக்குகளைத் தான். அதாவது வழக்காட வழியற்ற ஏழைகளுக்கு உதவுகிறான். மேலும், தான் எப்போதும் பிறருக்கு உதவுபவன்–தெருக்களில் புதியவர்களுக்கு வழிகாட்டுவான், பஸ்சில் பிறருக்குத் தனது இருக்கையை வழங்குவான், ஏழைகளுக்குப் பிச்சை அளிப்பான், குருடர்கள் வீதியைக் கடக்க உதவுவான் என்று சொல்லிக் கொள்கிறான். அதாவது “உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்று உலகைப் பார்த்துச்  சொல்லும் ரகம். அதனால் தான் காட்டும் கருணையே தனக்கான பரிசாக விளங்குகின்ற அத்தகைய உயர்ந்த உச்ச நிலையை எய்திவிட்டவன்.

ஒரு நாள் இரவு. தன் இரவுத்தோழியுடன் காலம் கழித்துவிட்டு பான்ட் ராயல் வழியாகத் தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கிறான். அப்போது கருப்பு உடையணிந்த ஒரு பெண்மணி பாலத்திலிருந்து குதிக்கும் நிலையில் இருப்பதைக் காண்கிறான். ஒரு கணம் தயங்கி உதவிசெய்யலாமா என யோசிக்கிறான். பிறகு தன் வழியே செல்கிறான். ஆனால் சில கணங்கள் கழித்து ஓர் உடல் நீரில் விழும் சத்தம் கேட்கிறது. என்ன நடந்தது என்று புரிந்து ஒரு கணம் நிற்கிறான். ஆனால் எதுவும் செய்யவில்லை. கூக்குரலிடும் ஓசை பல முறை கேட்கிறது. பிறகு நீரோட்டத்தில் தேய்ந்து மறைகிறது. ஆனால் இவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தொடர்ந்து நிகழும் அமைதி எல்லையற்று நீடிக்கிறது. “நான் ஓட நினைத்தேன், ஆனால் அசையவும் முடியவில்லை…அதிக லேட்டாகி விட்டது… ரொம்ப தூரம் போய்விட்டது…” என்று சொல்லிக் கொள்கிறான். பிறகு மெதுவாக மழையில் நனைந்தவாறே போய்விட்டான்.

சுயநலமற்று பலமற்றவர்களுக்கும் அதிர்ஷ்டக் கட்டைகளுக்கும் தான் உதவுபவன் என்ற எண்ணம் கிளமென்ஸிடம் இருக்கிறது. ஆனால் இந்தச் சம்பவத்தை அடியோடு புறக்கணித்து விடுகிறான். அவளுக்கு உதவியிருந்தால் தன் சொந்தப் பாதுகாப்பே கேள்வியாகி இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறான்.

பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்தச் சம்பவத்தை அவன் ஏறத்தாழத் தன் ஞாபகத்திலிருந்து அழித்துவிட்டான். மற்றொரு இனிய நாள். தன் கடமைகளைச் சிறப்பாக முடித்துவிட்டான். மேலும் நண்பர்களுடன் ஆளும் வர்க்கத்தின் கடின இதயம் பற்றியும் தலைவர்களின் போலித்தனம் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்தாயிற்று. தனக்குள் முழுமையின் ஒரு புதிய பெரிய பலம் பொங்கி எழுவதை உணர்கிறான். சுய திருப்தியோடு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு பான்ட் ராயல் அருகே திருப்தியாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கிறான். அந்தச் சமயத்தில் அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு பெருஞ்சிரிப்பு கேட்கிறது.

அது ஏதோ முன்பு தன் நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட ஒரு பிரமை என்று நினைக்கிறான். ஆனால் தொடர்ந்து அது நீரிலிருந்து எழுவதுபோலக் கேட்கிறது. அது அதிர்ச்சியூட்டுகிறது. ஏனெனில் பல ஆண்டுகள் முன்பு நீரில் அமிழ்ந்துபோன பெண்ணின் நினைவை அது தெளிவாகக் கொண்டு வருகிறது. தான் தன்னை ஒரு சுயநலமற்ற மனிதனாகப் பாராட்டிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அந்தச் சிரிப்பு எழுந்தது. அது இதயபூர்வமான, நட்புமிக்க, நல்ல சிரிப்பாகவும் இருக்கிறது. அது அவனுக்குள்ளிருந்தே எழும் சிரிப்பு என்பதை அது காட்டுகிறது. தான் ஊதிப் பெருக்கிக் கொண்ட தனது பிம்பத்திற்கும் உண்மையான சுயத்திற்குமான மோதல் தெளிவாகிறது. தனது போலித்தனம் வலியுடன் உணரத்தக்கதாக வெளித்தெரிகிறது.

மூன்றாவதாக ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஒரு சிக்னலில் அவன் தன் காரில் நிற்கும்போது விளக்கு பச்சையாக மாறிய பிறகும் முன்னால் வழியை மறித்திருக்கும் மோட்டார் சைக்கில்காரன் நகர மறுக்கிறான். வாகனத்தை நகர்த்தாதது மட்டுமல்லாமல் இவனை அடிப்பதுபோல மிரட்டவும் செய்கிறான். அவனை அடிப்பதற்காக கிளமென்ஸ் காரைவிட்டு இறங்கியபோது யாரோ ஒருவன், தன் கால்களுக்கிடையில் மோட்டார் சைக்கிலை வைத்திருக்கும் பரிதாபமான ஒருவனை அடிப்பது தவறு என்கிறான். ஆனால் திடீரென்று இவன் எதுவும் செய்வதற்கு முன்னர் அந்த மோட்டார் சைக்கில்காரன் இவனைத் தலையின் பக்கவாட்டில் அடித்துவிட்டு வேகமாகச் சென்று விடுகிறான். செயலற்று விழித்த கிளமென்ஸ், பிறக தான் என்ன செய்திருக்க வேண்டும் என்று யோசிக்கிறான். பொது இடத்தில் தான் அடிக்கப்பட்ட கேவலத்தை நினைத்து, வருத்தப்பட்டாலும், அதைப் பார்த்தவர்கள் அப்போதே மறந்துவிட்டுச் சென்றிருப்பார்கள், அதனால் தனது கெளரவத்திற்கு ஹானி எதுவும் வந்துவிடாது என்று நம்புகிறான்.

இந்த நிலையில் அவனுக்குத் தான் இதுவரை வெற்று கெளரவம், பிறரின் மதிப்பும் ஏற்பும், பிறர்மீதான அதிகாரமும் என்ற இவற்றிற்காகவே வாழ்ந்திருப்பது புலனாகிறது. இதனை உணர்ந்த பிறகு அவனால் முன்போல் எப்படி வாழ முடியும்?

சார்த்தர் இந்த நாவலை “மிகுந்த அழகியல் கொண்டது, ஆனால் மிகக் குறைந்த அளவே புரிந்துகொள்ளப்பட்ட நாவல்” என்று புகழ்ந்துள்ளார். கள்ளமற்ற தன்மை, இருத்தலின்மை, உண்மை ஆகியவை இந்த நாவலின் கருப்பொருள்களாக உள்ளன.


சூரியன் எப்படிக் கிடைத்தது நமக்கு?

ஆதிகாலத்தில் வெறும் இருள்தான் இருந்தது. மனிதர்கள் ஒருவர்மீது ஒருவர் மோதிக் கொண்டே இருந்தார்கள். உலகின் மறுபக்கத்தில் நிறைய வெளிச்சம் இருக்கிறது, ஆனால் பேராசை பிடித்த அவர்கள் அதைப் பகிர்ந்துகொள்ள ஒப்பமாட்டார்கள் என்று நரி கூறியது.


போஸம் என்ற பிராணி கொஞ்சம் ஒளியைத் திருடிக்கொண்டுவரச் சென்றது. எல்லா வற்றிற்கும் ஒளியூட்டிக்கொண்டு சூரியன் ஓர் உயர்ந்த மரத்தில் தொங்குவதைப் பார்த்தது. கொஞ்சம் சூரியத் துண்டினை எடுத்துத் தன் வாலில் மறைத்துக் கொண்டது. ஆனால் வெப்பம் அதன் வாலின் மென்மயிர்களை எரித்துவிட்டது. ஆகவேதான் போஸங்களுக்கு வாலில் மயிரின்றி மொட்டையாக இருக்கிறது.

பிறகு கழுகுபோன்ற பறவையான பஸார்டு என்பது தன் தலைமீது ஒளியைக் கொண்டுவர முயன்றது. அந்த முயற்சியும் வீணாயிற்று. வெப்பம் அதன் தலைமீதிருந்த இறகுகளை எரித்துவிட்டது. அதனால்தான் பஸார்டுகளுக்குத் தலை மொட்டையாக இருக்கிறது.

அடுத்தபடியாக சிலந்தி முயற்சிசெய்தது. அது களிமண்ணால் ஆன ஒரு கிண்ணத்தைச் செய்தது. பிறகு பெரிய வலை ஒன்று பின்னி வானில் அதை ஒரு பால்வழியாக அடுத்த பக்கம் செல்லுமாறு வீசியது. அதில் சென்று முழுச் சூரியனையும் களிமண் கிண்ணத்தில் பறித்து உலகின் இந்தப் பக்கமாகக் கொண்டுவந்துவிட்டது.
இப்படித்தான் நமக்குச் சூரியன் கிடைத்தது.

-செரோக்கீ நாட்டுப்புறக் கதை.


மாபெரும் கேட்ஸ்பி (The Great Gatsby)

The Great Gatsby என்பது ஸ்காட் ஃபிட்ஜெரால்ட் என்ற அமெரிக்க ஆசிரியரின் புகழ் பெற்ற நாவல் மட்டுமல்ல, இன்றுவரை தொடர்ந்து படிக்கப்படும் நாவலும்கூட. ஃபிட்ஜெரால்ட் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இந்த நாவல் 1925இல் வெளியாயிற்று.

1922 கோடையில் நிக் கேரவே என்பவன் மின்னசோடாவிலிருந்து நியூயார்க்கிற்கு பத்திர விற்பனையாளனாகப் பணி புரிவதற்கெனக் குடி பெயர்கிறான். வெஸ்ட்-எக் என்னுமிடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறான். அது புதுப் பணக்காரர்கள் வாழும் பகுதி. அவனுக்கு ஈஸ்ட்-எக் பகுதியுடன் தொடர்பிருக்கிறது. அது பழைய பணக்காரர்கள் வாழுமிடம். இருவிதப் பணக்காரர்களுக்கும் இடையில் மனப்பாங்கிலும் தாங்கள் கொள்ளும் மரியாதையிலும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

அங்கு அவன் உறவினள் டெய்சியும் அவள் கணவன் டாம் பக்கனனும் வசிக்கிறார்கள். டாம், யேல் பல்கலைக்கழகத்தில் நிக்கின் வகுப்புத் தோழனும்கூட. அங்கு ஜார்டன் பேக்கர் என்னும் கோல்ஃப் விளையாட்டுக்காரியை நிக் சந்திக்கிறான். டாம் திருமண உறவுக்கு அப்பால் ஒரு தொடர்பு வைத்திருப்பதாக அவள் சொல்கிறாள். வீட்டுக்குத் திரும்பிய பிறகு நிக் தனது அண்டைவீட்டுக்காரன் ஜே கேட்ஸ்பியைக் காண்கிறான். இருளில் அவன் லாங் தீவுப்பகுதியை நோக்கிக் கையை நீட்டியவாறு தென்படுகிறான். ஆனால் அங்கு பச்சை நிற ஒளியைத் தவிர வேறொன்றும் புலப்படவில்லை.

சிலநாள் கழித்து டாம் நிக்கை நியூ யார்க்கில் ஒரு விருந்திற்கு அழைக்கிறான். வழியில் டாம் தன் தொடுப்புக்காரியான மிர்ட்டில் வில்சன் என்பவளை அழைத்துக் கொள்கிறான். அவள் ஜார்ஜ் வில்சன் என்பவனின் மனைவி. வில்சன் ஒரு ஆட்டோ-கடை நடத்துகிறான், அது ஏழைகள் வாழும் ஆஷ்-வேலி என்ற குப்பை மேட்டுப் பகுதியில் இருக்கிறது.

பார்ட்டியில் மிர்ட்டில் குடித்துவிட்டு டெய்சியைக் கிண்டல் செய்கிறாள். டாம் அவளை முகத்தில் குத்தி மூக்கை உடைத்துவிடுகிறான்.

கேட்ஸ்பி, மிக ஊதாரித்தனமான விருந்துகளைச் சனிக்கிழமை இரவுகள் தோறும் நடத்துகிறான். அதில் ஒன்றில் கலந்துகொள்ளும் நிக், ஜார்டனைச் சந்திக்கிறான். கேட்ஸ்பியையும் நேருக்குநேர் முதன்முதலாகப் பார்க்கிறான். கேட்ஸ்பி, ஜார்டனிடம் தன் அந்தரங்கக் கதையைச் சொல்கிறான். அவன் முதல் உலகப் போருக்கு முன்னாலேயே டெய்சியைச் சந்தித்துக் காதல் கொண்டவன். அவளருகிலேயே இருக்கவும் அவளைக் காண்பதற்காகவுமே அவன் வெஸ்ட்எக் பகுதியில் இந்த மாளிகையை வாங்கியிருக்கிறான். கேட்ஸ்பியின் வேண்டுகோளுக்கிணங்க, டெய்சியுடன் ஒரு சந்திப்பை கேட்ஸ்பி நிகழ்த்த நிக் ஏற்பாடு செய்கிறான். சந்தித்தவுடன் அவர்கள் இருவரின் காதலும் மீண்டும் துளிர்த்து விடுகிறது.

டெய்சியைச் சந்திப்பதற்காகவே சனிக்கிழமை விருந்துகள் நடத்தப் பட்டன. அவளைப் பார்த்துவிட்டதால் கேட்ஸ்பி தன் சனிக்கிழமை விருந்துகளை நிறுத்திவிடுகிறான்.

தன்னுடனும், டாம், ஜார்டனுடனும் நிக்கையும் கேட்ஸ்பியையும் விருந்துக்கு வருமாறு டெய்சி அழைக்கிறாள். அவளுக்கும் கேட்ஸ்பிக்கும் இடையில் உள்ள ஆழ்ந்த அன்பை நிக் அறிகிறான். ஒரு நாள் நியூ யார்க்கிற்கு அனைவரும் செல்கின்றனர். அங்கு பிளாசா ஹோட்டலில் டாமுக்கும் கேட்ஸ்பிக்கும் டெய்சி சம்பந்தாக வாய்ச்சண்டை ஏற்பட்டு விடுகிறது. தன்னை மட்டுமே டெய்சி நேசிப்பதாகவும் அவள் ஒருபோதும் டாமை விரும்பியதில்லை என்றும் கேட்ஸ்பி சொல்கிறான். ஆனால் டெய்சி இருவரையுமே விரும்புவதாகச் சொல்கிறாள். அதனால் கேட்ஸ்பி அதிர்ச்சி யடைகிறான். கேட்ஸ்பி ஒரு கள்ளச்சாராயக்காரன் என்றும் அதனால்தான் பணம் சேர்த்தான் என்றும் டாம் இழிவுபடுத்துகிறான். பிறகு டெய்சியை கேட்ஸ்பியுடன் அனுப்பிவிடுகிறான். சற்று நேரம் கழித்து டாம், நிக், ஜார்டன் எல்லாரும் கிளம்புகின்றனர்.

டாம் கேட்ஸ்பி அளவுக்குப் பணக்காரன் அல்ல என்றாலும் அவனிடம் குலப்பெருமை அளவுக்குமீறி இருக்கிறது. கேட்ஸ்பி ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவன். எப்படியாவது முன்னேற வேண்டும், பணம் சேர்க்க வேண்டும், குறிப்பாக டெய்சியை அதைக் கொண்டு அடைய வேண்டும் என்னும் எண்ணம் படைத்தவனாக இருக்கிறான். டாமிடம் இல்லாத உண்மையும் நேர்மையும் காதலும் கேட்ஸ்பியிடம் இருக்கின்றன.

அவர்கள் வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஒரு விபத்து நேரிடுகிறது. மிர்ட்டில் ஒரு காரில் அடிபட்டு இறந்துவிடுகிறாள். தங்களுக்கு முன் சென்ற கேட்ஸ்பிதான் காரைச் செலுத்தியவன், தன் காதலி மிர்ட்டில் மீது மோதியவன் என்று டாம் நினைக்கிறான். கேட்ஸ்பி யிடமிருந்து டெய்சிதான் உண்மையில் காரைச் செலுத்தி வந்தவள், மிர்ட்டில்மீது மோதியவள் என்று நிக்கிற்குத் தெரியவருகிறது. ஆனால், பழியைத் தான் ஏற்றுக்கொள்ள கேட்ஸ்பி தயாராக இருக்கிறான்.

ஜார்ஜ் வில்சன் தன் மனைவி மீது காரைச் செலுத்தியவன் கேட்ஸ்பி என்று நினைத்துப் பழிவாங்க நினைக்கிறான். அதனால் கேட்ஸ்பியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறான். மாலையில் நிக் செல்லும்போது இருவர் பிணங்களையும் காண்கிறான்.

டெய்சியும் டாமும் வேற்றிடத்திற்கு ஓடிவிடுகின்றனர். கேட்ஸ்பியின் இறுதிச் சடங்கைக் கூட நிக் மட்டுமே ஏற்பாடு செய்யவேண்டியதாகிறது. கேட்ஸ்பியின் பணக்கார நண்பர்கள்–அவன் அளித்த விருந்துகளில் கலந்துகொண்டவர்கள்-அதுவரை அவனைக் கொண்டாடியவர்கள் ஒருவரும் ஈமச் சடங்கிற்கு வரவில்லை. கேட்ஸ்பியின் தந்தையும் வேறொருவரும் மட்டுமே சடங்கில் பங்கேற்கின்றனர்.

ஜார்டனுடன் நிக் உறவை முறித்துக்கொள்கிறான். அடுத்த முறை  டாமை அவன் சந்திக்கும்போது ஜார்ஜிடம் மிர்ட்டிலைக் கொன்றவன் கேட்ஸ்பி என்று “போட்டுக் கொடுத்தவன்” டாம்தான் என்று தெரியவருகிறது. உண்மையில் மிர்ட்டில் மீது கார் ஏற்றிக் கொன்றவள் டெய்சிதான் என்ற உண்மையை நிக் அவனிடம் கூறவேயில்லை.

நியூ யார்க் வாழ்க்கையின் இசைகேடான நிலை, வெறுமை ஆகியவற்றை ஆழ்ந்து உணரும் நிக், திரும்ப மின்னசோட்டாவுக்கே போக முடிவுசெய்கிறான். அதற்கு முன்னாளிரவு முன்பு கேட்ஸ்பி நின்றவாறு லாங் தீவைப் பார்த்த இடத்தில் சென்று நோக்குகிறான். அமெரிக்காவின் முதல் குடியேறிகளுடன் கேட்ஸ்பியை ஒப்பிட்டுப் பார்க்கிறான். அவர்களுக்கும் மேற்கத்தியக் கனவு என ஒன்று இருந்தது. பழமையின் நீரோட்டத்தை எதிர்த்து முன்னோக்கிச் செல்லும் படகுகளைப் போல, கேட்ஸ்பியைப் போல, பரந்து விரிந்த கைகளுடன் எல்லாரும் எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டியதுதான் போலும் என்று எண்ணுகிறான். கேட்ஸ்பிக்கு எப்படியாயினும் தன் கனவுகளை நனவாக மாற்றும் சக்தி இருந்தது என்றாலும், “எல்லாருமே அவரவர் பாணியில் (குறிப்பாகப் பணம் சேர்ப்பதில்) வெற்றி பெற்றாக வேண்டும்” என்ற “அமெரிக்கக் கனவு” முடிவுக்கு வந்ததைப் போல, கேட்ஸ்பியின் கனவும் முடிவுக்கு வந்துவிட்டது.


கறை படிந்த எல்லைநிலம்

டாக்டர் பனீஸ்வரநாத் ரேணுவின் மைலா ஆஞ்சல் (கறைபடிந்த எல்லைப்பகுதி) என்பது இந்தியில் எழுதப்பட்ட முக்கிய நாவலாகும். பிரேம்சந்தின் கோதான் நாவலுக்கு அடுத்த நிலையில் இந்தியில் இரண்டாவது சிறந்த படைப்பாக வைத்து இது எண்ணப்படுகிறது. இந்த நாவலில் காணப்படும் அளவுக்குச் சாதி வெறியும் ஆணவக் கொலைகளும் தமிழகத்தின் தென் பகுதியில் காணப்பட்டாலும், இதே அளவுக்குச் சாதிப் பிளவுகளை, பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். சுமார் 200க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ள இந்த நாவலில் சாதிக்கு அப்பால் இயங்காதவர்கள் அபூர்வம்

.இது மைதிலி நாவல். மைதிலி இந்திய தேசிய மொழிகளில் ஒன்றாக தனியாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இதை இந்தி நாவல் என்றே சொல்வது மரபாக உள்ளது. மிதிலைப் பகுதியில் (பிஹார் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதி) பேசப்படும் மொழி மைதிலி. இது ஒரு வட்டார நாவல். இந்த நாவல் 1950களின் தொடக்கத்தில் வெளிவந்தது.

இந்திய சுதந்திரம் கிடைத்த வேளையில் மிதிலை நாட்டார் கதைகளையும் பாடல்களையும் பலவிதக் காதல்கதைகளையும்  கிராமப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டது இந்த நாவல். இதனால் கிராமப்புற வட இந்தியாவின் ஓர் அரிய சித்திரம் நமக்குக் கிடைத்துள்ளது. இது ஒரு தனிமனிதனின் கதையோ குடும்பத்தின் கதையோ அல்ல. ஒரு கிராமத்தின் கதை. எனவே இதில் தொடர்ச்சியான சிறுசிறு சம்பவங்கள் மட்டுமே உள்ளன. டாக்டர் பிரசாந்த்-கமலா, பாலதேவ்-லட்சுமி, காளிசரண்-மங்கலாதேவி, கலாசி-பூலியா என்ற நான்கு காதல் கதைகள் உள்ளன.

பிஹாரின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மேரீகஞ்ச் என்ற கிராமத்தில் கதை நிகழ்கிறது. 1946இல் இங்குள்ள ஆஸ்பத்திரியில் பிரசாந்த் குமார் என்ற லட்சிய பூர்வ டாக்டர் மலேரியா, காலாஅஜார் போன்ற நோய்களை குணப்படுத்த வருகிறான். கிராம மக்கள் அவனை மதிக்கின்றனர். (இவன் பூர்வகதை விரிவாகச் சொல்லப் பட்டுள்ளது. இவன் ஓர் அநாதைக் குழந்தை. பெற்றவள் கோசி ஆற்றில் போட்டுவிட்டுப் போய்விடுகிறாள். ஒரு நேபாளி பிராமணக் குடும்பம் தங்களது ‘ஆதர்ச ஆசிரமத்தில்’ இவனை விடுகிறது. அதை ஸ்நேகமயி என்பவள் மேற்பார்வை செய்கிறாள். அவள் வளர்ப்பினாலும் உதவியாலும் இவன் மெட்ரிகுலேஷன் படித்த பிறகு வாராணசிக்கு மருத்துவம் படிக்க வருகிறான். முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிப்பவன், ஒத்துவராமல் பிறகு பட்னா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்கிறான். பிறகு கிராமப்புற மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய லட்சியத்துடன் இந்த மூலைமுடுக்கு கிராமத்துக்கு வருகிறான்.) இந்த டாக்டர் ‘பாபு’ நோய்களை மட்டுமல்ல, மக்களின் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது.

தாசில்தார் விசுவநாத் பிரசாத்தின் மகள் கமலாவை அவன் குணப் படுத்தும்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. கமலா கருவுறுகிறாள். இடையில் பிரசாந்த் ஒரு கம்யூனிஸ்ட் எனக் கைது செய்து பிறகு விடுவிக்கப்படுகிறான். கமலாவுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. நீலோத்பல் என்று அவனுக்குப் பெயர் வைக்கப்படுகிறது.

பாலதேவ் ஓர் இடையன் (யாதவ்). காங்கிரஸ் கட்சிக்காரன். அருகிலுள்ள பூர்னியா நகரைச் சேர்ந்தவன். அவன் அழகான தூய இந்தியில் காந்தியத்தைப் பேசுகிறான். ஆனால் அவன் பேசும் இந்தி இந்த மக்களுக்குப் புரியாத ஒன்று. இந்த கிராம மக்களை வைத்து ஒரு சுதந்திர ஊர்வலம் நடத்துகிறான். மஹந்த் சேவாதாஸ் என்பவன் கபீர் மடம் என்ற ஒன்றை நடத்துகிறான். அதில் வேலை செய்யும் லட்சுமி என்பவளை வைத்திருக்கிறான். ஆனால் அவள் வேலையைவிட்டு பாலதேவுடன் வாழச் செல்கிறாள்.

காளிசரண் என்பவனும் இடைச்சாதிதான். அவன் சிறந்த மல்யுத்த வீரன். அவன் காங்கிரஸ் கட்சியை விட்டு சோஷலிஸ்ட் கட்சிக்கு மாறி, உழைப்பாளர்கள், சாந்தலர்கள் ஆகியோரை வைத்து ஓர் அமைப்பைக் கட்டுகிறான். சர்க்காவில் நூற்கும் மங்கலா தேவி என்ற ஆசிரியையைக் காதலிக்கிறான். ஆனால் சோஷலிஸ்டுகள் கைதுசெய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகிறான்.

கலாசி என்பவன் ஒரு ஓஜா. மந்திரவாதி. நன்றாகப் பாடுபவன், நன்றாக கஞ்சிரா வாசிக்கிறான். தத்மா பகுதியின் பூலியா என்ற பெண்ணைக் காதலித்து மிகுந்த முயற்சிக்குப் பின் மணக்கிறான்.

கிராம மக்கள் சாதிக்கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது, ஆண்களைப் பெண்கள் எதிர்த்துப் பேசக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளனர். உதாரணமாக மஹந்த் முழு கிராமத்துக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்கிறான்.

*பிராமணர்கள்- எங்களுக்குத் தனியான சிறப்பிடம் ஒதுக்கப்படாவிட்டால் சாப்பிடமாட்டோம்

*சிப்பாய்கள்- நாங்கள் நாட்டுக்காக போராடியவர்கள். மற்றவர்களுடன் சரிசமமாக உண்ண எங்களால் முடியாது.

*ஹிபரன் சிங்- எங்கள் சாதியினர் மாடுமேய்ப்பவர்களுடன் சமமாக அமர்ந்து உண்ணமாட்டார்கள்.

*யாதவர்கள்- தானுக்குகளுடன் சமமாக அமர்ந்து யாதவர்கள் உண்ணமாட்டார்கள்.

விருந்து எவ்வளவு நன்றாக நடந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

இடையில் மஹந்த் சேவாதாஸ் இறக்க, காசியிலிருந்து வரும் ஒருவன் மஹந்த் ஆக முயலுகிறான். அங்கேயே பணியில் இருந்த ராமதாஸை காளிசரண் மஹந்த் ஆக்குகிறான். அவன் வைப்பாட்டியாக ராம்பியாரி என்பவள் தன் குழந்தைகளுடன் அந்த மடத்திலேயே வசிக்கிறாள்.

மாறிவரும் காலத்தை தாசில்தார் விஸ்வநாத் உணர்கிறான். அவன் செல்வாக்கும் சரிகிறது. தன் பதவியைத் துறந்து காங்கிரஸ் உறுப்பினன் ஆகிறான். இடையில் ஓர் இந்துத்துவ கும்பல் (கருந் தொப்பிக்காரர்கள்) நிலைபெற முயல்கிறது. அதன் தலைவனாக ராம் கிர்பால் சிங்கும் அவனைச் சேர்ந்த ராஜபுத்திரர்களும் இருக்கிறார்கள். சாந்தலர்களும் கீழ்ச்சாதியினரும் சோஷலிஸ்டு கட்சியில் சேர்கிறார்கள். ஆனால் அது ஊழல்மிக்க கட்சியாகிறது. பவன்தாஸ் என்ற குள்ளன் காந்தியுடன் இருந்தவன். அவன் மேரிகஞ்சிற்கு வருகிறான். அப்போதுதான் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. அதை மேரீகஞ்சினர் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

காந்தி இறக்கிறார். கிராமத்தினர் துக்கம் கொண்டாடுகின்றனர். பவன்தாஸ், தன் கட்சியின் ஊழல், சாதிப்பற்று இவற்றால் மனம் நொந்து போராடும்போது ஒரு மாட்டுவண்டியின் அடியில் சிக்கி இறக்கிறான். அவன் உடல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தூக்கி வீசப்படுகிறது.

ஒரு நிலச்சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. அதன் அடிப்படையில் நிலவுரிமை கேட்டு சாந்தலர்களும் கிராமவாசிகளும் நீதிமன்றம் செல்கின்றனர். அவர்கள் வழக்குகள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. இடையில் காங்கிரஸ் கட்சி ஜமீன்தாரி முறை ஒழிந்தது என்று அறிவிக்கிறது. கிராமத்து நிலம் ஏலம் விடப்படும்போது பணக்காரர்கள் நிலங்களை வாங்கிக் கொள்கிறார்கள். எங்கும் குழப்பமும் போட்டியும். விஸ்வநாத் பிரசாத் பழைய நிலவுடைமை முறைக்கே மாறுவோம் என்று சொல்லிப் பஞ்சாயத்துக்கு அழைக்கிறான். ஆனால் வன்முறை வெடிக்கிறது. சாந்தலர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். மிச்சம்மீதி இருப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஜோத்கி என்ற பார்ப்பனப் பூசாரி, கீழ்ச்சாதி மக்களால்தான் கலகமும் அமைதியின்மையும் ஏற்பட்டது, டாக்டர்கள் விஷ ஊசிபோட்டு நோயைப் பரப்புகிறார்கள், என்றெல்லாம் பிரசாரம் செய்கிறான். அவனை அனைவரும் நம்புகிறார்கள். டாக்டர் பிரசாந்த் ஊரைவிட்டு ஓடும் நிலை ஏற்படுகிறது. டாக்டர் இல்லாததால் ஜோத்கி ஒரு கைம்பெண்ணைப் பேய்பிடித்தவள் என்று சொல்லிக் கொல்லச் செய்கிறான். இப்படி நாவல் முடிகிறது.

இருந்தாலும் ஒரு உடன்பாட்டு மனநிலையில்தான் நாவல் முடிகிறது. டாக்டரும் விஸ்வநாத்தும் மனம் ஒன்றாகின்றனர். கிராம மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விஸ்வநாத், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து பிகா (ஒரு பிகா என்பது இன்றைய அளவில் 0.619 ஏக்கர்) நிலத்தை தானமாக அளிக்கிறான்.


சூளாமணி

சூளாமணி என்பது தமிழிலுள்ள காப்பியங்களில் ஒன்று. இதைச் சிறுகாப்பியம் என்று வழக்கமாகக் கூறிவந்தாலும், இது சீவக சிந்தாமணி போன்ற பெருங்காப்பியமே என்று இலக்கிய வரலாற்றாசிரியர் மு. அருணாசலம் கூறுவார். இது ஏறத்தாழ கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டிருக்கலாம். சீவக சிந்தாமணியைப் போன்ற காப்பியம் ஒன்று எழுத சமண மதத்திற்கென எழுத வேண்டும் என்ற எண்ணத்தால் இதன் ஆசிரியர் தோலாமொழித் தேவர் இதை எழுதியிருக்கலாம். மதம் சார்ந்த கதைகள் எல்லாம் (இன்றைய திரைப்பட பக்திப் படங்கள் போல) வெறும் அற்புதச் செயல் புனைவும் இறுதியாக இறைவனை அடைதலும் என்ற பண்புகளை மட்டுமே கொண்டவை. அற்புதச் செயல்களைப் போற்றுவது எந்த மதத்திற்கும் நன்மை தருவதன்று. மூடநம்பிக்கையை வளர்க்கவே உதவும்.  

சீவக சிந்தாமணிக்குப் பிற்பட்ட தமிழ்க் காப்பியங்கள் அனைத்தும் இன்றைய திரைப்படக் கதைப் பாணியைக் கொண்டவைதான். அதாவது எல்லாரையும் வெல்லக்கூடிய ஒரு தலைவன் (கதாநாயகன்). அவன் அநீதியை எதிர்த்துச் (!) செய்யக்கூடிய வீரச்செயல்கள். அவனுக்கேற்ற ஓர் அழகான கதாநாயகி. பிறகென்ன? திருமணம். அவ்வளவுதான். ஆனால் சமணக் காப்பியங்கள் இத்துடன் நிற்காமல் அந்த அரசனோ அவனைப் பெற்றவனோ துறவு கொள்வதையும் சம்பிரதாயமாகச் சொல்லுபவை. இருந்தாலும், இந்தக் கதையைச் சற்றே காண்போம்.

சுரமை என்று ஒரு கற்பனை நாடு. அதன் தலைநகர் போதனம் என்ற நகரம். அதை பயாபதி என்ற அரசன் ஆண்டு வருகிறான். அவனுக்கு மிகாபதி, சசி என இரண்டு மனைவியர். இவர்களுக்கு விசயன், திவிட்டன் என்ற குழந்தைகள் பிறக்கின்றனர். இங்கிருந்தே விசயனை பலராமனுடனும், திவிட்டனை கண்ணனுடனும் ஒப்பிடும் ஒரு மோசமான போக்கினை தொடங்கிவைத்துவிடுகிறார் ஆசிரியர். நல்ல வேளை, இவன் கண்ணனைப் போல கீதை உரைக்கத் தொடங்கிவிடவில்லை. ஆனால் கண்ணன் கோவர்தன மலையைத் தூக்கியது போலவே இவனும் ஒரு மலையைத் தூக்குகிறான், கண்ணனைப் போலவே ஆற்றில் குளிக்கும் பெண்களின் உடைகளைக் கவர்ந்து இரசிக்கிறான். சும்மா சொல்லக்கூடாது இந்தியக் காப்பியங்களை! (இதுவும் வடமொழிக் காப்பியத்தின் தழுவல்தான்). அப்புறம் இன்று நித்தியானந்தாக்கள் உருவாகாமல் வான்மீகிகளா வருவார்கள்? புராண கால பலராமனைப் போலவே இந்த விசயனும் எதுவும் செய்வதில்லை.

இது இவ்வாறிருக்க, வித்யாதர நாட்டின் ஒரு பகுதியில் சுவலன சடி என்ற அரசன் ஆண்டுவருகிறான். அவனுக்கு அருக்க கீர்த்தி என்ற மகனும் சுயம்பிரபை என்ற மகளும் உள்ளனர். சுயம்பிரபை பிறந்தபோதே அவள் ஒரு மானிடனை (நம் கதாநாயகனைத்தான்) திருமணம் செய்வாள் என்று ஜோசியன் கூறிவிட்டான். அதற்குச் சான்றாக, திவிட்டன் இன்னும் ஒரு மாதத்தில் ஒரு சிங்கத்தைக் கொல்வான் என்கிறான்.

சடி, தன் ஒற்றர்களை வைத்து திவிட்டன் சிங்கத்தைக் கொல்கிறானா எனக் கண்காணிக்கிறான். இதற்கிடையில் வித்தியாதர நாட்டு வடக்குப் பகுதியில் ஆளும் அச்சுத கண்டன் என்ற அரசன், சுவலன சடி வித்தியாதர மகளை ஒரு மானிடனுக்கு மணமுடித்துத் தருகிறானே என்ற முடிவால் கோபமுற்று, திவிட்டன் நாட்டின்மீது படைகளை ஏவுகிறான். அவற்றை எளிதாக திவிட்டன் வெல்லவே, அவனது அமைச்சன் ஒரு தூதனைச் சிங்க வடிவத்தில் சென்று மக்களைக் கொல்லுமாறு கூற, அவனை திவிட்டன் விரட்ட, அவன் பயந்துபோய் உண்மையான சிங்கம் இருந்த ஒரு குகைக்குள் புகுந்து ஓடிப்போகிறான். குகையிலிருந்து உண்மையான சிங்கம் வெளிவரவும், திவிட்டன் அதன் வாயைப் பிளந்து கொல்கிறான்.

சுவலனசடி ஜோசியன் கூறியது உண்மையே என உணர்ந்து, போதனமாபுரம் வந்து, தன் மகளைத் திவிட்டனுக்குத் திருமணம் செய்கிறான். இப்போது அச்சுவ கண்டன் தன் முழுப் படைகளோடு வந்து தாக்க, போர் நடக்கிறது. போரில் திவிட்டனுக்கு சங்கும் சக்கரமும் (திருமாலின் ஆயுதங்கள்) வந்து தாங்களாகவே பொருந்துகின்றன. கருடன் வந்து வாகனமாக அமைகிறது. கம்சனைக் கண்ணன் அழித்தது போல அச்சுவ கண்டனை திவிட்டன் அழிக்கிறான்.

காலப்போக்கில், சுயம்பிரபைக்கு ஒரு மகனும் மகளும் பிறக்கின்றனர். சுவலனசடியின் மைந்தனான அருக்க கீர்த்திக்கும் ஒரு மகனும் மகளும் பிறக்கின்றனர். உரிய காலத்தில் இவர்களுக்கும் திருமணம் நடக்கிறது.

பயாபதி மன்னனுக்கு வயது மிகுதியாக ஆகிறது. துறவு மேற்கொள்ள வேண்டிய அவன், தன் அமைச்சர்களைக் கேட்கும் கேள்விகள் சிறுபிள்ளைத் தனமாக உள்ளன. கூற்றுவன் (எமன்) எதற்காக வருகிறான்? எதை எடுக்கப் போகிறான்? அவனிடமிருந்து எப்படித் தப்பலாம்? என்றெல்லாம் கேட்கிறான். அவன் அமைச்சர்களோ, “அரசே, எமனிடமிருந்து தப்பும் வித்தையை நாங்கள் கற்கவில்லையே” என்று பதிலளிக்கிறார்கள். பிறகு அரை மனதாக பயாபதி தன் மனைவியரோடு (!) துறவு மேற்கொண்டு உரிய காலத்தில் அருகன் அடி அடைகிறான். விஜயனும் திவிட்டனும் சிறப்பாகத் தங்கள் நாட்டை ஆண்டு வருகின்றனர்.

எவ்விதத் திருப்பமும் அற்ற, நேரான கதை. திவிட்டன் பிறந்தான் – வளர்ந்தான் – பகைவரை வென்றான் – திருமணம் செய்தான் – அரசாட்சி பெற்றான், அவ்வளவுதான்.

இந்தக் காப்பியம் மகாபுராணம் என்ற வடமொழிச் சமணக் காப்பியத்தைப் பின்பற்றி எழுதப்பட்டது என்பர். சமணக் காப்பியங்கள் சிலப்பதிகாரத்தைப் பின்பற்றிச் சுயமான படைப்பில் இறங்கியிருந்தால் நல்ல தமிழ்ப் படைப்புகளை உருவாக்கியிருக்கலாம். புலமை சிறப்பாக இருந்தும் என்ன காரணமோ, இம்மாதிரிப் புலவர்கள் வடமொழியில் இயற்றப்பட்ட மேருமந்தர புராணம், சாந்தி புராணம், நாரத சரிதை போன்ற எண்ணற்ற புராணங்களிலிருந்து தங்கள் கதைகளை எடுத்துக் கொண்டனர். சுயதூண்டலின்றி, உந்துதல் இன்றி, பார்த்துச் செய்ய வேண்டும் என்பது எவ்வளவு மோசமாக அமைந்துவிடும் என்பதற்கு இந்தச் சமணப் புராணங்களைக் கண்டாலே போதுமானது.

இதற்குப்பின் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம் என்ற நூலும் இதே கதையைச் சொல்கிறது. இது தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது. சமணர்களும், இராமானுஜர் வழிவந்த ஸ்ரீவைணவர்களுமே தமிழில் மணிப்பிரவாளம் என்ற போக்கினை உருவாக்கியவர்கள். மதத்தால் மொழிக்கு நேர்ந்த கேடுகளில் இதுவும் ஒன்று.

இப்படித்தான் பத்தாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் வருகை வரை தமிழ்ப் புராணப் படைப்புகள் இருந்தன. விஜயநகரப் பேரரசு வந்த பிறகு அவர்கள் தெலுங்கிற்கு மட்டுமே ஆதரவளித்ததால் புராணங்களும் மறைந்து தமிழில் சிற்றிலக்கியங்கள் மட்டுமே தோன்ற ஆரம்பித்தன என்பது வரலாறு.


மரணப்படுக்கையில் நான் கிடந்த வேளையில்

“மரணப்படுக்கையில் நான் கிடந்த போது” (As I lay dying) என்பது அமெரிக்க நவீனத்துவ எழுத்தாளர்களில் சிறந்தவராகக் கருதப்படும் வில்லியம் ஃபாக்னர் எழுதிய நாவல் (1930). இவரது மற்றொரு புகழ்பெற்ற நாவல் The Sound and the Fury. As I lay dying நாவலைவிட அது செறிவானதாகவும் கடினமானதாகவும் கருதப்படுகிறது.

As I lay dying பாதி வேடிக்கையும் பாதி வேதனையுமாகச் செல்கின்ற விசித்திரமான நாவல். இதன் சம்பவங்கள் நினைத்துப் பார்க்கும்போது “இப்படியெல்லாம் நிகழக்கூடுமா” என வேடிக்கையாகவும் இருக்கின்றன. அவற்றின் அடியாக இருக்கின்ற பல்வேறு கவலைகள், வறுமை, நல்ல பண்புகள், மோசமான தீய மனநிலைகள் ஆகியவற்றை நினைத்துப் பார்க்கும்போது வேதனையாகவும் உள்ளன. நாவலில் வரும் கதாபாத்திரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. இவற்றிற்கிடையிலும் இறந்த மனைவியைப் புதைத்தவுடனே தன் அடுத்த மனைவியை அறிமுகப் படுத்துகின்ற குடும்பத் தலைவனின் மனநிலை பிரமாதம்!

இந்த நாவலில் 59 பகுதிகள் உள்ளன. அவை பதினைந்து கதாபாத்திரங்களால் எடுத்துரைக்கப்படுகின்றன. முதல் பகுதி டார்ல் பண்ட்ரனால் சொல்லப்படுகிறது. அவனது சகோதரர்கள் கேஷ், ஜுவல். நாவலின் தொடக்கத்தில் இவர்களின் தாய் அடீ பண்ட்ரன் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். சில நாட்களில் இறந்துவிடுவாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழைக் குடும்பம். 1920களின் காலம். குடும்பத்தில் கொடிய வறுமை.

அடுத்த சில பகுதிகளில் அன்சே (அவர்களின் தகப்பன்), சிறிய தம்பி வர்தமான் (சுமார் 7 வயது சிறுவன்), டூயி டெல் என்ற தங்கை (17 வயது) யாவரும் அறிமுகமாகின்றனர். கேஷ் ஒரு நல்ல தச்சன். தன் தாய்க்கான சவப்பெட்டியை அவள் அடுத்த அறையின் ஜன்னலில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே செய்து முடிக்கிறான். ஜுவலும் டார்லும் வெறும் மூன்று டாலர் ஊதியம் கிடைக்கும் ஒரு வேலைக்காக வெர்னான் என்ற நகருக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள் திரும்பிவருவதற்குள் அடீ இறந்து விடுகிறாள். அவள் இறந்த இரவு பெரும் புயல், மழை.

அவளது கடைசி ஆசை ஜெஃபர்சன் என்ற தன் சொந்த ஊரில் புதைக்கப்பட வேண்டும் என்பது. 15 மைல் தொலைவு என்றாலும் இந்த ஊரிலிருந்து அதற்குச் சரியான பாதை இல்லை. இருந்தாலும் இறந்தவளின் இறுதி ஆசைக்கு மதிப்புக் கொடுத்து ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ளப் படுகிறது.

குடும்பம் அடீயின் சவத்தை ஒரு மாட்டு வண்டியில் வைத்து ஜெஃபர்சனுக்குப் பிரயாணத்தைத் தொடங்குகிறது. பல சமயங்களில் உணவின்றியும், ஆங்காங்கு தானியம் அடிக்குமிடங்கள் போன்ற இடங்களில் தங்கியும் செல்கிறது.

ஏற்கெனவே கேஷின் கால் உடைந்திருக்கிறது. டெல் திருமணமாகாமலே கர்ப்பமாக இருக்கிறாள். மோசமான வானிலை. மீண்டும் கேஷின் கால் உடைந்து விடுகிறது. வழியில் வெள்ளம் பெருகிய ஆற்றைக் கடக்கும்போது வண்டிமாடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. மற்றவர்களும் அநேகமாக மூழ்கிவிடுகின்றனர். ஆற்றில் சவப்பெட்டி ஏறத்தாழ அமிழ்ந்தே போகிறது. வர்தமான் ஆற்றில் பார்க்கும் மீனும் செத்துப்போன தன் தாயும் ஒன்று என்று  நினைத்துக் கொள்கிறான். இருப்பினும் வண்டியையும், பிறரையும், சவப் பெட்டியையும் ஜுவல் ஒருவனே தன்னந்தனியனாகக் காப்பாற்றுகிறான். ஜுவல் ஒரு குதிரை வைத்திருக்கிறான். அதன்மீது அவனுக்கு அளவற்ற அன்பு.

அடீயின் பழைய கதை அவளாலேயே சொல்லப்படுகிறது. விட்ஃபீல்டு என்ற மதகுருவின் தொடர்பில் பிறந்த ஜுவல்மீது மட்டும் அவளுக்குப் பாசம். அவன்தான் தன்னைக் காப்பவன் என்கிறாள். ஆனால் தனது பிற நேரிய பிள்ளைகள்மீது பாசம் கிடையாது.

கேஷின் காலை சரிப்படுத்த அதன்மீது சிமெண்டை ஊற்றுகிறான் அன்சே. ஜுவலின் குதிரையை அவனுக்குத் தெரியாமல் விற்று வண்டிமாடுகள் வாங்குகிறான். பல ஊர்கள் வழியாக இந்த ஊர்வலம் செல்லவேண்டி யிருக்கிறது. சவப்பெட்டியிலிருந்து வரும் துர்நாற்றம் தாங்க முடியாததாக இருக்கிறது. மக்கள் அவர்களை வெறுக்கிறார்கள். தங்க இடமும் தருவதில்லை.

கடைசி இரவில் ஜில்லஸ்பீ என்பவனின் பண்ணையில் தங்குகிறார்கள். டார்ல் நாற்றமடிக்கும் பிணத்தை எரித்துவிடலாமென்று அங்கிருந்த வைக்கோல் முதலியவற்றைக் கொளுத்திவிடுகிறான். ஆயினும் ஜுவல் எப்படியோ சவப்பெட்டியைத் தீயிலிருந்து காப்பாற்றிவிடுகிறான்.

ஜெஃபர்சன் ஊருக்கு குடும்பம் வந்து சேர்கிறது. டூயி டெல் தன் கருவைக் கலைக்க மாத்திரை வாங்குவதற்காக முன்பின்தெரியாத ஒருவனுடன் உறவு கொள்கிறாள். ஆனால் அது கருக்கலைப்பு மாத்திரை அல்ல, வெறும் முகப்பவுடர் என்று பின்னால் தெரிகிறது. அவளது பணத்தை அவள் அப்பன் அன்சே தனக்குப் பல்செட் வாங்குவதற்காக எடுத்துக் கொண்டு போய்விடுகிறான். ஊரின் டாக்டர் கேஷின் உடைந்த காலின்மீது சிமெண்ட் ஊற்றியதால் அது அழுகிப்போய்விட்டது என்கிறார். ஜிலெஸ்பீ பண்ணையை டார்ல் கொளுத்தியதற்காக தண்டனையிலிருந்து தப்ப அவன் மனநிலை பிறழ்ந்தவன் என்று பொய் சொல்லவேண்டிவருகிறது. அவனை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்கின்றனர். அன்சே அடீயின் உடலைப் புதைக்கிறான். குழிதோண்டுவதற்கு கடப்பாறை, மண்வெட்டி முதலியவற்றை ஒரு பெண் கடனாக அளிக்கிறாள். அவளோடு அன்சே காதலில் ஈடுபடுகிறான். தன் பிள்ளைகளுக்கு அவளைத் தன் புது மனைவி என்று அறிமுகம் செய்கிறான்.


விடைபெறுதல் (Farewell to arms)

எர்னஸ்ட் ஹெமிங்வே என்னும் புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியரின் கதை A Farewell to Arms. இவரது மற்றொரு கதையான கடலும் கிழவனும் என்பதைப் படித்திருப்பீர்கள்.

Farewell to Arms 1929இல் வெளியானது. இது சுயசரித்திரக் கதை என்பவர்கள் உண்டு. முதலாம் உலகப் போரில் ஈடுபட்டிருந்த ஒரு போர்வீரன் கதை இது. இன்று முதலாம் உலகப் போரிலிருந்து (1914-18) நூறாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், மூன்றாம் உலகப் போர் போன்ற ஒன்று உக்ரைனில் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தக் கதை பற்றிச் சிந்திப்பது பயனுடையது.

arms என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. கைகள், ஆயுதங்கள். இந்தக் கதை சிலேடையாகவே இந்தச் சொல்லைக் கையாளுகிறது. தழுவிய கரங்களிலிருந்து விடுதலை என்றோ, போரிலிருந்து விடுதலை என்றோ இருவிதமாகவும் இதை மொழிபெயர்க்கலாம். கதையின் இறுதியில் நாயகன் போரின் ஆயுதங்கள், தன்னைத் தழுவிய கைகள் – இரண்டில் இருந்துமே விடைபெறுகிறான். முதல் உலகப் பெரும்போரின் கொடுமைகளைச் சொல்லும் நாவல்களில் இது முதலாவது. இரண்டாம் உலகப் போர் பற்றிய மற்றொரு நாவலான கேட்ச் 22 என்பதைப் பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

1915 கோடைகாலம். முதலாம் உலகப் போர் நடக்கிறது. பிரடெரிக் ஹென்றி, ரோமில் தங்கி கட்டடக்கலை பயிலும் அமெரிக்க மாணவன், இத்தாலியப் படையில் அவனாகத்தான் சேர்கிறான். போரின் வடக்கு முனையில் கோரிஜியா என்ற இடத்திலுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் குழு ஒன்றுக்குத் தலைவனாகிறான். போர் இத்தாலியர்களுக்குச் சாதகமாக இல்லை என்றாலும் அடுத்த ஆண்டில் அவர்கள் ஆஸ்திரிய-ஹங்கேரிப் படையினரை வெற்றி கொள்கிறார்கள். சில நாட்கள் கடும்போருக்குப் பிறகு லீவில் சென்றிருந்து திரும்பும் பிரடெரிக், கேதரின் பார்க்லி என்ற இங்கிலாந்து நாட்டு நர்ஸைக் காண்கிறான். அவள் ஏற்கெனவே நிகழ்ந்த தன் காதல் முறிந்த நிலையில் கவலையோடு இருப்பதாகத் தோன்றுகிறது.

காயம் பட்ட அவனை மிலன் நகர மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறார்கள். அங்கு கேதரீனும் வந்து சேர்கிறாள். அப்போதுதான் அவளைக் காதலிப்பதாக உணர்ந்து அவளிடம் தெரிவிக்கிறான். அவளும் அதை ஏற்கிறாள்.

கேதரீன் அவன் மனைவியாகவே ஆகிவிடுகிறாள். அவனை நன்கு கவனித்துக் காப்பாற்றுகிறாள். கொஞ்சகாலத்திற்குப் பிறகு அவள் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவிக்கிறாள். உடல் குணமான பிறகு இருவரும் ஆறுமாதம் விடுப்பில் செல்லலாம் என்று திட்டமிடுகின்றனர். என்றாலும் அவன் மிகுதியாகக் குடிக்கிறான். கடுமையான தொனியில் நர்ஸுகளிடம் பேசுகிறான். அவன் போக்கு பிடிக்காத மருத்துவமனைத் தலைவி அவனை உடனே விடுவித்துவிடுகிறாள். கோரிஜியாவுக்கே சென்று போர்முனையில் சேர ஆணை வருகிறது. காதலியோடு கொஞ்ச நேரம் இனிமையாகக் கழித்துவிட்டு இருவரும் இனி சந்திப்போமா என்ற ஏக்கத்தில் இருக்கும்போதே ஹென்றி இரயில் ஏறுகிறான்.

இப்போது 1917 கோடை. நிறைய ஆட்கள் இறந்திருப்பதால் படையின் மனநிலை சரியில்லை. நான்கு ஆம்புலன்சுகளை வடக்கில் கேபரெட்டோ நகருக்குக் கொண்டுசெல்லுமாறு இவனுக்கு ஆணை தரப்படுகிறது. செல்லும் வழியில் தாக்கப்படுவதால் இவர்கள் குறுக்குவழி ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓர் ஆற்றைக் கடக்கும்போது சேற்றில் சிக்கிக் கொள்கிறார்கள். இடையில் சேர்ந்துகொண்ட சார்ஜெண்ட் ஒருவன் உதவி செய்ய மறுப்பதால் அவன் ஆட்களுக்கும் இவன் ஆட்களுக்கும் சண்டை நடக்கிறது. இவன் ஒருவனைச் சுட்டுக் கொன்றுவிடுகிறான். இதுதான் அவன் செய்த முதல் கொலை. ஒன்று தப்பியோட வேண்டும் அல்லது கொலைக்காகச் சரணடைய வேண்டும் என்ற நிலையில் பயந்தோடும் பொது மக்களோடு இவனும் சேர்ந்து ஓடுகிறான், பிறகு நதியில் குதித்துவிடுகிறான் நீரிலிருந்து எழும்போது தான் சிப்பாய் என்ற அடையாளத்தை விட்டு சாதாரண மனிதனாக (போர்க்களத்திலிருந்து தப்பியோடிய சிப்பாய் ஆக) எழுகிறான். (Farewell to military arms).

எப்படியோ மிலனுக்குச் சென்று சேர்கிறான். கேதரினைத் தேடிச் செல்கிறான். அவள் ஸ்ட்ரெஸா என்ற இடத்துக்குப் போய்விட்டதாகத் தெரிகிறது. அங்குச் சென்று அவளை அடைகிறான். சில நாட்கள் காதலர்கள் மிக மகிழ்ச்சியாக அங்கு வாழ்கிறார்கள்.

போரிலிருந்து தப்பி வந்தவர்களைக் கைது செய்து இராணுவக் கோர்ட்டில் நிறுத்துவார்கள். அதனால் இவன் கைதுசெய்யப்படும் தருணம் ஏற்படுகிறது. இராணுவத்துக்கு பயந்து ஒரு சிறு படகில் இருவரும் மிக அருகிலுள்ள ஸ்விஸ் நாட்டுக்குத் தப்பிச் செல்கிறார்கள். குளிர்கால விளையாட்டு களுக்காக ஸ்விட்சர்லாந்துக்கு வந்த தம்பதியினர் என்று சொல்லி அங்கு தங்குகிறார்கள்.

ஸ்விஸ் நாடு எந்தப் போரிலும் ஒருபோதும் ஈடுபட்ட நாடு அல்ல. நிரந்தர நடுநிலை நாடு. அதனால் பயமற்று அவர்கள் அங்கே வாழ முடிகிறது.

ஆல்ப்ஸ் மலைகளின்மீது காதலர் இருவரும் மிக மகிழ்ச்சியோடு நடந்தும் ஓடியும் தழுவியும் தங்கள் தனிமையைக் கொண்டாடுகிறார்கள். மலைமுகட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். பிரசவத்துக்கு ஒரு மாதம் முன்புவரை வாழ்க்கை இனிமையோ இனிமை! கேதரினுக்குப் பிரசவகாலம் நெருங்குகிறது. மருத்துவமனைக்கு அருகில் இருப்பது நல்லது என்று பக்கத்திலுள்ள நகரத்துக்குச் சென்று ஒரு தங்கும் விடுதியில் தங்குகிறார்கள்.

பிரசவ வலி ஏற்பட்டபிறகு விஷயங்கள் தாறுமாறாகின்றன. குழந்தை மாலைசுற்றிப் பிறக்கிறது (நஞ்சுக்கொடி உடல் முழுவதும் சுற்றி இறந்து பிறத்தல்). கேதரினுக்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டதால் அவளும் இறந்துவிடுகிறாள். ஃபிரடெரிக் கையற்ற நிலையில் மருத்துவமனையை விட்டு நீங்குகிறான் (Farewell to the hugging arms of the wife).

காதலன் காதலியைச் சந்திக்கிறான்–அவளைக் கை நழுவ விடுகிறான்–ஒன்று சேர்கிறான்–மீண்டும் அவளை இழக்கிறான் என்ற எளிமையான கதைத்திட்டம் கொண்ட கதை இது. ஆனால் இதனை உணர்ச்சிப் பெருக்குடைய ஒரு பெருங்காவியமாக ஆக்கியிருக்கிறார் ஹெமிங்வே. அவரது மற்ற எல்லாக் கதைகளையும் விட இதுவே சிறந்ததாகப் போற்றப் படுகிறது.


வெள்ளாட்டின் பலி

நம் நாட்டில் கிராமத் திருவிழாக்களில் வெள்ளாட்டை பலி கொடுப்பது ஒரு முக்கியச் சடங்கு. திருச்சியில் உறையூரில் நடக்கும் ஒரு அம்மன் திருவிழாவில் (இதைக் குட்டி-குடி திருவிழா என்பார்கள்) ஓர் ஆட்டின் தலையை வெட்டி அப்படியே பூசாரி இரத்தத்தைக் குடித்துவிடுவான். இதுபோல இலத்தீன் அமெரிக்க நாடாகிய பெரூவிலும் ஒரு வெள்ளாடு பலி தரப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு வெள்ளாடு என்பது குறியீடாக அந்நாட்டுச் சர்வாதிகாரி ஒருவனைக் குறிக்கிறது.

வெள்ளாட்டின் விருந்து (The Feast of the Goat) என்பது பெரூ நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் மராயோ வார்காஸ் லோஸா என்பவரால் எழுதப்பட்டது. இது ஓர் அரசியல் வரலாற்று யதார்த்த நாவல். இப்படிப்பட்ட நாவல் தமிழில் இதுவரை கிடையாது. இது ஸ்பானிய மொழியில்  2000ஆம் ஆண்டில் வெளியானது. ரஃபேல் ட்ருஜில்லோ என்ற கொடுங்கோலனின் நீண்ட ஆட்சியின் (1930-61) இறுதிப்பகுதி பற்றியது. லத்தீன் அமெரிக்க நாவல்களின் ஓர் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது இந்த நாவல். பெரு நாவலாசிரியர்களில்

அகஸ்டோ ரோவா பாஸ்டோஸின் I the Supreme,

அலெஜோ கார்பெண்டியரின் Reasons of State.

காப்ரியேல் கார்சியா மார்க்விஸின் Autumn of the Patriarch

ஆகிய அரசியல் நாவல்களின் வரிசையில் வருகிறது வார்காஸ் லோஸாவின் இந்த நாவல்.

இந்த நாவலின் கதை மூன்று பகுதிகளாக உள்ளது. ஒன்று யுரேனியா சாப்ரால் என்ற டொமினிகன் பெண் சம்பந்தப்பட்டது. மற்றொன்று பெரு நாட்டின் சர்வாதிகாரி ட்ரூஜில்லோவின் கொலை தொடர்பானது. இன்னொன்று ட்ரூஜில்லோவின் இறுதி நாளில் நிகழ்ந்த அவனது சொந்த நிகழ்வுகள். 1961 முதல் 1996 வரை நடந்த கதையை இந்த மூன்று பகுதிகளும் மாறி மாறிச் சொல்கின்றன.

கதையின் தொடக்கத்தில் யுரேனியா தன் சொந்த நகரமான சாண்டோ டொமினிகோவுக்கு 1996இல் திரும்புகிறாள். 1961இல் 35 ஆண்டுகளுக்கு முன் தன் 14 வயதில் அதை விட்டுச் சென்றவள் அவள். பிறகு ஹார்வர்டு சட்டப்புலத்தில் பயின்று இப்போது அவள் நியூ யார்க்கில் உலக வங்கிக்கான ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராக இருக்கிறாள். சாகக் கிடக்கும் தன் தந்தை அகஸ்டீன் சாப்ராலைக் காண வருகிறாள். அவள் தன் குடும்பத்தைப் பிரிந்து சென்றதிலிருந்து இதுவரை எந்தவிதத் தொடர்பையும் அவர்களுடன் வைத்துக் கொண்டதில்லை. ஒருவேளை தன் தந்தையின் மரணத்தில் தன் வெற்றியைக் காண வந்திருக்கிறாள் என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்.

இரண்டாவது பகுதி 1961 மே 30இல் பெருவின் சர்வாதிகாரி ட்ருஜில்லோ வின் கொலை நடந்த நிகழ்வுக்குத் திரும்புகிறது. (இவன்தான் “ஆடு” எனப்படுகிறான்.) முதலில் அமெரிக்காவின் அன்புக்குப் பாத்திரமாக அவன் இருக்கிறான். ஓர் அமெரிக்கத் தலைவன் கூறியது போல, ‘he was a son of a bitch, but he was our son of a bitch.’ இப்போது அவன் அமெரிக்க ஆதரவை இழந்துவிட்டான். அவனால் பாதிக்கப்பட்ட சிலர் பிற அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து அவனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

மூன்றாவது பகுதி மே 30 அன்று ட்ருஜில்லோவின் சிந்தனைகள், செயல்கள் பற்றியதாக அமைகிறது. அவன் சிந்தனையில் 1937இல் பல ஆயிரக்கணக்கான ஹைட்டியர்களைக் கொன்றது போன்றவை வந்து செல்கின்றன. கென்னடி, ஃபிடல் கேஸ்ட்ரோ ஆகியவர்களின் சமகாலத்தொடர்பும் கொண்டிருந்தான். அவன் உடல்நலம் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவன் அதை ஏற்காமல் வழக்கம்போல் மாலை நேரத்தில் பெண்களைச் சந்திக்க விழைகிறான். அப்படிப்பட்ட சந்திப்பு ஒன்றிற்குச் செல்லும்போதுதான் அவன் கொலை செய்யப் படுகிறான். கொலைகாரர்கள் முதலில் போட்டிருந்த திட்டப்படி அவர்களின் காரியங்கள் நடக்கவில்லை. அவன் வரக் காத்திருந்த நேரத்தில் அவர்களில் ஒவ்வொருவனும் அந்தச் சர்வாதிகாரியால் தாங்கள். அடைந்த பாதிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். என்றாலும் எதிர்பாராத விதமாக தனியாக அவன் சிக்கியதால் உடனே கொன்றுவிடுகிறார்கள்.

இந்த மூன்று பகுதிகளும் கதையில் கடிகார நிகழ்வுகள் போல மாறி மாறி வருகின்றன. கதையின் பெரும்பகுதி ட்ருஜில்லோ தன் மக்களை எவ்வாறு வதைத்தான் என்பதைச் சொல்கிறது.

சதிகாரர்களில் மிக முக்கியமானவன் ப்யூபோ ரோமன் என்பவன். அந்நாட்டின் ஆயுதம் தாங்கிய படைகளின் தலைவன். மற்றொருவன் பலாகேர் என்ற, அதுவரை பொம்மை ஜனாதிபதியாக இருந்த ஆள். ஆனால் கொலை நடந்த பிறகு சதிகாரர்கள் இருவரையும் தேடினாலும், அவர்களைக் காணவில்லை. கதை இந்த இருவரின் செயல்களையும் உணர்வுகளையும் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. ட்ருஜில்லோவின் மகன் பாரிஸிலிருந்து வந்ததும், பலாகேர் அவனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கலகக்காரர்கள் அத்தனை பேரையும் அழித்து விடுகிறான். பிறகு கத்தோலிக்கத் திருச்சபையுடன் சமரசம் செய்து கொண்டு அவனே ஜனாதிபதியும் ஆகிவிடுகிறான்.

யுரேனியாவின் தந்தை முன்பு, 1960கள் காலத்தில் அரசாங்கத்தில் ட்ருஜில்லோவின் நெருக்கமான ஆளாக இருந்தவன். அவனுக்கு தலைவனின் ஆதரவு குறைந்ததால் அதனைச் சரிக்கட்ட ஒரு நண்பனின் ஆலோசனைப்படி தன் 14 வயது மகளை ட்ருஜில்லோவுக்கு “பலியாடாக” அனுப்புகிறான். ட்ருஜில்லோவின் பாலியல் வன்முறைக்கு ஆளான அவள் தான் படித்த கான்வென்ட்டுக்குத் தப்பிச் சென்றுவிடுகிறாள். பிறகு அங்கிருந்த சகோதரியர் அவளை அமெரிக்காவுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இப்போது மரணப்படுக்கையில் அவள் தந்தை இருக்கிறான். அவனைக் காணவந்தவள் இயக்கமிழந்த தன் தந்தையிடம் தானறிந்த வகையில் ட்ருஜில்லோவின் அரசாங்கத்தின் பயங்கரங்களைச் சொல்கிறாள். அவற்றில் எவ்வளவு சாப்ராலுக்குத் தெரியும், எந்த அளவுக்கு அவற்றில் அவனுக்குப் பங்கு இருக்கிறது என்றெல்லாம் கேட்கிறாள். ஆனால் அவன் புரிந்துகொண்டானா என்பது கூடத் தெரியவில்லை. அவள் குடும்ப உறுப்பினர்கள் அவள் ஏன் தொடர்பை அறுத்துக் கொண்டாள் என்று வசைபாடுகிறார்கள். ட்ருஜில்லோவின் கொலைக்குப் பிறகு யுரேனியா தன் குடும்பத்து உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறி வெளியேறுகிறாள்.


கணினி யுக இலக்கியம்

இலக்கியம் முதலில் எப்படி உருவாயிற்று என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் உருவானதிலிருந்து அது எண்ணற்ற மாறுதல்களைச் சந்தித்துள்ளது என்பது நமக்குத் தெரிகிறது. பல காலங்களைக் கடந்தும் அது செழிப்பாக வளர்ந்துள்ளது. அவ்வப்போது, அந்தந்தக் காலங்களுக்குரிய மக்களின் தேவைக்கேற்ப அது ஒவ்வொருவிதமாக வரையறுக்கவும் படுகிறது. உதாரணமாகச் செவ்வியல் காலத்தில் அது செம்மையாகச் செய்யப்பட்ட ஒரு பொருளாக பாவிக்கப்பட்டது. ரொமாண்டிக் காலத்திலோ அது தன்னெழுச்சியின் வெளிப்பாடாக, தானாகப் பீறிட்டு வருவதாக நோக்கப் பட்டது. கடந்த சில நூற்றாண்டுகளாக அது வர்க்கப் போராட்டக் கருவியாகவும், இருப்பவர்க்கும் இல்லாதவர்க்கும் இடையிலுள்ள ஒரு சமனியாகவும் நோக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கவிதை மட்டுமே இலக்கியமாக இருந்தது. இப்போதோ கவிதை தன் சிறப்புகளை எல்லாம் இழந்து நிர்க்கத்தியாக நிற்க, உரைநடை செங்கோல் ஓச்சுகிறது. விமரிசகர்களின் கருத்துப்படி இது உரைநடைப் புதினங்களின் காலம். 

காலம் மிகவும் முன்னேறிவிட்டது. இப்போது கதைகளை 150 சொற்களில் எழுதிவிடலாம் என்று சொல்கிறார்கள். ஃப்ளாஷ் ஃபிக்-ஷன், மைக்ரோ ஃபிக்-ஷன் போன்ற சொற்கள் உருவாகியுள்ளன. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. முன்பெல்லாம் ஒரு தேடலுக்காகக் கன்னிமரா போன்ற நூலகங்களுக்குச் சென்று மணிக்கணக்காகச் செலவிட வேண்டியிருந்தது. இப்போதோ உங்களிடம் கணினி அல்லது இன்றைய அலைபேசி யிருந்தால், நீங்கள் “கூகுள்” செய்தால் போதும். ஒரு காலத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பேரகராதி போன்றவற்றை எடுத்துப் புரட்டுவதே பெருஞ் சுமையாக இருக்கும். இன்று எல்லாமே ஒரு “எலி”யின் விரல் அழுத்தத்தில் கிடைக்கின்றன.       

ஆங்கிலத்தில் 6 சொற்களில் நாவல்கள் எழுதலாம் என்று சொல்கிறார்கள். ரெபக்கா ஜேம்ஸ் என்பவர் எழுதிய அறுசொல் நாவல் இது: After she died, he came alive. (“அவள் இறந்தபிறகு அவன் உயிருடன் வந்தான்” வந்தான் என்பதற்கு பதிலாக மீண்டான் அல்லது புத்துயிர் பெற்றான் என்று போடலாமா? இது மொழிபெயர்ப்பின் பிரச்சினை.)

மார்சி என்பார் எழுதிய நாவல் இது: “One gun, two shots, three dead”. இதுதான் நாவல் எழுதுவதில் புதிய ஃபேஷன். இப்படி எழுதுவது சவாலுக் குரியதாகவும், புத்தாக்கத் திறனுடனும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் தமிழில் இப்படிப்பட்ட புத்தாக்கத் திறனுடன் கூடிய புதினத் தலைப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. உதாரணமாக, “அகம் புறம் அந்தப்புரம்” (முகில்) என்பது ஒரு நாவலின் தலைப்பு. மேற்கண்ட அறுசொல் நாவல் கணக்குப்படி பார்த்தால் இது ஒரு முச்சொல் நாவலாக ஆகக்கூடும். இம்மாதிரி புத்தாக்கத் தலைப்புகள் வைப்பதில் சிறந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். (உதாரணமாக சுஜாதா, ராஜேஷ் குமார், இந்திரா சவுந்தரராஜன். ஆனால் அவர்கள் எழுதியது நாவல் என்றால் அது பல்ப் ஃபிக்-ஷன் வகையறா என்று சிலர் என்னை அடிக்கவரக் கூடும். ஆனால் ஜெயமோகனும் இப்படிப்பட்ட தலைப்புகள் பலவற்றை வைத்திருக்கிறார்.)

ஒரு நீண்ட கதையை எழுதுவது எளிய விஷயமாக இருக்கலாம், ஆனால் ஆறு சொற்களில் நாவல் எழுதுவது மிகுந்த புத்தாக்கத் திறனை வேண்டுவது என்று மேற்கண்ட ஒரு அறுசொல் நாவல் அறிமுகப் படுத்தப்படுகிறது. பிரதாப முதலியார் கதை எழுதிய காலத்தில் வேதநாயகர் இப்படி யோசித்திருக்கவும் முடியுமா? இம்மாதிரி 100 அல்லது 150 எழுத்துகளில் எழுதப்படும் பனுவல்களின் ஊடே அதிக இடைவெளிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். வாசகன் தனது யூகத்தினால் பலவித அர்த்தங்களை உருவாக்க முடிவதால் இதுதான் எழுத்தாள நாவல் (writerly novel) என்றும் கூட சிலர் மதிப்பிடலாம். இந்த நோக்குப்படி நாம் ஒருகாலத்தில் நாவலாக மதிக்காதவை எல்லாம் (ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள்…) இப்போது நாவல்கள் ஆகின்றன.

ட்விட்டர் கதைகள் என்றே ஒரு தனிப்பிரிவு உருவாகியுள்ளது. இதற்கெனவே தனிப் பெயர்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். உதாரணமாக, ட்விட்டரில் வரும் த்ரில்லர்கள், ட்வில்லர்கள் எனப்படுகின்றன, ஹைக்கூ-கள் ட்வைக்கூகள் ஆகின்றன. இம்மாதிரிக் கதைகள் பின்நவீனத்துவ நாவலின் ஒரு வகை என்றும் கூறப்படுகின்றன. இவற்றில் சுருக்கம், பன்முக அர்த்தங்கள், பனுவலின் ஊடான தொடர்புகள் எல்லாம் இருப்பதாகக் கொண்டாடப்படுகின்றன.

இந்த அவசரக் காலத்தில் இவற்றுக்கு வரவேற்பு மிகுதியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. கலையை இது மாற்றியமைக்கிறது என்கிறார்கள். இப்படிப் பார்த்தால் நமது தனிப்பாடல்கள் (காளமேகப் புலவர், அவ்வை போன்றோர் இயற்றியவை) ஒவ்வொன்றையும் உரைநடையில் கூறினால் ஒரு மைக்ரோ-ஃபிக் ஷனாக ஆக்கிவிடலாம் என்று தோன்றுகிறது. அவை மட்டுமல்ல, யூ-ட்யூபில் சென்று உலவிப் பாருங்கள், 5 நிமிடங்களில் படிக்கக்கூடிய குட்டிக் கதைகள் எத்தனை எத்தனை? வாட்சப் பதிவுகளில் வருகின்ற சின்னச் சின்னக் கதைகள் எத்தனை எத்தனை? முகநூலில் எழுதப்படும் “சிறு-கதைகள்” எத்தனை? திடீரென ஒரு பெரிய இலக்கிய வெள்ளம் வந்து நம்மை எல்லாம் அடித்துச் செல்வது போலத் தோன்றுகிறது. ப்ளாகு(blogs)கள், வலைத்தளங்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு பேரிலக்கியவாதி என்று சொல்லிவிடலாம்.   

இது மட்டுமல்ல, நவீனங்களை எல்லாம் ஓரிருவரிகளில் சுருக்கிச் சொல்லும் முயற்சிகளும் உள்ளன. உதாரணமாக, பிரபல நாவலாசிரியர் ஜே.டி.சாலிங்கர் எழுதிய Catcher in the Rye நாவலை ஒருவர் ட்விட்டரில் இப்படி மொழிபெயர்க்கிறார் (இதுவும் ஒருவகை மொழிபெயர்ப்புதான்): Rich kid thinks everyone is fake except for his little sister. Has breakdown. அவ்வளவுதான். நாம் கூட கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை இப்படிச் சுருக்கிவிடலாம்: “(சீதையை இராவணன் தூக்கிச் சென்றதுபோல) சிவகாமியை நாகநந்தி தூக்கிச் செல்கிறான். இடையில் பரஞ்சோதி (அனுமன்போல) தூது செல்கிறான். வர மறுத்த சிவகாமியை, நரசிம்ம பல்லவன் (இராமன்) வந்து மீட்டுவருகிறான்.” கதைச் சுருக்கத்துடன் இப்படி ஒப்பீடுகளும் நிகழ்த்திவிடலாம்!

ஆனால் இம்மாதிரி எழுத்துகளுக்கு எதிர்ப்பும் மிகுதியாகவே உள்ளது. இவை முறைசாரா நடையில் (informal style) உள்ளன; இவற்றில் இலக்கணப் பிழைகள் மிகுதி; மோசமான நடை; கொச்சை மொழியையும் சேரிமொழியையும் பாலியல் தொடர்களையும் (I’ll pen you in; asshole…) மிகுதியாகப் பயன்படுத்துகின்றன; சற்றும் மரியாதை அற்ற வெளிப்பாடுகள் (Zombie Jesus). ஒரு சரியான (valid), நளினமான நடை என்பதில்லை. இவர்களிடம் இலக்கணம் செத்துப்போனது; எல்லாம் எஸ்எம்எஸ் பாஷைதான்! (I c u என்பது போல) ஆங்கிலத்தில் உயிரெழுத்துகளை நீக்கிவிட்டுச் சுருக்கி எழுதும் போக்கு மிகுதியாகி வருகிறது. (நல்லவேளை! தமிழில் இப்படிச் சுருக்கமுடியாது என்று நினைக்கிறேன். மெய்யெழுத்துகளாகச் சுருக்க முடியாது, ஏனெனில் புள்ளியிட வேண்டும். வேண்டுமானால் ஓலைச்சுவடி பாஷையைக் காப்பியடித்துப் பார்க்கலாம்!) மொழிவளம் குன்றிவிட்டது. எழுத்துச் சேர்ப்பு, புணர்ச்சி முறை எல்லாம் போய்விட்டது. பங்ச்சுவேஷன் அறவே தேவையில்லை. இந்த வேகவாழ்க்கை நடை இலக்கியப் படைப்புக்கு ஒத்துவருமா? சுருக்கமாக ஆர்வமூட்டுவதாக மட்டும் மொழி இருந்தால் போதுமா?


உடோபியா

இதை ஒரு நாவல் என்று சொல்வது கடினம். அமெரிக்கா என்ற புதிய உலகம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஒரு புதிய கற்பனை நாட்டை–அதன் பெயர் உடோபியா–அறிமுகப்படுத்தி பெரும்பாலும் அதன் சிறப்பான பண்புகளை விளக்குவது இந்த எடுத்துரைப்பு. இது 1551ஆம் ஆண்டு வெளியானது. இதைப் பின்பற்றி உலக மொழிகள் அனைத்திலும் மட்டுமல்ல, ஆங்கிலத்திலுமே நியூ அட்லாண்டிஸ் போன்ற பல நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் மு. வரதராசனார், கி.பி.2000 என்ற பெயரில் இப்படிப்பட்ட நாவல் ஒன்றை வரைந்தார்.

தாமஸ் மூர் என்பவர் ஓர் ஆங்கிலேயேப் பணியாளர். பெல்ஜியத்தில் தன் நண்பர் பீட்டர் கைல்ஸ் என்பவரைச் சந்திக்கிறார். அவர் தன் நண்பர் ரஃபேல் ஹைத்லோடே-வுக்கு மூரை அறிமுகப் படுத்துகிறார். ரஃபேல், ஒரு போர்ச்சுகீசியர். அமெரிக்காவுக்குப் பெயரளித்த அமெரிகோ வெஸ்பூச்சி யுடன் உலகம் சுற்றியவர். அவர் தான் கண்டதாக உடோபியா என்ற நாட்டைப் பற்றிச் சொல்கிறார். (உடோபியா என்பதற்கு “இல்லாத இடம்” என்று பொருள்)

ரஃபேலை ஏன் அரசாங்க வேலை ஏற்கக்கூடாது என்று கேட்கிறார் மூர். அதற்கு அவர் தெரிவிக்கும் கருத்துகள் புரட்சிகரமாக உள்ளன. அரசாங்க வேலை என்பது அடிமை வேலை. எந்த ஆட்சியாளனுக்கும் மக்களின் நன்மையில் ஆர்வம் கிடையாது… என்று பல விஷயங்களைப் பற்றி அவர் பேசுகிறார். உதாரணமாக, மரண தண்டனை கூடாது என்பது அவர் கருத்து. ஏனெனில் மனிதனை மனிதன் கொல்லக் கூடாது என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். பாரசீகத்தில் தான் கண்டதுபோல, யாராவது திருடினால் திருடிய பொருளைத் திரும்ப அவன் சொந்தக்காரரிடம் கொடுத்துவிட வேண்டும். ஒருவேளை திரும்பத் தர எதுவும் இல்லை என்றால், அவன் பொதுப்பணித் துறையில் வேலை செய்ய வேண்டும். மக்கள் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால்தான் அரசனுக்குச் சிறப்பு. அவர்கள் பொருளின்றித் திருடுவதும் சாவதும் ஆட்சியாளனை ஜெயிலராகவும் கொலைகாரனாகவும் மாற்றுகிறது.

பிறகு உடோபியா பற்றி உரையாடல் தொடர்கிறது. உடோபியர்கள் மகிழ்ச்சியும் இனிமையும் நிறைந்த வாழ்க்கையை மட்டுமே விரும்புகிறார்கள். ஆனால் நல்லவர்கள், நேர்மையானவர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ முடியும். தனிமனிதச் சொத்து, பொருள்குவிப்பு அற்ற நிலையில்தான் மகிழ்ச்சி இருக்க முடியும். பணக்காரர்கள் எல்லாரும் வில்லன்கள், குற்றவாளிகள், சோம்பேறிகள் என்று உடோபியர்கள் கருதுகிறார்கள். ரஃபேலும் அதை ஆதரிக்கிறார்.

உடோபியாவில் தங்கத்துக்கு மதிப்பு கிடையாது. யாரும் ஆபரணத்தைப் பயன்படுத்துவதில்லை. எல்லாப் பொருள்களுமே இலவசமாகக் கிடைக்கின்றன. எனவே நாளைக்கு என்று சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

உடோபியா ஒரு தீவு. அதை உருவாக்கியவர் உடோபஸ் என்ற பிரயாணி. ஆளற்ற ஒரு தீபகற்பத்தை அவர் கண்டவுடன் அதைச் சொந்தமாக்கித் தீவாக மாற்றுகிறார், மக்களைக் குடியேற்றுகிறார்.

உடோபியாவில் 54 நகரங்கள் உள்ளன. அவை யாவும் ஒரே மாதிரியான அமைப்புள்ளவை. ஒரு நகரத்தில் 6000 பேர் மட்டுமே இருக்கலாம். அமாரூட் என்பது தலைநகரம். ஒவ்வொரு நகரத்திற்கும் சொந்தமாக நிலம் உண்டு. அதைக் குடும்பங்கள் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் 40 ஆடவர் பெண்டிர் இருக்கலாம். 2 அடிமைகள் இருக்கலாம். உழவுக்கான கருவிகளை மேஜிஸ்டிரேட் அளிப்பார்.

சுழற்சி முறையில் இருபது இருபது குடும்பங்களாக நகரத்திலிருந்து கிராமப்புறம் சென்று விவசாயம் செய்யவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு ஊரில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கலாம்.

எல்லாரும் மிக அழகான, ஆனால் ஒரே மாதிரியான அலங்காரமற்ற, நடைமுறைப் பயனுடைய உடையை மட்டுமே உடுத்துகின்றனர். கட்டடங் களும் எளிமையானவை. தேவையற்ற உழைப்பை அவை குறைக்கின்றன. எல்லாரும் 6 மணிநேரம் மட்டுமே உழைத்தாலும் மிகையாக உற்பத்தி செய்கிறார்கள். குருமார்கள், சாமியார்கள், பூசாரிகள் போன்றோர் உழைப்பற்றவர்கள், தேவையற்றவர்கள் என்பதால் நாட்டில் அவர்கள் இல்லை.

நகரத்திற்கு ஃபைலார்க் எனப்படும் மாஜிஸ்திரேட் (தலைவர்) உண்டு. ஒவ்வோராண்டும் அவர் முப்பது குடும்பங்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். ஊர் விட்டு ஊர் செல்வதற்கு பாஸ்போர்ட் தேவை. அதை அரசனிடமிருந்து பெறலாம். ஃபைலார்க்குகள் அரசனைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

அதிகமாகக் குழந்தை பெற்றால் இல்லாதவர்களுக்கு அளிக்கப்படும். அதேபோல ஒரு நகரத்தில் மக்கள் தொகை அதிகமானால் சிறு நகரங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.

நாட்டில் அடிமைகள் உண்டு. போரில் தோற்றவர்கள் அடிமைகளாகக் கொள்ளப்படுவார்கள். தேவையான விவசாய நிலம் இல்லாமல் போனால் மட்டுமே போர் தேவைப்படும், நிகழும்.

தனக்குத் தேவையானதற்கு மேல் எவரும் எந்தப் பொருளையும் எடுப்பதில்லை. ஏனெனில் திருடுதல், பறித்துக் கொள்ளுதல் என்பவை எல்லாம் அங்கு கிடையாது.

“உடோபியாவில் எல்லாருக்கும் எல்லாவற்றின்மீதும் உரிமை உண்டு. பொதுக் கடைகளை எப்போதும் நிரப்பி வைத்திருந்தால், எவரும் தேவையின்றி எடுக்கமாட்டார்கள். ஏனெனில் சமமற்ற விநியோகம் கிடையாது. அதனால் யாரும் ஏழைகளும் இல்லை, யாரிடமும் எதுவும் கிடையாது என்றாலும் எல்லாரும் செல்வமுள்ளவர்களே.”

பெண்கள் 18 வயதுக்கு முன், ஆடவர் 22 வயதுக்கு முன் திருமணம் செய்யலாகாது. திருமணத்துக்கு முன்னால் பாலியல் உறவு கொள்ளக் கூடாது. பலதார மணம், விபசாரம் என்பவையும் தடுக்கப் பட்டவை. உடோபியாவில் வழக்கறிஞர்கள் கிடையாது. யாவரும் தங்களுக்குத் தாங்களே வழக்காட வேண்டும்.

தாங்களே இராணுவத்தை வைத்துக் கொள்வதைவிட இராணுவங்களை வாடகைக்கு அமர்த்துவதையே உடோபியர்கள் விரும்பினார்கள். ஆனால் கணவன் போருக்குச் சென்றால் மனைவியும் உடன் சென்று போரிடலாம்.

மதத்தைப் பற்றி இறுதியாகத் தன் கருத்தைத் தெரிவிக்கிறார் ரஃபேல். ஒவ்வொருவரும் தான் விரும்பிய மதத்தைக் கடைப்பிடிக்கலாம் என்பதால் அங்கே எண்ணற்ற மதங்கள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு தெய்வம் உண்டு. உடலுடன் ஆன்மா இறந்துபோகிறது என்று கருதக் கூடாது. அதனால் நோயுற்றால் வருந்துவார்களே ஒழிய இறப்புக்கு யாரும் வருந்துவதில்லை.

ரஃபேல் தனது வருணனைகளை முடிக்கும்போது, மூரின் மனத்தில் பல சந்தேகங்களும் கேள்விகளும் தோன்றியுள்ளன. ஆனால் ரஃபேல் களைத் திருந்ததால் மூர் அவற்றைக் கேட்காமல் அடக்கிக் கொள்கிறார். தங்கள் அரசாங்கங்களும் உடோபியாவின் சில விதிகளைக் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் என்று மட்டுமே இறுதியில் சொல்கிறார்.

இப்படிப்பட்ட எளிய, ஆனால் ஏழ்மையற்ற வாழ்க்கையைத்தான் நமது தமிழ் முன்னோர் வாழ்ந்துவந்தனர். பொங்கல் என்ற தன்னிறைவுக் கொண்டாட்டம் இந்தமாதிரி வாழ்க்கையின் அடையாளம். இப்போதும் நாகரிகம்(!) பரவாத காட்டுப் பகுதிகளில் பல பழங்குடியினர் இப்படித்தான் வாழ்கின்றனர்.

ஆனால் மேலும் மேலும் பொருளையும் பணத்தையும் குவிப்பதைத்தான் சிறந்த வாழ்க்கை என்று நமக்குக் கற்பிக்கிறது இந்த உலகம். எதற்காக ஒருவனுக்கு பதினைந்து லட்ச ரூபாய் கோட்டு? எதற்காக ஒருவன் இரண்டு கோடிக்குக் கார் வாங்கி, வரி கட்டாமல், கோர்ட்டில் போய் நிற்க வேண்டும்? எதற்காக கோடிக்கணக்கான பேர் வயிற்றுக்குச் சோறின்றி சாலையோரங்களில் வாழ்ந்து இறக்க வேண்டும்? சிந்தியுங்கள்.

தன்னளவில் நிறைவாக எளிமையாக வாழ்பவனைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறது இவ்வுலகம். “வளர்ச்சி வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையையும் உலகத்தையும் அழிக்க வேண்டும். பிறகு எல்லாவற்றுக்குமாக உட்கார்ந்து என்ன செய்வது என்று ஐ.நா.வில் பன்னாட்டுக் கூட்டங்கள் போட்டுப் போலியாக அழ வேண்டும்!”