ஹாபிட் (Hobbit)

ஜே.ஆர்.ஆர். டோல்கியன் என்பவர் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அற்புதக்கதை எழுத்தாளர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அவரது மோதிரங்களின் தலைவன் (Lord of the Rings), ஹாபிட் (Hobbit) போன்ற நூல்கள் மிக அதிகமாக உலகெங்கும் விரும்பிப் படிக்கப்படுகின்றன. இவற்றில் தனித்ததோர் உலகத்தையும் (middle earth) அதற்கான நிலப்பரப்பையும் பலவேறு இனங்களையும் அவர்கள் பேசும் மொழிகளையும் உருவாக்கிச் சாதனை படைத்துள்ளார். அதில் ஹாபிட் என்ற கதையை இப்போது காண்போம்.

ஹாபிட் என்பவர்கள் குறுமனிதர்கள் எனச் சொல்லக்கூடியதொரு இனம். நம் போன்ற மனிதர்களின் உயரத்தில் பாதிக்கும் குறைவான உயரமே உள்ளவர்கள். வளைகளில் வீடுகட்டி வாழ்பவர்கள். நமது கதாநாயகன் அவர்களில் ஒருவன்- பில்போ பேகின்ஸ் என்பது அவன் பெயர். ஹாபிடன் என்ற ஊரில் அவன் அமைதியாக வசித்துவருகிறான். ஆனால் ஒருநாள் அவனைத்தேடி காண்டால்ஃப் என்ற மந்திரவாதியும், பதின்மூன்று குள்ளர்களும் வருவதனால் அவன் வாழ்க்கையே மாறிப் போகிறது. அவர்களின் தலைவன் தாரின் ஓக்கன்ஷீல்ட் என்பவன். அவன் தாத்தா தனது செல்வத்திற்கான வரைபடத்தையும் சாவியையும் காண்டால்ஃபிடம் தந்து மறைந்துவிட்டார். ஸ்மாக் என்ற டிரேகன் அக்குள்ளர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து அவர்களை விரட்டிவிட்டிருக்கிறது. தங்கள் “கொள்ளையனாக” பில்போ இருக்கும்படி அவர்கள் அழைத்துச் செல்கிறார்கள்.

வழியில் மூன்று ராட்சதர்கள் (ட்ரால்கள்) அவர்களைப் பிடித்துக் கொள்கிறார்கள். காண்டால்ஃப் தந்திரமாக அவர்கள்மீது சூரிய ஒளி படும்படியாகச் செய்து அவர்களைக் கல்லாக்கிவிடுகிறார். பிறகு இந்தக் குழு எல்ஃபுகள் (elfs) எனப்படும் தேவதைகளின் இருப்பிடமான ரிவெண்டலில் தங்குகிறது. அவர்களின் தலைவனான எல்ராண்டின் ஆலோசனைப்படி இவர்கள் மிஸ்டி-மலைகளைக் கடக்கப் புறப்படுகிறார்கள். ஒரு பனிப்புயலின்போது ஒரு குகையில் தங்குகிறார்கள். அப்போது காப்ளின்கள் (goblins) எனப்படும் அருவருப்பான தீங்குயிரிகள் அவர்களைத் துரத்துகின்றன. தப்பியோடும்போது பில்போ பின்தங்கி வழிதவறி மலையின் சுரங்கப்பாதைகளில் மாட்டிக்கொள்கிறான். அப்போது அவனுக்கு வழியில் ஒரு பொன்மோதிரம் கிடைக்கிறது. அதைத் தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறான். உடனே மலையடியில் ஒரு நீர்நிலையில் வசிக்கும் கோலும் (Gollum) என்ற தவளை போன்ற உயிரி அவனைப் பிடித்து உண்ண நினைக்கிறது. அந்த மோதிரமும் அது வைத்திருந்ததுதான். விடுகதை மீது அதற்கு ஆசை. விடுகதை சொன்னால் உனக்கு வழிகாட்டுகிறேன் என்று அது சொல்கிறது. மாறிமாறி விடுகதைகள் போடுகின்றனர். ஆனால் விரைவில் விடுகதை தெரியாமல் பில்போ “என் பாக்கெட்டில் என்ன இருக்கிறது?” என்று நேர்க் கேள்வி கேட்கிறான்.

கோலுமுக்கு விடை தெரியாமல் விழிக்கும்போது, தப்பி ஓடுகிறான் பில்போ. அவனுக்குக் கிடைத்தது ஒரு மாயமோதிரம். அதை அணிபவர்கள் யார் கண்ணுக்கும் தெரியமாட்டார்கள். அதை அணிந்துகொண்டு கோலும் இடமிருந்து தப்பி மலையிலிருந்து வெளியே ஓடி, காண்டால்ஃபையும் குள்ளர்களையும் காண்கிறான். ஆனால் குழுவினரிடம் மாயமோதிரம் பற்றிச் சொல்லவில்லை. அவர்களை வார்குகள்(wargs) எனப்படும் பெருஓநாய்கள் துரத்துகின்றன. அவை காப்ளின்களுக்கு நண்பர்கள். நல்லவேளையாக கருடன்கள் அவர்களைக் காப்பாற்றி அழைத்துச் செல்கின்றன.

பிறகு அவர்கள் பியோர்ன் எனப்படும் கரடிமனிதனைச் சந்தித்து இளைப்பாறுகிறார்கள். அவர்களின் வழி மிர்க்வுட் எனப்படும் இருட்காட்டைக் கடப்பதாக அமைகிறது. காண்டால்ஃப் இச்சமயத்தில் வேறொரு வேலையாகச் சென்றுவிடுகிறார். பியோர்ன் இவர்களைக் காட்டு எல்லை வரை வந்து விடுகிறான். ஆனால் இவர்கள் வழிதவறி, அரக்கச் சிலந்திகளின் வலைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். பில்போ மட்டுமே தன் மோதிரத்தால் சிலந்திகளிடமிருந்து தப்ப முடிகிறது. ஸ்டிங் என்னும் தனது குறுவாள், மோதிரம் இவற்றால் அவர்களை வலைகளிலிருந்து தப்புவிக்கிறான்.

தப்பிய இந்தக் குழுவை எல்ஃபுகள் கைது செய்கிறார்கள். மீண்டும் பில்போ மட்டுமே தன் மாயமோதிரத்தின் உதவியால் சிறையிலிருக்கும் அவர்களை மீட்டு எல்ஃபுகளுக்கு ஒயின் வரும் பீப்பாய்களில் அவர்களை அடைத்து நதியில் மிதக்கவிடுகிறான். பீப்பாய்கள் லேக்டவுன் என்ற மனித-நகரத்தை அடைகின்றன. அதுதான் குள்ளர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து வைத்திருக்கும் டிரேகனின் தனிமை-மலைக்கு (lonely mountain) அருகிலுள்ள ஒரே மானிட நகரம். அங்கு அனைவரும் இளைப்பாறி உதவி பெறுகிறார்கள்.பிறகு மலைக்குச் செல்லும் அக்குழு, மலைக்குள் டிரேகன் ஸ்மாக் வசிப்பதால் பயந்து ஒரு மலைப்பொந்தில் தங்குகிறது. அதனுள் செல்லும் பில்போ செல்வக் குவியலின்மீது படுத்திருக்கும் டிரேகனைக் காண்கிறான். தொடரும் சந்திப்புகளில் அந்த டிரேகனின் தடித்த உடலில் மார்பில் ஒரு பலவீனமான இடம் இருப்பதை அறிகிறான். அவனிடம் குரோதம் கொள்ளும் ஸ்மாக், வேகமாக மலையை விட்டு வெளியேறி, லேக்டவுன்மீது பறக்கிறது. அதன் பலவீன இடத்தை ஒரு பறவை வாயிலாக அறியும் பார்ட் (Bard) என்ற வீரன் தன் அம்பால் அதை மாய்க்கிறான். ஆனால் அதன் தீமூச்சினால் லேக்டவுன் அழிந்து போகிறது.

இடையில் ஸ்மாக் போய்விட்டதால், குள்ளர்கள் மலையைக் கைப்பற்றித் தங்கள் சொந்தச் செல்வத்தைப் பெறுகிறார்கள். லேக்டவுனைச் சேர்ந்த மனிதர்களும் எல்ஃபுகளும் அச்செல்வத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று மலையின் மீது படையெடுக்கிறார்கள். பில்போ அம்மலைச் செல்வத்தில் முக்கியமான ஒரு பெரிய மாணிக்கத்தை-ஆர்க்கன்ஸ்டோன் என்பதைத் திருடிக் கொள்கிறான். அவன் குள்ளர்களுக்குத் தெரியாமல் வெளிவந்து மனிதர்களுக்கு அதை அளித்து போரைக் கைவிட்டுச் சமரசம் செய்து கொள்ளுமாறு சொல்கிறான்.

இச்சமயத்தில் காப்ளின்கள், வார்குகள் உள்ளிட்ட பெரும்படை அவர்களைத் தாக்குகிறது. மனிதர்கள், எல்ஃபுகள், குள்ளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவற்றை எதிர்க்கிறார்கள். ஐந்து சேனைப் போர் எனப்படும் பெரும்போர் நிகழ்கிறது. ஆனால் மனிதர்கள் தோல்வியுறும் நிலை வருகிறது. அப்போது பியோர்னும், கருடன்களும் வந்து அவர்களைக் காப்பாற்றுகின்றனர். பில்போ மோதிரத்தைத் திருடியதைக் குள்ளர்கள் தலைவனான தாரின் மன்னித்துவிடுகிறான், ஆனால் போரில் இறந்து விடுகிறான். போருக்குப் பின் பில்போ ஹாபிடனுக்குத் திரும்பி மகிழ்ச்சியுடன் வாழ முனைகிறான்.

அசாதாரண சம்பவங்கள் நிகழும்போது எப்படிச் சாதாரண மனிதர்களும் நினைக்க முடியாத அளவு பண்பு மாற்றம் அடைகிறார்கள் என்பதை இந்தக் கதை அற்புதமாக எடுத்துச் சொல்கிறது. தனது ஊரில் பில்போ ஒரு வீரம் தேவையற்ற, சாதாரண ஹாபிட், அவ்வளவுதான். ஆனால் கதையிறுதியில் அவன் வீரனாவது மட்டுமல்ல, நற்பண்புகளிலும் வளர்கிறான். பலமுறைகள் குள்ளர்களை அபாயங்களிலிருந்து காப்பாற்றுவதோடு குள்ளர்களுக்கு உயிரான ஒரு பெரிய மாணிக்கத்தையே போர் நிறுத்தத்துக்காக எதிரிகளுக்கு அளிக்கிறான். இறுதியாக அவனுக்குக் கிடைக்கும் பரிசு ஒரு மாயமோதிரம். இதுதான் டோல்கியனின் அடுத்த பெரும்புத்தகமான “மோதிரங்களின் தலைவன்” கதைக்குக் காரணமாக அமைகிறது.


ஐந்தாம் உலகம்

பூமியின் மீதுள்ள எல்லா உயிர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முக்கியப் பொருளாகச் சூரியனின் முக்கியத்துவத்தை உலகின் பல பழங்காலக் கலாச்சாரங்கள் அறிந்திருந்தன. மனிதர்களைக் காப்பவனாகவும் சூரியன் நோக்கப்பட்டது.

அமெரிக்க இந்தியப் பழங்குடியினரில் ஒன்றான ஹோப்பி இன நாட்டுப்புறக் கதையில், சூரியன் மனிதனுக்குத் தந்தையாக ஏற்கப்பட்டது. பிற பழங்குடிக் கலாச்சாரங்களிலும் இதை ஒத்த நம்பிக்கைகள் உள்ளன.


ஒரு காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து உலகங்களும் ஐந்து சூரியன்களும் படைக்கப்பட்டன. முதல் உலகத்தின் மக்கள் தவறாக நடந்துகொண்டதால் அது அழிக்கப்பட்டது. அத்துடன் முதல் சூரியனும் அழிந்தது.
இரண்டாவது சூரியன், தன் மக்கள் விவேகமற்றுக் குரங்குகளாவதைக் கண்டது.
மூன்றாவது உலகின் மக்கள் தெய்வங்களுக்கு பலியிடாமையால், தீ, பூகம்பம், எரிமலை ஆகியவற்றால் அழிந்துபோவதை அதன் சூரியன் கண்டது.
நான்காம் உலகம் வெள்ளத்தில் சூரியனையும் இழுத்துக்கொண்டு அழிந்தது.
நமது உலகான ஐந்தாம் உலகைப் படைக்கும் முன்பாக, ஐந்தாம் சூரியனைக் கொளுத்தப்போகும் பாக்கியசாலி யார் எனக் கண்டறிய இருளில் கடவுளர்கள் கூடினார்கள்.
ஒரு மனிதன் முன்வந்தான். ஒரு பிரமிடின் உச்சியில் கடவுளர்கள் பெரிய தீயை உண்டாக்கினார்கள். அதில் அந்த மனிதன் குதிக்க வேண்டும்.
அவன் மிகப் பிரகாசமான உடையணிந்திருந்தான். நான்கு முறை தீயில் குதிக்க முயற்சி செய்தான். ஆனால் பயத்தினால் முடியவில்லை.
எல்லாக் கடவுளர்களிலும் கீழான கடவுள் ஒருவர், நாணல்குச்சிகளால் மிக எளிய உடையை அணிந்திருந்தவர், தீயில் குதித்துவிட்டார். மனிதனும் வெட்கமடைந்து, தானும் தீயில் விழுந்துவிட்டான்.
ஐந்தாம் உலகிற்கு ஒளியூட்டியவாறு சூரியன் வானத்தில் எழலாயிற்று.


-அமெரிக்க இந்தியப் பழங்குடியினமான டோல்டெக் நாட்டுப்புறக் கதை.


பரஜன்

பரஜா என்பது ஒரியா மொழியில் கோபிநாத் மோஹாந்தி என்பவர் ஒரிஸாவின் சோட்டாநாகபுரிப் பீடபூமிக் காடுகளில் வசிக்கின்ற மக்களைப் பற்றி எழுதிய நாவல். பரஜா என்பது (தமிழில் பரஜன்) அங்குள்ள காட்டுக்குடிகளில் ஓர் இனத்தவரின் பெயர். ராணா, பல்கர், தொம்பர், கடபர், கோண்டு போன்ற திராவிடப் பழங்குடி இனத்தவர்களின் எச்சங்களே இவர்கள். பரஜா என்ற சொல்லே பறையா என்பது போல ஒலிக்கவில்லையா?

கோபிநாத் மோஹாந்தி 1914இல் கட்டக்கில் பிறந்து 77 வயதில் 1991இல் மறைந்தவர். ஞானபீட விருது பெற்றவர். பத்மபூஷண் விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது.

பரஜா நாவலின் கதை அந்தப் பழங்குடியின மனிதனான சுக்ரு ஜானி என்பவன் பற்றியது. அவன் மனைவி சாம்பரி ஓர் ஆட்கொல்லிப் புலியால் தாக்கப்பட்டு இறந்துவிட்டாள். அவனுக்கு இரண்டு மகன்கள்–மண்டியா, டிக்ரா. இரண்டு மகள்கள்–ஜிலி, பிலி. தன் மகன்களோடு இரவுபகலாகத் தன் நிலத்தில் பாடுபட்டு வருகிறான் சுக்ரு. தன் தந்தை விட்டுச் சென்ற சொத்துகளைத் தன் உழைப்பால் பெருக்கியிருக்கிறான். கதைத் தொடக்கத்தில் அவன் நன்றாகத்தான் இருக்கிறான். தன் வீட்டில் தன் மக்கள் திருமணமாகிப் பல்கிப் பெருகுவதையும் நிலம் விரிவடைவதையும் கனாக் கண்டுகொண்டு அமர்ந்திருக்கிறான். ஆனால் விதி இந்தக் காட்டு மக்களிடம் பலவேறு ரூபங்களில் விளையாடுகிறது. காட்டு அதிகாரிகள் அதில் ஒரு கோர ரூபம்.

பரஜா மக்கள் பயப்படும் ஒரே ஆள்–நகர்ப்புறத்திலிருந்து வருகின்ற காட்டுப் பாதுகாவலன் (ஃபாரஸ்டு கார்டு). விரும்பாத எவரையும் “காட்டு மரங்களை வெட்டினான், காட்டின் பகுதியை எரித்தான், காட்டில் தேன் சேகரித்தான்” என்றெல்லாம் ‘வழக்குப்’ போட்டுப் பழிவாங்கி விடுவான். பரஜா மக்கள் அவனுக்கு ஆண்டுதோறும் உழவுக்காணி (வரி) தரவேண்டும். மற்றபடி அவன் விரும்பும் அனைத்தையும்(!)கூடத் தர வேண்டும்.

இந்த அரசாங்கக் காவலனுக்கு சுக்ருவின் மகள் ஜிலி மீது ஆசை. அதனால் சுக்ரு கோபமடைகிறான். பரஜன்கள் பெண்களைக் கண்போல் காப்பவர்கள். தங்கள் பெண்கள் பிற இனத்தவரோடு உறவுகொள்ளச் சம்மதிக்காதவர்கள். ஒரு கோபமடைந்த பரஜா விலங்கைப் போன்றவன். பரஜா இனத்திற்கு நன்கு கள்ளமற்று உழைக்கவும், காட்டுக் காவலன் போன்ற ஆட்களுக்கு மரியாதை தரவும் தெரியும். ஆனால் தங்கள் மானத்தில் எவனும் கைவைக்கலாகாது. இந்தக் கோபமும் பிடிவாதமும் சுக்ருவின் வாழ்க்கையை முழுவதும் சீரழித்துவிடுகின்றன.

கார்டு, பழிவாங்குவதற்கெனப் பிற நகர்ப்புற அலுவலர்களோடு வருகிறான். சுக்ரு காட்டின் விதிகளைக் கெடுத்துவிட்டான், அனுமதியின்றி மரங்களை வெட்டிவிட்டான் என்று குற்றங்கள் அடுக்கப்படுகின்றன. உண்மையில் மரங்களை வெட்ட காவலனின் வாய்மொழி அனுமதியின்றி வேறு எழுத்து-அனுமதி எதுவும் கிடையாது. இவனை உன் அனுமதிப்பத்திரம் எங்கே என்று கேட்டு அதிகாரிகள் மிரட்டுகின்றனர். காவலன் இவன் புதிதாகப் பெற்ற நிலத்தைப் பிடுங்கிக் கொள்கிறான், எண்பது ரூபாய் தண்டம் (ஃபைன்) விதிக்கிறான். இது அந்த மக்களுக்குச் சுமார் முப்பது மாத வருவாய்க்குச் சமம். அக்காலத்தில் மூன்று ரூபாயில் ஒரு மாதத்தை ஓட்டுபவர்கள் அவர்கள்.

எனவே இவன் தனது மூத்த மகனிடம் குடும்பத்தை விட்டுவிட்டு தானும் தன் இளைய மகனும் நகர்ப்புறத்தில் சாஹுகார் (லேவாதேவிக்காரன், சேட்டு) ராமச்சந்திர பிஷோயி என்பவனிடம் அடிமைகளாகின்றனர். இவர்களை அடிமைகளாக்கிக் கொண்ட போது அந்த லேவாதேவிக்காரனின் ஆழ்ந்த கண்கள் தந்திரத்துடன் கனத்த புருவங்களின்கீழ் பளிச்சிட்டன. இவர்கள் இருவரையும் அடிமைகளாக ஏற்றுக் கொண்டு அவன் காசு தருகிறான். அவன்  வைத்திருக்கும் பத்திரங்கள், ஸ்டாம்புகள், சட்டப்படிவங்கள் எல்லாம் பரஜன் போன்ற பழங்குடிகளுக்குப் புரியாதவை, எட்டாதவை, அவர்களால் வெறுக்கப்படுபவை.

சாஹுகார், இவர்கள் இருவருக்கும் வருடக்கூலி ஐந்து ரூபாய் என்று சொல்கிறான். ஆனால் இவர்கள் வாங்கிய பணத்துக்கு வருடாவருடம் 50% வட்டி தர வேண்டும். இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் இவர்கள் இருவரும் கைநாட்டுகிறார்கள். அந்த சாஹுகாரனின் நிலத்தில் உழைத்து உழைத்து ஓடாகத் தேய்கிறார்கள். இவர்கள் வருமானமோ ஆண்டுக்கு ஐந்து ரூபாய். ஆனால் கொடுக்க வேண்டியது ஆண்டுக்கு 75 ரூபாய். எத்தனை ஜென்மங்கள் உழைத்து இவர்களால் கடனைத் தீர்க்கமுடியும்?

உழைப்பின் சோர்வு தெரியாமலிருக்க இவர்களுக்கு சோற்றுக்கு பதிலாக மஹுவா சாராயம் அளிக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில் இவனது முதல் மகனும் இவன் மருமகனாக வரவேண்டிய மண்டியா என்பவனும் இவர்களுடன் சேர்ந்து அடிமையாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

ஆக வீட்டில் ஆண்துணை எவருமின்றி இரண்டு பெண்கள் ஜிலி, பிலி மட்டுமே தனித்து விடப்படுகிறார்கள். வீட்டில் வருமானமின்றிப் போனதோடு பிறரது ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் ஆளாகிறார்கள். சாஹுகாரிடம் அடிமைகளாகச் சென்றவர்களோ ஆண்டு அறுவடை நேரத்தில்கூட வீட்டுக்குச் செல்ல விடுமுறை அளிக்கப்படவில்லை.

இந்தச் சமயத்தில் சாலைபோடும் ஒப்பந்தக்காரர்கள் எல்லாக் காட்டுப்பகுதி கிராமங்களுக்கும் வேலையாட்களைத் தேடி வருகிறார்கள். ஆண்களுக்கு ஒரு நாள் கூலி மூன்றணா, பெண்களுக்கு இரண்டணா. இவர்களின் கிராமத்துக்கும் வருகிறார்கள். ஜிலி, பிலி இருவரும் அவர்களிடம் சேர்ந்து வயிற்றுக்காக உழைக்க வேண்டியதாகிறது. தங்கள் வீட்டை விட்டுப் புதிய இடம், புதிய உழைப்பு, புதிய புகை நாற்றம்…

நல்ல வேளை, இந்த நிலை சில மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. தன் நிலத்தை சாஹுகாரனிடம் அடகுவைத்துவிட்டு தன்னை விடுவித்துக் கொண்டு சுக்ரு வீட்டுக்கு வருகிறான்.

ஆனால் சாஹுகாருக்கு தன்னிடம் வீட்டைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணம் இல்லை என்பதை சுக்ரு புரிந்துகொள்கிறான். வயது முதிர்ந்த சாஹுகார் அதற்கு பதிலாக இவன் மகள் ஜிலியைக் கேட்கிறான். சுக்ருவுக்குத் தன்மகளைக் கொடுக்க மனமில்லை என்றாலும் இவனது கிராமவாசிகள் உட்பட எல்லாரும் அவனை வலியுறுத்துகிறார்கள். எனவே வேறுவழியின்றி தன் மகளை சாஹுகாருக்குத் திருமணம் செய்து தர வேண்டியிருக்கிறது. இடையில் கோர்ட் வழக்கும் தோற்றுப் போய் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறான் சுக்ரு.

கடைசியாக உயிர் பிழைகக ஒரே வழி–சுக்ரு போய் மருமகன் சாஹுகாரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டியதுதான் என்றாகிறது. அப்படிப்பட்ட எண்ணத்துடன்தான் அவன் புறப்படுகிறான். ஆனால் சாஹுகாரின் வீட்டுக்குச் சென்றவுடனே அவனுக்குள் ஏதோ ஆவேசம் புகுந்துகொள்கிறது. கோபத்தில் கொதித்த அவன் லேவாதேவிக்காரன் காலில் விழுவதற்கு பதிலாக ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவன்மீது விழுந்து அடி அடி என்று அடித்து அவனைக் கொன்றுவிடுகிறான்.

ஏறத்தாழ சினுவா அச்சுபே-யின் Things Fall Apart, பேர்ல் எஸ். பக்கின் The Good Earth  ஆகிய நாவல்கள் ஆப்பிரிக்காவிலும் , சீனாவிலும் நிகழ்ந்த இதே போன்ற விஷயத்தைத்தான் பேசுகின்றன. சோட்டா நாகபுரிப் பீடபூமியிலும் அதையொட்டிய மலைக்காடுகளிலும் கனரக உலோகங்கள் ஏராளமாக இருப்பதால் சுரங்கம் தோண்டுவதற்கென பெருமுதலாளிகள் படையெடுக்கிறார்கள். அவர்களோடு போராடி இந்தக் காட்டுவாசிகள் இப்படித்தான் இன்றுவரை வாழவேண்டியிருக்கிறது. இதை முதன்முதலில் நம் நாட்டுக்குச் சுதந்திரம் வருமுன்பாகவே (1945) பதிவுசெய்த கோபிநாத் பாராட்டுக்குரியவர்.


வீழ்ச்சி

ஆல்பர்ட் காம்யூ அல்ஜீரியாவில் பிறந்த ஃபிரெஞ்சு தத்துவஞானி. இருத்தலியக் கோட்பாட்டாளர். இருத்தலியம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இவரையும் ழான் பால் சார்த்தரையும் கண்டிப்பாகப் படித்தே ஆக வேண்டும்.

1913இல் பிறந்தவர். 1960இல் மறைந்தார். 1957இல் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அந்நியன், காலிகுலா, வீழ்ச்சி என்பன இவரது நாவல்கள். தி மித் ஆஃப் சிசிஃபஸ், அந்நியன் போன்ற படைப்புகளில் இருத்தல் சார்ந்த அபத்தக் கோட்பாட்டினைத் திறம்பட முன்வைத்தவர். இக்கதை, காம்யூவின் நாவலான தி ஃபால் என்பதன் சுருக்கம்.

இதன் நாயகன் கிளமன்ஸ் என்பவன். கதையின் தொடக்கத்தில் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் மெக்சிகோ சிட்டி என்ற மதுஅருந்தகத்தில் ஓர் அறிமுகமில்லாத நபரிடம் ஒரு மதுபானத்தை எப்படி வருவிக்க வேண்டும் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறான். ஏனெனில் அந்த நபருக்கு டச்சு மொழி தெரியவில்லை. பார் காரனோ டச்சு மொழியைத் தவிர வேறு மொழி எதையும் அறியாதவன். ஆக அவனுக்கு உதவ வேண்டி கிளமென்ஸ் முன்வருகிறான். பேச்சினூடாக, அப் புதியவனும் இவனைப் போலவே பாரிஸ்-காரன் என்பது தெரிகிறது.

கிளமென்ஸ், பாரிசில் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞன். அவன் அதிகமாக எடுத்துக் கொள்வது விதவைகள், அநாதைகள் வழக்குகளைத் தான். அதாவது வழக்காட வழியற்ற ஏழைகளுக்கு உதவுகிறான். மேலும், தான் எப்போதும் பிறருக்கு உதவுபவன்–தெருக்களில் புதியவர்களுக்கு வழிகாட்டுவான், பஸ்சில் பிறருக்குத் தனது இருக்கையை வழங்குவான், ஏழைகளுக்குப் பிச்சை அளிப்பான், குருடர்கள் வீதியைக் கடக்க உதவுவான் என்று சொல்லிக் கொள்கிறான். அதாவது “உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்று உலகைப் பார்த்துச்  சொல்லும் ரகம். அதனால் தான் காட்டும் கருணையே தனக்கான பரிசாக விளங்குகின்ற அத்தகைய உயர்ந்த உச்ச நிலையை எய்திவிட்டவன்.

ஒரு நாள் இரவு. தன் இரவுத்தோழியுடன் காலம் கழித்துவிட்டு பான்ட் ராயல் வழியாகத் தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கிறான். அப்போது கருப்பு உடையணிந்த ஒரு பெண்மணி பாலத்திலிருந்து குதிக்கும் நிலையில் இருப்பதைக் காண்கிறான். ஒரு கணம் தயங்கி உதவிசெய்யலாமா என யோசிக்கிறான். பிறகு தன் வழியே செல்கிறான். ஆனால் சில கணங்கள் கழித்து ஓர் உடல் நீரில் விழும் சத்தம் கேட்கிறது. என்ன நடந்தது என்று புரிந்து ஒரு கணம் நிற்கிறான். ஆனால் எதுவும் செய்யவில்லை. கூக்குரலிடும் ஓசை பல முறை கேட்கிறது. பிறகு நீரோட்டத்தில் தேய்ந்து மறைகிறது. ஆனால் இவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தொடர்ந்து நிகழும் அமைதி எல்லையற்று நீடிக்கிறது. “நான் ஓட நினைத்தேன், ஆனால் அசையவும் முடியவில்லை…அதிக லேட்டாகி விட்டது… ரொம்ப தூரம் போய்விட்டது…” என்று சொல்லிக் கொள்கிறான். பிறகு மெதுவாக மழையில் நனைந்தவாறே போய்விட்டான்.

சுயநலமற்று பலமற்றவர்களுக்கும் அதிர்ஷ்டக் கட்டைகளுக்கும் தான் உதவுபவன் என்ற எண்ணம் கிளமென்ஸிடம் இருக்கிறது. ஆனால் இந்தச் சம்பவத்தை அடியோடு புறக்கணித்து விடுகிறான். அவளுக்கு உதவியிருந்தால் தன் சொந்தப் பாதுகாப்பே கேள்வியாகி இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறான்.

பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்தச் சம்பவத்தை அவன் ஏறத்தாழத் தன் ஞாபகத்திலிருந்து அழித்துவிட்டான். மற்றொரு இனிய நாள். தன் கடமைகளைச் சிறப்பாக முடித்துவிட்டான். மேலும் நண்பர்களுடன் ஆளும் வர்க்கத்தின் கடின இதயம் பற்றியும் தலைவர்களின் போலித்தனம் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்தாயிற்று. தனக்குள் முழுமையின் ஒரு புதிய பெரிய பலம் பொங்கி எழுவதை உணர்கிறான். சுய திருப்தியோடு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு பான்ட் ராயல் அருகே திருப்தியாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கிறான். அந்தச் சமயத்தில் அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு பெருஞ்சிரிப்பு கேட்கிறது.

அது ஏதோ முன்பு தன் நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட ஒரு பிரமை என்று நினைக்கிறான். ஆனால் தொடர்ந்து அது நீரிலிருந்து எழுவதுபோலக் கேட்கிறது. அது அதிர்ச்சியூட்டுகிறது. ஏனெனில் பல ஆண்டுகள் முன்பு நீரில் அமிழ்ந்துபோன பெண்ணின் நினைவை அது தெளிவாகக் கொண்டு வருகிறது. தான் தன்னை ஒரு சுயநலமற்ற மனிதனாகப் பாராட்டிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அந்தச் சிரிப்பு எழுந்தது. அது இதயபூர்வமான, நட்புமிக்க, நல்ல சிரிப்பாகவும் இருக்கிறது. அது அவனுக்குள்ளிருந்தே எழும் சிரிப்பு என்பதை அது காட்டுகிறது. தான் ஊதிப் பெருக்கிக் கொண்ட தனது பிம்பத்திற்கும் உண்மையான சுயத்திற்குமான மோதல் தெளிவாகிறது. தனது போலித்தனம் வலியுடன் உணரத்தக்கதாக வெளித்தெரிகிறது.

மூன்றாவதாக ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஒரு சிக்னலில் அவன் தன் காரில் நிற்கும்போது விளக்கு பச்சையாக மாறிய பிறகும் முன்னால் வழியை மறித்திருக்கும் மோட்டார் சைக்கில்காரன் நகர மறுக்கிறான். வாகனத்தை நகர்த்தாதது மட்டுமல்லாமல் இவனை அடிப்பதுபோல மிரட்டவும் செய்கிறான். அவனை அடிப்பதற்காக கிளமென்ஸ் காரைவிட்டு இறங்கியபோது யாரோ ஒருவன், தன் கால்களுக்கிடையில் மோட்டார் சைக்கிலை வைத்திருக்கும் பரிதாபமான ஒருவனை அடிப்பது தவறு என்கிறான். ஆனால் திடீரென்று இவன் எதுவும் செய்வதற்கு முன்னர் அந்த மோட்டார் சைக்கில்காரன் இவனைத் தலையின் பக்கவாட்டில் அடித்துவிட்டு வேகமாகச் சென்று விடுகிறான். செயலற்று விழித்த கிளமென்ஸ், பிறக தான் என்ன செய்திருக்க வேண்டும் என்று யோசிக்கிறான். பொது இடத்தில் தான் அடிக்கப்பட்ட கேவலத்தை நினைத்து, வருத்தப்பட்டாலும், அதைப் பார்த்தவர்கள் அப்போதே மறந்துவிட்டுச் சென்றிருப்பார்கள், அதனால் தனது கெளரவத்திற்கு ஹானி எதுவும் வந்துவிடாது என்று நம்புகிறான்.

இந்த நிலையில் அவனுக்குத் தான் இதுவரை வெற்று கெளரவம், பிறரின் மதிப்பும் ஏற்பும், பிறர்மீதான அதிகாரமும் என்ற இவற்றிற்காகவே வாழ்ந்திருப்பது புலனாகிறது. இதனை உணர்ந்த பிறகு அவனால் முன்போல் எப்படி வாழ முடியும்?

சார்த்தர் இந்த நாவலை “மிகுந்த அழகியல் கொண்டது, ஆனால் மிகக் குறைந்த அளவே புரிந்துகொள்ளப்பட்ட நாவல்” என்று புகழ்ந்துள்ளார். கள்ளமற்ற தன்மை, இருத்தலின்மை, உண்மை ஆகியவை இந்த நாவலின் கருப்பொருள்களாக உள்ளன.


சூரியன் எப்படிக் கிடைத்தது நமக்கு?

ஆதிகாலத்தில் வெறும் இருள்தான் இருந்தது. மனிதர்கள் ஒருவர்மீது ஒருவர் மோதிக் கொண்டே இருந்தார்கள். உலகின் மறுபக்கத்தில் நிறைய வெளிச்சம் இருக்கிறது, ஆனால் பேராசை பிடித்த அவர்கள் அதைப் பகிர்ந்துகொள்ள ஒப்பமாட்டார்கள் என்று நரி கூறியது.


போஸம் என்ற பிராணி கொஞ்சம் ஒளியைத் திருடிக்கொண்டுவரச் சென்றது. எல்லா வற்றிற்கும் ஒளியூட்டிக்கொண்டு சூரியன் ஓர் உயர்ந்த மரத்தில் தொங்குவதைப் பார்த்தது. கொஞ்சம் சூரியத் துண்டினை எடுத்துத் தன் வாலில் மறைத்துக் கொண்டது. ஆனால் வெப்பம் அதன் வாலின் மென்மயிர்களை எரித்துவிட்டது. ஆகவேதான் போஸங்களுக்கு வாலில் மயிரின்றி மொட்டையாக இருக்கிறது.

பிறகு கழுகுபோன்ற பறவையான பஸார்டு என்பது தன் தலைமீது ஒளியைக் கொண்டுவர முயன்றது. அந்த முயற்சியும் வீணாயிற்று. வெப்பம் அதன் தலைமீதிருந்த இறகுகளை எரித்துவிட்டது. அதனால்தான் பஸார்டுகளுக்குத் தலை மொட்டையாக இருக்கிறது.

அடுத்தபடியாக சிலந்தி முயற்சிசெய்தது. அது களிமண்ணால் ஆன ஒரு கிண்ணத்தைச் செய்தது. பிறகு பெரிய வலை ஒன்று பின்னி வானில் அதை ஒரு பால்வழியாக அடுத்த பக்கம் செல்லுமாறு வீசியது. அதில் சென்று முழுச் சூரியனையும் களிமண் கிண்ணத்தில் பறித்து உலகின் இந்தப் பக்கமாகக் கொண்டுவந்துவிட்டது.
இப்படித்தான் நமக்குச் சூரியன் கிடைத்தது.

-செரோக்கீ நாட்டுப்புறக் கதை.


மாபெரும் கேட்ஸ்பி (The Great Gatsby)

The Great Gatsby என்பது ஸ்காட் ஃபிட்ஜெரால்ட் என்ற அமெரிக்க ஆசிரியரின் புகழ் பெற்ற நாவல் மட்டுமல்ல, இன்றுவரை தொடர்ந்து படிக்கப்படும் நாவலும்கூட. ஃபிட்ஜெரால்ட் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இந்த நாவல் 1925இல் வெளியாயிற்று.

1922 கோடையில் நிக் கேரவே என்பவன் மின்னசோடாவிலிருந்து நியூயார்க்கிற்கு பத்திர விற்பனையாளனாகப் பணி புரிவதற்கெனக் குடி பெயர்கிறான். வெஸ்ட்-எக் என்னுமிடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறான். அது புதுப் பணக்காரர்கள் வாழும் பகுதி. அவனுக்கு ஈஸ்ட்-எக் பகுதியுடன் தொடர்பிருக்கிறது. அது பழைய பணக்காரர்கள் வாழுமிடம். இருவிதப் பணக்காரர்களுக்கும் இடையில் மனப்பாங்கிலும் தாங்கள் கொள்ளும் மரியாதையிலும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

அங்கு அவன் உறவினள் டெய்சியும் அவள் கணவன் டாம் பக்கனனும் வசிக்கிறார்கள். டாம், யேல் பல்கலைக்கழகத்தில் நிக்கின் வகுப்புத் தோழனும்கூட. அங்கு ஜார்டன் பேக்கர் என்னும் கோல்ஃப் விளையாட்டுக்காரியை நிக் சந்திக்கிறான். டாம் திருமண உறவுக்கு அப்பால் ஒரு தொடர்பு வைத்திருப்பதாக அவள் சொல்கிறாள். வீட்டுக்குத் திரும்பிய பிறகு நிக் தனது அண்டைவீட்டுக்காரன் ஜே கேட்ஸ்பியைக் காண்கிறான். இருளில் அவன் லாங் தீவுப்பகுதியை நோக்கிக் கையை நீட்டியவாறு தென்படுகிறான். ஆனால் அங்கு பச்சை நிற ஒளியைத் தவிர வேறொன்றும் புலப்படவில்லை.

சிலநாள் கழித்து டாம் நிக்கை நியூ யார்க்கில் ஒரு விருந்திற்கு அழைக்கிறான். வழியில் டாம் தன் தொடுப்புக்காரியான மிர்ட்டில் வில்சன் என்பவளை அழைத்துக் கொள்கிறான். அவள் ஜார்ஜ் வில்சன் என்பவனின் மனைவி. வில்சன் ஒரு ஆட்டோ-கடை நடத்துகிறான், அது ஏழைகள் வாழும் ஆஷ்-வேலி என்ற குப்பை மேட்டுப் பகுதியில் இருக்கிறது.

பார்ட்டியில் மிர்ட்டில் குடித்துவிட்டு டெய்சியைக் கிண்டல் செய்கிறாள். டாம் அவளை முகத்தில் குத்தி மூக்கை உடைத்துவிடுகிறான்.

கேட்ஸ்பி, மிக ஊதாரித்தனமான விருந்துகளைச் சனிக்கிழமை இரவுகள் தோறும் நடத்துகிறான். அதில் ஒன்றில் கலந்துகொள்ளும் நிக், ஜார்டனைச் சந்திக்கிறான். கேட்ஸ்பியையும் நேருக்குநேர் முதன்முதலாகப் பார்க்கிறான். கேட்ஸ்பி, ஜார்டனிடம் தன் அந்தரங்கக் கதையைச் சொல்கிறான். அவன் முதல் உலகப் போருக்கு முன்னாலேயே டெய்சியைச் சந்தித்துக் காதல் கொண்டவன். அவளருகிலேயே இருக்கவும் அவளைக் காண்பதற்காகவுமே அவன் வெஸ்ட்எக் பகுதியில் இந்த மாளிகையை வாங்கியிருக்கிறான். கேட்ஸ்பியின் வேண்டுகோளுக்கிணங்க, டெய்சியுடன் ஒரு சந்திப்பை கேட்ஸ்பி நிகழ்த்த நிக் ஏற்பாடு செய்கிறான். சந்தித்தவுடன் அவர்கள் இருவரின் காதலும் மீண்டும் துளிர்த்து விடுகிறது.

டெய்சியைச் சந்திப்பதற்காகவே சனிக்கிழமை விருந்துகள் நடத்தப் பட்டன. அவளைப் பார்த்துவிட்டதால் கேட்ஸ்பி தன் சனிக்கிழமை விருந்துகளை நிறுத்திவிடுகிறான்.

தன்னுடனும், டாம், ஜார்டனுடனும் நிக்கையும் கேட்ஸ்பியையும் விருந்துக்கு வருமாறு டெய்சி அழைக்கிறாள். அவளுக்கும் கேட்ஸ்பிக்கும் இடையில் உள்ள ஆழ்ந்த அன்பை நிக் அறிகிறான். ஒரு நாள் நியூ யார்க்கிற்கு அனைவரும் செல்கின்றனர். அங்கு பிளாசா ஹோட்டலில் டாமுக்கும் கேட்ஸ்பிக்கும் டெய்சி சம்பந்தாக வாய்ச்சண்டை ஏற்பட்டு விடுகிறது. தன்னை மட்டுமே டெய்சி நேசிப்பதாகவும் அவள் ஒருபோதும் டாமை விரும்பியதில்லை என்றும் கேட்ஸ்பி சொல்கிறான். ஆனால் டெய்சி இருவரையுமே விரும்புவதாகச் சொல்கிறாள். அதனால் கேட்ஸ்பி அதிர்ச்சி யடைகிறான். கேட்ஸ்பி ஒரு கள்ளச்சாராயக்காரன் என்றும் அதனால்தான் பணம் சேர்த்தான் என்றும் டாம் இழிவுபடுத்துகிறான். பிறகு டெய்சியை கேட்ஸ்பியுடன் அனுப்பிவிடுகிறான். சற்று நேரம் கழித்து டாம், நிக், ஜார்டன் எல்லாரும் கிளம்புகின்றனர்.

டாம் கேட்ஸ்பி அளவுக்குப் பணக்காரன் அல்ல என்றாலும் அவனிடம் குலப்பெருமை அளவுக்குமீறி இருக்கிறது. கேட்ஸ்பி ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவன். எப்படியாவது முன்னேற வேண்டும், பணம் சேர்க்க வேண்டும், குறிப்பாக டெய்சியை அதைக் கொண்டு அடைய வேண்டும் என்னும் எண்ணம் படைத்தவனாக இருக்கிறான். டாமிடம் இல்லாத உண்மையும் நேர்மையும் காதலும் கேட்ஸ்பியிடம் இருக்கின்றன.

அவர்கள் வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஒரு விபத்து நேரிடுகிறது. மிர்ட்டில் ஒரு காரில் அடிபட்டு இறந்துவிடுகிறாள். தங்களுக்கு முன் சென்ற கேட்ஸ்பிதான் காரைச் செலுத்தியவன், தன் காதலி மிர்ட்டில் மீது மோதியவன் என்று டாம் நினைக்கிறான். கேட்ஸ்பி யிடமிருந்து டெய்சிதான் உண்மையில் காரைச் செலுத்தி வந்தவள், மிர்ட்டில்மீது மோதியவள் என்று நிக்கிற்குத் தெரியவருகிறது. ஆனால், பழியைத் தான் ஏற்றுக்கொள்ள கேட்ஸ்பி தயாராக இருக்கிறான்.

ஜார்ஜ் வில்சன் தன் மனைவி மீது காரைச் செலுத்தியவன் கேட்ஸ்பி என்று நினைத்துப் பழிவாங்க நினைக்கிறான். அதனால் கேட்ஸ்பியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறான். மாலையில் நிக் செல்லும்போது இருவர் பிணங்களையும் காண்கிறான்.

டெய்சியும் டாமும் வேற்றிடத்திற்கு ஓடிவிடுகின்றனர். கேட்ஸ்பியின் இறுதிச் சடங்கைக் கூட நிக் மட்டுமே ஏற்பாடு செய்யவேண்டியதாகிறது. கேட்ஸ்பியின் பணக்கார நண்பர்கள்–அவன் அளித்த விருந்துகளில் கலந்துகொண்டவர்கள்-அதுவரை அவனைக் கொண்டாடியவர்கள் ஒருவரும் ஈமச் சடங்கிற்கு வரவில்லை. கேட்ஸ்பியின் தந்தையும் வேறொருவரும் மட்டுமே சடங்கில் பங்கேற்கின்றனர்.

ஜார்டனுடன் நிக் உறவை முறித்துக்கொள்கிறான். அடுத்த முறை  டாமை அவன் சந்திக்கும்போது ஜார்ஜிடம் மிர்ட்டிலைக் கொன்றவன் கேட்ஸ்பி என்று “போட்டுக் கொடுத்தவன்” டாம்தான் என்று தெரியவருகிறது. உண்மையில் மிர்ட்டில் மீது கார் ஏற்றிக் கொன்றவள் டெய்சிதான் என்ற உண்மையை நிக் அவனிடம் கூறவேயில்லை.

நியூ யார்க் வாழ்க்கையின் இசைகேடான நிலை, வெறுமை ஆகியவற்றை ஆழ்ந்து உணரும் நிக், திரும்ப மின்னசோட்டாவுக்கே போக முடிவுசெய்கிறான். அதற்கு முன்னாளிரவு முன்பு கேட்ஸ்பி நின்றவாறு லாங் தீவைப் பார்த்த இடத்தில் சென்று நோக்குகிறான். அமெரிக்காவின் முதல் குடியேறிகளுடன் கேட்ஸ்பியை ஒப்பிட்டுப் பார்க்கிறான். அவர்களுக்கும் மேற்கத்தியக் கனவு என ஒன்று இருந்தது. பழமையின் நீரோட்டத்தை எதிர்த்து முன்னோக்கிச் செல்லும் படகுகளைப் போல, கேட்ஸ்பியைப் போல, பரந்து விரிந்த கைகளுடன் எல்லாரும் எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டியதுதான் போலும் என்று எண்ணுகிறான். கேட்ஸ்பிக்கு எப்படியாயினும் தன் கனவுகளை நனவாக மாற்றும் சக்தி இருந்தது என்றாலும், “எல்லாருமே அவரவர் பாணியில் (குறிப்பாகப் பணம் சேர்ப்பதில்) வெற்றி பெற்றாக வேண்டும்” என்ற “அமெரிக்கக் கனவு” முடிவுக்கு வந்ததைப் போல, கேட்ஸ்பியின் கனவும் முடிவுக்கு வந்துவிட்டது.


கறை படிந்த எல்லைநிலம்

டாக்டர் பனீஸ்வரநாத் ரேணுவின் மைலா ஆஞ்சல் (கறைபடிந்த எல்லைப்பகுதி) என்பது இந்தியில் எழுதப்பட்ட முக்கிய நாவலாகும். பிரேம்சந்தின் கோதான் நாவலுக்கு அடுத்த நிலையில் இந்தியில் இரண்டாவது சிறந்த படைப்பாக வைத்து இது எண்ணப்படுகிறது. இந்த நாவலில் காணப்படும் அளவுக்குச் சாதி வெறியும் ஆணவக் கொலைகளும் தமிழகத்தின் தென் பகுதியில் காணப்பட்டாலும், இதே அளவுக்குச் சாதிப் பிளவுகளை, பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். சுமார் 200க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ள இந்த நாவலில் சாதிக்கு அப்பால் இயங்காதவர்கள் அபூர்வம்

.இது மைதிலி நாவல். மைதிலி இந்திய தேசிய மொழிகளில் ஒன்றாக தனியாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இதை இந்தி நாவல் என்றே சொல்வது மரபாக உள்ளது. மிதிலைப் பகுதியில் (பிஹார் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதி) பேசப்படும் மொழி மைதிலி. இது ஒரு வட்டார நாவல். இந்த நாவல் 1950களின் தொடக்கத்தில் வெளிவந்தது.

இந்திய சுதந்திரம் கிடைத்த வேளையில் மிதிலை நாட்டார் கதைகளையும் பாடல்களையும் பலவிதக் காதல்கதைகளையும்  கிராமப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டது இந்த நாவல். இதனால் கிராமப்புற வட இந்தியாவின் ஓர் அரிய சித்திரம் நமக்குக் கிடைத்துள்ளது. இது ஒரு தனிமனிதனின் கதையோ குடும்பத்தின் கதையோ அல்ல. ஒரு கிராமத்தின் கதை. எனவே இதில் தொடர்ச்சியான சிறுசிறு சம்பவங்கள் மட்டுமே உள்ளன. டாக்டர் பிரசாந்த்-கமலா, பாலதேவ்-லட்சுமி, காளிசரண்-மங்கலாதேவி, கலாசி-பூலியா என்ற நான்கு காதல் கதைகள் உள்ளன.

பிஹாரின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மேரீகஞ்ச் என்ற கிராமத்தில் கதை நிகழ்கிறது. 1946இல் இங்குள்ள ஆஸ்பத்திரியில் பிரசாந்த் குமார் என்ற லட்சிய பூர்வ டாக்டர் மலேரியா, காலாஅஜார் போன்ற நோய்களை குணப்படுத்த வருகிறான். கிராம மக்கள் அவனை மதிக்கின்றனர். (இவன் பூர்வகதை விரிவாகச் சொல்லப் பட்டுள்ளது. இவன் ஓர் அநாதைக் குழந்தை. பெற்றவள் கோசி ஆற்றில் போட்டுவிட்டுப் போய்விடுகிறாள். ஒரு நேபாளி பிராமணக் குடும்பம் தங்களது ‘ஆதர்ச ஆசிரமத்தில்’ இவனை விடுகிறது. அதை ஸ்நேகமயி என்பவள் மேற்பார்வை செய்கிறாள். அவள் வளர்ப்பினாலும் உதவியாலும் இவன் மெட்ரிகுலேஷன் படித்த பிறகு வாராணசிக்கு மருத்துவம் படிக்க வருகிறான். முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிப்பவன், ஒத்துவராமல் பிறகு பட்னா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்கிறான். பிறகு கிராமப்புற மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய லட்சியத்துடன் இந்த மூலைமுடுக்கு கிராமத்துக்கு வருகிறான்.) இந்த டாக்டர் ‘பாபு’ நோய்களை மட்டுமல்ல, மக்களின் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது.

தாசில்தார் விசுவநாத் பிரசாத்தின் மகள் கமலாவை அவன் குணப் படுத்தும்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. கமலா கருவுறுகிறாள். இடையில் பிரசாந்த் ஒரு கம்யூனிஸ்ட் எனக் கைது செய்து பிறகு விடுவிக்கப்படுகிறான். கமலாவுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. நீலோத்பல் என்று அவனுக்குப் பெயர் வைக்கப்படுகிறது.

பாலதேவ் ஓர் இடையன் (யாதவ்). காங்கிரஸ் கட்சிக்காரன். அருகிலுள்ள பூர்னியா நகரைச் சேர்ந்தவன். அவன் அழகான தூய இந்தியில் காந்தியத்தைப் பேசுகிறான். ஆனால் அவன் பேசும் இந்தி இந்த மக்களுக்குப் புரியாத ஒன்று. இந்த கிராம மக்களை வைத்து ஒரு சுதந்திர ஊர்வலம் நடத்துகிறான். மஹந்த் சேவாதாஸ் என்பவன் கபீர் மடம் என்ற ஒன்றை நடத்துகிறான். அதில் வேலை செய்யும் லட்சுமி என்பவளை வைத்திருக்கிறான். ஆனால் அவள் வேலையைவிட்டு பாலதேவுடன் வாழச் செல்கிறாள்.

காளிசரண் என்பவனும் இடைச்சாதிதான். அவன் சிறந்த மல்யுத்த வீரன். அவன் காங்கிரஸ் கட்சியை விட்டு சோஷலிஸ்ட் கட்சிக்கு மாறி, உழைப்பாளர்கள், சாந்தலர்கள் ஆகியோரை வைத்து ஓர் அமைப்பைக் கட்டுகிறான். சர்க்காவில் நூற்கும் மங்கலா தேவி என்ற ஆசிரியையைக் காதலிக்கிறான். ஆனால் சோஷலிஸ்டுகள் கைதுசெய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகிறான்.

கலாசி என்பவன் ஒரு ஓஜா. மந்திரவாதி. நன்றாகப் பாடுபவன், நன்றாக கஞ்சிரா வாசிக்கிறான். தத்மா பகுதியின் பூலியா என்ற பெண்ணைக் காதலித்து மிகுந்த முயற்சிக்குப் பின் மணக்கிறான்.

கிராம மக்கள் சாதிக்கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது, ஆண்களைப் பெண்கள் எதிர்த்துப் பேசக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளனர். உதாரணமாக மஹந்த் முழு கிராமத்துக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்கிறான்.

*பிராமணர்கள்- எங்களுக்குத் தனியான சிறப்பிடம் ஒதுக்கப்படாவிட்டால் சாப்பிடமாட்டோம்

*சிப்பாய்கள்- நாங்கள் நாட்டுக்காக போராடியவர்கள். மற்றவர்களுடன் சரிசமமாக உண்ண எங்களால் முடியாது.

*ஹிபரன் சிங்- எங்கள் சாதியினர் மாடுமேய்ப்பவர்களுடன் சமமாக அமர்ந்து உண்ணமாட்டார்கள்.

*யாதவர்கள்- தானுக்குகளுடன் சமமாக அமர்ந்து யாதவர்கள் உண்ணமாட்டார்கள்.

விருந்து எவ்வளவு நன்றாக நடந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

இடையில் மஹந்த் சேவாதாஸ் இறக்க, காசியிலிருந்து வரும் ஒருவன் மஹந்த் ஆக முயலுகிறான். அங்கேயே பணியில் இருந்த ராமதாஸை காளிசரண் மஹந்த் ஆக்குகிறான். அவன் வைப்பாட்டியாக ராம்பியாரி என்பவள் தன் குழந்தைகளுடன் அந்த மடத்திலேயே வசிக்கிறாள்.

மாறிவரும் காலத்தை தாசில்தார் விஸ்வநாத் உணர்கிறான். அவன் செல்வாக்கும் சரிகிறது. தன் பதவியைத் துறந்து காங்கிரஸ் உறுப்பினன் ஆகிறான். இடையில் ஓர் இந்துத்துவ கும்பல் (கருந் தொப்பிக்காரர்கள்) நிலைபெற முயல்கிறது. அதன் தலைவனாக ராம் கிர்பால் சிங்கும் அவனைச் சேர்ந்த ராஜபுத்திரர்களும் இருக்கிறார்கள். சாந்தலர்களும் கீழ்ச்சாதியினரும் சோஷலிஸ்டு கட்சியில் சேர்கிறார்கள். ஆனால் அது ஊழல்மிக்க கட்சியாகிறது. பவன்தாஸ் என்ற குள்ளன் காந்தியுடன் இருந்தவன். அவன் மேரிகஞ்சிற்கு வருகிறான். அப்போதுதான் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. அதை மேரீகஞ்சினர் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

காந்தி இறக்கிறார். கிராமத்தினர் துக்கம் கொண்டாடுகின்றனர். பவன்தாஸ், தன் கட்சியின் ஊழல், சாதிப்பற்று இவற்றால் மனம் நொந்து போராடும்போது ஒரு மாட்டுவண்டியின் அடியில் சிக்கி இறக்கிறான். அவன் உடல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தூக்கி வீசப்படுகிறது.

ஒரு நிலச்சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. அதன் அடிப்படையில் நிலவுரிமை கேட்டு சாந்தலர்களும் கிராமவாசிகளும் நீதிமன்றம் செல்கின்றனர். அவர்கள் வழக்குகள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. இடையில் காங்கிரஸ் கட்சி ஜமீன்தாரி முறை ஒழிந்தது என்று அறிவிக்கிறது. கிராமத்து நிலம் ஏலம் விடப்படும்போது பணக்காரர்கள் நிலங்களை வாங்கிக் கொள்கிறார்கள். எங்கும் குழப்பமும் போட்டியும். விஸ்வநாத் பிரசாத் பழைய நிலவுடைமை முறைக்கே மாறுவோம் என்று சொல்லிப் பஞ்சாயத்துக்கு அழைக்கிறான். ஆனால் வன்முறை வெடிக்கிறது. சாந்தலர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். மிச்சம்மீதி இருப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஜோத்கி என்ற பார்ப்பனப் பூசாரி, கீழ்ச்சாதி மக்களால்தான் கலகமும் அமைதியின்மையும் ஏற்பட்டது, டாக்டர்கள் விஷ ஊசிபோட்டு நோயைப் பரப்புகிறார்கள், என்றெல்லாம் பிரசாரம் செய்கிறான். அவனை அனைவரும் நம்புகிறார்கள். டாக்டர் பிரசாந்த் ஊரைவிட்டு ஓடும் நிலை ஏற்படுகிறது. டாக்டர் இல்லாததால் ஜோத்கி ஒரு கைம்பெண்ணைப் பேய்பிடித்தவள் என்று சொல்லிக் கொல்லச் செய்கிறான். இப்படி நாவல் முடிகிறது.

இருந்தாலும் ஒரு உடன்பாட்டு மனநிலையில்தான் நாவல் முடிகிறது. டாக்டரும் விஸ்வநாத்தும் மனம் ஒன்றாகின்றனர். கிராம மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விஸ்வநாத், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து பிகா (ஒரு பிகா என்பது இன்றைய அளவில் 0.619 ஏக்கர்) நிலத்தை தானமாக அளிக்கிறான்.


சூளாமணி

சூளாமணி என்பது தமிழிலுள்ள காப்பியங்களில் ஒன்று. இதைச் சிறுகாப்பியம் என்று வழக்கமாகக் கூறிவந்தாலும், இது சீவக சிந்தாமணி போன்ற பெருங்காப்பியமே என்று இலக்கிய வரலாற்றாசிரியர் மு. அருணாசலம் கூறுவார். இது ஏறத்தாழ கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டிருக்கலாம். சீவக சிந்தாமணியைப் போன்ற காப்பியம் ஒன்று எழுத சமண மதத்திற்கென எழுத வேண்டும் என்ற எண்ணத்தால் இதன் ஆசிரியர் தோலாமொழித் தேவர் இதை எழுதியிருக்கலாம். மதம் சார்ந்த கதைகள் எல்லாம் (இன்றைய திரைப்பட பக்திப் படங்கள் போல) வெறும் அற்புதச் செயல் புனைவும் இறுதியாக இறைவனை அடைதலும் என்ற பண்புகளை மட்டுமே கொண்டவை. அற்புதச் செயல்களைப் போற்றுவது எந்த மதத்திற்கும் நன்மை தருவதன்று. மூடநம்பிக்கையை வளர்க்கவே உதவும்.  

சீவக சிந்தாமணிக்குப் பிற்பட்ட தமிழ்க் காப்பியங்கள் அனைத்தும் இன்றைய திரைப்படக் கதைப் பாணியைக் கொண்டவைதான். அதாவது எல்லாரையும் வெல்லக்கூடிய ஒரு தலைவன் (கதாநாயகன்). அவன் அநீதியை எதிர்த்துச் (!) செய்யக்கூடிய வீரச்செயல்கள். அவனுக்கேற்ற ஓர் அழகான கதாநாயகி. பிறகென்ன? திருமணம். அவ்வளவுதான். ஆனால் சமணக் காப்பியங்கள் இத்துடன் நிற்காமல் அந்த அரசனோ அவனைப் பெற்றவனோ துறவு கொள்வதையும் சம்பிரதாயமாகச் சொல்லுபவை. இருந்தாலும், இந்தக் கதையைச் சற்றே காண்போம்.

சுரமை என்று ஒரு கற்பனை நாடு. அதன் தலைநகர் போதனம் என்ற நகரம். அதை பயாபதி என்ற அரசன் ஆண்டு வருகிறான். அவனுக்கு மிகாபதி, சசி என இரண்டு மனைவியர். இவர்களுக்கு விசயன், திவிட்டன் என்ற குழந்தைகள் பிறக்கின்றனர். இங்கிருந்தே விசயனை பலராமனுடனும், திவிட்டனை கண்ணனுடனும் ஒப்பிடும் ஒரு மோசமான போக்கினை தொடங்கிவைத்துவிடுகிறார் ஆசிரியர். நல்ல வேளை, இவன் கண்ணனைப் போல கீதை உரைக்கத் தொடங்கிவிடவில்லை. ஆனால் கண்ணன் கோவர்தன மலையைத் தூக்கியது போலவே இவனும் ஒரு மலையைத் தூக்குகிறான், கண்ணனைப் போலவே ஆற்றில் குளிக்கும் பெண்களின் உடைகளைக் கவர்ந்து இரசிக்கிறான். சும்மா சொல்லக்கூடாது இந்தியக் காப்பியங்களை! (இதுவும் வடமொழிக் காப்பியத்தின் தழுவல்தான்). அப்புறம் இன்று நித்தியானந்தாக்கள் உருவாகாமல் வான்மீகிகளா வருவார்கள்? புராண கால பலராமனைப் போலவே இந்த விசயனும் எதுவும் செய்வதில்லை.

இது இவ்வாறிருக்க, வித்யாதர நாட்டின் ஒரு பகுதியில் சுவலன சடி என்ற அரசன் ஆண்டுவருகிறான். அவனுக்கு அருக்க கீர்த்தி என்ற மகனும் சுயம்பிரபை என்ற மகளும் உள்ளனர். சுயம்பிரபை பிறந்தபோதே அவள் ஒரு மானிடனை (நம் கதாநாயகனைத்தான்) திருமணம் செய்வாள் என்று ஜோசியன் கூறிவிட்டான். அதற்குச் சான்றாக, திவிட்டன் இன்னும் ஒரு மாதத்தில் ஒரு சிங்கத்தைக் கொல்வான் என்கிறான்.

சடி, தன் ஒற்றர்களை வைத்து திவிட்டன் சிங்கத்தைக் கொல்கிறானா எனக் கண்காணிக்கிறான். இதற்கிடையில் வித்தியாதர நாட்டு வடக்குப் பகுதியில் ஆளும் அச்சுத கண்டன் என்ற அரசன், சுவலன சடி வித்தியாதர மகளை ஒரு மானிடனுக்கு மணமுடித்துத் தருகிறானே என்ற முடிவால் கோபமுற்று, திவிட்டன் நாட்டின்மீது படைகளை ஏவுகிறான். அவற்றை எளிதாக திவிட்டன் வெல்லவே, அவனது அமைச்சன் ஒரு தூதனைச் சிங்க வடிவத்தில் சென்று மக்களைக் கொல்லுமாறு கூற, அவனை திவிட்டன் விரட்ட, அவன் பயந்துபோய் உண்மையான சிங்கம் இருந்த ஒரு குகைக்குள் புகுந்து ஓடிப்போகிறான். குகையிலிருந்து உண்மையான சிங்கம் வெளிவரவும், திவிட்டன் அதன் வாயைப் பிளந்து கொல்கிறான்.

சுவலனசடி ஜோசியன் கூறியது உண்மையே என உணர்ந்து, போதனமாபுரம் வந்து, தன் மகளைத் திவிட்டனுக்குத் திருமணம் செய்கிறான். இப்போது அச்சுவ கண்டன் தன் முழுப் படைகளோடு வந்து தாக்க, போர் நடக்கிறது. போரில் திவிட்டனுக்கு சங்கும் சக்கரமும் (திருமாலின் ஆயுதங்கள்) வந்து தாங்களாகவே பொருந்துகின்றன. கருடன் வந்து வாகனமாக அமைகிறது. கம்சனைக் கண்ணன் அழித்தது போல அச்சுவ கண்டனை திவிட்டன் அழிக்கிறான்.

காலப்போக்கில், சுயம்பிரபைக்கு ஒரு மகனும் மகளும் பிறக்கின்றனர். சுவலனசடியின் மைந்தனான அருக்க கீர்த்திக்கும் ஒரு மகனும் மகளும் பிறக்கின்றனர். உரிய காலத்தில் இவர்களுக்கும் திருமணம் நடக்கிறது.

பயாபதி மன்னனுக்கு வயது மிகுதியாக ஆகிறது. துறவு மேற்கொள்ள வேண்டிய அவன், தன் அமைச்சர்களைக் கேட்கும் கேள்விகள் சிறுபிள்ளைத் தனமாக உள்ளன. கூற்றுவன் (எமன்) எதற்காக வருகிறான்? எதை எடுக்கப் போகிறான்? அவனிடமிருந்து எப்படித் தப்பலாம்? என்றெல்லாம் கேட்கிறான். அவன் அமைச்சர்களோ, “அரசே, எமனிடமிருந்து தப்பும் வித்தையை நாங்கள் கற்கவில்லையே” என்று பதிலளிக்கிறார்கள். பிறகு அரை மனதாக பயாபதி தன் மனைவியரோடு (!) துறவு மேற்கொண்டு உரிய காலத்தில் அருகன் அடி அடைகிறான். விஜயனும் திவிட்டனும் சிறப்பாகத் தங்கள் நாட்டை ஆண்டு வருகின்றனர்.

எவ்விதத் திருப்பமும் அற்ற, நேரான கதை. திவிட்டன் பிறந்தான் – வளர்ந்தான் – பகைவரை வென்றான் – திருமணம் செய்தான் – அரசாட்சி பெற்றான், அவ்வளவுதான்.

இந்தக் காப்பியம் மகாபுராணம் என்ற வடமொழிச் சமணக் காப்பியத்தைப் பின்பற்றி எழுதப்பட்டது என்பர். சமணக் காப்பியங்கள் சிலப்பதிகாரத்தைப் பின்பற்றிச் சுயமான படைப்பில் இறங்கியிருந்தால் நல்ல தமிழ்ப் படைப்புகளை உருவாக்கியிருக்கலாம். புலமை சிறப்பாக இருந்தும் என்ன காரணமோ, இம்மாதிரிப் புலவர்கள் வடமொழியில் இயற்றப்பட்ட மேருமந்தர புராணம், சாந்தி புராணம், நாரத சரிதை போன்ற எண்ணற்ற புராணங்களிலிருந்து தங்கள் கதைகளை எடுத்துக் கொண்டனர். சுயதூண்டலின்றி, உந்துதல் இன்றி, பார்த்துச் செய்ய வேண்டும் என்பது எவ்வளவு மோசமாக அமைந்துவிடும் என்பதற்கு இந்தச் சமணப் புராணங்களைக் கண்டாலே போதுமானது.

இதற்குப்பின் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம் என்ற நூலும் இதே கதையைச் சொல்கிறது. இது தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது. சமணர்களும், இராமானுஜர் வழிவந்த ஸ்ரீவைணவர்களுமே தமிழில் மணிப்பிரவாளம் என்ற போக்கினை உருவாக்கியவர்கள். மதத்தால் மொழிக்கு நேர்ந்த கேடுகளில் இதுவும் ஒன்று.

இப்படித்தான் பத்தாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் வருகை வரை தமிழ்ப் புராணப் படைப்புகள் இருந்தன. விஜயநகரப் பேரரசு வந்த பிறகு அவர்கள் தெலுங்கிற்கு மட்டுமே ஆதரவளித்ததால் புராணங்களும் மறைந்து தமிழில் சிற்றிலக்கியங்கள் மட்டுமே தோன்ற ஆரம்பித்தன என்பது வரலாறு.


விடைபெறுதல் (Farewell to arms)

எர்னஸ்ட் ஹெமிங்வே என்னும் புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியரின் கதை A Farewell to Arms. இவரது மற்றொரு கதையான கடலும் கிழவனும் என்பதைப் படித்திருப்பீர்கள்.

Farewell to Arms 1929இல் வெளியானது. இது சுயசரித்திரக் கதை என்பவர்கள் உண்டு. முதலாம் உலகப் போரில் ஈடுபட்டிருந்த ஒரு போர்வீரன் கதை இது. இன்று முதலாம் உலகப் போரிலிருந்து (1914-18) நூறாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், மூன்றாம் உலகப் போர் போன்ற ஒன்று உக்ரைனில் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தக் கதை பற்றிச் சிந்திப்பது பயனுடையது.

arms என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. கைகள், ஆயுதங்கள். இந்தக் கதை சிலேடையாகவே இந்தச் சொல்லைக் கையாளுகிறது. தழுவிய கரங்களிலிருந்து விடுதலை என்றோ, போரிலிருந்து விடுதலை என்றோ இருவிதமாகவும் இதை மொழிபெயர்க்கலாம். கதையின் இறுதியில் நாயகன் போரின் ஆயுதங்கள், தன்னைத் தழுவிய கைகள் – இரண்டில் இருந்துமே விடைபெறுகிறான். முதல் உலகப் பெரும்போரின் கொடுமைகளைச் சொல்லும் நாவல்களில் இது முதலாவது. இரண்டாம் உலகப் போர் பற்றிய மற்றொரு நாவலான கேட்ச் 22 என்பதைப் பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

1915 கோடைகாலம். முதலாம் உலகப் போர் நடக்கிறது. பிரடெரிக் ஹென்றி, ரோமில் தங்கி கட்டடக்கலை பயிலும் அமெரிக்க மாணவன், இத்தாலியப் படையில் அவனாகத்தான் சேர்கிறான். போரின் வடக்கு முனையில் கோரிஜியா என்ற இடத்திலுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் குழு ஒன்றுக்குத் தலைவனாகிறான். போர் இத்தாலியர்களுக்குச் சாதகமாக இல்லை என்றாலும் அடுத்த ஆண்டில் அவர்கள் ஆஸ்திரிய-ஹங்கேரிப் படையினரை வெற்றி கொள்கிறார்கள். சில நாட்கள் கடும்போருக்குப் பிறகு லீவில் சென்றிருந்து திரும்பும் பிரடெரிக், கேதரின் பார்க்லி என்ற இங்கிலாந்து நாட்டு நர்ஸைக் காண்கிறான். அவள் ஏற்கெனவே நிகழ்ந்த தன் காதல் முறிந்த நிலையில் கவலையோடு இருப்பதாகத் தோன்றுகிறது.

காயம் பட்ட அவனை மிலன் நகர மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறார்கள். அங்கு கேதரீனும் வந்து சேர்கிறாள். அப்போதுதான் அவளைக் காதலிப்பதாக உணர்ந்து அவளிடம் தெரிவிக்கிறான். அவளும் அதை ஏற்கிறாள்.

கேதரீன் அவன் மனைவியாகவே ஆகிவிடுகிறாள். அவனை நன்கு கவனித்துக் காப்பாற்றுகிறாள். கொஞ்சகாலத்திற்குப் பிறகு அவள் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவிக்கிறாள். உடல் குணமான பிறகு இருவரும் ஆறுமாதம் விடுப்பில் செல்லலாம் என்று திட்டமிடுகின்றனர். என்றாலும் அவன் மிகுதியாகக் குடிக்கிறான். கடுமையான தொனியில் நர்ஸுகளிடம் பேசுகிறான். அவன் போக்கு பிடிக்காத மருத்துவமனைத் தலைவி அவனை உடனே விடுவித்துவிடுகிறாள். கோரிஜியாவுக்கே சென்று போர்முனையில் சேர ஆணை வருகிறது. காதலியோடு கொஞ்ச நேரம் இனிமையாகக் கழித்துவிட்டு இருவரும் இனி சந்திப்போமா என்ற ஏக்கத்தில் இருக்கும்போதே ஹென்றி இரயில் ஏறுகிறான்.

இப்போது 1917 கோடை. நிறைய ஆட்கள் இறந்திருப்பதால் படையின் மனநிலை சரியில்லை. நான்கு ஆம்புலன்சுகளை வடக்கில் கேபரெட்டோ நகருக்குக் கொண்டுசெல்லுமாறு இவனுக்கு ஆணை தரப்படுகிறது. செல்லும் வழியில் தாக்கப்படுவதால் இவர்கள் குறுக்குவழி ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓர் ஆற்றைக் கடக்கும்போது சேற்றில் சிக்கிக் கொள்கிறார்கள். இடையில் சேர்ந்துகொண்ட சார்ஜெண்ட் ஒருவன் உதவி செய்ய மறுப்பதால் அவன் ஆட்களுக்கும் இவன் ஆட்களுக்கும் சண்டை நடக்கிறது. இவன் ஒருவனைச் சுட்டுக் கொன்றுவிடுகிறான். இதுதான் அவன் செய்த முதல் கொலை. ஒன்று தப்பியோட வேண்டும் அல்லது கொலைக்காகச் சரணடைய வேண்டும் என்ற நிலையில் பயந்தோடும் பொது மக்களோடு இவனும் சேர்ந்து ஓடுகிறான், பிறகு நதியில் குதித்துவிடுகிறான் நீரிலிருந்து எழும்போது தான் சிப்பாய் என்ற அடையாளத்தை விட்டு சாதாரண மனிதனாக (போர்க்களத்திலிருந்து தப்பியோடிய சிப்பாய் ஆக) எழுகிறான். (Farewell to military arms).

எப்படியோ மிலனுக்குச் சென்று சேர்கிறான். கேதரினைத் தேடிச் செல்கிறான். அவள் ஸ்ட்ரெஸா என்ற இடத்துக்குப் போய்விட்டதாகத் தெரிகிறது. அங்குச் சென்று அவளை அடைகிறான். சில நாட்கள் காதலர்கள் மிக மகிழ்ச்சியாக அங்கு வாழ்கிறார்கள்.

போரிலிருந்து தப்பி வந்தவர்களைக் கைது செய்து இராணுவக் கோர்ட்டில் நிறுத்துவார்கள். அதனால் இவன் கைதுசெய்யப்படும் தருணம் ஏற்படுகிறது. இராணுவத்துக்கு பயந்து ஒரு சிறு படகில் இருவரும் மிக அருகிலுள்ள ஸ்விஸ் நாட்டுக்குத் தப்பிச் செல்கிறார்கள். குளிர்கால விளையாட்டு களுக்காக ஸ்விட்சர்லாந்துக்கு வந்த தம்பதியினர் என்று சொல்லி அங்கு தங்குகிறார்கள்.

ஸ்விஸ் நாடு எந்தப் போரிலும் ஒருபோதும் ஈடுபட்ட நாடு அல்ல. நிரந்தர நடுநிலை நாடு. அதனால் பயமற்று அவர்கள் அங்கே வாழ முடிகிறது.

ஆல்ப்ஸ் மலைகளின்மீது காதலர் இருவரும் மிக மகிழ்ச்சியோடு நடந்தும் ஓடியும் தழுவியும் தங்கள் தனிமையைக் கொண்டாடுகிறார்கள். மலைமுகட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். பிரசவத்துக்கு ஒரு மாதம் முன்புவரை வாழ்க்கை இனிமையோ இனிமை! கேதரினுக்குப் பிரசவகாலம் நெருங்குகிறது. மருத்துவமனைக்கு அருகில் இருப்பது நல்லது என்று பக்கத்திலுள்ள நகரத்துக்குச் சென்று ஒரு தங்கும் விடுதியில் தங்குகிறார்கள்.

பிரசவ வலி ஏற்பட்டபிறகு விஷயங்கள் தாறுமாறாகின்றன. குழந்தை மாலைசுற்றிப் பிறக்கிறது (நஞ்சுக்கொடி உடல் முழுவதும் சுற்றி இறந்து பிறத்தல்). கேதரினுக்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டதால் அவளும் இறந்துவிடுகிறாள். ஃபிரடெரிக் கையற்ற நிலையில் மருத்துவமனையை விட்டு நீங்குகிறான் (Farewell to the hugging arms of the wife).

காதலன் காதலியைச் சந்திக்கிறான்–அவளைக் கை நழுவ விடுகிறான்–ஒன்று சேர்கிறான்–மீண்டும் அவளை இழக்கிறான் என்ற எளிமையான கதைத்திட்டம் கொண்ட கதை இது. ஆனால் இதனை உணர்ச்சிப் பெருக்குடைய ஒரு பெருங்காவியமாக ஆக்கியிருக்கிறார் ஹெமிங்வே. அவரது மற்ற எல்லாக் கதைகளையும் விட இதுவே சிறந்ததாகப் போற்றப் படுகிறது.