ஹாபிட் (Hobbit)

ஜே.ஆர்.ஆர். டோல்கியன் என்பவர் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அற்புதக்கதை எழுத்தாளர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அவரது மோதிரங்களின் தலைவன் (Lord of the Rings), ஹாபிட் (Hobbit) போன்ற நூல்கள் மிக அதிகமாக உலகெங்கும் விரும்பிப் படிக்கப்படுகின்றன. இவற்றில் தனித்ததோர் உலகத்தையும் (middle earth) அதற்கான நிலப்பரப்பையும் பலவேறு இனங்களையும் அவர்கள் பேசும் மொழிகளையும் உருவாக்கிச் சாதனை படைத்துள்ளார். அதில் ஹாபிட் என்ற கதையை இப்போது காண்போம்.

ஹாபிட் என்பவர்கள் குறுமனிதர்கள் எனச் சொல்லக்கூடியதொரு இனம். நம் போன்ற மனிதர்களின் உயரத்தில் பாதிக்கும் குறைவான உயரமே உள்ளவர்கள். வளைகளில் வீடுகட்டி வாழ்பவர்கள். நமது கதாநாயகன் அவர்களில் ஒருவன்- பில்போ பேகின்ஸ் என்பது அவன் பெயர். ஹாபிடன் என்ற ஊரில் அவன் அமைதியாக வசித்துவருகிறான். ஆனால் ஒருநாள் அவனைத்தேடி காண்டால்ஃப் என்ற மந்திரவாதியும், பதின்மூன்று குள்ளர்களும் வருவதனால் அவன் வாழ்க்கையே மாறிப் போகிறது. அவர்களின் தலைவன் தாரின் ஓக்கன்ஷீல்ட் என்பவன். அவன் தாத்தா தனது செல்வத்திற்கான வரைபடத்தையும் சாவியையும் காண்டால்ஃபிடம் தந்து மறைந்துவிட்டார். ஸ்மாக் என்ற டிரேகன் அக்குள்ளர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து அவர்களை விரட்டிவிட்டிருக்கிறது. தங்கள் “கொள்ளையனாக” பில்போ இருக்கும்படி அவர்கள் அழைத்துச் செல்கிறார்கள்.

வழியில் மூன்று ராட்சதர்கள் (ட்ரால்கள்) அவர்களைப் பிடித்துக் கொள்கிறார்கள். காண்டால்ஃப் தந்திரமாக அவர்கள்மீது சூரிய ஒளி படும்படியாகச் செய்து அவர்களைக் கல்லாக்கிவிடுகிறார். பிறகு இந்தக் குழு எல்ஃபுகள் (elfs) எனப்படும் தேவதைகளின் இருப்பிடமான ரிவெண்டலில் தங்குகிறது. அவர்களின் தலைவனான எல்ராண்டின் ஆலோசனைப்படி இவர்கள் மிஸ்டி-மலைகளைக் கடக்கப் புறப்படுகிறார்கள். ஒரு பனிப்புயலின்போது ஒரு குகையில் தங்குகிறார்கள். அப்போது காப்ளின்கள் (goblins) எனப்படும் அருவருப்பான தீங்குயிரிகள் அவர்களைத் துரத்துகின்றன. தப்பியோடும்போது பில்போ பின்தங்கி வழிதவறி மலையின் சுரங்கப்பாதைகளில் மாட்டிக்கொள்கிறான். அப்போது அவனுக்கு வழியில் ஒரு பொன்மோதிரம் கிடைக்கிறது. அதைத் தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறான். உடனே மலையடியில் ஒரு நீர்நிலையில் வசிக்கும் கோலும் (Gollum) என்ற தவளை போன்ற உயிரி அவனைப் பிடித்து உண்ண நினைக்கிறது. அந்த மோதிரமும் அது வைத்திருந்ததுதான். விடுகதை மீது அதற்கு ஆசை. விடுகதை சொன்னால் உனக்கு வழிகாட்டுகிறேன் என்று அது சொல்கிறது. மாறிமாறி விடுகதைகள் போடுகின்றனர். ஆனால் விரைவில் விடுகதை தெரியாமல் பில்போ “என் பாக்கெட்டில் என்ன இருக்கிறது?” என்று நேர்க் கேள்வி கேட்கிறான்.

கோலுமுக்கு விடை தெரியாமல் விழிக்கும்போது, தப்பி ஓடுகிறான் பில்போ. அவனுக்குக் கிடைத்தது ஒரு மாயமோதிரம். அதை அணிபவர்கள் யார் கண்ணுக்கும் தெரியமாட்டார்கள். அதை அணிந்துகொண்டு கோலும் இடமிருந்து தப்பி மலையிலிருந்து வெளியே ஓடி, காண்டால்ஃபையும் குள்ளர்களையும் காண்கிறான். ஆனால் குழுவினரிடம் மாயமோதிரம் பற்றிச் சொல்லவில்லை. அவர்களை வார்குகள்(wargs) எனப்படும் பெருஓநாய்கள் துரத்துகின்றன. அவை காப்ளின்களுக்கு நண்பர்கள். நல்லவேளையாக கருடன்கள் அவர்களைக் காப்பாற்றி அழைத்துச் செல்கின்றன.

பிறகு அவர்கள் பியோர்ன் எனப்படும் கரடிமனிதனைச் சந்தித்து இளைப்பாறுகிறார்கள். அவர்களின் வழி மிர்க்வுட் எனப்படும் இருட்காட்டைக் கடப்பதாக அமைகிறது. காண்டால்ஃப் இச்சமயத்தில் வேறொரு வேலையாகச் சென்றுவிடுகிறார். பியோர்ன் இவர்களைக் காட்டு எல்லை வரை வந்து விடுகிறான். ஆனால் இவர்கள் வழிதவறி, அரக்கச் சிலந்திகளின் வலைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். பில்போ மட்டுமே தன் மோதிரத்தால் சிலந்திகளிடமிருந்து தப்ப முடிகிறது. ஸ்டிங் என்னும் தனது குறுவாள், மோதிரம் இவற்றால் அவர்களை வலைகளிலிருந்து தப்புவிக்கிறான்.

தப்பிய இந்தக் குழுவை எல்ஃபுகள் கைது செய்கிறார்கள். மீண்டும் பில்போ மட்டுமே தன் மாயமோதிரத்தின் உதவியால் சிறையிலிருக்கும் அவர்களை மீட்டு எல்ஃபுகளுக்கு ஒயின் வரும் பீப்பாய்களில் அவர்களை அடைத்து நதியில் மிதக்கவிடுகிறான். பீப்பாய்கள் லேக்டவுன் என்ற மனித-நகரத்தை அடைகின்றன. அதுதான் குள்ளர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து வைத்திருக்கும் டிரேகனின் தனிமை-மலைக்கு (lonely mountain) அருகிலுள்ள ஒரே மானிட நகரம். அங்கு அனைவரும் இளைப்பாறி உதவி பெறுகிறார்கள்.பிறகு மலைக்குச் செல்லும் அக்குழு, மலைக்குள் டிரேகன் ஸ்மாக் வசிப்பதால் பயந்து ஒரு மலைப்பொந்தில் தங்குகிறது. அதனுள் செல்லும் பில்போ செல்வக் குவியலின்மீது படுத்திருக்கும் டிரேகனைக் காண்கிறான். தொடரும் சந்திப்புகளில் அந்த டிரேகனின் தடித்த உடலில் மார்பில் ஒரு பலவீனமான இடம் இருப்பதை அறிகிறான். அவனிடம் குரோதம் கொள்ளும் ஸ்மாக், வேகமாக மலையை விட்டு வெளியேறி, லேக்டவுன்மீது பறக்கிறது. அதன் பலவீன இடத்தை ஒரு பறவை வாயிலாக அறியும் பார்ட் (Bard) என்ற வீரன் தன் அம்பால் அதை மாய்க்கிறான். ஆனால் அதன் தீமூச்சினால் லேக்டவுன் அழிந்து போகிறது.

இடையில் ஸ்மாக் போய்விட்டதால், குள்ளர்கள் மலையைக் கைப்பற்றித் தங்கள் சொந்தச் செல்வத்தைப் பெறுகிறார்கள். லேக்டவுனைச் சேர்ந்த மனிதர்களும் எல்ஃபுகளும் அச்செல்வத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று மலையின் மீது படையெடுக்கிறார்கள். பில்போ அம்மலைச் செல்வத்தில் முக்கியமான ஒரு பெரிய மாணிக்கத்தை-ஆர்க்கன்ஸ்டோன் என்பதைத் திருடிக் கொள்கிறான். அவன் குள்ளர்களுக்குத் தெரியாமல் வெளிவந்து மனிதர்களுக்கு அதை அளித்து போரைக் கைவிட்டுச் சமரசம் செய்து கொள்ளுமாறு சொல்கிறான்.

இச்சமயத்தில் காப்ளின்கள், வார்குகள் உள்ளிட்ட பெரும்படை அவர்களைத் தாக்குகிறது. மனிதர்கள், எல்ஃபுகள், குள்ளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவற்றை எதிர்க்கிறார்கள். ஐந்து சேனைப் போர் எனப்படும் பெரும்போர் நிகழ்கிறது. ஆனால் மனிதர்கள் தோல்வியுறும் நிலை வருகிறது. அப்போது பியோர்னும், கருடன்களும் வந்து அவர்களைக் காப்பாற்றுகின்றனர். பில்போ மோதிரத்தைத் திருடியதைக் குள்ளர்கள் தலைவனான தாரின் மன்னித்துவிடுகிறான், ஆனால் போரில் இறந்து விடுகிறான். போருக்குப் பின் பில்போ ஹாபிடனுக்குத் திரும்பி மகிழ்ச்சியுடன் வாழ முனைகிறான்.

அசாதாரண சம்பவங்கள் நிகழும்போது எப்படிச் சாதாரண மனிதர்களும் நினைக்க முடியாத அளவு பண்பு மாற்றம் அடைகிறார்கள் என்பதை இந்தக் கதை அற்புதமாக எடுத்துச் சொல்கிறது. தனது ஊரில் பில்போ ஒரு வீரம் தேவையற்ற, சாதாரண ஹாபிட், அவ்வளவுதான். ஆனால் கதையிறுதியில் அவன் வீரனாவது மட்டுமல்ல, நற்பண்புகளிலும் வளர்கிறான். பலமுறைகள் குள்ளர்களை அபாயங்களிலிருந்து காப்பாற்றுவதோடு குள்ளர்களுக்கு உயிரான ஒரு பெரிய மாணிக்கத்தையே போர் நிறுத்தத்துக்காக எதிரிகளுக்கு அளிக்கிறான். இறுதியாக அவனுக்குக் கிடைக்கும் பரிசு ஒரு மாயமோதிரம். இதுதான் டோல்கியனின் அடுத்த பெரும்புத்தகமான “மோதிரங்களின் தலைவன்” கதைக்குக் காரணமாக அமைகிறது.


இரகசியத் தோட்டம்

ஃபிரான்சிஸ் ஹாட்ஜ்சன் பர்னெட் என்ற நாவலாசிரியை எழுதிய ஒரு சிறந்த சிறுவர் நாவல் இரகசியத் தோட்டம் (The Secret Garden) ஆகும். அமெரிக்கன் மேகசின் பத்திரிகையில் தொடராக வெளிவந்த அது, பிறகு நூலாக வெளியிடப் பட்டது (1911). ருட்யாட் கிப்லிங், கென்னத் கிரஹாம் போன்றோர் இவரது சமகால ஆசிரியர்கள்.

எவ்விதத் திருப்பங்களும் அற்ற மிக நேரான கதை இது. ஒரு சிறுமி பெற்றோரை இழக்கிறாள்–நண்பர்களைப் பெறுகிறாள்–ஒரு தோட்டத்தைக் காண்கிறாள்–ஒரு பையன் அங்கு அவளோடு இணைந்துகொள்கிறான்–தன் நோயிலிருந்து விடுபடுகிறான்–அவ்வளவுதான்.

இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயப் பெற்றோருக்குப் பிறந்தவள் மேரி  லெனாக்ஸ். அவள் தந்தை பிரிட்டிஷ் படையில் ஓர் அதிகாரி. தாய், அழகானவள், செல்வச் செழிப்பினால் விருந்துகள் தந்தும் தோழிகளுடன் நேரத்தைக் கழித்தும் வந்தவள்.இக்குழந்தை பிறந்தவுடனே ஓர் “ஆயா”விடம் வளர்ந்துவருமாறு அளிக்கப் படுகிறாள். அதனால் இச்சிறுமி ஒரு செருக்குள்ள பெண்ணாக வளர்கிறாள். அவள் விரும்பியதை எல்லாரும் செய்தாக வேண்டும்.

அவள் ஆறு வயதாக இருக்கும் போது, காலரா பரவுகிறது. அதில் அவள் பெற்றோர் இறந்துபோகிறார்கள். முதலில் ஒரு மதபோதகரிடம் வளருமாறு அவள் விடப்படுகிறாள். அந்த ஏற்பாடு ஒத்து வராததால் தன் தாய்மாமனான ஆர்ச்சிபால்ட் கிரேவன் என்பவரிடம் வளருமாறு வடக்கு இங்கிலாந்தில் மிசல்வைத் மேனர் என்ற பெரிய வீட்டுக்கு அவள் அனுப்பப்படுகிறாள்.

அவள் வந்து சேர்ந்தபோது கடுங்குளிர் காலம். அவள் மாமன் அவளைப் பார்க்க விரும்பவில்லை. அவர் ஒரு கூனன் எனத் தெரிகிறது. தன் மனைவி லிலியாஸ் இறந்தபிறகு அந்த வீட்டுக்கு அவர் வருவதைத் தவிர்த்து, ஐரோப்பாவில் பல ஊர்களையும் சுற்றி வருகிறார்.

அந்த வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருக்கிறது. அது அவள் மாமி லிலியாஸ் என்பவளுக்கு விருப்பமான இடம். அவளுக்கு ஓர் ஆண் குழந்தை–காலின். அவன் பிறந்த போது அந்தத் தோட்டத்திலுள்ள ஒரு மரத்திலிருந்து லிலியாஸ் விழுந்து அவன் பிறந்த கையோடு இறந்து விடுகிறாள். அவளை மிகுதியாக நேசித்த கிரேவன், அந்தத் தோட்டம் துரதிருஷ்டத்தின் அடையாளம் எனக் கருதி, அதைப் பூட்டிவைத்து, ஒருவருக்கும் தெரியாதவாறு செய்துவிடுகிறார். அங்கு ஒருவரும் செல்லலாகாது என்றும் கூறிவிடுகிறார். அதனால் அது ஓர் இரகசியத் தோட்டமாகவே இருந்துவருகிறது.

மேரிக்கு அதிர்ஷ்டப் பறவையாகக் கருதப்படும் ராபின் என்ற குருவியின் தொடர்பு கிடைக்கிறது. அதன் உதவியால் தோட்டத்திற்குள் செல்லும் சாவி அவளுக்குக் கிடைக்கிறது. தோட்டத்திற்குள் செல்லும் மேரி, அதைக் களையெடுத்துச் சுத்தம் செய்கிறாள். அவள் பணிப்பெண் மார்த்தா, தன் தம்பி டிக்கனை அறிமுகப் படுத்துகிறாள். அவன் செடிவளர்ப்பில் ஆர்வம் கொண்டவன். அந்த இரகசியத் தோட்டத்தின் செடிகொடிகளை அறிமுகப்படுத்தி அவற்றை வளர்க்கும் முறை பற்றிச் சொல்கிறான். தொடர்ந்து தோட்டத்தைப் பண்படுத்தும் வேலையில் மேரி ஈடுபடுகிறாள். உண்மையில் அந்த வேலை அவளைப் பண்படுத்துகிறது. அதன் வாயிலாக, அவளது சுயநலச் செருக்கு குறைந்து, நற்பண்பு ஏற்படுகிறது.

இந்த மாளிகைக்கு அவள் வந்து சேர்ந்த நாள் முதலாக தினமும் இரவுகளில் அவளுக்கு ஓர் அழுகுரல் கேட்கிறது. தேடும்போது, அது ஏறத்தாழ அவள் வயதுள்ள காலினிடமிருந்து வருவது தெரிகிறது. அவன் தனது மாமன் கிரேவனின் மகன் என்பதை அறிகிறாள். அவன் பிறந்தவுடன் அவனும் தன்னைப் போல அங்கஹீனம் உள்ளவன், நன்கு வாழ இயலாதவன் என்று கருதி அவன் தந்தை அவளைக் கைவிட்டுச் சென்று விடுகிறார். அவனும் நோய்பிடித்த, பலவீனமான, செருக்குள்ள, சக்கர நாற்காலியில் இயங்கும் பையனாக இருக்கிறான். அவனுக்கு அங்க ஹீனம் எதுவும் இல்லாவிட்டாலும் தன்னால் நடக்கமுடியாது என்று நினைத்த அவன் சக்கர நாற்காலியில் இயங்குகிறான். தன்னால் வாழமுடியாது, இறந்து போகப் போகிறோம் என நினைத்து அனைவருக்கும் தொல்லை கொடுத்து வருகிறான். அவனைத் தேற்றி, ஆறுதல் கூறி, தான் கண்டுபிடித்த தோட்டத்தைப் பற்றி மேரி கூறுகிறாள்.

அவர்கள் தோட்டத்தில் நுழையும்போது தோட்டக்காரன் பென் என்பவன் கோபித்துக் கொள்கிறான். வாயில் பூட்டப்பட்டிருந்ததால், அவன் எப்போதாவது சுவரேறிக் குதித்து அங்குள்ள சில ரோஜாச் செடிகளை மட்டும் வளர்த்து வருகிறான். அவன் லிலியாஸுக்கு வேண்டப்பட்டவன். காலினைப் பார்த்து அவன் ஆச்சரியமடைகிறான். “வளைந்த முதுகும் கால்களும் கொண்ட நீ எப்படி இங்கே வந்தாய்” என்று கேட்கிறான். அதைக் கேட்ட காலின் கோபமடைந்து தன் கால்களால் எழுந்து நிற்கிறான். அதன் பிறகு அவனுக்கே ஒரு பெரும் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தான் பிறரைப் போன்று சுயமாக வாழ முடியும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

பிறகு பென், அந்த மூன்று சிறார்களுக்கும் தோட்டத்தைப் பண்படுத்தச் சொல்லித் தருகிறான். காலினும் தன்னைச் செம்மைப் படுத்திக் கொள்ளவும் நோயிலிருந்து விடுபடவும் முனைகிறான். தான் உடல்நலம் பெற்றுவிட்டால் தன் தந்தை தன்னை நேசிப்பார் என்று கருதுகிறான். இந்தச் சிறார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தத் தோட்டத்தைப் பண்படுத்துகிறார்கள். அதன் உரிமையாளரான கிரேவனோ, தன் மனைவியின் ஞாபகங்களின் இருப்பிடமான அந்த வீட்டைத் தவிர்த்துவந்ததோடு, தன் பலவீனமான மகன் இறந்துவிடுவான் என்றும் நினைத்திருக்கிறார்.

ஒரு நாளிரவு தனது தோட்டத்திற்கு வருமாறு மனைவி அழைப்பதாக அவர் கனவு காண்கிறார். அதனால் ஐரோப்பாவிலிருந்து தன் இங்கிலாந்து வீட்டுக்கு ஓடிவந்து தோட்டத்திற்கு வருகிறார். அது முன்போல் மூடியிராமல் திறந்திருப்பதைப் பார்த்து வியப்படைந்து உள்ளே நுழைகிறார். அங்கு அவர் தன் சகோதரி மகளையும், பிற சிறாரையும் காண்கிறார். அவர் மகன் பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதையும் கண்டு ஆச்சரியம் அடைகிறார். தந்தையும் மகனும் ஒன்று சேர்கின்றனர். அவர் உள்பட அனைவரையும் அந்தத் தோட்டம் செம்மைப்படுத்தி, நலமுறச் செய்து விட்டது. படிக்கும் சிறார்களுக்கு நம்பிக்கையை ஊட்டி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நினைத்ததைச் சாதிக்கும் பண்பை அளிக்கின்ற நாவலாக இது இருப்பதால் தொடர்ந்து சிறார்களால் உலகம் முழுவதும் படிக்கப்பட்டு வரும் நூலாக இது உள்ளது.


பரஜன்

பரஜா என்பது ஒரியா மொழியில் கோபிநாத் மோஹாந்தி என்பவர் ஒரிஸாவின் சோட்டாநாகபுரிப் பீடபூமிக் காடுகளில் வசிக்கின்ற மக்களைப் பற்றி எழுதிய நாவல். பரஜா என்பது (தமிழில் பரஜன்) அங்குள்ள காட்டுக்குடிகளில் ஓர் இனத்தவரின் பெயர். ராணா, பல்கர், தொம்பர், கடபர், கோண்டு போன்ற திராவிடப் பழங்குடி இனத்தவர்களின் எச்சங்களே இவர்கள். பரஜா என்ற சொல்லே பறையா என்பது போல ஒலிக்கவில்லையா?

கோபிநாத் மோஹாந்தி 1914இல் கட்டக்கில் பிறந்து 77 வயதில் 1991இல் மறைந்தவர். ஞானபீட விருது பெற்றவர். பத்மபூஷண் விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது.

பரஜா நாவலின் கதை அந்தப் பழங்குடியின மனிதனான சுக்ரு ஜானி என்பவன் பற்றியது. அவன் மனைவி சாம்பரி ஓர் ஆட்கொல்லிப் புலியால் தாக்கப்பட்டு இறந்துவிட்டாள். அவனுக்கு இரண்டு மகன்கள்–மண்டியா, டிக்ரா. இரண்டு மகள்கள்–ஜிலி, பிலி. தன் மகன்களோடு இரவுபகலாகத் தன் நிலத்தில் பாடுபட்டு வருகிறான் சுக்ரு. தன் தந்தை விட்டுச் சென்ற சொத்துகளைத் தன் உழைப்பால் பெருக்கியிருக்கிறான். கதைத் தொடக்கத்தில் அவன் நன்றாகத்தான் இருக்கிறான். தன் வீட்டில் தன் மக்கள் திருமணமாகிப் பல்கிப் பெருகுவதையும் நிலம் விரிவடைவதையும் கனாக் கண்டுகொண்டு அமர்ந்திருக்கிறான். ஆனால் விதி இந்தக் காட்டு மக்களிடம் பலவேறு ரூபங்களில் விளையாடுகிறது. காட்டு அதிகாரிகள் அதில் ஒரு கோர ரூபம்.

பரஜா மக்கள் பயப்படும் ஒரே ஆள்–நகர்ப்புறத்திலிருந்து வருகின்ற காட்டுப் பாதுகாவலன் (ஃபாரஸ்டு கார்டு). விரும்பாத எவரையும் “காட்டு மரங்களை வெட்டினான், காட்டின் பகுதியை எரித்தான், காட்டில் தேன் சேகரித்தான்” என்றெல்லாம் ‘வழக்குப்’ போட்டுப் பழிவாங்கி விடுவான். பரஜா மக்கள் அவனுக்கு ஆண்டுதோறும் உழவுக்காணி (வரி) தரவேண்டும். மற்றபடி அவன் விரும்பும் அனைத்தையும்(!)கூடத் தர வேண்டும்.

இந்த அரசாங்கக் காவலனுக்கு சுக்ருவின் மகள் ஜிலி மீது ஆசை. அதனால் சுக்ரு கோபமடைகிறான். பரஜன்கள் பெண்களைக் கண்போல் காப்பவர்கள். தங்கள் பெண்கள் பிற இனத்தவரோடு உறவுகொள்ளச் சம்மதிக்காதவர்கள். ஒரு கோபமடைந்த பரஜா விலங்கைப் போன்றவன். பரஜா இனத்திற்கு நன்கு கள்ளமற்று உழைக்கவும், காட்டுக் காவலன் போன்ற ஆட்களுக்கு மரியாதை தரவும் தெரியும். ஆனால் தங்கள் மானத்தில் எவனும் கைவைக்கலாகாது. இந்தக் கோபமும் பிடிவாதமும் சுக்ருவின் வாழ்க்கையை முழுவதும் சீரழித்துவிடுகின்றன.

கார்டு, பழிவாங்குவதற்கெனப் பிற நகர்ப்புற அலுவலர்களோடு வருகிறான். சுக்ரு காட்டின் விதிகளைக் கெடுத்துவிட்டான், அனுமதியின்றி மரங்களை வெட்டிவிட்டான் என்று குற்றங்கள் அடுக்கப்படுகின்றன. உண்மையில் மரங்களை வெட்ட காவலனின் வாய்மொழி அனுமதியின்றி வேறு எழுத்து-அனுமதி எதுவும் கிடையாது. இவனை உன் அனுமதிப்பத்திரம் எங்கே என்று கேட்டு அதிகாரிகள் மிரட்டுகின்றனர். காவலன் இவன் புதிதாகப் பெற்ற நிலத்தைப் பிடுங்கிக் கொள்கிறான், எண்பது ரூபாய் தண்டம் (ஃபைன்) விதிக்கிறான். இது அந்த மக்களுக்குச் சுமார் முப்பது மாத வருவாய்க்குச் சமம். அக்காலத்தில் மூன்று ரூபாயில் ஒரு மாதத்தை ஓட்டுபவர்கள் அவர்கள்.

எனவே இவன் தனது மூத்த மகனிடம் குடும்பத்தை விட்டுவிட்டு தானும் தன் இளைய மகனும் நகர்ப்புறத்தில் சாஹுகார் (லேவாதேவிக்காரன், சேட்டு) ராமச்சந்திர பிஷோயி என்பவனிடம் அடிமைகளாகின்றனர். இவர்களை அடிமைகளாக்கிக் கொண்ட போது அந்த லேவாதேவிக்காரனின் ஆழ்ந்த கண்கள் தந்திரத்துடன் கனத்த புருவங்களின்கீழ் பளிச்சிட்டன. இவர்கள் இருவரையும் அடிமைகளாக ஏற்றுக் கொண்டு அவன் காசு தருகிறான். அவன்  வைத்திருக்கும் பத்திரங்கள், ஸ்டாம்புகள், சட்டப்படிவங்கள் எல்லாம் பரஜன் போன்ற பழங்குடிகளுக்குப் புரியாதவை, எட்டாதவை, அவர்களால் வெறுக்கப்படுபவை.

சாஹுகார், இவர்கள் இருவருக்கும் வருடக்கூலி ஐந்து ரூபாய் என்று சொல்கிறான். ஆனால் இவர்கள் வாங்கிய பணத்துக்கு வருடாவருடம் 50% வட்டி தர வேண்டும். இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் இவர்கள் இருவரும் கைநாட்டுகிறார்கள். அந்த சாஹுகாரனின் நிலத்தில் உழைத்து உழைத்து ஓடாகத் தேய்கிறார்கள். இவர்கள் வருமானமோ ஆண்டுக்கு ஐந்து ரூபாய். ஆனால் கொடுக்க வேண்டியது ஆண்டுக்கு 75 ரூபாய். எத்தனை ஜென்மங்கள் உழைத்து இவர்களால் கடனைத் தீர்க்கமுடியும்?

உழைப்பின் சோர்வு தெரியாமலிருக்க இவர்களுக்கு சோற்றுக்கு பதிலாக மஹுவா சாராயம் அளிக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில் இவனது முதல் மகனும் இவன் மருமகனாக வரவேண்டிய மண்டியா என்பவனும் இவர்களுடன் சேர்ந்து அடிமையாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

ஆக வீட்டில் ஆண்துணை எவருமின்றி இரண்டு பெண்கள் ஜிலி, பிலி மட்டுமே தனித்து விடப்படுகிறார்கள். வீட்டில் வருமானமின்றிப் போனதோடு பிறரது ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் ஆளாகிறார்கள். சாஹுகாரிடம் அடிமைகளாகச் சென்றவர்களோ ஆண்டு அறுவடை நேரத்தில்கூட வீட்டுக்குச் செல்ல விடுமுறை அளிக்கப்படவில்லை.

இந்தச் சமயத்தில் சாலைபோடும் ஒப்பந்தக்காரர்கள் எல்லாக் காட்டுப்பகுதி கிராமங்களுக்கும் வேலையாட்களைத் தேடி வருகிறார்கள். ஆண்களுக்கு ஒரு நாள் கூலி மூன்றணா, பெண்களுக்கு இரண்டணா. இவர்களின் கிராமத்துக்கும் வருகிறார்கள். ஜிலி, பிலி இருவரும் அவர்களிடம் சேர்ந்து வயிற்றுக்காக உழைக்க வேண்டியதாகிறது. தங்கள் வீட்டை விட்டுப் புதிய இடம், புதிய உழைப்பு, புதிய புகை நாற்றம்…

நல்ல வேளை, இந்த நிலை சில மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. தன் நிலத்தை சாஹுகாரனிடம் அடகுவைத்துவிட்டு தன்னை விடுவித்துக் கொண்டு சுக்ரு வீட்டுக்கு வருகிறான்.

ஆனால் சாஹுகாருக்கு தன்னிடம் வீட்டைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணம் இல்லை என்பதை சுக்ரு புரிந்துகொள்கிறான். வயது முதிர்ந்த சாஹுகார் அதற்கு பதிலாக இவன் மகள் ஜிலியைக் கேட்கிறான். சுக்ருவுக்குத் தன்மகளைக் கொடுக்க மனமில்லை என்றாலும் இவனது கிராமவாசிகள் உட்பட எல்லாரும் அவனை வலியுறுத்துகிறார்கள். எனவே வேறுவழியின்றி தன் மகளை சாஹுகாருக்குத் திருமணம் செய்து தர வேண்டியிருக்கிறது. இடையில் கோர்ட் வழக்கும் தோற்றுப் போய் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறான் சுக்ரு.

கடைசியாக உயிர் பிழைகக ஒரே வழி–சுக்ரு போய் மருமகன் சாஹுகாரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டியதுதான் என்றாகிறது. அப்படிப்பட்ட எண்ணத்துடன்தான் அவன் புறப்படுகிறான். ஆனால் சாஹுகாரின் வீட்டுக்குச் சென்றவுடனே அவனுக்குள் ஏதோ ஆவேசம் புகுந்துகொள்கிறது. கோபத்தில் கொதித்த அவன் லேவாதேவிக்காரன் காலில் விழுவதற்கு பதிலாக ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவன்மீது விழுந்து அடி அடி என்று அடித்து அவனைக் கொன்றுவிடுகிறான்.

ஏறத்தாழ சினுவா அச்சுபே-யின் Things Fall Apart, பேர்ல் எஸ். பக்கின் The Good Earth  ஆகிய நாவல்கள் ஆப்பிரிக்காவிலும் , சீனாவிலும் நிகழ்ந்த இதே போன்ற விஷயத்தைத்தான் பேசுகின்றன. சோட்டா நாகபுரிப் பீடபூமியிலும் அதையொட்டிய மலைக்காடுகளிலும் கனரக உலோகங்கள் ஏராளமாக இருப்பதால் சுரங்கம் தோண்டுவதற்கென பெருமுதலாளிகள் படையெடுக்கிறார்கள். அவர்களோடு போராடி இந்தக் காட்டுவாசிகள் இப்படித்தான் இன்றுவரை வாழவேண்டியிருக்கிறது. இதை முதன்முதலில் நம் நாட்டுக்குச் சுதந்திரம் வருமுன்பாகவே (1945) பதிவுசெய்த கோபிநாத் பாராட்டுக்குரியவர்.


வீழ்ச்சி

ஆல்பர்ட் காம்யூ அல்ஜீரியாவில் பிறந்த ஃபிரெஞ்சு தத்துவஞானி. இருத்தலியக் கோட்பாட்டாளர். இருத்தலியம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இவரையும் ழான் பால் சார்த்தரையும் கண்டிப்பாகப் படித்தே ஆக வேண்டும்.

1913இல் பிறந்தவர். 1960இல் மறைந்தார். 1957இல் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அந்நியன், காலிகுலா, வீழ்ச்சி என்பன இவரது நாவல்கள். தி மித் ஆஃப் சிசிஃபஸ், அந்நியன் போன்ற படைப்புகளில் இருத்தல் சார்ந்த அபத்தக் கோட்பாட்டினைத் திறம்பட முன்வைத்தவர். இக்கதை, காம்யூவின் நாவலான தி ஃபால் என்பதன் சுருக்கம்.

இதன் நாயகன் கிளமன்ஸ் என்பவன். கதையின் தொடக்கத்தில் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் மெக்சிகோ சிட்டி என்ற மதுஅருந்தகத்தில் ஓர் அறிமுகமில்லாத நபரிடம் ஒரு மதுபானத்தை எப்படி வருவிக்க வேண்டும் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறான். ஏனெனில் அந்த நபருக்கு டச்சு மொழி தெரியவில்லை. பார் காரனோ டச்சு மொழியைத் தவிர வேறு மொழி எதையும் அறியாதவன். ஆக அவனுக்கு உதவ வேண்டி கிளமென்ஸ் முன்வருகிறான். பேச்சினூடாக, அப் புதியவனும் இவனைப் போலவே பாரிஸ்-காரன் என்பது தெரிகிறது.

கிளமென்ஸ், பாரிசில் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞன். அவன் அதிகமாக எடுத்துக் கொள்வது விதவைகள், அநாதைகள் வழக்குகளைத் தான். அதாவது வழக்காட வழியற்ற ஏழைகளுக்கு உதவுகிறான். மேலும், தான் எப்போதும் பிறருக்கு உதவுபவன்–தெருக்களில் புதியவர்களுக்கு வழிகாட்டுவான், பஸ்சில் பிறருக்குத் தனது இருக்கையை வழங்குவான், ஏழைகளுக்குப் பிச்சை அளிப்பான், குருடர்கள் வீதியைக் கடக்க உதவுவான் என்று சொல்லிக் கொள்கிறான். அதாவது “உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்று உலகைப் பார்த்துச்  சொல்லும் ரகம். அதனால் தான் காட்டும் கருணையே தனக்கான பரிசாக விளங்குகின்ற அத்தகைய உயர்ந்த உச்ச நிலையை எய்திவிட்டவன்.

ஒரு நாள் இரவு. தன் இரவுத்தோழியுடன் காலம் கழித்துவிட்டு பான்ட் ராயல் வழியாகத் தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கிறான். அப்போது கருப்பு உடையணிந்த ஒரு பெண்மணி பாலத்திலிருந்து குதிக்கும் நிலையில் இருப்பதைக் காண்கிறான். ஒரு கணம் தயங்கி உதவிசெய்யலாமா என யோசிக்கிறான். பிறகு தன் வழியே செல்கிறான். ஆனால் சில கணங்கள் கழித்து ஓர் உடல் நீரில் விழும் சத்தம் கேட்கிறது. என்ன நடந்தது என்று புரிந்து ஒரு கணம் நிற்கிறான். ஆனால் எதுவும் செய்யவில்லை. கூக்குரலிடும் ஓசை பல முறை கேட்கிறது. பிறகு நீரோட்டத்தில் தேய்ந்து மறைகிறது. ஆனால் இவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தொடர்ந்து நிகழும் அமைதி எல்லையற்று நீடிக்கிறது. “நான் ஓட நினைத்தேன், ஆனால் அசையவும் முடியவில்லை…அதிக லேட்டாகி விட்டது… ரொம்ப தூரம் போய்விட்டது…” என்று சொல்லிக் கொள்கிறான். பிறகு மெதுவாக மழையில் நனைந்தவாறே போய்விட்டான்.

சுயநலமற்று பலமற்றவர்களுக்கும் அதிர்ஷ்டக் கட்டைகளுக்கும் தான் உதவுபவன் என்ற எண்ணம் கிளமென்ஸிடம் இருக்கிறது. ஆனால் இந்தச் சம்பவத்தை அடியோடு புறக்கணித்து விடுகிறான். அவளுக்கு உதவியிருந்தால் தன் சொந்தப் பாதுகாப்பே கேள்வியாகி இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறான்.

பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்தச் சம்பவத்தை அவன் ஏறத்தாழத் தன் ஞாபகத்திலிருந்து அழித்துவிட்டான். மற்றொரு இனிய நாள். தன் கடமைகளைச் சிறப்பாக முடித்துவிட்டான். மேலும் நண்பர்களுடன் ஆளும் வர்க்கத்தின் கடின இதயம் பற்றியும் தலைவர்களின் போலித்தனம் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்தாயிற்று. தனக்குள் முழுமையின் ஒரு புதிய பெரிய பலம் பொங்கி எழுவதை உணர்கிறான். சுய திருப்தியோடு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு பான்ட் ராயல் அருகே திருப்தியாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கிறான். அந்தச் சமயத்தில் அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு பெருஞ்சிரிப்பு கேட்கிறது.

அது ஏதோ முன்பு தன் நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட ஒரு பிரமை என்று நினைக்கிறான். ஆனால் தொடர்ந்து அது நீரிலிருந்து எழுவதுபோலக் கேட்கிறது. அது அதிர்ச்சியூட்டுகிறது. ஏனெனில் பல ஆண்டுகள் முன்பு நீரில் அமிழ்ந்துபோன பெண்ணின் நினைவை அது தெளிவாகக் கொண்டு வருகிறது. தான் தன்னை ஒரு சுயநலமற்ற மனிதனாகப் பாராட்டிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அந்தச் சிரிப்பு எழுந்தது. அது இதயபூர்வமான, நட்புமிக்க, நல்ல சிரிப்பாகவும் இருக்கிறது. அது அவனுக்குள்ளிருந்தே எழும் சிரிப்பு என்பதை அது காட்டுகிறது. தான் ஊதிப் பெருக்கிக் கொண்ட தனது பிம்பத்திற்கும் உண்மையான சுயத்திற்குமான மோதல் தெளிவாகிறது. தனது போலித்தனம் வலியுடன் உணரத்தக்கதாக வெளித்தெரிகிறது.

மூன்றாவதாக ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஒரு சிக்னலில் அவன் தன் காரில் நிற்கும்போது விளக்கு பச்சையாக மாறிய பிறகும் முன்னால் வழியை மறித்திருக்கும் மோட்டார் சைக்கில்காரன் நகர மறுக்கிறான். வாகனத்தை நகர்த்தாதது மட்டுமல்லாமல் இவனை அடிப்பதுபோல மிரட்டவும் செய்கிறான். அவனை அடிப்பதற்காக கிளமென்ஸ் காரைவிட்டு இறங்கியபோது யாரோ ஒருவன், தன் கால்களுக்கிடையில் மோட்டார் சைக்கிலை வைத்திருக்கும் பரிதாபமான ஒருவனை அடிப்பது தவறு என்கிறான். ஆனால் திடீரென்று இவன் எதுவும் செய்வதற்கு முன்னர் அந்த மோட்டார் சைக்கில்காரன் இவனைத் தலையின் பக்கவாட்டில் அடித்துவிட்டு வேகமாகச் சென்று விடுகிறான். செயலற்று விழித்த கிளமென்ஸ், பிறக தான் என்ன செய்திருக்க வேண்டும் என்று யோசிக்கிறான். பொது இடத்தில் தான் அடிக்கப்பட்ட கேவலத்தை நினைத்து, வருத்தப்பட்டாலும், அதைப் பார்த்தவர்கள் அப்போதே மறந்துவிட்டுச் சென்றிருப்பார்கள், அதனால் தனது கெளரவத்திற்கு ஹானி எதுவும் வந்துவிடாது என்று நம்புகிறான்.

இந்த நிலையில் அவனுக்குத் தான் இதுவரை வெற்று கெளரவம், பிறரின் மதிப்பும் ஏற்பும், பிறர்மீதான அதிகாரமும் என்ற இவற்றிற்காகவே வாழ்ந்திருப்பது புலனாகிறது. இதனை உணர்ந்த பிறகு அவனால் முன்போல் எப்படி வாழ முடியும்?

சார்த்தர் இந்த நாவலை “மிகுந்த அழகியல் கொண்டது, ஆனால் மிகக் குறைந்த அளவே புரிந்துகொள்ளப்பட்ட நாவல்” என்று புகழ்ந்துள்ளார். கள்ளமற்ற தன்மை, இருத்தலின்மை, உண்மை ஆகியவை இந்த நாவலின் கருப்பொருள்களாக உள்ளன.


மாபெரும் கேட்ஸ்பி (The Great Gatsby)

The Great Gatsby என்பது ஸ்காட் ஃபிட்ஜெரால்ட் என்ற அமெரிக்க ஆசிரியரின் புகழ் பெற்ற நாவல் மட்டுமல்ல, இன்றுவரை தொடர்ந்து படிக்கப்படும் நாவலும்கூட. ஃபிட்ஜெரால்ட் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இந்த நாவல் 1925இல் வெளியாயிற்று.

1922 கோடையில் நிக் கேரவே என்பவன் மின்னசோடாவிலிருந்து நியூயார்க்கிற்கு பத்திர விற்பனையாளனாகப் பணி புரிவதற்கெனக் குடி பெயர்கிறான். வெஸ்ட்-எக் என்னுமிடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறான். அது புதுப் பணக்காரர்கள் வாழும் பகுதி. அவனுக்கு ஈஸ்ட்-எக் பகுதியுடன் தொடர்பிருக்கிறது. அது பழைய பணக்காரர்கள் வாழுமிடம். இருவிதப் பணக்காரர்களுக்கும் இடையில் மனப்பாங்கிலும் தாங்கள் கொள்ளும் மரியாதையிலும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

அங்கு அவன் உறவினள் டெய்சியும் அவள் கணவன் டாம் பக்கனனும் வசிக்கிறார்கள். டாம், யேல் பல்கலைக்கழகத்தில் நிக்கின் வகுப்புத் தோழனும்கூட. அங்கு ஜார்டன் பேக்கர் என்னும் கோல்ஃப் விளையாட்டுக்காரியை நிக் சந்திக்கிறான். டாம் திருமண உறவுக்கு அப்பால் ஒரு தொடர்பு வைத்திருப்பதாக அவள் சொல்கிறாள். வீட்டுக்குத் திரும்பிய பிறகு நிக் தனது அண்டைவீட்டுக்காரன் ஜே கேட்ஸ்பியைக் காண்கிறான். இருளில் அவன் லாங் தீவுப்பகுதியை நோக்கிக் கையை நீட்டியவாறு தென்படுகிறான். ஆனால் அங்கு பச்சை நிற ஒளியைத் தவிர வேறொன்றும் புலப்படவில்லை.

சிலநாள் கழித்து டாம் நிக்கை நியூ யார்க்கில் ஒரு விருந்திற்கு அழைக்கிறான். வழியில் டாம் தன் தொடுப்புக்காரியான மிர்ட்டில் வில்சன் என்பவளை அழைத்துக் கொள்கிறான். அவள் ஜார்ஜ் வில்சன் என்பவனின் மனைவி. வில்சன் ஒரு ஆட்டோ-கடை நடத்துகிறான், அது ஏழைகள் வாழும் ஆஷ்-வேலி என்ற குப்பை மேட்டுப் பகுதியில் இருக்கிறது.

பார்ட்டியில் மிர்ட்டில் குடித்துவிட்டு டெய்சியைக் கிண்டல் செய்கிறாள். டாம் அவளை முகத்தில் குத்தி மூக்கை உடைத்துவிடுகிறான்.

கேட்ஸ்பி, மிக ஊதாரித்தனமான விருந்துகளைச் சனிக்கிழமை இரவுகள் தோறும் நடத்துகிறான். அதில் ஒன்றில் கலந்துகொள்ளும் நிக், ஜார்டனைச் சந்திக்கிறான். கேட்ஸ்பியையும் நேருக்குநேர் முதன்முதலாகப் பார்க்கிறான். கேட்ஸ்பி, ஜார்டனிடம் தன் அந்தரங்கக் கதையைச் சொல்கிறான். அவன் முதல் உலகப் போருக்கு முன்னாலேயே டெய்சியைச் சந்தித்துக் காதல் கொண்டவன். அவளருகிலேயே இருக்கவும் அவளைக் காண்பதற்காகவுமே அவன் வெஸ்ட்எக் பகுதியில் இந்த மாளிகையை வாங்கியிருக்கிறான். கேட்ஸ்பியின் வேண்டுகோளுக்கிணங்க, டெய்சியுடன் ஒரு சந்திப்பை கேட்ஸ்பி நிகழ்த்த நிக் ஏற்பாடு செய்கிறான். சந்தித்தவுடன் அவர்கள் இருவரின் காதலும் மீண்டும் துளிர்த்து விடுகிறது.

டெய்சியைச் சந்திப்பதற்காகவே சனிக்கிழமை விருந்துகள் நடத்தப் பட்டன. அவளைப் பார்த்துவிட்டதால் கேட்ஸ்பி தன் சனிக்கிழமை விருந்துகளை நிறுத்திவிடுகிறான்.

தன்னுடனும், டாம், ஜார்டனுடனும் நிக்கையும் கேட்ஸ்பியையும் விருந்துக்கு வருமாறு டெய்சி அழைக்கிறாள். அவளுக்கும் கேட்ஸ்பிக்கும் இடையில் உள்ள ஆழ்ந்த அன்பை நிக் அறிகிறான். ஒரு நாள் நியூ யார்க்கிற்கு அனைவரும் செல்கின்றனர். அங்கு பிளாசா ஹோட்டலில் டாமுக்கும் கேட்ஸ்பிக்கும் டெய்சி சம்பந்தாக வாய்ச்சண்டை ஏற்பட்டு விடுகிறது. தன்னை மட்டுமே டெய்சி நேசிப்பதாகவும் அவள் ஒருபோதும் டாமை விரும்பியதில்லை என்றும் கேட்ஸ்பி சொல்கிறான். ஆனால் டெய்சி இருவரையுமே விரும்புவதாகச் சொல்கிறாள். அதனால் கேட்ஸ்பி அதிர்ச்சி யடைகிறான். கேட்ஸ்பி ஒரு கள்ளச்சாராயக்காரன் என்றும் அதனால்தான் பணம் சேர்த்தான் என்றும் டாம் இழிவுபடுத்துகிறான். பிறகு டெய்சியை கேட்ஸ்பியுடன் அனுப்பிவிடுகிறான். சற்று நேரம் கழித்து டாம், நிக், ஜார்டன் எல்லாரும் கிளம்புகின்றனர்.

டாம் கேட்ஸ்பி அளவுக்குப் பணக்காரன் அல்ல என்றாலும் அவனிடம் குலப்பெருமை அளவுக்குமீறி இருக்கிறது. கேட்ஸ்பி ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவன். எப்படியாவது முன்னேற வேண்டும், பணம் சேர்க்க வேண்டும், குறிப்பாக டெய்சியை அதைக் கொண்டு அடைய வேண்டும் என்னும் எண்ணம் படைத்தவனாக இருக்கிறான். டாமிடம் இல்லாத உண்மையும் நேர்மையும் காதலும் கேட்ஸ்பியிடம் இருக்கின்றன.

அவர்கள் வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஒரு விபத்து நேரிடுகிறது. மிர்ட்டில் ஒரு காரில் அடிபட்டு இறந்துவிடுகிறாள். தங்களுக்கு முன் சென்ற கேட்ஸ்பிதான் காரைச் செலுத்தியவன், தன் காதலி மிர்ட்டில் மீது மோதியவன் என்று டாம் நினைக்கிறான். கேட்ஸ்பி யிடமிருந்து டெய்சிதான் உண்மையில் காரைச் செலுத்தி வந்தவள், மிர்ட்டில்மீது மோதியவள் என்று நிக்கிற்குத் தெரியவருகிறது. ஆனால், பழியைத் தான் ஏற்றுக்கொள்ள கேட்ஸ்பி தயாராக இருக்கிறான்.

ஜார்ஜ் வில்சன் தன் மனைவி மீது காரைச் செலுத்தியவன் கேட்ஸ்பி என்று நினைத்துப் பழிவாங்க நினைக்கிறான். அதனால் கேட்ஸ்பியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறான். மாலையில் நிக் செல்லும்போது இருவர் பிணங்களையும் காண்கிறான்.

டெய்சியும் டாமும் வேற்றிடத்திற்கு ஓடிவிடுகின்றனர். கேட்ஸ்பியின் இறுதிச் சடங்கைக் கூட நிக் மட்டுமே ஏற்பாடு செய்யவேண்டியதாகிறது. கேட்ஸ்பியின் பணக்கார நண்பர்கள்–அவன் அளித்த விருந்துகளில் கலந்துகொண்டவர்கள்-அதுவரை அவனைக் கொண்டாடியவர்கள் ஒருவரும் ஈமச் சடங்கிற்கு வரவில்லை. கேட்ஸ்பியின் தந்தையும் வேறொருவரும் மட்டுமே சடங்கில் பங்கேற்கின்றனர்.

ஜார்டனுடன் நிக் உறவை முறித்துக்கொள்கிறான். அடுத்த முறை  டாமை அவன் சந்திக்கும்போது ஜார்ஜிடம் மிர்ட்டிலைக் கொன்றவன் கேட்ஸ்பி என்று “போட்டுக் கொடுத்தவன்” டாம்தான் என்று தெரியவருகிறது. உண்மையில் மிர்ட்டில் மீது கார் ஏற்றிக் கொன்றவள் டெய்சிதான் என்ற உண்மையை நிக் அவனிடம் கூறவேயில்லை.

நியூ யார்க் வாழ்க்கையின் இசைகேடான நிலை, வெறுமை ஆகியவற்றை ஆழ்ந்து உணரும் நிக், திரும்ப மின்னசோட்டாவுக்கே போக முடிவுசெய்கிறான். அதற்கு முன்னாளிரவு முன்பு கேட்ஸ்பி நின்றவாறு லாங் தீவைப் பார்த்த இடத்தில் சென்று நோக்குகிறான். அமெரிக்காவின் முதல் குடியேறிகளுடன் கேட்ஸ்பியை ஒப்பிட்டுப் பார்க்கிறான். அவர்களுக்கும் மேற்கத்தியக் கனவு என ஒன்று இருந்தது. பழமையின் நீரோட்டத்தை எதிர்த்து முன்னோக்கிச் செல்லும் படகுகளைப் போல, கேட்ஸ்பியைப் போல, பரந்து விரிந்த கைகளுடன் எல்லாரும் எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டியதுதான் போலும் என்று எண்ணுகிறான். கேட்ஸ்பிக்கு எப்படியாயினும் தன் கனவுகளை நனவாக மாற்றும் சக்தி இருந்தது என்றாலும், “எல்லாருமே அவரவர் பாணியில் (குறிப்பாகப் பணம் சேர்ப்பதில்) வெற்றி பெற்றாக வேண்டும்” என்ற “அமெரிக்கக் கனவு” முடிவுக்கு வந்ததைப் போல, கேட்ஸ்பியின் கனவும் முடிவுக்கு வந்துவிட்டது.


கறை படிந்த எல்லைநிலம்

டாக்டர் பனீஸ்வரநாத் ரேணுவின் மைலா ஆஞ்சல் (கறைபடிந்த எல்லைப்பகுதி) என்பது இந்தியில் எழுதப்பட்ட முக்கிய நாவலாகும். பிரேம்சந்தின் கோதான் நாவலுக்கு அடுத்த நிலையில் இந்தியில் இரண்டாவது சிறந்த படைப்பாக வைத்து இது எண்ணப்படுகிறது. இந்த நாவலில் காணப்படும் அளவுக்குச் சாதி வெறியும் ஆணவக் கொலைகளும் தமிழகத்தின் தென் பகுதியில் காணப்பட்டாலும், இதே அளவுக்குச் சாதிப் பிளவுகளை, பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். சுமார் 200க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ள இந்த நாவலில் சாதிக்கு அப்பால் இயங்காதவர்கள் அபூர்வம்

.இது மைதிலி நாவல். மைதிலி இந்திய தேசிய மொழிகளில் ஒன்றாக தனியாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இதை இந்தி நாவல் என்றே சொல்வது மரபாக உள்ளது. மிதிலைப் பகுதியில் (பிஹார் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதி) பேசப்படும் மொழி மைதிலி. இது ஒரு வட்டார நாவல். இந்த நாவல் 1950களின் தொடக்கத்தில் வெளிவந்தது.

இந்திய சுதந்திரம் கிடைத்த வேளையில் மிதிலை நாட்டார் கதைகளையும் பாடல்களையும் பலவிதக் காதல்கதைகளையும்  கிராமப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டது இந்த நாவல். இதனால் கிராமப்புற வட இந்தியாவின் ஓர் அரிய சித்திரம் நமக்குக் கிடைத்துள்ளது. இது ஒரு தனிமனிதனின் கதையோ குடும்பத்தின் கதையோ அல்ல. ஒரு கிராமத்தின் கதை. எனவே இதில் தொடர்ச்சியான சிறுசிறு சம்பவங்கள் மட்டுமே உள்ளன. டாக்டர் பிரசாந்த்-கமலா, பாலதேவ்-லட்சுமி, காளிசரண்-மங்கலாதேவி, கலாசி-பூலியா என்ற நான்கு காதல் கதைகள் உள்ளன.

பிஹாரின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மேரீகஞ்ச் என்ற கிராமத்தில் கதை நிகழ்கிறது. 1946இல் இங்குள்ள ஆஸ்பத்திரியில் பிரசாந்த் குமார் என்ற லட்சிய பூர்வ டாக்டர் மலேரியா, காலாஅஜார் போன்ற நோய்களை குணப்படுத்த வருகிறான். கிராம மக்கள் அவனை மதிக்கின்றனர். (இவன் பூர்வகதை விரிவாகச் சொல்லப் பட்டுள்ளது. இவன் ஓர் அநாதைக் குழந்தை. பெற்றவள் கோசி ஆற்றில் போட்டுவிட்டுப் போய்விடுகிறாள். ஒரு நேபாளி பிராமணக் குடும்பம் தங்களது ‘ஆதர்ச ஆசிரமத்தில்’ இவனை விடுகிறது. அதை ஸ்நேகமயி என்பவள் மேற்பார்வை செய்கிறாள். அவள் வளர்ப்பினாலும் உதவியாலும் இவன் மெட்ரிகுலேஷன் படித்த பிறகு வாராணசிக்கு மருத்துவம் படிக்க வருகிறான். முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிப்பவன், ஒத்துவராமல் பிறகு பட்னா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்கிறான். பிறகு கிராமப்புற மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய லட்சியத்துடன் இந்த மூலைமுடுக்கு கிராமத்துக்கு வருகிறான்.) இந்த டாக்டர் ‘பாபு’ நோய்களை மட்டுமல்ல, மக்களின் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது.

தாசில்தார் விசுவநாத் பிரசாத்தின் மகள் கமலாவை அவன் குணப் படுத்தும்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. கமலா கருவுறுகிறாள். இடையில் பிரசாந்த் ஒரு கம்யூனிஸ்ட் எனக் கைது செய்து பிறகு விடுவிக்கப்படுகிறான். கமலாவுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. நீலோத்பல் என்று அவனுக்குப் பெயர் வைக்கப்படுகிறது.

பாலதேவ் ஓர் இடையன் (யாதவ்). காங்கிரஸ் கட்சிக்காரன். அருகிலுள்ள பூர்னியா நகரைச் சேர்ந்தவன். அவன் அழகான தூய இந்தியில் காந்தியத்தைப் பேசுகிறான். ஆனால் அவன் பேசும் இந்தி இந்த மக்களுக்குப் புரியாத ஒன்று. இந்த கிராம மக்களை வைத்து ஒரு சுதந்திர ஊர்வலம் நடத்துகிறான். மஹந்த் சேவாதாஸ் என்பவன் கபீர் மடம் என்ற ஒன்றை நடத்துகிறான். அதில் வேலை செய்யும் லட்சுமி என்பவளை வைத்திருக்கிறான். ஆனால் அவள் வேலையைவிட்டு பாலதேவுடன் வாழச் செல்கிறாள்.

காளிசரண் என்பவனும் இடைச்சாதிதான். அவன் சிறந்த மல்யுத்த வீரன். அவன் காங்கிரஸ் கட்சியை விட்டு சோஷலிஸ்ட் கட்சிக்கு மாறி, உழைப்பாளர்கள், சாந்தலர்கள் ஆகியோரை வைத்து ஓர் அமைப்பைக் கட்டுகிறான். சர்க்காவில் நூற்கும் மங்கலா தேவி என்ற ஆசிரியையைக் காதலிக்கிறான். ஆனால் சோஷலிஸ்டுகள் கைதுசெய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகிறான்.

கலாசி என்பவன் ஒரு ஓஜா. மந்திரவாதி. நன்றாகப் பாடுபவன், நன்றாக கஞ்சிரா வாசிக்கிறான். தத்மா பகுதியின் பூலியா என்ற பெண்ணைக் காதலித்து மிகுந்த முயற்சிக்குப் பின் மணக்கிறான்.

கிராம மக்கள் சாதிக்கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது, ஆண்களைப் பெண்கள் எதிர்த்துப் பேசக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளனர். உதாரணமாக மஹந்த் முழு கிராமத்துக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்கிறான்.

*பிராமணர்கள்- எங்களுக்குத் தனியான சிறப்பிடம் ஒதுக்கப்படாவிட்டால் சாப்பிடமாட்டோம்

*சிப்பாய்கள்- நாங்கள் நாட்டுக்காக போராடியவர்கள். மற்றவர்களுடன் சரிசமமாக உண்ண எங்களால் முடியாது.

*ஹிபரன் சிங்- எங்கள் சாதியினர் மாடுமேய்ப்பவர்களுடன் சமமாக அமர்ந்து உண்ணமாட்டார்கள்.

*யாதவர்கள்- தானுக்குகளுடன் சமமாக அமர்ந்து யாதவர்கள் உண்ணமாட்டார்கள்.

விருந்து எவ்வளவு நன்றாக நடந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

இடையில் மஹந்த் சேவாதாஸ் இறக்க, காசியிலிருந்து வரும் ஒருவன் மஹந்த் ஆக முயலுகிறான். அங்கேயே பணியில் இருந்த ராமதாஸை காளிசரண் மஹந்த் ஆக்குகிறான். அவன் வைப்பாட்டியாக ராம்பியாரி என்பவள் தன் குழந்தைகளுடன் அந்த மடத்திலேயே வசிக்கிறாள்.

மாறிவரும் காலத்தை தாசில்தார் விஸ்வநாத் உணர்கிறான். அவன் செல்வாக்கும் சரிகிறது. தன் பதவியைத் துறந்து காங்கிரஸ் உறுப்பினன் ஆகிறான். இடையில் ஓர் இந்துத்துவ கும்பல் (கருந் தொப்பிக்காரர்கள்) நிலைபெற முயல்கிறது. அதன் தலைவனாக ராம் கிர்பால் சிங்கும் அவனைச் சேர்ந்த ராஜபுத்திரர்களும் இருக்கிறார்கள். சாந்தலர்களும் கீழ்ச்சாதியினரும் சோஷலிஸ்டு கட்சியில் சேர்கிறார்கள். ஆனால் அது ஊழல்மிக்க கட்சியாகிறது. பவன்தாஸ் என்ற குள்ளன் காந்தியுடன் இருந்தவன். அவன் மேரிகஞ்சிற்கு வருகிறான். அப்போதுதான் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. அதை மேரீகஞ்சினர் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

காந்தி இறக்கிறார். கிராமத்தினர் துக்கம் கொண்டாடுகின்றனர். பவன்தாஸ், தன் கட்சியின் ஊழல், சாதிப்பற்று இவற்றால் மனம் நொந்து போராடும்போது ஒரு மாட்டுவண்டியின் அடியில் சிக்கி இறக்கிறான். அவன் உடல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தூக்கி வீசப்படுகிறது.

ஒரு நிலச்சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. அதன் அடிப்படையில் நிலவுரிமை கேட்டு சாந்தலர்களும் கிராமவாசிகளும் நீதிமன்றம் செல்கின்றனர். அவர்கள் வழக்குகள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. இடையில் காங்கிரஸ் கட்சி ஜமீன்தாரி முறை ஒழிந்தது என்று அறிவிக்கிறது. கிராமத்து நிலம் ஏலம் விடப்படும்போது பணக்காரர்கள் நிலங்களை வாங்கிக் கொள்கிறார்கள். எங்கும் குழப்பமும் போட்டியும். விஸ்வநாத் பிரசாத் பழைய நிலவுடைமை முறைக்கே மாறுவோம் என்று சொல்லிப் பஞ்சாயத்துக்கு அழைக்கிறான். ஆனால் வன்முறை வெடிக்கிறது. சாந்தலர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். மிச்சம்மீதி இருப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஜோத்கி என்ற பார்ப்பனப் பூசாரி, கீழ்ச்சாதி மக்களால்தான் கலகமும் அமைதியின்மையும் ஏற்பட்டது, டாக்டர்கள் விஷ ஊசிபோட்டு நோயைப் பரப்புகிறார்கள், என்றெல்லாம் பிரசாரம் செய்கிறான். அவனை அனைவரும் நம்புகிறார்கள். டாக்டர் பிரசாந்த் ஊரைவிட்டு ஓடும் நிலை ஏற்படுகிறது. டாக்டர் இல்லாததால் ஜோத்கி ஒரு கைம்பெண்ணைப் பேய்பிடித்தவள் என்று சொல்லிக் கொல்லச் செய்கிறான். இப்படி நாவல் முடிகிறது.

இருந்தாலும் ஒரு உடன்பாட்டு மனநிலையில்தான் நாவல் முடிகிறது. டாக்டரும் விஸ்வநாத்தும் மனம் ஒன்றாகின்றனர். கிராம மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விஸ்வநாத், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து பிகா (ஒரு பிகா என்பது இன்றைய அளவில் 0.619 ஏக்கர்) நிலத்தை தானமாக அளிக்கிறான்.


மரணப்படுக்கையில் நான் கிடந்த வேளையில்

“மரணப்படுக்கையில் நான் கிடந்த போது” (As I lay dying) என்பது அமெரிக்க நவீனத்துவ எழுத்தாளர்களில் சிறந்தவராகக் கருதப்படும் வில்லியம் ஃபாக்னர் எழுதிய நாவல் (1930). இவரது மற்றொரு புகழ்பெற்ற நாவல் The Sound and the Fury. As I lay dying நாவலைவிட அது செறிவானதாகவும் கடினமானதாகவும் கருதப்படுகிறது.

As I lay dying பாதி வேடிக்கையும் பாதி வேதனையுமாகச் செல்கின்ற விசித்திரமான நாவல். இதன் சம்பவங்கள் நினைத்துப் பார்க்கும்போது “இப்படியெல்லாம் நிகழக்கூடுமா” என வேடிக்கையாகவும் இருக்கின்றன. அவற்றின் அடியாக இருக்கின்ற பல்வேறு கவலைகள், வறுமை, நல்ல பண்புகள், மோசமான தீய மனநிலைகள் ஆகியவற்றை நினைத்துப் பார்க்கும்போது வேதனையாகவும் உள்ளன. நாவலில் வரும் கதாபாத்திரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. இவற்றிற்கிடையிலும் இறந்த மனைவியைப் புதைத்தவுடனே தன் அடுத்த மனைவியை அறிமுகப் படுத்துகின்ற குடும்பத் தலைவனின் மனநிலை பிரமாதம்!

இந்த நாவலில் 59 பகுதிகள் உள்ளன. அவை பதினைந்து கதாபாத்திரங்களால் எடுத்துரைக்கப்படுகின்றன. முதல் பகுதி டார்ல் பண்ட்ரனால் சொல்லப்படுகிறது. அவனது சகோதரர்கள் கேஷ், ஜுவல். நாவலின் தொடக்கத்தில் இவர்களின் தாய் அடீ பண்ட்ரன் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். சில நாட்களில் இறந்துவிடுவாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழைக் குடும்பம். 1920களின் காலம். குடும்பத்தில் கொடிய வறுமை.

அடுத்த சில பகுதிகளில் அன்சே (அவர்களின் தகப்பன்), சிறிய தம்பி வர்தமான் (சுமார் 7 வயது சிறுவன்), டூயி டெல் என்ற தங்கை (17 வயது) யாவரும் அறிமுகமாகின்றனர். கேஷ் ஒரு நல்ல தச்சன். தன் தாய்க்கான சவப்பெட்டியை அவள் அடுத்த அறையின் ஜன்னலில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே செய்து முடிக்கிறான். ஜுவலும் டார்லும் வெறும் மூன்று டாலர் ஊதியம் கிடைக்கும் ஒரு வேலைக்காக வெர்னான் என்ற நகருக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள் திரும்பிவருவதற்குள் அடீ இறந்து விடுகிறாள். அவள் இறந்த இரவு பெரும் புயல், மழை.

அவளது கடைசி ஆசை ஜெஃபர்சன் என்ற தன் சொந்த ஊரில் புதைக்கப்பட வேண்டும் என்பது. 15 மைல் தொலைவு என்றாலும் இந்த ஊரிலிருந்து அதற்குச் சரியான பாதை இல்லை. இருந்தாலும் இறந்தவளின் இறுதி ஆசைக்கு மதிப்புக் கொடுத்து ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ளப் படுகிறது.

குடும்பம் அடீயின் சவத்தை ஒரு மாட்டு வண்டியில் வைத்து ஜெஃபர்சனுக்குப் பிரயாணத்தைத் தொடங்குகிறது. பல சமயங்களில் உணவின்றியும், ஆங்காங்கு தானியம் அடிக்குமிடங்கள் போன்ற இடங்களில் தங்கியும் செல்கிறது.

ஏற்கெனவே கேஷின் கால் உடைந்திருக்கிறது. டெல் திருமணமாகாமலே கர்ப்பமாக இருக்கிறாள். மோசமான வானிலை. மீண்டும் கேஷின் கால் உடைந்து விடுகிறது. வழியில் வெள்ளம் பெருகிய ஆற்றைக் கடக்கும்போது வண்டிமாடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. மற்றவர்களும் அநேகமாக மூழ்கிவிடுகின்றனர். ஆற்றில் சவப்பெட்டி ஏறத்தாழ அமிழ்ந்தே போகிறது. வர்தமான் ஆற்றில் பார்க்கும் மீனும் செத்துப்போன தன் தாயும் ஒன்று என்று  நினைத்துக் கொள்கிறான். இருப்பினும் வண்டியையும், பிறரையும், சவப் பெட்டியையும் ஜுவல் ஒருவனே தன்னந்தனியனாகக் காப்பாற்றுகிறான். ஜுவல் ஒரு குதிரை வைத்திருக்கிறான். அதன்மீது அவனுக்கு அளவற்ற அன்பு.

அடீயின் பழைய கதை அவளாலேயே சொல்லப்படுகிறது. விட்ஃபீல்டு என்ற மதகுருவின் தொடர்பில் பிறந்த ஜுவல்மீது மட்டும் அவளுக்குப் பாசம். அவன்தான் தன்னைக் காப்பவன் என்கிறாள். ஆனால் தனது பிற நேரிய பிள்ளைகள்மீது பாசம் கிடையாது.

கேஷின் காலை சரிப்படுத்த அதன்மீது சிமெண்டை ஊற்றுகிறான் அன்சே. ஜுவலின் குதிரையை அவனுக்குத் தெரியாமல் விற்று வண்டிமாடுகள் வாங்குகிறான். பல ஊர்கள் வழியாக இந்த ஊர்வலம் செல்லவேண்டி யிருக்கிறது. சவப்பெட்டியிலிருந்து வரும் துர்நாற்றம் தாங்க முடியாததாக இருக்கிறது. மக்கள் அவர்களை வெறுக்கிறார்கள். தங்க இடமும் தருவதில்லை.

கடைசி இரவில் ஜில்லஸ்பீ என்பவனின் பண்ணையில் தங்குகிறார்கள். டார்ல் நாற்றமடிக்கும் பிணத்தை எரித்துவிடலாமென்று அங்கிருந்த வைக்கோல் முதலியவற்றைக் கொளுத்திவிடுகிறான். ஆயினும் ஜுவல் எப்படியோ சவப்பெட்டியைத் தீயிலிருந்து காப்பாற்றிவிடுகிறான்.

ஜெஃபர்சன் ஊருக்கு குடும்பம் வந்து சேர்கிறது. டூயி டெல் தன் கருவைக் கலைக்க மாத்திரை வாங்குவதற்காக முன்பின்தெரியாத ஒருவனுடன் உறவு கொள்கிறாள். ஆனால் அது கருக்கலைப்பு மாத்திரை அல்ல, வெறும் முகப்பவுடர் என்று பின்னால் தெரிகிறது. அவளது பணத்தை அவள் அப்பன் அன்சே தனக்குப் பல்செட் வாங்குவதற்காக எடுத்துக் கொண்டு போய்விடுகிறான். ஊரின் டாக்டர் கேஷின் உடைந்த காலின்மீது சிமெண்ட் ஊற்றியதால் அது அழுகிப்போய்விட்டது என்கிறார். ஜிலெஸ்பீ பண்ணையை டார்ல் கொளுத்தியதற்காக தண்டனையிலிருந்து தப்ப அவன் மனநிலை பிறழ்ந்தவன் என்று பொய் சொல்லவேண்டிவருகிறது. அவனை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்கின்றனர். அன்சே அடீயின் உடலைப் புதைக்கிறான். குழிதோண்டுவதற்கு கடப்பாறை, மண்வெட்டி முதலியவற்றை ஒரு பெண் கடனாக அளிக்கிறாள். அவளோடு அன்சே காதலில் ஈடுபடுகிறான். தன் பிள்ளைகளுக்கு அவளைத் தன் புது மனைவி என்று அறிமுகம் செய்கிறான்.


விடைபெறுதல் (Farewell to arms)

எர்னஸ்ட் ஹெமிங்வே என்னும் புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியரின் கதை A Farewell to Arms. இவரது மற்றொரு கதையான கடலும் கிழவனும் என்பதைப் படித்திருப்பீர்கள்.

Farewell to Arms 1929இல் வெளியானது. இது சுயசரித்திரக் கதை என்பவர்கள் உண்டு. முதலாம் உலகப் போரில் ஈடுபட்டிருந்த ஒரு போர்வீரன் கதை இது. இன்று முதலாம் உலகப் போரிலிருந்து (1914-18) நூறாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், மூன்றாம் உலகப் போர் போன்ற ஒன்று உக்ரைனில் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தக் கதை பற்றிச் சிந்திப்பது பயனுடையது.

arms என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. கைகள், ஆயுதங்கள். இந்தக் கதை சிலேடையாகவே இந்தச் சொல்லைக் கையாளுகிறது. தழுவிய கரங்களிலிருந்து விடுதலை என்றோ, போரிலிருந்து விடுதலை என்றோ இருவிதமாகவும் இதை மொழிபெயர்க்கலாம். கதையின் இறுதியில் நாயகன் போரின் ஆயுதங்கள், தன்னைத் தழுவிய கைகள் – இரண்டில் இருந்துமே விடைபெறுகிறான். முதல் உலகப் பெரும்போரின் கொடுமைகளைச் சொல்லும் நாவல்களில் இது முதலாவது. இரண்டாம் உலகப் போர் பற்றிய மற்றொரு நாவலான கேட்ச் 22 என்பதைப் பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

1915 கோடைகாலம். முதலாம் உலகப் போர் நடக்கிறது. பிரடெரிக் ஹென்றி, ரோமில் தங்கி கட்டடக்கலை பயிலும் அமெரிக்க மாணவன், இத்தாலியப் படையில் அவனாகத்தான் சேர்கிறான். போரின் வடக்கு முனையில் கோரிஜியா என்ற இடத்திலுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் குழு ஒன்றுக்குத் தலைவனாகிறான். போர் இத்தாலியர்களுக்குச் சாதகமாக இல்லை என்றாலும் அடுத்த ஆண்டில் அவர்கள் ஆஸ்திரிய-ஹங்கேரிப் படையினரை வெற்றி கொள்கிறார்கள். சில நாட்கள் கடும்போருக்குப் பிறகு லீவில் சென்றிருந்து திரும்பும் பிரடெரிக், கேதரின் பார்க்லி என்ற இங்கிலாந்து நாட்டு நர்ஸைக் காண்கிறான். அவள் ஏற்கெனவே நிகழ்ந்த தன் காதல் முறிந்த நிலையில் கவலையோடு இருப்பதாகத் தோன்றுகிறது.

காயம் பட்ட அவனை மிலன் நகர மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறார்கள். அங்கு கேதரீனும் வந்து சேர்கிறாள். அப்போதுதான் அவளைக் காதலிப்பதாக உணர்ந்து அவளிடம் தெரிவிக்கிறான். அவளும் அதை ஏற்கிறாள்.

கேதரீன் அவன் மனைவியாகவே ஆகிவிடுகிறாள். அவனை நன்கு கவனித்துக் காப்பாற்றுகிறாள். கொஞ்சகாலத்திற்குப் பிறகு அவள் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவிக்கிறாள். உடல் குணமான பிறகு இருவரும் ஆறுமாதம் விடுப்பில் செல்லலாம் என்று திட்டமிடுகின்றனர். என்றாலும் அவன் மிகுதியாகக் குடிக்கிறான். கடுமையான தொனியில் நர்ஸுகளிடம் பேசுகிறான். அவன் போக்கு பிடிக்காத மருத்துவமனைத் தலைவி அவனை உடனே விடுவித்துவிடுகிறாள். கோரிஜியாவுக்கே சென்று போர்முனையில் சேர ஆணை வருகிறது. காதலியோடு கொஞ்ச நேரம் இனிமையாகக் கழித்துவிட்டு இருவரும் இனி சந்திப்போமா என்ற ஏக்கத்தில் இருக்கும்போதே ஹென்றி இரயில் ஏறுகிறான்.

இப்போது 1917 கோடை. நிறைய ஆட்கள் இறந்திருப்பதால் படையின் மனநிலை சரியில்லை. நான்கு ஆம்புலன்சுகளை வடக்கில் கேபரெட்டோ நகருக்குக் கொண்டுசெல்லுமாறு இவனுக்கு ஆணை தரப்படுகிறது. செல்லும் வழியில் தாக்கப்படுவதால் இவர்கள் குறுக்குவழி ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓர் ஆற்றைக் கடக்கும்போது சேற்றில் சிக்கிக் கொள்கிறார்கள். இடையில் சேர்ந்துகொண்ட சார்ஜெண்ட் ஒருவன் உதவி செய்ய மறுப்பதால் அவன் ஆட்களுக்கும் இவன் ஆட்களுக்கும் சண்டை நடக்கிறது. இவன் ஒருவனைச் சுட்டுக் கொன்றுவிடுகிறான். இதுதான் அவன் செய்த முதல் கொலை. ஒன்று தப்பியோட வேண்டும் அல்லது கொலைக்காகச் சரணடைய வேண்டும் என்ற நிலையில் பயந்தோடும் பொது மக்களோடு இவனும் சேர்ந்து ஓடுகிறான், பிறகு நதியில் குதித்துவிடுகிறான் நீரிலிருந்து எழும்போது தான் சிப்பாய் என்ற அடையாளத்தை விட்டு சாதாரண மனிதனாக (போர்க்களத்திலிருந்து தப்பியோடிய சிப்பாய் ஆக) எழுகிறான். (Farewell to military arms).

எப்படியோ மிலனுக்குச் சென்று சேர்கிறான். கேதரினைத் தேடிச் செல்கிறான். அவள் ஸ்ட்ரெஸா என்ற இடத்துக்குப் போய்விட்டதாகத் தெரிகிறது. அங்குச் சென்று அவளை அடைகிறான். சில நாட்கள் காதலர்கள் மிக மகிழ்ச்சியாக அங்கு வாழ்கிறார்கள்.

போரிலிருந்து தப்பி வந்தவர்களைக் கைது செய்து இராணுவக் கோர்ட்டில் நிறுத்துவார்கள். அதனால் இவன் கைதுசெய்யப்படும் தருணம் ஏற்படுகிறது. இராணுவத்துக்கு பயந்து ஒரு சிறு படகில் இருவரும் மிக அருகிலுள்ள ஸ்விஸ் நாட்டுக்குத் தப்பிச் செல்கிறார்கள். குளிர்கால விளையாட்டு களுக்காக ஸ்விட்சர்லாந்துக்கு வந்த தம்பதியினர் என்று சொல்லி அங்கு தங்குகிறார்கள்.

ஸ்விஸ் நாடு எந்தப் போரிலும் ஒருபோதும் ஈடுபட்ட நாடு அல்ல. நிரந்தர நடுநிலை நாடு. அதனால் பயமற்று அவர்கள் அங்கே வாழ முடிகிறது.

ஆல்ப்ஸ் மலைகளின்மீது காதலர் இருவரும் மிக மகிழ்ச்சியோடு நடந்தும் ஓடியும் தழுவியும் தங்கள் தனிமையைக் கொண்டாடுகிறார்கள். மலைமுகட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். பிரசவத்துக்கு ஒரு மாதம் முன்புவரை வாழ்க்கை இனிமையோ இனிமை! கேதரினுக்குப் பிரசவகாலம் நெருங்குகிறது. மருத்துவமனைக்கு அருகில் இருப்பது நல்லது என்று பக்கத்திலுள்ள நகரத்துக்குச் சென்று ஒரு தங்கும் விடுதியில் தங்குகிறார்கள்.

பிரசவ வலி ஏற்பட்டபிறகு விஷயங்கள் தாறுமாறாகின்றன. குழந்தை மாலைசுற்றிப் பிறக்கிறது (நஞ்சுக்கொடி உடல் முழுவதும் சுற்றி இறந்து பிறத்தல்). கேதரினுக்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டதால் அவளும் இறந்துவிடுகிறாள். ஃபிரடெரிக் கையற்ற நிலையில் மருத்துவமனையை விட்டு நீங்குகிறான் (Farewell to the hugging arms of the wife).

காதலன் காதலியைச் சந்திக்கிறான்–அவளைக் கை நழுவ விடுகிறான்–ஒன்று சேர்கிறான்–மீண்டும் அவளை இழக்கிறான் என்ற எளிமையான கதைத்திட்டம் கொண்ட கதை இது. ஆனால் இதனை உணர்ச்சிப் பெருக்குடைய ஒரு பெருங்காவியமாக ஆக்கியிருக்கிறார் ஹெமிங்வே. அவரது மற்ற எல்லாக் கதைகளையும் விட இதுவே சிறந்ததாகப் போற்றப் படுகிறது.


வெள்ளாட்டின் பலி

நம் நாட்டில் கிராமத் திருவிழாக்களில் வெள்ளாட்டை பலி கொடுப்பது ஒரு முக்கியச் சடங்கு. திருச்சியில் உறையூரில் நடக்கும் ஒரு அம்மன் திருவிழாவில் (இதைக் குட்டி-குடி திருவிழா என்பார்கள்) ஓர் ஆட்டின் தலையை வெட்டி அப்படியே பூசாரி இரத்தத்தைக் குடித்துவிடுவான். இதுபோல இலத்தீன் அமெரிக்க நாடாகிய பெரூவிலும் ஒரு வெள்ளாடு பலி தரப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு வெள்ளாடு என்பது குறியீடாக அந்நாட்டுச் சர்வாதிகாரி ஒருவனைக் குறிக்கிறது.

வெள்ளாட்டின் விருந்து (The Feast of the Goat) என்பது பெரூ நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் மராயோ வார்காஸ் லோஸா என்பவரால் எழுதப்பட்டது. இது ஓர் அரசியல் வரலாற்று யதார்த்த நாவல். இப்படிப்பட்ட நாவல் தமிழில் இதுவரை கிடையாது. இது ஸ்பானிய மொழியில்  2000ஆம் ஆண்டில் வெளியானது. ரஃபேல் ட்ருஜில்லோ என்ற கொடுங்கோலனின் நீண்ட ஆட்சியின் (1930-61) இறுதிப்பகுதி பற்றியது. லத்தீன் அமெரிக்க நாவல்களின் ஓர் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது இந்த நாவல். பெரு நாவலாசிரியர்களில்

அகஸ்டோ ரோவா பாஸ்டோஸின் I the Supreme,

அலெஜோ கார்பெண்டியரின் Reasons of State.

காப்ரியேல் கார்சியா மார்க்விஸின் Autumn of the Patriarch

ஆகிய அரசியல் நாவல்களின் வரிசையில் வருகிறது வார்காஸ் லோஸாவின் இந்த நாவல்.

இந்த நாவலின் கதை மூன்று பகுதிகளாக உள்ளது. ஒன்று யுரேனியா சாப்ரால் என்ற டொமினிகன் பெண் சம்பந்தப்பட்டது. மற்றொன்று பெரு நாட்டின் சர்வாதிகாரி ட்ரூஜில்லோவின் கொலை தொடர்பானது. இன்னொன்று ட்ரூஜில்லோவின் இறுதி நாளில் நிகழ்ந்த அவனது சொந்த நிகழ்வுகள். 1961 முதல் 1996 வரை நடந்த கதையை இந்த மூன்று பகுதிகளும் மாறி மாறிச் சொல்கின்றன.

கதையின் தொடக்கத்தில் யுரேனியா தன் சொந்த நகரமான சாண்டோ டொமினிகோவுக்கு 1996இல் திரும்புகிறாள். 1961இல் 35 ஆண்டுகளுக்கு முன் தன் 14 வயதில் அதை விட்டுச் சென்றவள் அவள். பிறகு ஹார்வர்டு சட்டப்புலத்தில் பயின்று இப்போது அவள் நியூ யார்க்கில் உலக வங்கிக்கான ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராக இருக்கிறாள். சாகக் கிடக்கும் தன் தந்தை அகஸ்டீன் சாப்ராலைக் காண வருகிறாள். அவள் தன் குடும்பத்தைப் பிரிந்து சென்றதிலிருந்து இதுவரை எந்தவிதத் தொடர்பையும் அவர்களுடன் வைத்துக் கொண்டதில்லை. ஒருவேளை தன் தந்தையின் மரணத்தில் தன் வெற்றியைக் காண வந்திருக்கிறாள் என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்.

இரண்டாவது பகுதி 1961 மே 30இல் பெருவின் சர்வாதிகாரி ட்ருஜில்லோ வின் கொலை நடந்த நிகழ்வுக்குத் திரும்புகிறது. (இவன்தான் “ஆடு” எனப்படுகிறான்.) முதலில் அமெரிக்காவின் அன்புக்குப் பாத்திரமாக அவன் இருக்கிறான். ஓர் அமெரிக்கத் தலைவன் கூறியது போல, ‘he was a son of a bitch, but he was our son of a bitch.’ இப்போது அவன் அமெரிக்க ஆதரவை இழந்துவிட்டான். அவனால் பாதிக்கப்பட்ட சிலர் பிற அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து அவனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

மூன்றாவது பகுதி மே 30 அன்று ட்ருஜில்லோவின் சிந்தனைகள், செயல்கள் பற்றியதாக அமைகிறது. அவன் சிந்தனையில் 1937இல் பல ஆயிரக்கணக்கான ஹைட்டியர்களைக் கொன்றது போன்றவை வந்து செல்கின்றன. கென்னடி, ஃபிடல் கேஸ்ட்ரோ ஆகியவர்களின் சமகாலத்தொடர்பும் கொண்டிருந்தான். அவன் உடல்நலம் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவன் அதை ஏற்காமல் வழக்கம்போல் மாலை நேரத்தில் பெண்களைச் சந்திக்க விழைகிறான். அப்படிப்பட்ட சந்திப்பு ஒன்றிற்குச் செல்லும்போதுதான் அவன் கொலை செய்யப் படுகிறான். கொலைகாரர்கள் முதலில் போட்டிருந்த திட்டப்படி அவர்களின் காரியங்கள் நடக்கவில்லை. அவன் வரக் காத்திருந்த நேரத்தில் அவர்களில் ஒவ்வொருவனும் அந்தச் சர்வாதிகாரியால் தாங்கள். அடைந்த பாதிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். என்றாலும் எதிர்பாராத விதமாக தனியாக அவன் சிக்கியதால் உடனே கொன்றுவிடுகிறார்கள்.

இந்த மூன்று பகுதிகளும் கதையில் கடிகார நிகழ்வுகள் போல மாறி மாறி வருகின்றன. கதையின் பெரும்பகுதி ட்ருஜில்லோ தன் மக்களை எவ்வாறு வதைத்தான் என்பதைச் சொல்கிறது.

சதிகாரர்களில் மிக முக்கியமானவன் ப்யூபோ ரோமன் என்பவன். அந்நாட்டின் ஆயுதம் தாங்கிய படைகளின் தலைவன். மற்றொருவன் பலாகேர் என்ற, அதுவரை பொம்மை ஜனாதிபதியாக இருந்த ஆள். ஆனால் கொலை நடந்த பிறகு சதிகாரர்கள் இருவரையும் தேடினாலும், அவர்களைக் காணவில்லை. கதை இந்த இருவரின் செயல்களையும் உணர்வுகளையும் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. ட்ருஜில்லோவின் மகன் பாரிஸிலிருந்து வந்ததும், பலாகேர் அவனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கலகக்காரர்கள் அத்தனை பேரையும் அழித்து விடுகிறான். பிறகு கத்தோலிக்கத் திருச்சபையுடன் சமரசம் செய்து கொண்டு அவனே ஜனாதிபதியும் ஆகிவிடுகிறான்.

யுரேனியாவின் தந்தை முன்பு, 1960கள் காலத்தில் அரசாங்கத்தில் ட்ருஜில்லோவின் நெருக்கமான ஆளாக இருந்தவன். அவனுக்கு தலைவனின் ஆதரவு குறைந்ததால் அதனைச் சரிக்கட்ட ஒரு நண்பனின் ஆலோசனைப்படி தன் 14 வயது மகளை ட்ருஜில்லோவுக்கு “பலியாடாக” அனுப்புகிறான். ட்ருஜில்லோவின் பாலியல் வன்முறைக்கு ஆளான அவள் தான் படித்த கான்வென்ட்டுக்குத் தப்பிச் சென்றுவிடுகிறாள். பிறகு அங்கிருந்த சகோதரியர் அவளை அமெரிக்காவுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இப்போது மரணப்படுக்கையில் அவள் தந்தை இருக்கிறான். அவனைக் காணவந்தவள் இயக்கமிழந்த தன் தந்தையிடம் தானறிந்த வகையில் ட்ருஜில்லோவின் அரசாங்கத்தின் பயங்கரங்களைச் சொல்கிறாள். அவற்றில் எவ்வளவு சாப்ராலுக்குத் தெரியும், எந்த அளவுக்கு அவற்றில் அவனுக்குப் பங்கு இருக்கிறது என்றெல்லாம் கேட்கிறாள். ஆனால் அவன் புரிந்துகொண்டானா என்பது கூடத் தெரியவில்லை. அவள் குடும்ப உறுப்பினர்கள் அவள் ஏன் தொடர்பை அறுத்துக் கொண்டாள் என்று வசைபாடுகிறார்கள். ட்ருஜில்லோவின் கொலைக்குப் பிறகு யுரேனியா தன் குடும்பத்து உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறி வெளியேறுகிறாள்.


உடோபியா

இதை ஒரு நாவல் என்று சொல்வது கடினம். அமெரிக்கா என்ற புதிய உலகம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஒரு புதிய கற்பனை நாட்டை–அதன் பெயர் உடோபியா–அறிமுகப்படுத்தி பெரும்பாலும் அதன் சிறப்பான பண்புகளை விளக்குவது இந்த எடுத்துரைப்பு. இது 1551ஆம் ஆண்டு வெளியானது. இதைப் பின்பற்றி உலக மொழிகள் அனைத்திலும் மட்டுமல்ல, ஆங்கிலத்திலுமே நியூ அட்லாண்டிஸ் போன்ற பல நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் மு. வரதராசனார், கி.பி.2000 என்ற பெயரில் இப்படிப்பட்ட நாவல் ஒன்றை வரைந்தார்.

தாமஸ் மூர் என்பவர் ஓர் ஆங்கிலேயேப் பணியாளர். பெல்ஜியத்தில் தன் நண்பர் பீட்டர் கைல்ஸ் என்பவரைச் சந்திக்கிறார். அவர் தன் நண்பர் ரஃபேல் ஹைத்லோடே-வுக்கு மூரை அறிமுகப் படுத்துகிறார். ரஃபேல், ஒரு போர்ச்சுகீசியர். அமெரிக்காவுக்குப் பெயரளித்த அமெரிகோ வெஸ்பூச்சி யுடன் உலகம் சுற்றியவர். அவர் தான் கண்டதாக உடோபியா என்ற நாட்டைப் பற்றிச் சொல்கிறார். (உடோபியா என்பதற்கு “இல்லாத இடம்” என்று பொருள்)

ரஃபேலை ஏன் அரசாங்க வேலை ஏற்கக்கூடாது என்று கேட்கிறார் மூர். அதற்கு அவர் தெரிவிக்கும் கருத்துகள் புரட்சிகரமாக உள்ளன. அரசாங்க வேலை என்பது அடிமை வேலை. எந்த ஆட்சியாளனுக்கும் மக்களின் நன்மையில் ஆர்வம் கிடையாது… என்று பல விஷயங்களைப் பற்றி அவர் பேசுகிறார். உதாரணமாக, மரண தண்டனை கூடாது என்பது அவர் கருத்து. ஏனெனில் மனிதனை மனிதன் கொல்லக் கூடாது என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். பாரசீகத்தில் தான் கண்டதுபோல, யாராவது திருடினால் திருடிய பொருளைத் திரும்ப அவன் சொந்தக்காரரிடம் கொடுத்துவிட வேண்டும். ஒருவேளை திரும்பத் தர எதுவும் இல்லை என்றால், அவன் பொதுப்பணித் துறையில் வேலை செய்ய வேண்டும். மக்கள் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால்தான் அரசனுக்குச் சிறப்பு. அவர்கள் பொருளின்றித் திருடுவதும் சாவதும் ஆட்சியாளனை ஜெயிலராகவும் கொலைகாரனாகவும் மாற்றுகிறது.

பிறகு உடோபியா பற்றி உரையாடல் தொடர்கிறது. உடோபியர்கள் மகிழ்ச்சியும் இனிமையும் நிறைந்த வாழ்க்கையை மட்டுமே விரும்புகிறார்கள். ஆனால் நல்லவர்கள், நேர்மையானவர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ முடியும். தனிமனிதச் சொத்து, பொருள்குவிப்பு அற்ற நிலையில்தான் மகிழ்ச்சி இருக்க முடியும். பணக்காரர்கள் எல்லாரும் வில்லன்கள், குற்றவாளிகள், சோம்பேறிகள் என்று உடோபியர்கள் கருதுகிறார்கள். ரஃபேலும் அதை ஆதரிக்கிறார்.

உடோபியாவில் தங்கத்துக்கு மதிப்பு கிடையாது. யாரும் ஆபரணத்தைப் பயன்படுத்துவதில்லை. எல்லாப் பொருள்களுமே இலவசமாகக் கிடைக்கின்றன. எனவே நாளைக்கு என்று சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

உடோபியா ஒரு தீவு. அதை உருவாக்கியவர் உடோபஸ் என்ற பிரயாணி. ஆளற்ற ஒரு தீபகற்பத்தை அவர் கண்டவுடன் அதைச் சொந்தமாக்கித் தீவாக மாற்றுகிறார், மக்களைக் குடியேற்றுகிறார்.

உடோபியாவில் 54 நகரங்கள் உள்ளன. அவை யாவும் ஒரே மாதிரியான அமைப்புள்ளவை. ஒரு நகரத்தில் 6000 பேர் மட்டுமே இருக்கலாம். அமாரூட் என்பது தலைநகரம். ஒவ்வொரு நகரத்திற்கும் சொந்தமாக நிலம் உண்டு. அதைக் குடும்பங்கள் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் 40 ஆடவர் பெண்டிர் இருக்கலாம். 2 அடிமைகள் இருக்கலாம். உழவுக்கான கருவிகளை மேஜிஸ்டிரேட் அளிப்பார்.

சுழற்சி முறையில் இருபது இருபது குடும்பங்களாக நகரத்திலிருந்து கிராமப்புறம் சென்று விவசாயம் செய்யவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு ஊரில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கலாம்.

எல்லாரும் மிக அழகான, ஆனால் ஒரே மாதிரியான அலங்காரமற்ற, நடைமுறைப் பயனுடைய உடையை மட்டுமே உடுத்துகின்றனர். கட்டடங் களும் எளிமையானவை. தேவையற்ற உழைப்பை அவை குறைக்கின்றன. எல்லாரும் 6 மணிநேரம் மட்டுமே உழைத்தாலும் மிகையாக உற்பத்தி செய்கிறார்கள். குருமார்கள், சாமியார்கள், பூசாரிகள் போன்றோர் உழைப்பற்றவர்கள், தேவையற்றவர்கள் என்பதால் நாட்டில் அவர்கள் இல்லை.

நகரத்திற்கு ஃபைலார்க் எனப்படும் மாஜிஸ்திரேட் (தலைவர்) உண்டு. ஒவ்வோராண்டும் அவர் முப்பது குடும்பங்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். ஊர் விட்டு ஊர் செல்வதற்கு பாஸ்போர்ட் தேவை. அதை அரசனிடமிருந்து பெறலாம். ஃபைலார்க்குகள் அரசனைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

அதிகமாகக் குழந்தை பெற்றால் இல்லாதவர்களுக்கு அளிக்கப்படும். அதேபோல ஒரு நகரத்தில் மக்கள் தொகை அதிகமானால் சிறு நகரங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.

நாட்டில் அடிமைகள் உண்டு. போரில் தோற்றவர்கள் அடிமைகளாகக் கொள்ளப்படுவார்கள். தேவையான விவசாய நிலம் இல்லாமல் போனால் மட்டுமே போர் தேவைப்படும், நிகழும்.

தனக்குத் தேவையானதற்கு மேல் எவரும் எந்தப் பொருளையும் எடுப்பதில்லை. ஏனெனில் திருடுதல், பறித்துக் கொள்ளுதல் என்பவை எல்லாம் அங்கு கிடையாது.

“உடோபியாவில் எல்லாருக்கும் எல்லாவற்றின்மீதும் உரிமை உண்டு. பொதுக் கடைகளை எப்போதும் நிரப்பி வைத்திருந்தால், எவரும் தேவையின்றி எடுக்கமாட்டார்கள். ஏனெனில் சமமற்ற விநியோகம் கிடையாது. அதனால் யாரும் ஏழைகளும் இல்லை, யாரிடமும் எதுவும் கிடையாது என்றாலும் எல்லாரும் செல்வமுள்ளவர்களே.”

பெண்கள் 18 வயதுக்கு முன், ஆடவர் 22 வயதுக்கு முன் திருமணம் செய்யலாகாது. திருமணத்துக்கு முன்னால் பாலியல் உறவு கொள்ளக் கூடாது. பலதார மணம், விபசாரம் என்பவையும் தடுக்கப் பட்டவை. உடோபியாவில் வழக்கறிஞர்கள் கிடையாது. யாவரும் தங்களுக்குத் தாங்களே வழக்காட வேண்டும்.

தாங்களே இராணுவத்தை வைத்துக் கொள்வதைவிட இராணுவங்களை வாடகைக்கு அமர்த்துவதையே உடோபியர்கள் விரும்பினார்கள். ஆனால் கணவன் போருக்குச் சென்றால் மனைவியும் உடன் சென்று போரிடலாம்.

மதத்தைப் பற்றி இறுதியாகத் தன் கருத்தைத் தெரிவிக்கிறார் ரஃபேல். ஒவ்வொருவரும் தான் விரும்பிய மதத்தைக் கடைப்பிடிக்கலாம் என்பதால் அங்கே எண்ணற்ற மதங்கள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு தெய்வம் உண்டு. உடலுடன் ஆன்மா இறந்துபோகிறது என்று கருதக் கூடாது. அதனால் நோயுற்றால் வருந்துவார்களே ஒழிய இறப்புக்கு யாரும் வருந்துவதில்லை.

ரஃபேல் தனது வருணனைகளை முடிக்கும்போது, மூரின் மனத்தில் பல சந்தேகங்களும் கேள்விகளும் தோன்றியுள்ளன. ஆனால் ரஃபேல் களைத் திருந்ததால் மூர் அவற்றைக் கேட்காமல் அடக்கிக் கொள்கிறார். தங்கள் அரசாங்கங்களும் உடோபியாவின் சில விதிகளைக் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் என்று மட்டுமே இறுதியில் சொல்கிறார்.

இப்படிப்பட்ட எளிய, ஆனால் ஏழ்மையற்ற வாழ்க்கையைத்தான் நமது தமிழ் முன்னோர் வாழ்ந்துவந்தனர். பொங்கல் என்ற தன்னிறைவுக் கொண்டாட்டம் இந்தமாதிரி வாழ்க்கையின் அடையாளம். இப்போதும் நாகரிகம்(!) பரவாத காட்டுப் பகுதிகளில் பல பழங்குடியினர் இப்படித்தான் வாழ்கின்றனர்.

ஆனால் மேலும் மேலும் பொருளையும் பணத்தையும் குவிப்பதைத்தான் சிறந்த வாழ்க்கை என்று நமக்குக் கற்பிக்கிறது இந்த உலகம். எதற்காக ஒருவனுக்கு பதினைந்து லட்ச ரூபாய் கோட்டு? எதற்காக ஒருவன் இரண்டு கோடிக்குக் கார் வாங்கி, வரி கட்டாமல், கோர்ட்டில் போய் நிற்க வேண்டும்? எதற்காக கோடிக்கணக்கான பேர் வயிற்றுக்குச் சோறின்றி சாலையோரங்களில் வாழ்ந்து இறக்க வேண்டும்? சிந்தியுங்கள்.

தன்னளவில் நிறைவாக எளிமையாக வாழ்பவனைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறது இவ்வுலகம். “வளர்ச்சி வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையையும் உலகத்தையும் அழிக்க வேண்டும். பிறகு எல்லாவற்றுக்குமாக உட்கார்ந்து என்ன செய்வது என்று ஐ.நா.வில் பன்னாட்டுக் கூட்டங்கள் போட்டுப் போலியாக அழ வேண்டும்!”