என் கடவுள் கொள்கை

மதங்களும் ஆன்மிகவாதிகளும் சொல்வது போன்ற கடவுள் என்பது கிடையாது என்பதுதான் என் கடவுள் கொள்கை.

உலகில் இருப்பது பொருள்தான், அதுதான் சிந்தனை தோன்றுவதற்கு ஆதாரம். ஆகவே நான்  பொருள்முதல் வாதி. கடவுள் என்பது மனநோய் பிடித்தவர்களின் கற்பனை. Illusion. கடவுள் உண்டு என்று சொல்பவன் முட்டாள் என்று பெரியார் கூறினார். கடவுள் மனநோய் பிடித்தவர்களின் கற்பனை என்கிறேன் நான். உலகின் பெரும்பகுதி மக்கள் மனநோய் பிடித்தவர்கள் தான்.

ஹிஸ்டீரியா போன்ற இலேசான பிறழ்வுகளையும் நாம் மனநோய் என்றுதான் சொல்கிறோம். அந்த அர்த்தத்தில்தான் மனநோய் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். மனநோய் என்றால் உடனே பைத்தியம் பிடித்து சட்டையைக் கிழித்து அலைபவன் என்பது அல்ல பொருள்.

ஆனால், அதோ பார், மலைக்குமேல் மகரஜோதி ஆகாயத்தில் தெரிகிறது என்றால் கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகொண்டு கும்பிடுகிறானே அவனுக்கும் பைத்தியத்துக்கும் வித்தியாசம் in degrees only. கொஞ்ச அளவில்தான். அதனால்தான் மதவெறி பிடித்தவர்கள் பிறரைக் கொல்லும் அளவுக்கும் செல்கிறார்கள், பெற்ற பிள்ளைகளை பலி கொடுக்கும் அளவுக்கும் செல்கிறார்கள். சிறுத்தொண்டன் யார்?    

பொருள் என்பதைவிட்டு சிந்திக்க முடியாது. கடவுள் என்பதற்கே, கடந்தும் உள்ளும் இருக்கின்ற “பொருள்” என்றுதானே “பொருள்” சொல்கிறார்கள்?

கடவுள் என்றால் கடந்தும் உள்ளும் இருப்பதல்ல. கடவுகின்ற ஒன்று, கடவுள். நம்மை செலுத்துவது என்பது கடவுவது. நம்மை செலுத்துவது மனம். சிலசமயங்களில் புற நிகழ்வுகளும்தான் நம்மைச் செலுத்துகின்றன.. அதனால் கடவுள் என்பதை இன்னது என்று சொல்ல முடியாது.

உடனே மனம் என்றால் என்ன, எங்கிருந்து வந்தது என்று ஆரம்பித்து விடாதீர்கள். அதை இன்னொரு சமயம் விரிவாகப் பார்க்கலாம்.

கடவுள் இல்லை என்பதால் நான் இந்துவோ, கிறித்துவனோ, முஸ்லிமோ அல்ல. எல்லா மதங்களுமே மனநோய்கள் என்றால், இந்து மதம் என்பது வெறும்/பெரும் பைத்தியக்காரர்களின் உலகம். அதனால்தான் “எல்லா மக்களும் சமம் அல்ல, ஒருவன் பிரம்மனின் தலையில் பிறக்கிறான், மற்றொருவன் பாதத்தில் பிறக்கிறான் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். சாதிகள் உண்டு” என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை உலகில் ஒரே சாதிதான். அது இறப்பவர்களின் சாதி. இறக்காதவன் உலகில் எவனாவது இருந்தால் சொல்லுங்கள்.

உடனே பலர் அந்த சாமியார் இருந்தான், இந்தச் சித்தன் இருந்தான், அவர்கள் இறக்கவில்லை, வானத்தில் மிதக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் காட்டு என்றால் காட்ட மாட்டார்கள். நீ உன் மனத்துக்குள் பார் என்றெல்லாம் கப்சா விடுவார்கள். எல்லாருக்கும் ஒரே கதிதான், அது இறப்பு. சிலர் மனத்துக்குள் பார் என்றால் ஒரே ஹிப்னாடிசத் தூக்கத்தில் ஆழ்ந்து மரக்கட்டை போல் உட்கார்ந்திருப்பார்கள். (Self-hipnotism) அதற்குப் பெயர் தியானம் என்பார்கள்.

பிறப்பென்றால் என்ன, அது எப்படி நேர்ந்தது, இறப்பு என்றால் என்ன, அதற்குப் பின் என்ன என்றெல்லாம் நான் ஆராய்வதில்லை. நம்மால் ஆராய முடியாத விஷயங்கள் உலகத்தில் பல உள்ளன. இங்கிருந்து ஒரு 500 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் பொருளை–அப்படி ஒரு நட்சத்திர மண்டலம் இருக்கிறதென்றால்–காட்டு என்றால் காட்ட முடியுமா? பார் என்றால் பார்க்க முடியுமா? இவை எல்லாம் எப்படி புலன்களுக்கு புலப்படுவதில்லையோ அப்படித்தான் உலகில் பல விஷயங்களும். அதனால் புலப்படாத விஷயங்களைப் பற்றி நான் பேசுவதில்லை.

சரி, “உனக்கு புலப்படாவிட்டால் என்ன, எனக்கு புலப்படுகிறது” என்றால் வைத்துக்கொள். ஆனால் அதை நிரூபிக்க முடியாது. அது உன் மனக்காட்சி. Hallucination. அவ்வளவுதான். அதனால்தான் மனநோய் என்றேன். கஞ்சா அடித்துவிட்டு கடவுள் தோன்றுவதாகச் சொல்வது போலத்தான் அது. நான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை.

கடவுள் இல்லை என்பதால், மதமும் இல்லை, சடங்குகளும் இல்லை, சாதியும் இல்லை, பண்டிகைகளும் இல்லை, திருவிழாக்களும் இல்லை. இவையெல்லாம் மக்கள் தங்கள் சந்தோஷத்துக்காகக் கொண்டாடும் பொது விஷயங்கள், கூடுகைகள்.

இன்றைக்கு அவ்வளவுதான், பார்ப்போமா? இது பற்றி இன்னும் நிறையப் பேச இருக்கிறேன்


என் இளமைக் காலம்-4

பழைய காலத்தை நினைவுக்குக் கொண்டுவருவதற்கு முக்கியக் காரணம், அன்றைக்கும் இன்றைக்குமான சமூக மாறுபாடுகளைப் பதிவசெய்வதற்காகத்தான். காலத்திற்குக் காலம் எல்லாம் மாறுகிறது. மாற்றத்தைத் தவிர மாறாதது ஒன்றில்லை. சமூகத்தின் புறத் தோற்றம் மாறும்போது அதன் அகமும் முற்றிலும் மாறிப்போய் விடுகிறது. அந்த மாற்றங்களைப் பதிவுசெய்தாக வேண்டும். எங்கள் தலைமுறையைப் போல ஒன்று உலகில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. எங்களுக்கு முந்திய தலைமுறை வரை மாற்றங்கள் மிக மெதுவாக நடந்துவந்த காலம். 1900களின் தொடக்கத்தில் தமிழ்நாட்டைப் பார்க்கும்போது ஒரு மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த அதே தோற்றத்தில்தான் காட்சியளித்திருக்கக்கூடும். ஆனால் இப்போது பூமியே சுற்றுச்சூழல் மாறுபாட்டினால் அழிந்து விடுமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவு மாற்றங்கள். எங்கள் தலைமுறை மின்சாரமே இல்லாத இளமையையும் கண்டது, முதுமையில் இப்போது இதோ இண்டர்நெட்டில் இணையதளத்தில் பதிவுசெய்துகொண்டிருக்கிறேன். இனிவரும் காலம் தொழில்நுட்பக் காலம். எனது பேரன்மார்கள் மூன்று வயதிலேயே ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இந்த மாற்றங்களில், எங்கள் வாழக்கையில் நான் கண்டவற்றில் ஒருசிலவற்றைப் பதிவு செய்வதுதான் இந்த எழுத்தின் நோக்கமாக இருக்கிறது. (இந்த மாற்றங்களுக்கான காரணங்கள் வேறு, அவை நன்றாக ஆராயப்பட வேண்டியவை. அவை சமூகவாதிகளின், பொருளாதாரவாதிகளின் வேலை).
என் வாழ்க்கையின் இளமைக் காட்சிகளில் ஒன்று இங்கே.

1950களின் தொடக்கத்தில் இன்று உள்ளதுபோன்ற காசு (பணம்) கிடையாது. அப்போது தம்பிடி (பைசா), அணா போன்றவை வழக்கில் இருந்தன. ஒரு ரூபாய்க்கு 16 அணா. ஒரு அணாவுக்கு 12 பைசா (தமிழில் தம்பிடி). ஆக ஒரு ரூபாயில் 192இல் ஒரு பங்கு ஒரு தம்பிடி. இன்று பத்துரூபாய்க்குக் கூட மதிப்பில்லை. அந்தக் காலத்தில ஒரு தம்பிடிக்கும் சாமான்கள் கிடைத்தன என்பது இன்று நினைக்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. அன்று ஒரு காலணாவுக்குக் கிடைத்த பொருள்களை இன்று பத்து-பதினைந்து ரூபாய் கொடுத்துத்தான் வாங்க வேண்டியிருக்கிறது. (காலணாவுக்கு ஒரு வீசை (அப்போதெல்லாம் கிலோ கிடையாது, ஒரு வீசை என்பது ஏறத்தாழ இரண்டு கிலோ என்று வைத்துக் கொள்ளுங்கள்) காய்கறி வாங்கலாம். இன்று அதன் விலை ஐம்பது ரூபாய் முதல் நூறு ரூபாய். 2400 காலணா ஐம்பது ரூபாய்க்குச் சமம் என்றால், இன்று ஊதியத்தில், வசதிகளில் அன்றைய வாழ்க்கையைப் போல 2400 மடங்கு முன்னேறியிருக்கிறதா? குறிப்பாக, கீழ்மட்ட வேலைகளில்?)

1960 அளவில் மேல்வகுப்பு (9 முதல் 11 கிளாஸ்) வாத்தியாருக்கு 100 ரூபாய் மொத்தச் சம்பளம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினார்கள். இன்று பணத்தின் மதிப்பு அன்றைக்கிருந்ததைப் போல தோராயமாக 2500 முதல் 3000 வரை உயர்ந்திருக்கிறது என்றால், இன்று 100 X 3000 = 300000 ரூபாய் சம்பளமா தருகிறார்கள்? (என் தாய்வழிப் பாட்டன் குமாரசாமிப் பிள்ளை 1950 அளவில் ‘எலிமெண்டரி ஸ்கூல்’ வாத்தியார் வேலையிலிருந்து ‘ரிடையர்’ ஆனார். அவரது சம்பளம் கடைசியாக 14 ரூபாய் என்று சொன்னதாக ஞாபகம்.)

மூன்று தம்பிடி காலணா. ஆறு தம்பிடி அரையணா. பன்னிரண்டு தம்பிடி ஓரணா. தம்பிடி, காலணா, அரையணா, ஓரணா இவற்றுக் கெல்லாம் காசுகள் (நல்ல செப்புக்காசுகள்தான், அப்போது நிக்கல் காசு வழக்கில் வரவில்லை) இருந்தன என்றால் இன்றைக்கு நம்புவீர்களா? இரண்டணாவுக்குப் பித்தளைக் காசும் இருந்தது.

காலணாவிலேயே சாதாரண காலணா, ஓட்டை (தொண்டி)க் காலணா என்று இரண்டுவகை. நான் தொண்டிக்காலணாவைத் தான் நிறையப் பயன்படுத்தியிருக்கிறேன். சிறிய செப்பு வட்டக் காசு. மத்தியில் வட்டமான துளை. சுற்றிலும் பழைய ஜார்ஜ் ராஜாத் தலை, காசின் மதிப்பு, ஆண்டு ஆகியவை அச்சாகியிருக்கும். 1954 வாக்கில் இவைதான் புழக்கத்தில் இருந்தன. 1956இல்தான் புதிய பைசா (அபபோது நயாபைசா என்று அழைக்கப்பட்டது) புழக்கத்துக்கு வந்து தம்பிடி, காலணா, அரையணா கணக்கை எல்லாம் அழித்துவிடத் தொடங்கியது. இந்தியா மெட்ரிக் முறைக்கு மாறியது. மைல் கிலோமீட்டர் ஆகியது, வீசை கிலோகிராம் ஆகியது, உழக்கு, ஆழாக்கு எல்லாம் போய் லிட்டர் வழக்கிற்கு வந்தது…
ஆனாலும் இந்த மாற்றங்கள் முறறிலும் ஏற்றுக்கொள்ளப்பட சில ஆண்டுகள் ஆயின.

1950கள்தான் காப்பிக்கடைகள் பெருகி, காலையில காப்பி குடிப்பது என்பது மத்தியதர வர்க்கத்தில் பழகத்தொடங்கிய காலம். என் அம்மா அக்காலத்தில் ஒரு காலணாவைக் கையில் கொடுத்து கடையில்போய் ‘காப்பி வில்லை’ வாங்கிவரச் சொல்வார். (அப்போதெல்லாம் ப்ரூ போன்ற பெயர்களெல்லாம் கிடையாது, ஒருவேளை நரசுஸ் மாதிரி காப்பித் தூள்கள் இருந்தனவோ என்னவோ தெரியாது). கருப்பாக ஒரு சிறிய சதுர வடிவத்தில் ஒரு காப்பி வில்லை கிடைக்கும். அதைக் கொண்டுவந்து கொதிநீரில் இட்டால் காப்பி டிகாக்-ஷன். அதில் பாலை ஊற்றி சர்க்கரை போட்டுக் குடிக்க வேண்டும். அவ்வளவுதான். (சர்க்கரை என்றால் வெள்ளைச் சர்க்கரை அல்ல. வெல்லத்தூள் போல மஞ்சள் முதல் பழுப்பு நிறம் வரை பல நிறங்களில் ஒன்று இருக்கும். அதுதான் சர்க்கரை. நாட்டுச் சர்க்கரை என்பது இன்றைய வழக்கு). ஆனால் அந்தக் காப்பியும் நன்றாகத்தான் இருந்தது.
டீக்கடைகளைப் பார்க்க முடியாது. எனக்குத் தெரிந்து 1950களில் அதிகமாக இல்லை. 1960 வாக்கில்தான் திமிரியில் இருந்தபோது எங்களுக்கு டீ அறிமுகம் ஆயிற்று. லிப்டன் என்ற கம்பெனி வீடுவீடாக வந்து டீத்தூளை அறிமுகப் படுத்தியது. அதன் விளைவாக காப்பிக்கு பதிலாக டீ போட ஆரம்பித்தோம். ஆனால் எந்தக் காரணத்தினாலோ குழந்தைகளுக்கு நிறைய உடம்புக்கு வர ஆரம்பிக்க, அது டீயினால்தான் என்று முடிவு செய்து அதை ஒதுக்கிவிட்டு பழையபடியே காப்பியில் சரணம். ஆனால் ஏறத்தாழ 1960 வாக்கில் காப்பி வில்லைகள் மறைந்து காப்பித்தூள் வகைகள் மிகுதியாக வரத் தொடங்கிவிட்டன.

ஏறத்தாழ காப்பிக் கடைகளும் (கிளப்புகள், கபேக்கள்) 1950களில் அதிகமாயின. டீக்கடைகளும் தோன்ற ஆரம்பித்தன. “பிறாமணாள் காப்பி கிளப்புகள்” ஊருக்கு ஊர் பெருகிய காலம். அரையணாவுக்கு நல்ல “டிகிரி” காப்பி அந்தக் கடைகளில் கிடைக்கும். கடைகள்தான் “பிறாமணாள்” கடைகளே தவிர பிராமணர்கள் பெரும்பாலும் எச்சில் தீட்டு கருதி அந்தக் கடைகளுக்கு வருவதில்லை. அதற்கு இன்னும் சில காலம் ஆகியது.

திரைப்படங்களிலும் பெரிய மாற்றம் ஏற்பட்ட காலம் ஐம்பதுகளின் பிற்பகுதிதான். அதற்குமுன்பு புராணப்படங்கள்தான் மிகுதி (பராசக்தி விதிவிலக்கு. வாழ்க்கை, பெண் மாதிரி சில குடும்பக் கதைகளும், தேவதாஸ் போன்ற காதல் கதைகளும் முன்பே வந்துவிட்டன என்று நினைக்கிறேன். ஆனாலும் தமிழில் ஒரு புரட்சிகர மாற்றம் ஏற்பட்டது பராசக்திக்குப் பிறகுதான்.) அதனாலோ என்னவோ என்எஸ்கே ஐம்பத்தொண்ணுக்கும் அறுபத்தொண்ணுக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு திரைப்படப் பாட்டாகவே பாடிவிட்டார். இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணம் சிவாஜி கணேசன், எஸ்எஸ் ராஜேந்திரன் போன்றவர்கள் நடித்த ஏழைபடும் பாடு, பணம், செந்தாமரை…இப்படி எத்தனையோ “சமூகப்”படங்கள். ஐம்பதுகளின் இறுதியில் எம்ஜிஆர் ‘தானா’வரிசைப் படங்களிலும், சிவாஜி ‘பானா’ வரிசைப் படங்களிலும் நடிக்க, சினிமாவின் தோற்றமே தலைகீழாக மாறிவிட்டது.

1965இல் நான் கல்லூரியில் பியூசி சேர்ந்த காலத்தில், வேலூர் ஊரிஸ் காலேஜுக்கு எதிரில் இருந்த தாஜ் சினிமாக் கொட்டகையில் மத்திய வகுப்பு டிக்கட் 25 பைசா (நாலணா). (மத்திய வகுப்பு என்றால், உயர்ந்த வகுப்பும் அல்ல, தரை டிக்கட்டும் அல்ல, ஓரளவு பின்னாலிருந்து பெஞ்சில் உட்கார்ந்து பார்க்கலாம். தரை டிக்கட் என்றால் பெஞ்சு கிடையாது. திரைக்கு மிக அருகில் இருக்கும்.)
அதில்தான் அந்த ஆண்டு வெளிவந்த எங்கவீட்டுப் பிள்ளை, படகோட்டி ஆகிய இரு திரைப்படங்களையும் பார்த்தேன்.
ஊரிசுக்கல்லூரியில் பியூசியில் படிக்க நான் கட்டிய மொத்த ஃபீஸ் 64 ரூபாய் என்று ஞாபகம்.


என் இளமைக் காலம்-3

திமிரியில் ஒன்பது வயதில் அங்கிருந்த போர்டு ஸ்கூலில் ஏழாம் வகுப்பு சேர்ந்தேன்.

நான் மிகவும் நோஞ்சான். சேர்ந்தவுடன் ஸ்போர்ட்ஸ் வாத்தியார் எடை பார்த்தார். அப்போது நான் ஏதோ 23 பவுண்டு இருந்தேன். (ஏறத்தாழ 10-11 கிலோதான்). ஒரு விளையாட்டிலும், ஸ்போர்ட்ஸிலும் நான் சோபித்ததில்லை. புல்லப் எடுக்கச் சொல்வார். என்னால் ஒன்றுகூட எடுக்க முடியாது. ஹைஜம்ப் தாண்டச் சொல்வார். மிகக் குறைந்த உயரத்திற்கு வைக்கும் கட்டையையும் தாண்ட முடியாமல் விழுந்துவிடுவேன். இப்படித்தான் விளையாட்டுகளில் எனது பெர்ஃபார்மன்ஸ். ஆனால் படிப்பில் எப்போதும் முதல் ரேங்க்தான்.

அக்காலப் பள்ளி வளாகம் மிகுந்த அழகாக இருக்கும். ஆரணி செல்லும் சாலையில் பெரிய வாயிற்கதவு. முன்புறம் மட்டும் காம்பவுண்டு சுவர். பள்ளியின் அகல-நீளம் மிக அதிகம். இரண்டு வரிசைகளாக வகுப்பறைகள் இருந்தன. வாயிலிலிருந்து நுழைந்தவுடனே கொஞ்சம் தள்ளிச் சில படிக்கட்டுகள் ஏறி உயரமாக உள்ள மேடைப்பகுதிக்குச் சென்றால், இடப்புறம் தலைமையாசிரியர் அறை. வலப்புறம் ஆசிரியர்கள் அறை. அவற்றுக்கு வெளியில் அன்றைய செய்திகள், பொன்மொழிகள் எழுதுவதற்கான கரும்பலகைகள். தொடர்ந்து உள்ளே சென்றால் நீண்ட, நல்ல வழவழப்பான சிமெண்டு போட்ட தாழ்வாரம். அதில்தான் தளமிட்ட, ஒன்பது-பத்து-பதினொன்றாம் வகுப்புகள். லைப்ரரி. அந்த உயர்ந்த தாழ்வாரத்தை ஒட்டி அழகான செம்பருத்திச் செடிகளின் வரிசை.

அந்த மேடைப் பகுதியிலிருந்து கீழே இறங்கினால் பெரிய செவ்வக மைதானம். அதில்தான் காலை அசெம்ப்ளி நடக்கும். அதைச் சுற்றி வலப்புறம் கிராஃப்ட் (கைத்தொழில்) ஆசிரியர் அறை-வகுப்பறை. அதற்கு அடுத்து ஸ்போர்ட்ஸ் அறை. உயர்தாழ்வார வகுப்புகளுக்கு நேர் எதிரில், இணையாக,  ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள, ஓடுவேய்ந்த பகுதியிலிருந்த வகுப்புகள். இடப்புறம் கிரவுண்டுக்குச் செல்லும் பெரிய வாயில். எல்லா வகுப்பறைகளுக்கும் வெளியே அழகான பூச்செடிகள்.

அதிக வகுப்புகள் கிடையாது. எல்லாவற்றிலும் இரண்டிரண்டு செக்-ஷன்தான்.

இந்தச் செவ்வக வகுப்பறை அமைப்புக்கு வெளியே பெரிய மைதானம். அதன் கால்பகுதியை கால்பந்து விளையாட்டிடம் அடைத்துக் கொண்டிருந்தது. மிச்சம் பகுதியில் தடிப்பந்து மைதானம், கைப்பந்து கிரவுண்டு, நீளத்தாண்டுதல், உயரத்தாண்டுதல் போன்றவற்றிற்கான இடங்கள், இவையெல்லாம் போக, ஆறாம் வகுப்புமுதல் எட்டாம் வகுப்புவரை இருந்த பகுதிக்குப் பின்புறம் ஒரு கிச்சன்-கார்டனும்  (பள்ளிக் காய்கறித் தோட்டம்) இருந்தது.

இந்த தடிப்பந்து  (அதற்குப் பெயர் பேஸ்-பால்) பற்றிக் குறிப்பிட வேண்டும். அப்போதெல்லாம் கிரிக்கெட் புகழ்பெற்ற விளையாட்டு இல்லை. அதன் அமெரிக்க வெர்ஷன் போல இருந்தது தடிப்பந்து. ஒரு குண்டாந்தடி போல மட்டை இருக்கும். அதைவைத்துப் பந்தை அடித்தால் கிரிக்கெட்போலத்தான், பிடிக்க வேண்டும். ஆனால் ரன் ஓடுவது ஒரு சதுரத்தின் நான்கு பக்கங்களாக அமைந்திருக்கும். ஒருவர் பந்தை அடித்துவிட்டால் அவர் அடித்த இடத்திலிருந்து (சதுரத்தின் ஒரு மூலை அது) கிடைப்பக்கமாக ஓடவேண்டும். அடுத்து மற்றொரு பையன் அடிப்பான். அப்போது முதல் பையன், சதுரத்தின் அடுத்த பக்கத்தில் (எதிர்க்குத்தாக) ஓட வேண்டும். இப்படி நான்கு பக்கங்களும் ஓடிமுடிந்தால்தான் ஒரு ரன். கிரிக்கெட்டை விட மிக நல்ல உடலுக்குப் பயிற்சிதரும் விளையாட்டு. ஏனோ அது பிற்காலத்தில் இல்லாமல் போயிற்று.

திமிரியில் நெசவுத்தொழில் அக்காலத்தில் மிகுதி. செங்குந்த முதலியார்கள் பெரும்பகுதியினர். எனவே கைத்தொழில் வகுப்பிலும் எங்களுக்கு நெசவே பயிற்சி அளிக்கப்பட்டது. என் தந்தை டிராயிங் மாஸ்டர். அவர் எட்டாம் வகுப்புதான் படித்தவர் என்பதை முன்னாலே சொல்லியிருக்கிறேன். கணக்குப் பிள்ளை வேலையை விட்டுவிட்டு,  நன்றாகப் படம் போட வந்ததால், தனிப்பட்ட முறையில் டிராயிங் பரீட்சைகளில் தேர்வு பெற்று டிராயிங் மாஸ்டரானார். நான் இராணிப் பேட்டையில் ஆறாம் வகுப்பு சேர்வதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னால்தான் அந்தப் பணியில் சேர்ந்தார். அதற்கு முன்? சோற்றுக்குத் தாளம்தான்.

அவர் இராணிப்பேட்டையிலிருந்து திமிரிக்கு மாற்றப்பட்டதால்தான் குடும்பமும் திமிரிக்குக் குடிபெயரவேண்டி வந்தது. இராணிப்பேட்டையில் மூன்றாண்டுகள், திமிரியில் ஏழாண்டுகள்,  திமிரிக்குப் பின் விரிஞ்சிபுரம்-அங்கு ஆறாண்டுகள், அதன்பின் இலாலாப் பேட்டையில் நான்காண்டுகள். அத்துடன் அவர் சர்வீஸ் முடிவு பெற்று விட்டது.  ஓரளவு அவர் தொழிலுக்கு அப்போது நல்ல மதிப்பிருந்தது. சிலசமயங்களில் குடிமைப் பயிற்சி ஆசிரியராகவும், ஸ்கவுட் (சாரணர்) ஆசிரியராகவும் கூடப் பணியாற்றினார்.

திமிரியில் இருந்தபோது சுயமாகவே படித்து பன்னிரண்டாம் வகுப்பும், பிறகு இடைநிலை ஆசிரியப் பயிற்சித் தேர்வும் பாஸ் செய்தார். ஆனால் இடைநிலை ஆசிரியராக அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவர் கடைசியாக வரைந்தது அரசினர் உயர்நிலைப் பள்ளி இலாலாப்பேட்டை என்ற போர்டுதான்.

அக்காலத்தில் ஒன்பதாம் வகுப்பு முடிந்தபிறகு மாணவர்களுக்கு செலக்-ஷன் என்று ஒரு ஏற்பாடு இருந்தது. மோசமாகப் படிப்பவர்களை எல்லாம் ஒன்பதாம் வகுப்பிலேயே நிறுத்திவிட்டு பொதுத்தேர்வில் (எஸ்எஸ்எல்சி) தேறக்கூடியவர்களை மட்டும் பத்தாம் வகுப்புக்கு அனுப்புவார்கள். பதினோராம் வகுப்பில் கணக்கு இரண்டாகப் பிரியும். பொதுக்கணக்கு (ஜெனரல் மேத்ஸ்) கூட்டுக்கணக்கு (காம்போசிட் மேத்ஸ்) என்று. காம்போசிட் மேத்ஸ் எடுத்தால் அல்ஜிப்ரா, ஜியோமெட்ரி, திரிகோணமிதி போன்ற கணக்குகள் இடம்பெறும். ஜெனரல் மேத்ஸில் அப்படி அல்ல. வெறும் கடைக்கணக்குகள், சராசரி,சதவீதம் போன்றவைதான். நான் காம்போசிட் மேத்ஸ் எடுத்தேன்.

வகுப்புகள் குறைவாக இருந்ததால் பி.டி. ஆசிரியர்களும் குறைவுதான். தலைமையாசிரியர் தவிர, எங்களுக்கு ஜெகதீசன், வெங்கடேசன் என்று இரண்டுபேர் சோஷியல் பிடி, சயன்ஸ் பிடி ஆசிரியர்கள். பி.வி. சண்முகம் என்று ஒரு கணித ஆசிரியர். அவ்வளவுதான். இது தவிர ஒரு மேல்நிலைத் தமிழாசிரியர் உண்டு.  தலைமையாசிரியர் ஆங்கிலம் மட்டும் நடத்துவார். எங்கள் கணித ஆசிரியர் மிகச் சிறந்த ஆசிரியர். அக்காலத்திலே நான் கற்றுக் கொண்ட தேற்றங்கள், அவற்றுக்கான தீர்வுகள், அல்ஜிப்ரா அடிப்படைகள், ரிடக்-ஷியோ ஆட் அப்சர்டம் போன்ற முறைகள் எல்லாம் இன்றும் நன்றாக ஞாபகத்தில் இருக்கின்றன. இது மேல்வகுப்புகளுக்கு. இதேபோல் கீழ்வகுப்புகளுக்கும் இடைநிலை ஆசிரியர்கள், தமிழாசிரியர் இருந்தனர்.

ஏழாம் வகுப்பில் முதல் மாணவனாகத் தேறியதற்கு ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்ற புத்தகத்தைப் பரிசாக அளித்தார்கள். சுவையான புத்தகம் அது. அந்த ஆண்டு முடிந்தபிறகு ஒருநாள் அதை எழுதிய ஆசிரியரே-ஏ.கே. செட்டியார் அவர்களே-ஏதோ காரணத்திற்காக எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்ததில்  எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவரைப் பற்றி அப்போது மிகுதியாகத் தெரியவிட்டாலும், பிறகு நிறையத் தெரிந்துகொண்டேன். காந்தி இருந்த காலத்திலேயே, அவரை வைத்து,  இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் டாக்குமெண்டரி எடுத்த மனிதர்.  குமரி மலர் என்ற பத்திரிகையை நடத்தியவர்.

பின்னரும் ஒவ்வோராண்டும் எனக்கு ஆண்டிறுதியில் பரிசுகள் தொடர்ந்தன. இது, 1968இல் நான் பி.எஸ்சி முடிக்கும் வரை நீடித்தது.

பொதுவாக, எனது பள்ளியாண்டுகள், திமிரியில் வாழ்ந்த ஆண்டுகள் எனது பொற்காலம். ஏழாம் வகுப்பு முதலாகவே நான் படித்த பாடங்கள் இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கின்றன. கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அந்த மாதிரி. டெடிகேடட். ஏழாம் வகுப்பில் என்னுடன் ஒரே ஒரு முஸ்லிம் மாணவன்-அப்துல் மாலிக்- படித்தான். வகுப்பிலேயே மிகச் சிறியவன் (9) நான் என்றால், மிகப் பெரியவன் (16) வயது அவன். காரணம், முஸ்லிம் மதர்ஸாவில் படித்துவிட்டு வந்தவன். அவனும் செலக்-ஷனில் தோற்றுப்போய், நின்றுவிட்டான்.

அக்காலத்தில் இந்தி ஆசிரியர்களும் இருந்தார்கள். முதலில் இந்தி ஆசிரியராக இருந்தவர் ஒரு பிராமணர். திமிரிக்குப் பக்கத்தில் இராமப் பாளையத்தில் அவர் வீடு. பள்ளியில் இந்தி சரிவரச் சொல்லித்தரப் படுவதில்லை. எனவே அவரிடம் தனியாகச் சென்று பிராத்மிக் படிக்கத் தொடங்கினேன். அவரிடம் ராஷ்டிரபாஷா வரை தொடர்ந்தது. பிறகு அவர் வேறு ஊருக்கு மாறிவிட்டார். அப்துல் கவுஸ் என்று இன்னொருவர் வந்தார். அவர் வீட்டுக்குச் சென்று ப்ரவேசிகா படிப்பைத் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்வீட்டில் எங்கும் கோழிகள் திரிந்துகொண்டிருக்கும், எங்கும் கோழிக்கழிவுகள், முட்டைகள். எனவே செல்லுவதற்குப் பிடிக்காமல் தொடரவில்லை.

இடைநிலை ஆசிரியர்களில் சிலர் நன்றாக ஞாபகம் இருக்கிறார்கள். தமிழாசிரியர் ஜீவரத்தினம். நான் பிடி ஆசிரியனாகி தனிப்பட்ட முறையில் எம்.ஏ. தேர்வு எழுதச் சென்றபோது அவரும் என்னுடன் எம். ஏ. தேர்வுக்கு வந்தார் (ஆனால் ஃபெயில் ஆகிவிட்டார். அதே ஆண்டில்தான் நா.பார்த்தசாரதி (தீபம்)யும் என்னுடன் தேர்வு எழுதி, தோற்றுப்போனார்.)

மற்றொரு இடைநிலை ஆசிரியர் நடராஜ பிள்ளை. தன் பிள்ளைக்கு நக்கீரன், பெண்ணுக்கு நல்லினி என்று அழகான தமிழ்ப் பெயர்கள் வைத்திருந்தார். ஆங்கிலம் கற்பிப்பதில் வல்லுநர். அவர் பையன் என் நண்பன், வகுப்புத் தோழன்.

இன்னொரு ஆசிரியர் பெயர் நினைவில்லை. ஆனால் பெரிய தொந்தி. குண்டாக இருப்பார். தலைமுதல் இடுப்புவரை முக்கோணம் போல. அவருக்கு நாங்கள் வைத்திருந்த  பெயர் போண்டா வாத்தியார். இன்னொரு ஆங்கில ஆசிரியர் பெயர் நடேசன். நன்றாக ஆங்கிலம் கற்பிப்பார்.


கற்றதுதமிழ்

என்னிடம் முதுகலை பயின்ற மாணவி திருமதி. அகதா, முகநூலில் ஒரு குழுமத்தில் நிர்வாகியாக இருப்பதாகவும், அதற்காக என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தினைக் கற்றது தமிழ் என்ற தலைப்பில் தரவேண்டும் என்றும் கேட்டார். இவ்விதமே முன்னரும் சில அறிஞர்களின் அறிமுகங்களை வெளியிட்டிருப்பதாகக் கூறினார். அதற்காக நான் அளித்த சொற்றொகுதி இது.

–க. பூரணச்சந்திரன்

 

நான் என் வாழ்க்கைக் குறிப்புகளில் சிலவற்றை ‘நானும் என் தமிழும்’ (திரு. கோவை ஞானி வெளியிட்ட சிறு புத்தகம்), என் இணைய தளம் poornachandran.com ஆகியவற்றில் வெளியிட்டிருக்கிறேன். போதாதற்கு, விக்கிபீடியாவில் என் பெயரிலுள்ள பக்கத்திலும் ஓரளவு அவை சொல்லப் பட்டிருக்கின்றன.

பிறந்தது, வடஆர்க்காடு மாவட்டம் ஆர்க்காடு என்ற ஊரில், 1949இல். குடும்பம், சைவத்தையும் தமிழையும் போற்றுகின்ற ஒன்று. எனவே பிறப்பு முதலாகவே தேவார திருவாசகப் பனுவல்கள் முதலாக பாரதி, பாரதிதாசனார் பாடல்கள் வரை கேட்டு வளரும் வாய்ப்பிருந்தது. என் தாயாரும் இவற்றை எல்லாம் நன்றாகப் பாடக்கூடியவர்.

பொதுவாக, பள்ளிமுதல் கல்லூரி வரை முதல்மாணவனாகப் படித்தவன். கல்லூரியில் படித்தது பி.எஸ்சி இயற்பியல். பிறகு சென்னை ஆசிரியர் கல்லூரியில் பி.டி. சில ஆண்டுகள் பள்ளி ஆசிரிய வாழ்க்கை. தனிப்பட்ட முறையில் எம்.ஏ. தமிழ் பயின்று, பல்கலைக் கழக முதல்மாணவனாக கலைஞர் கையால் பட்டம் பெற்றேன். பிறகு பிஷப் ஹீபர் கல்லூரியில் பணி. 2007இல் ஓய்வு. சிலகாலம் புதுவை மையப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியும் ஆராய்ச்சிப் பணியும்.

பி.எஸ்சி படிக்கும்போதே குறுந்தொகை, கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்களை நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்துப் பயின்றவன். மு.வ. புத்தகங்கள் பல, தமிழ் பயிலுவதற்கு வேகம் அளித்தன. பிஎஸ்.சிக்காலப் படிப்புகளில் மிக முக்கியமானது, ஆர்.கே.சண்முகம் செட்டியார் எழுதிய சிலப்பதிகார புகார்க்காண்ட உரை. அதற்கு இணை  கிடையாது.

தமிழ் ஆர்வம் தொடர்ந்ததால் முதுகலைப் படிப்பு தமிழாக அமைந்தது. எனினும் பிறகு எம்.ஏ. ஆங்கிலமும் பயின்றேன். அதற்குப் பிறகு பயின்றவற்றுக்குக் கணக்குக் கிடையாது. மார்க்சியமும், அமைப்புவாதமும், பிற பல கோட்பாட்டுத் துறைகளும் பலதுறை வாசிப்பினை வேண்டுபவை.

1990இல் எனது முதல் புத்தகம், ‘அமைப்பு மைய வாதமும் பின்னமைப்பு வாதமும்’ வெளிவந்தது. தொடர்ந்து தமிழ் இலக்கிய விமரிசகன், இலக்கியக் கோட்பாட்டாளன் என்னும் வரவேற்பு கிடைத்தது. இன்றுவரை சொந்தமாகப் பத்தொன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். இவற்றுள், ‘கவிதையியல்’, ‘கதையியல்’, போன்றவை நன்கு பாராட்டப் படுகின்றன. இதுவரை 42 புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன். மொத்தம் 61 நூல்கள். இன்னும் எழுதுவேன், எழுதிக் கொண்டே இருப்பேன்.

2011இல் ‘வரவர ராவின் சிறைக் குறிப்பு’களை மொழிபெயர்த்தமைக்கு ஆனந்தவிகடன் விருது கிடைத்தது. பிறகு 2014இல் நாமக்கல் சின்னப்ப பாரதி அமைப்பின் சார்பாகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது. 2016இல் ‘இந்துக்கள் மாற்று வரலாறு’ நூலுக்காக மீண்டும் ஆனந்தவிகடன் விருது. ‘பொறுப்புமிக்க மனிதர்கள்’ என்ற நாவல் மொழிபெயர்ப்புக்காக அதே ஆண்டு சாகித்திய அகாதெமி விருது. பிறகு 2017இல் கலைஇலக்கியப் பெருமன்றத்தின் பாராட்டு. அந்த ஆண்டின் இறுதியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, ‘திறனாய்வுச் செம்மல்’ என்ற பட்டமும் விருதும் வழங்கியது. சென்ற ஆண்டு கோவை திசைஎட்டும் மொழிபெயர்ப்பு அமைப்பு சிறந்த மொழிபெயர்ப்பாளராகத் தேர்வு செய்தது.

கடைசியாக மொழிபெயர்த்து, இந்த ஆண்டு புத்தகச் சந்தையில் வெளிவந்தவை, பேராசிரியர் லாஸ்கியின் ‘அரசியல் இலக்கணம்’, ‘வரலாற்றில் பிராமண நீக்கம்’ ஆகிய நூல்கள். வரக் காத்துக் கொண்டிருப்பவை ‘லெனின் சந்தித்த நெருக்கடிகள்’ போன்ற சில. இறுதியாக இந்த ஆண்டு வெளிவந்த என் சொந்தப் புத்தகம், ‘சான்றோர் தமிழ்’. இப்போது மொழிபெயர்த்துக் கொண்டிருப்பது, அல்தூசரின் ‘மார்க்ஸுக்காக’ என்ற தத்துவ நூல்.

எழுத்திலும் எழுத்துக்கான பாராட்டுப் பெறுவதிலும் ஓரளவு நிறைவான வாழ்க்கைதான் இல்லையா? ஆனால் மனத்தில் வெறுமைதான் மிஞ்சியிருக்கிறது. இன்றைய தமிழ்நாட்டின் மிக மோசமான நிலைதான் முக்கியக் காரணம். பெளதிக, புவியியல் அமைப்பிலும், மனங்களிலும் பாலைவனமாகி வரும் தமிழகம். அதைச் சரிசெய்ய நேரடியாகப் போராட்டங்களில் பங்கேற்க உடல்நலம் இடம் தரவில்லையே என்ற எண்ணம். கால் முறிவு. ஒரு கண் பார்வை முற்றிலும் இன்மை. மறுகண்ணும் அரைகுறைப் பார்வையே. எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழர்களின் உணர்வற்ற, மானமற்ற, அநீதிகள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழும் இன்றைய வாழ்க்கை. ஏன் தமிழனாகப் பிறந்தோம் என்ற சலிப்புதான் எஞ்சுகிறது.


என் இளமைக் காலம்-2

பல விஷயங்கள் இன்று நினைக்கும்போது எனக்கு அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும் கூட இருக்கின்றன. உதாரணமாக எங்கள் காலத்தில் நாங்கள் யாரும் உயர்நிலைப் பள்ளிக்குக் கூட (பதினோராம் வகுப்பு வரை) செருப்பணிந்து சென்றதில்லை. அநேகமாகப் பல வீடுகளில் மின்சாரம் கிடையாது. ஆகவே மின்விளக்கு, மின் விசிறி போன்றவை அபூர்வம்… இப்படிச் சொல்லிக் கொண்டே செல்லலாம். (இன்று என் பேரன்மார்கள், எல்கேஜியிலேயே ஷூ போட்டுக் கொண்டுதான் செல்கிறார்கள், இண்டர்நெட்டில் பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள்.)

ஆனால் எனக்கு அதிர்ச்சி தருவது மக்கள்தொகை விஷயம்தான். நான் பிறந்த அக்காலம், சுதந்திரம் வந்தபின் இரண்டு ஆண்டுகள். அநேகமாக மக்கள்தொகை 40 கோடிக்குமேல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது எழுபதாண்டுகள் கழித்துப் பார்த்தால் அதைப்போல் மூன்றரை மடங்கு அதிகமாக இருக்கிறது. உண்மையில் பயமாக இருக்கிறது.

ஒரு நாட்டின் புவியியல் பரப்பு அதிகரிப்பதில்லை. உணவு உற்பத்தி ஓரளவு அதிகரிக்கிறது. (மால்துஸ் சொன்னதுபோல அரித்மெடிக் புரொக்ரஷனில்-அதாவது, கூட்டல் வீதத்தில்.) மக்கள் தொகையோ பெருக்கல் வீதத்தில் –அதாவது நான்கு, பதினாறு, அறுபத்தினாலு, இருநூற்று ஐம்பத்தாறு என்பதுபோல– அதிகரிக்கிறது. இவ்வளவு பேருக்கு உணவும் நீரும் எங்கிருந்து கிடைக்கும்?

நியாயமாக நமது அரசாங்கம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த நல்ல முயற்சி எடுத்திருக்க வேண்டும். எடுக்கவில்லை. உதாரணமாக இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசாங்க உதவிகளோ, வேலை வாய்ப்போ கிடையாது என்பது போன்ற நடைமுறைகளைச் செயல்படுத்தியிருக்கலாம். இவற்றைத் தொடக்கத்திலிருந்தே செய்திருந்தால் எவ்வித எதிர்ப்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

சரி போகட்டும். எங்களுக்குச் சொத்து சுகங்கள் இல்லை. குத்தனூரில் நாலுகாணி புஞ்சை இருந்தது.  (ஒரு காணி என்பது ஒரு ஏக்கரைவிடச் சற்று அதிக நிலப் பரப்பு.) அதை நாங்கள் மேற்பார்வை செய்ய இயலாததால் சாமி கவுண்டன் என்பவனிடம் குத்தகைக்கு விட்டிருந்தோம். அதில் கடலைக்காய் (வேர்க்கடலை) மட்டுமே விளையும் என்பான். அதில் என்ன பயிரிட்டான், எவ்வளவு விளைந்தது, எவ்வளவுக்கு அவன் விற்றான் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஏதோ வருடத்திற்கு நூறுரூபாய் போல கொண்டுவந்து தருவான்.  கடைசியில் அந்த நிலத்தையும் என் படிப்புச் செலவுக்கு என்ற பெயரில் 1963இல் அவனுக்கே அறுநூறு ரூபாய்க்கு விற்றுவிட்டோம். (அதாவது, ஒரு காணி  புஞ்சை, நூற்றைம்பது ரூபாய்க்கு.  இதுவே இன்றைய நோக்கில் அதிசயம்தான்!)

ஆனால் இது ஒன்றும் பெரிய அதிசயமல்ல. என் தாத்தாவின் தாத்தா-அவர் பெயர் சண்முகம் பிள்ளையாம்–யாரோ ஒரு பார்ப்பனர் கேட்டார் என்று மூன்று காணி நிலத்தை இலவசமாகவே கொடுத்துவிட்டாராம். கேட்டபோது, “பார்ப்பனர்கள் அவர்பூதேவர்கள், அவர்களுக்கு தானம் செய்தால் கோடி புண்ணியம்” என்றாராம்.

என் தந்தைவழிப் பாட்டனாருடன், பாட்டியுடன் பிறந்தவர்கள் எனக்குத் தெரிந்து யாரும் இல்லை. அடுத்த தலைமுறையில், என் அப்பாதான் வீட்டில் மூத்தவர். அவருக்குப் பின் இரண்டு சகோதரர்கள். முதல் தம்பி, மகாதேவன். இரண்டாவது தம்பி சிவலிங்கம். (பிள்ளை பட்டம் போட்டுக் கொள்வதெல்லாம் என் தாத்தா காலத்தோடு போய்விட்டது.) என் தந்தையார் படித்தது எட்டாம் வகுப்புதான். என் தாயின் படிப்பு ஐந்தாம் வகுப்பு. ஆனால் என் அப்பா, தம் இரு தம்பிகளையும் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க வைத்து, பிறகு செகண்டரி கிரேடு பயிற்சியும் முடித்துவைத்தார். மகாதேவன் முதலிலிருந்து கடைசிவரை செகண்டரி கிரேடு ஆசிரியராகவே இருந்தார். சிவலிங்கம் பிறகு தாமாக பி.ஏ. பி.டி. படித்து பி.டி. ஆசிரியராக இருந்தார். மகாதேவனுக்கு ஒரு மகள்,  மூன்று மகன்கள். சிவலிங்கத்திற்கு முதலில் மூன்று மகள்கள், கடைசியாக ஒரு மகன்.

என் தாய்வழிச் சொந்தங்கள்தான் அதிகம்.

 

 

 


என் இளமைக் காலம்-1

நான் ஆர்க்காடு நகரத்தின் ஒரு பகுதியான முப்பது வெட்டியில் பிறந்தேன். ஆண்டு 1949. சித்ராபவுர்ணமி முடிகின்ற விடியற்காலை. அதனால்  எனக்கு நிறைமதி என்று பெயர் வைத்தார் என் தந்தையார். என் தந்தை பெயர் கு.ப. கணேசன். (குத்தனூர் பழனிப்பிள்ளை கணேசன்.)  அம்மா சக்குபாய். அப்பாவின் தந்தை-தாயான, தாத்தாவும் பாட்டியும் எங்களுடனே இருந்தனர். என் தந்தைவழிப் பாட்டனார் பழனிப்பிள்ளை. தந்தைவழிப் பாட்டி தைலம்மாள்.

என் தாத்தாவுக்குப் பாட்டி மூன்றாம் தாரம். வயது வித்தியாசம் கொஞ்சம் அதிகம்தான். முதல் இரண்டு தாரங்கள் அடுத்தடுத்து இறந்துவிட்டனராம். மூன்றாம் தாரமாகிய தைலம்மாளின் பிள்ளைதான் என் தந்தை. என் தாத்தா  குத்தனூரில் கணக்குப் பிள்ளையாக இருந்தாராம். அவர் தந்தை  பெயர் ஆறுமுகம் பிள்ளை. பாரம்பரியமாக (இசும்பாக என்பார்கள்) கணக்கு வேலை என் தாத்தாவுக்கு வந்தது. ஏறத்தாழ நாற்பது வயதிலேயே நரம்பு இழுப்பு வந்து கைகள் உதறத் தொடங்கிவிட்டன. எனவே அவரால் கணக்கு எழுத முடியவில்லை. கணக்கு வேலையை விட்டுவிட்டார். வேறு வேலையும் கிடையாது.  இவையும் இவைபோன்ற பிற குடும்பச் செய்திகளும் பின்னால் நான் தெரிந்துகொண்டவை.

ஏறத்தாழப் பதினோராம் வகுப்பு– 14 வயதில் (1963இல்) முடித்தவரை துண்டுதுண்டான ஞாபகங்கள்தான் இருக்கின்றன.

மூன்று நான்கு வயதளவில் இராணிப்பேட்டை பிஞ்சியில் இருந்தோம் என்ற ஞாபகம் இருக்கிறது. பாலாற்றின் வடக்கில் இராணிப்பேட்டை; தெற்கில் ஆர்க்காடு. (காவிரிக் கரையில் திருவரங்கமும் திருச்சி நகரமும் போல).

ஒரு தலைமையாசிரியர் என் பெயரை பூரணச்சந்திரன் என்று மாற்றியதைப் பற்றி ‘நானும் என் தமிழும்’ கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். (அக்காலத்தில் அது ‘பூர்ணசந்தர்’. பாலச்சந்தர் என்பதுபோல.) அவர்தான் என்னைப் பள்ளியில் சேர்க்கவும் காரணமாக இருந்தவர். நான் மிகவும் அக்காலத்தில் சூட்டிகையாக இருந்திருப்பேன் போலும். ஐந்தாம் வயதிலேயே (ஆயுதபூசை சமயத்தில்) என்னை ‘டபுள் புரமோஷனாக’ இரண்டாம் வகுப்பில் போட்டு விட்டார். முதல் வகுப்பில் நான் சேரவேயில்லை. அதுபோலவே ஐந்தாம் வகுப்பும் படிக்கவில்லை. மறுபடியும் ஒரு டபுள் புரமோஷன். நேராக ஆறாம் வகுப்பில் சேர்ந்துவிட்டேன். இதனால் இரண்டாண்டுகள் மிச்சம்தானே என்று நினைக்கிறீர்களா? இதன் பலனைப் பின்னால் அனுபவித்தேன்.

ஐந்தாம் வயதில் இரண்டாம் கிளாஸ், ஆறாம் வயதில் மூன்றாம் கிளாஸ், ஏழாம் வயதில் நான்காம் கிளாஸ், ஐந்தாம் வகுப்பு படிக்காததால், எட்டாம் வயதில் ஆறாம் கிளாஸ் (உயர்நிலைப் பள்ளிக்கு) வந்துவிட்டேன்.

ஏறத்தாழ மூன்று-நான்கு வயதில் என் பாட்டியிடம் கதை கேட்ட சம்பவங்கள் ஏதோ நினைவில் மங்கலாக இருக்கிறது. எனக்கு நான்கு வயது முடிந்த சமயத்தில் இராணிப் பேட்டை வக்கீல் தெருவில் ‘பாயம்மா’ எனப்பட்ட ஒருவர் வீட்டில் வாடகைக்கு இருந்தோம். மார்கழி மாதப் பின்னிலவுக் காலத்தில் ஐந்து மணிக்கெல்லாம் என் தாயார் வீட்டுக்கு வெளியில் நீர்தெளித்துக் கோலமிட்ட காட்சிகள் நிழலாடுகின்றன. காலைக் கடன் முடிக்க வக்கீல் தெருவின் மேற்புறத்தில் மணல்வெளியில் வெகுதூரம் செல்வது வழக்கம். அப்போதே எனக்கு மலச்சிக்கலும் தொடங்கிவிட்டது.

மற்றொரு காட்சி. இது பாயம்மாள் வீடு அல்ல. வேறொரு வீடு. அதே வக்கீல் தெருவில். வீட்டின் முன்புறம் கிணறு. மரங்கள். நிழலில் அண்ணாந்து படுத்தவாறு (முற்பகல், ஏறத்தாழ பத்து-பதினொரு மணி) நீல வானம்-அதில் மிதந்து வேகமாகச் செல்லும் வெண்பஞ்சுப் பொதிகள்- மறைந்து மறைந்து ஒளிவீசும் சூரியன். பின்நிலவுக் காலம் ஆனதால் நிலவின் கீற்றும் இருந்தது. ஏனோ தெரியவில்லை, அக்காலம் முதல் இன்று வரையிலும்கூட- வானத்தில் வெண்மேகங்களையும் சூரியனையும் நிலவையும் பார்த்தவாறு இருப்பது  எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.

வக்கீல்தெருவின் வடமேற்குக் கோடியில் இராணிப்பேட்டை பஸ் நிலையம். நாங்கள் சற்றுத் தென்புறம் தள்ளிக் குடியிருந்தோம். பஸ்நிலையம் நோக்கிச் சென்றால், ஒரு பத்து வீடுகள் தள்ளி, ஒரு பெரிய வீட்டில்-ஒரே ஒரு வீட்டில்தான்- அந்தக் காலத்தில் ரேடியோ ஒலிக்கும். எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஒரு பெரிய பீரோ சைஸில் உள்ள ரேடியோ. அதில் பல சிவப்புக் கோடுகள் இருக்கும். அதில் நகர்கின்ற ஒரு முள். இலங்கை வானொலிதான் அதிகமாக வந்தது என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.

பிறகு பக்கத்திலேயே வேலுமுதலித் தெருவுக்குக் குடிபெயர்ந்தோம். இராணிப் பேட்டை பஸ்நிலையத்திற்கு மிக அருகில். அதே தெருவில் கிழக்கே போய் இடப்புறம் திரும்பினால் உள்ள தெருவில்தான் நான் படித்த தொடக்கப் பள்ளி. இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்புகள் படிக்கும்போதெல்லாம் பகலில் பள்ளியிலேயே தூங்கிவிடுவது வழக்கம். மாலையில் அம்மாவோ பாட்டியோ யாரோ வந்து அழைத்துக் கொண்டோ   தூக்கிக் கொண்டோ போவார்கள். எலிமெண்டரி பள்ளி வாத்திமார்கள் எவரும் என் நினைவில் இல்லை. இரண்டு டீச்சர்கள்- ஒருவர் பெயர் திருமதி ஜாய், மற்றொருவர் லூர்து மேரி– என் பள்ளி போட்டோவில் இருந்தது ஞாபகம் இருக்கிறது. ஆறாம் வகுப்பில் டீச்சராக இருந்தவர்கள்.

ஏதோ ஒரு வகையில் தமிழும் இசையும் என் வீட்டில் கலந்திருந்தன.  எனக்கும் என் தங்கையர்க்கும் என் தந்தையார் இட்ட பெயர்களே அதற்கு நல்ல சான்று. பொதுவாகவே எங்கள் வீட்டில் திருப்புகழ், தேவாரம், தாயுமானவர், வள்ளலார் போன்றவர்களின் பாக்கள் ஆகியவை பாடப்படும். என் தாயாருக்கு நல்ல இசைஞானம் உண்டு. கேள்வி ஞானம்தான். முறையாகக் கற்றுக்கொள்ள அக்காலத்தில் வக்கேது? அக்காலத்தில் திரைப்படங்களில் வந்த பாரதியார், பாரதிதாசனார் பாடல்களை  எல்லாம் அதேபோல நன்றாகப் பாடுவார். ‘எப்படிப் பாடினரோ’, ‘பராத்பரா  பரமேஸ்வரா’ போன்ற பாக்களை எல்லாம் பாடுவதோடு, திரைப்படங்களில் வந்த ‘மாடுகள் மேய்த்திடும் கண்ணன்’ ‘தலைவாரிப் பூச்சூடி உன்னை’ ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ’ போன்ற பாடல்களைப் பாடுவார். அதனால் பொதுவாக எனக்கு இசையில் நல்ல ஈடுபாடு இருந்தது. அக்காலத் திரைப்படப் பாடல்களை எல்லாம் நானும் பாடுவேன். அநேகமாக எனக்கு ஐந்துவயதான சமயத்தில்தான் ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படம் வந்ததாக ஞாபகம். பள்ளிக்கூடத்தில் பாடச் சொன்னதால், ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ’, ‘முள்ளில் மலர்ந்த என் ரோஜா’ போன்ற பாடல்களைப் பாடியது நினைவிருக்கிறது.

வேலுமுதலித் தெரு பஸ்நிலையத்திலிருந்து மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் தெரு. நாங்கள் இருந்த தெற்கேபார்த்த வீட்டில் நடுவில் ஒரு கூடம். அதன் மூன்று புறமும் மூன்று குடும்பங்கள். நான்காம் பக்கம் கொல்லைப் புறம் செல்லும்  வழி. மூன்று குடும்பங்களில் எங்களுடையது நடுவில். தெற்குப் புறமாக (வாசல் பக்கம்) ஒரு முதலியார் வீடு. வடக்குப் புறம் எங்களைப் போன்றே ஒரு பிள்ளைமார் வீடு. வீடு என்றால், ஒரு சிறிய அறை, ஒரு சமையலறை -அவ்வளவுதான். வெளியில் வந்தால் கூடம்தான். தெற்குப் புறவீட்டருகிலேயே தெருவுக்குச் செல்லும் நடை.  தெருவை ஒட்டிய தெற்குப் புற வீட்டில் ஒரு கிழவர் இருந்தார். வெளியே இருந்த சிறிய திண்ணையில் பெரும்பாலும் உட்கார்ந்திருப்பார். என்னிடம் காலணா அல்லது அரையணா கொடுத்து பஸ்நிலையத்துக்கு பக்கத்திலிருந்த கடையில் ‘கவாப்பு’ வாங்கிவரச் சொல்வார் (அது ஏதோ மாமிச உணவு போலும்.) நான் வாங்கி வந்து தருவேன். இதை அறிந்து என் அம்மா கடுமையாகக் கண்டித்தார். அந்தக் கிழவரையும் திட்டினார். (நாங்கள் வள்ளலார் வழிவந்த சுத்த சைவக் குடும்பம்!).

அந்தக் காலத்தில்தான் – ஏறத்தாழ 1956ஆக இருக்கலாம்- ஜவகர்லால் நேரு- இந்தியப் பிரதமர்- இராணிப்பேட்டைக்கு வந்தார். உடன் குருஷ்சேவ், புல்கானின் இருவரும் வந்ததாக ஞாபகம். இராணிப் பேட்டையில் ‘ஐவிபிஎம்’ எனப்படும் கால்நடை மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிவைத்தார் நேரு. ஒருவாரம் ஒரே கோலாகலமாக, திருவிழாப் போல இருந்தது. எங்களை எல்லாம் நேருவைப் பார்க்க (அல்லது நேரு எங்களைப் பார்க்க) வரிசையாக முத்துக்கடையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லுகின்ற  நெடுஞ்சாலை ஓரங்களில் காரை என்ற ஊருக்குப் பிரிகின்ற சாலைவரை நிற்க வைத்திருந்தார்கள். அதன் எதிர்ப்புறம் ஒரு சீர்திருத்தப் பள்ளி. (ஜெயில் ஸ்கூல் என்று  சொல்லுவார்கள்.) அதிலிருந்து வாராவாரம் பிள்ளைகள் யூனிபாரம் அணிந்து பேண்டு வாசித்துக் கொண்டு ஊர்வலமாக வருவார்கள். காசு வாங்கிக் கொண்டு போவார்கள்.

நான் அப்போதெல்லாம் முத்துக்கடைப் பக்கம் சுற்றி வருவேன். அது சென்னை-சித்தூர்-பம்பாய் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்த முக்கியமான நிறுத்தம். பல ஊர் லாரிகளும் அங்கே நிற்கும். குறிப்பாக வடக்கே ஆந்திராவில் சிகந்தராபாத், கர்னூல், மெகபூப் நகர் என்றெல்லாம். அந்த டிரைவர்கள் கொண்டுவரும் தீப்பெட்டிகளில் அந்த ஊர்ப் பெயர்கள் இருக்கும். அத்தீப்பெட்டிகளில் என்னை மிகவும் கவர்ந்தது, சீட்டா பைட் என்று பெயரிட்ட, ஒரு ஆடவன் அரிவாளுடன் சிறுத்தையுடன் சண்டையிடும் படத்தைக் கொண்ட தீப்பெட்டி.

ஐந்துவயதில் மலேரியா காய்ச்சல் வந்து ஏறத்தாழ செத்துப் பிழைத்தேன். இராணிப் பேட்டையில் அப்போது புகழ்பெற்றிருந்த ‘ஸ்கடர்’ ஆஸ்பத்திரியில்தான் சேர்த்திருந்தார்கள். அப்போதெல்லாம் ஸ்கடர் ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள ‘நேரோகேஜ்’ ரயில்பாதையில் வாலாஜாரோட்டிலிருந்து இராணிப்பேட்டைக்கு இரயில் வரும். ஈ.ஐ.டி. பாரி கம்பெனி இராணிப் பேட்டையில் இருந்ததால்  அரசாங்கம் செய்த ஏற்பாடு அது.

அக்கால வேலுமுதலித் தெருவில் ஒவ்வொரு வீட்டிலும் வாசற்படி தாண்டி வீடு முடியும் இடத்தில் கக்கூஸின் வெளிப்புறம்  ஒரு தகட்டில் மூடப்பட்டிருக்கும். யாரோ ஒருவர் காலை 6-7 மணி வாக்கில் கையில் ஒரு மலவாளியுடனும் மறுகையில் தகரத்துடனும் வருவார். தகட்டைத் திறந்து, தகரத்தால் மலத்தை வழித்து வாளியில் போட்டுக் கொண்டு மெதுவாக நடந்து அடுத்த வீட்டுக்குப் போவார். அக்கால நகர்ப்புறங்களில் மலம் எடுக்கும் நடைமுறை இதுதான். பின்னாட்களில் இதைப் பற்றி நினைத்தபோது, இவர்கள் எல்லாம் சேக்கிழார் பாடினாரே “ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார்” என்று, அதையும் தாண்டிய முதிர்ச்சி பெற்ற முனிவர்களாக, சித்தர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றும். அவர்கள் வாழ்க்கை நிலையையும் சேரிகளுக்குச் சென்று கவனித்திருக்கிறேன். முடிந்தால் அது பற்றிப் பின்னால்.

தெருவின் ஒருபுறம் சாக்கடை இருக்கும். மறுபுறம் இருக்காது. இருந்தாலும் வேறுபாடின்றி சிறியவர் பெரியவர் எல்லாம் சிறுநீர் கழிக்க தெரு ஓரங்களைப் பயன்படுத்துவார்கள்.

எனக்குப் பின் இரண்டாண்டுகள் கழித்து என்வீட்டில் ஒரு தங்கை பிறந்தாள். அவளைத் தங்க (தங்கை)ப் பாப்பா என்று திரும்பத் திரும்ப எனக்குச் சொல்லப்போய், தங்கம் என்று நானே அவளுக்குப் பெயர்வைத்ததாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அவள் நீண்டநாள் இருக்கவில்லை. ஒன்றரை வயதிலேயே எக்காரணத்தினாலோ அக்குழந்தை இறந்து போயிற்று. அந்த துக்கம் ஆறாமல் அந்தக் காலத்திலேயே மனத்தில் இருந்தது கனவுபோல் இருக்கிறது.  அடுத்து எனக்கு மூன்றரை வயதானபோது  மற்றொரு பெண் குழந்தை எங்கள் வீட்டில் பிறந்தாள். என் தந்தையார் அவளுக்கு அழகாக அறச்செல்வி என்று பெயரிட்டிருந்தார். ஆனால் அவளுக்கும் பிறந்தது முதலே ஆஸ்துமா, காசநோய் இரண்டுமே இருந்தன என்று நினைக்கிறேன். அவளுக்கு வளர்ச்சி இல்லை. கால்கள் மெலிந்து நோஞ்சானாக இருக்கும். என் அப்பா, அம்மா, நான் மூவரும் அவளைத் தூக்கிக் கொண்டு பாலாற்றுக்குச் சென்று வருவோம். ஆற்றுமத்தியில்  மணலில் கால்களைப் புதைத்து வைத்தால் அவை வலுப் பெறும் என்று சொன்னார்கள். நான் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த போதுதான் அவள் நடக்க ஆரம்பித்தாள். ஆறாம் வகுப்பு படிக்கும் வரைதான் நான் இராணிப்பேட்டையில் இருந்தேன். அப்போது என் தந்தையாரை திமிரி போர்டு உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள். திமிரியில் என் வாழ்க்கை ஒன்பதாம் வயது முதலாகத் தொடர்ந்தது.

இராணிப்பேட்டை அரசு (அக்காலத்தில் மாவட்ட போர்டு)  உயர்நிலைப் பள்ளியில் நான் கடைசியாக ஆறாம் வகுப்பு படித்தேன். அக்காலப் பாடத்திட்டம் மிக நன்றாக இருந்தது. ஆறாம் வகுப்பில்தான் ஆங்கிலம் ஆரம்பம். தமிழில் பொதுத்தமிழ், சிறப்புத் தமிழ் என்று இரண்டு பிரிவுகள் இருந்தன. சிறப்புத்தமிழில் ஆறாம் வகுப்பிலேயே எங்களுக்குச் சிலப்பதிகாரக் கதை நான்-டிடெயிலாக இடம் பெற்றிருந்தது. பிறகு கணக்கு, அறிவியல், சமூகப் பாடம். இவை அல்லாமல் குடிமை வகுப்பு என்று ஒன்று இருந்தது. பாரதியார் பாடல்கள் போன்ற தேச(பக்தி)ப் பாக்கள் முதலாகப் பயனுள்ள பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். கடைசியாக ‘ட்ரில்’ வகுப்பு. கட்டாயம் மூன்றரை மணிமுதல் நாலரை மணிவரை ட்ரில் பீரியடு இருக்கும். உடற்கட்டு உள்ள பையன்களுக்கு வாய்ப்பாக உயரத்தாண்டுதல், நீளத்தாண்டுதல் முதலிய ஸ்போர்ட்ஸ்களிலிருந்து கால்பந்து, கைப்பந்து, தடிப்பந்து வரை விளையாட்டுகளும் கற்பிக்கப் பட்டன.

(தொடரும்)

 

 

 

 

 

 

 


என் வாழ்க்கையில் ஓர் அலை

இன்று சிவாஜிகணேசன் நடித்த ‘தங்கை’ என்ற படத்தைப் பார்த்தேன். அதை நான் முதல் முறை பார்த்தது அநேகமாக 1966ஆம் ஆண்டு இறுதியாக இருக்கலாம். பிஎஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். ஒரு காரணத்தினால் அந்தப் படம் கொஞ்சம் என்னை மிகவும் பாதித்தது. வேறொன்றுமில்லை. அதில் வரும் கதாநாயகனுக்குக் காசநோயால் அவதிப்படும் ஒரு தங்கை இருப்பாள். அதேபோல எனக்கும் ஒரு தங்கை இருந்தாள்.
எனக்கு மூன்று வயது இளையவள். என் அப்பா ஆசையாக அறச்செல்வி என்று பெயரிட்டிருந்தார். எனக்குச் சிலகாலம் உயிராக இருந்தாள். ஆனால் காசநோய் அவளுக்கு.
காசநோய் மருத்துவ மனையில் சேர்க்கவேண்டும் என்ற அறிவுகூட என் தந்தை-தாய்க்கோ எனக்கோ இல்லை. தினமும் இருமி இருமி இரத்தம் உமிழ்ந்து அவள் படும் பாடு எவர் நெஞ்சையும் உருக்கும். பிறகு பெரிய இளைப்பு வந்து சோர்ந்து படுத்துக் கொள்வாள். சிறிய வயதிலிருந்தே அந்த நோய் தொற்றிக்கொண்டதால் அவள் வளர்ச்சியே குன்றியிருந்தது. படத்தில் வந்த தங்கை பிழைத்துக் கொண்டாள். கதாநாயகனின் காதலியாக இருந்த டாக்டர் அவளைக் காப்பாற்றிவிட்டாள். எனக்கு அப்படி யாரும் இல்லை. என் தங்கை இறந்துபோனாள்.
1968 மேயில் பட்டப்படிப்பை முடித்தேன். அநேகமாக ஜூன்மாதம் ரிசல்ட் வந்திருக்கலாம். 1968 ஆகஸ்டு 29ஆம் நாள் அணைக்கட்டு உயர்நிலைப் பள்ளியில் பயிற்சிபெறாத ஆசிரியனாகச் சேர்ந்த பிறகாவது அவளை நான் ஆஸ்பத்திரியில் சேர்த்து கவனிக்க ஏற்பாடு செய்திருக்கவேண்டும். செய்யவில்லை. விட்டுவிட்டேன்-எப்படியோ. அடுத்த ஆண்டு வல்லம் ஆரணி உயர்நிலைப் பள்ளிக்கு மாறினேன். (எல்லாம் தற்காலிகப் பதவிகள், ஜூன் முதல் ஏப்ரல்வரைதான் போஸ்டிங்). எழுபதாம் ஆண்டு ஜனவரியாக இருக்கலாம்-இப்போது நாள் மறந்துவிட்டது-அவள் துடிதுடித்து இறந்து போனாள். ஓரளவு சம்பாதித்தும், காப்பாற்ற முடியாத ஒரு மடத்தனமான அண்ணனாக இருந்தது பின்னர்தான் எனக்கு உறைத்தது.
அதற்குப் பிறகுதான் வேலூரை அடுத்த அடுக்கம்பாறையில் அரசாங்கக் காசநோய் மருத்துவ மனை தொடங்கினார்கள் என்று நினைக்கிறேன். முன்னாலேயே இருந்திருந்தால் ஒருவேளை அவள் அங்குச் சேர்க்கப் பட்டிருக்கக்கூடும். நிச்சயமாகத் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கும் அளவுக்கு எங்களிடம் காசு இல்லை. அதைவிடப் பெரியது எங்கள் மடத்தனம், அறியாமை. என் பெற்றோர் மட்டுமல்ல, நானும்கூட கிராமத்தின் கள்ளமற்ற தன்மையோடு இருந்துவிட்டோம்.
அந்தக் காலத்தில் கந்துவட்டிக்குப் பணம் கடன் வாங்கியாவது என்னை என் பெற்றோர் படிக்க வைத்தார்கள். பட்டப்படிப்பை மிகவும் முதல்தரமாக (பௌதிகத்தில் டி= வாங்கி) பத்தொன்பதாம் வயதின் தொடக்கத்திலேயே முடித்திருந்தும் வழிகாட்ட ஒருவரும் இல்லை. என் கல்லூரி பௌதிகத் துறைத் தலைவர் நினைத்திருந்தால் வழிகாட்டி யிருக்கலாம். ஆனால் அந்த சுந்தரராஜ ஐயங்கார், பார்ப்பனச் சாதியினருக்கு மட்டும்தான் வழிகாட்டினார். எங்களைச் சீயென்று விரட்டிவிட்டார், ஏமாற்றினார் என்றுகூடச் சொல்லலாம். அன்று எனக்குத் தெரிந்த ஒரே வேலை ஆசிரியர் வேலைதான். மேற்கொண்டு வேறு என்ன படிக்கலாம், என்ன வேலை செய்யலாம்-எதுவும் தெரியாது.

பதினேழு வயதில் இறந்துபோன என் தங்கையை இன்று நினைத்துக் கொள்கிறேன். 49 ஆண்டுகள் ஆயிற்று. அவள் முகம் என்னைக் குற்றம் சாட்டுகிறது. ஆனால் என்னசெய்ய?
சரி, இன்னொரு நாள் இன்னொரு அலையைக் காணலாம்.