ஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்

ஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்

இக்காலத்தில் பன்னாட்டுத் தொடர்பு மிகுதியாகி விட்டது. பன் னாட்டுச் செய்திகள் வாசிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே பல மொழிகள் பேசப்படுகின்றன. அந்தந்த கலாச்சாரத்தைச் சேர்ந்த மனிதர்கள், இடங்கள் போன்றவற்றின் பெயர்கள் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன. ஆனால் அப்பெயர்களைச் சரிவர உச்சரிப்பதில் எவரும் அக்கறை காட்டுவதில்லை. சரிவர ஒலிபெயர்ப்புச் செய்வதில்லை. அதிலும், தமிழில் வடநாட்டு மொழிகளில் உள்ள சில ஒலிகள் இல்லாதபோது, உச்சரிப்பும் தவறாகிறது. மேலும் பெரும் பாலான தமிழ் நாட்டவர் ஹிந்தி போன்ற மொழிகளைக் கற்றுக் கொள்வதும் இல்லை.

சரி, தமிழில் நாம் தவறாக உச்சரித்தால்தான் என்ன? வட நாட்டவரும் நம் பெயர்களைத் தவறாகத் தானே உச்சரிக்கிறார் கள்? இப்படிச் சிலர் கேட்கிறார்கள். இதற்கு இரண்டு விடைகள் சொல்ல முடியும். ஒன்று, தமிழ் நாட்டைத் தவிரப் பிற மாநிலங்களில், வடமொழி அட்சரங்கள் அப்படியே உள்ளன. அதனால் அவர்கள் சரியானபடி உச்சரிக்க முடிகிறது. இன்னொன்று, அவர்கள் தமிழ்ப் பெயர்களைத் தவறாக உச்சரித்தால்

நாமும் அப்படியே தவறாக உச்சரிக்க வேண்டுமா என்ன?

வடநாட்டு மொழிகள் பலவற்றில் சொற்கள் அகரத்தில் (குறில்) முடியும் தன்மை படைத்தவை. அவற்றைத் தமிழ்ப்படுத்தும்போது அவற்றை ‘ஆகாரமாக்குதல்’ தவறு. உதாரணமாக ‘பரத’ என்பது வடநாட்டுச்சொல். இதை பரதன் என்று தமிழாக்குவது மரபே ஒழிய ‘பரதா’ என்று நீட்டக்கூடாது. ‘ராம’ என்ற சொல்லை இராமன் என்று ஆக்குவதே தமிழ் மரபு. ‘ராமா’ என்பது ஆங்கிலத் தாக்கத்தினால் விளைந்த பிழை. அதேபோல ‘பரத’ என்பதை ‘பரத்’ என்று ஆக்குவதும் இந்திமொழியை அரைகுறையாகக் கற்றவர்கள் கடைசி அகரத்தைவிட்டுப் படித்ததால் ஏற்பட்ட பிழையே. ஆனால் இக்காலத்தில் இவை வழுவமைதிகளாக ஏற்கப்பட்டுப் பிறகு ஃபேஷனாகவும் மாறிவிட்டன. (உதாரணமாக ரமேச என்ற வடசொல் ‘ரமேசன்’ என வருவது மாறி ரமேஷ் ஆகிவிட்டது. மகேச > மகேசன் என வரவேண்டியது மகேஷ் ஆகிவிட்டது. ரமேச, மகேச என அகர ஈறு கொண்டவையே அசலான வட சொற்கள். இதுபோலவே ‘சங்கர’ என்ற சொல்லும் தமிழில் ‘சங்கரன்’ என்றாக வேண்டும். ஆனால் ‘சங்கர்’ (‘ஷங்கர்’ என்பது விபரீதம்!) என வழக்கில்வந்த வடிவத்தையும் நாம் இன்று ஏற்கிறோம்).

அஃறிணை, நபும்சகத் திணைச் சொற்களெனில் அகர ஈற்று  வடமொழிச் சொற்களை ‘ம்’ சேர்த்து ஆக்கவேண்டும். உதாரண மாக ‘சாகர’ என்பதை ‘சாகரம்’ஆக்கவேண்டும். ‘யோக’ என்பதை யோகம் என்று ஆக்கவேண்டுமே ஒழிய ‘யோகா’ அல்ல. ‘விருக்ஷ’ என்பதை ‘விருட்சம்’ ஆக்கவேண்டும். ஆகாரத்திலே(நெடில்) முடியும் வடசொற்கள் எனில் அவற்றை ‘ஐ’ கொண்டு தமிழில் முடிக்கவேண்டும். உதாரணமாக கலா> கலை, சிலா> சிலை, கதா> கதை என்பதுபோல. ‘பரீக்ஷா’ என்பது தமிழில் பரீட்சை என ஆகும். சீவகசிந்தாமணி எழுதிய திருத்தக்க தேவர் விமலை (விமலா), பதுமை (பத்மா), விசயை (விஜயா) என்றெல்லாம் அழகாக ஒலிபெயர்ப்புச் செய்தார். இன்று யாரும் அவரைப் பின்பற்றுவதில்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.

வங்காள மொழிக்கென பிரத்தியேகமான சாதிச்சொற்கள் உண்டு. பிராமணரைக் குறிக்கும் ‘பந்த்யோபாத்யாய’ என்பது ஆங்கிலேயர்களால் ‘பானர்ஜி’ ஆகியது. ‘சட்டோபாத்யாய’ என்னும் சொல் ‘சட்டர்ஜி’ ஆகியது. ‘முகோபாத்யாய’ என்னும் சொல் ‘முகர்ஜி’ ஆகியது. ‘கங்கோபாத்யாய’ என்னும் பெயர் ‘கங்கூலி’ ஆகியது. சரத்சந்திர சட்டோபாத்யாய என்னும் பெயரையே நாம் சரத்சந்திர சட்டர்ஜி என்கிறோம். மேலும் வங்காள மொழி உச்சரிப்பும் எழுத்தமைப்புகளும் விசித்திரமானவை. Ray என்று ஆங்கிலத்தில் எழுதுவார்கள். அதை ‘ராய்’ என்று படிக்கவேண்டுமே தவிர ‘ரே’ ஆக்கக்கூடாது (உதார ணமாக சத்யஜித் ராய் தானே தவிர? ரே அல்ல). மிகப் பிரபல மான ‘தாகூர்’ என்ற சொல்லும்கூட வடநாட்டு ‘டாகுர்’(takur) என்ற சொல்லின் ஆங்கில எழுத்துக் கூட்டலால் ஏற்பட்ட பிழையான உச்சரிப்பே. எனினும் வழக்குக்கு வந்துவிட்டமை கருதி இச்சொல் அப்படியே ஆளப்படுகிறது. Sen என்னும் சொல்லை ‘சென்’ எனத் தமிழில் எழுதுவதும் தவறு. ‘சேன’ என்னும் சொல்தான் ‘Sen’ என வங்காளியில் எழுதப்படுகிறது.  ஆகவே KESAB SEN என்றால் கேசவ சேன அல்லது கேசவசேனர் எனவே பெயர்க்க வேண்டும.;

பெரும்பாலும் வங்காள மொழியில்

B-யில் தொடங்கும் சொற்கள் தமிழில் வகரத்திலேயே வரும். BASU என்பதை தமிழில் ‘வசு’ என்றாக்கவேண்டும். ‘போஸ்’ அல்ல. Jagadish Chandra Bose > ஜகதீச சந்திர வசு. ‘பங்காள’ என்னும் அவர்களது சொல் லைத்தான் (ஆங்கிலத்தில் ‘பாங்ளா’ எனப் பிழையாக உச்சரிக்கப் படுவது) – நாம் ‘வங்காளம்’ என நமது உச்சரிப்புப்படி ஆக்குகிறோம். வங்காளியில் பிரமீளா என்ற சொல் தான் ரோமேலா எனத் தவறாக உச்சரிக்கப்படுகிறது என்று எத்தனை பேருக்குத் தெரியும்?

மறுபடியும் வடமொழிக்கே சற்று வந்து முடிப்போம். Vajpayi என்ற சொல் ‘வாஜபேயி’ என்று உச்சரிக்கப்படவேண்டுமே தவிர வாஜ்பாய் அல்ல. வாஜ பேயம் என்பது ஒரு யாகம். அதைச் செய்த பிராமணர்கள் வாஜபேயி எனப்பட்டனர். ‘பேயி’ என்றால் ஒரு மாதிரியாக இருக்கிறது என்று நாம் ‘பாய்’ ஆக்கி விட்டோம். ‘ஒரு மாதிரியாக இருக்கிறது’ என்பதற்காகவே தவறாக ஆக்கப்படும் சொற்கள் பல. உதாரணமாக Advani என்பதை ஆடவாணி என்று சொல்ல வேண்டும். ஆடவாநீ என்பது போல அது இருக்கிறது என்பதால் அத்வானி என ஆக்கி விட்டோம். இப்படி மொழியில் ஏற்படும் வேடிக்கைகளும் பல. எப்படியோ, பலர் தவறு செய்தாலும் என்வரையில் தவறாக உச்சரிக்கக் கூடாது என்றே நினைக்கிறேன். ஆனாலும் Spanish, German, French சொற்களை நூல்களில் எழுதும்போது பல சமயங் களில் தவறு நேர்ந்துவிடுகிறது. என்ன செய்வது? எல்லா மொழிகளையும் ஒருவர் கற்றுக்கொள்ள முடிவதில்லை.

ஆனால் இன்றைக்கு இணையம் இதற்கு நல்ல உதவி செய்கிறது. அதில் மிக எளிதாக ஒலிபெயர்ப்புச் செய்து கொள்ள முடியும். முடிந்தால் அம்மாதிரி உதவியைப் பெற்று சரியான ஒலிபெயர்ப்பைச் செய்வோம். வடமொழிச் சொற்களைத் தமிழில் பெயர்ப்பதற்கு ஒரு மரபு இருக்கிறது. அதையேனும் ஒழுங்காக இக்காலத்தினர் பின்பற்றினால் போதும். சற்றே நேரம் கிடைக்கும் போது பழைய கால ஆசிரியர்களுடைய நூல்களை வாசித்தால் இந்த மரபு எளிதில் வசமாகிவிடும்.

 

மொழி