4. மார்க்சியமும் தமிழிலக்கியமும்

4. மார்க்சியமும் தமிழிலக்கியமும்

மார்க்சியம்

இந்நூலில் கூறப்பட்டுள்ள வேறு எந்த மேற்கத்தியக் கொள்கையையும் விட மார்க்சியமே மிகநீண்ட வரலாறு கொண்டது. நூற்றைம்பது ஆண்டுப் பழமை கொண்டதாக இருப்பினும் இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கும் மார்க்சியக் கொள்கை பொருந்து வதாகவே உள்ளது.

கார்ல் மார்க்ஸ் (1818-83), ஃப்ரீட்ரிக் எங்கெல்ஸ் (1820-95) ஆகிய இரு ஜெர்மானியத் தத்துவ அறிஞர்களும் சேர்ந்து உருவாக்கிய கொள்கைதான் மார்க்சியம். தங்கள் கொள்கையை அவர்கள் பொதுவுடைமை (கம்யூனிசம்) என்று அழைத்தனர். பொதுவுடைமையின் வருகை பற்றி அவர்கள் தங்கள் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் (1848) அறிவித்தனர்.
ஃ பொருளாதாரத்தின் அடித்தளத் தன்மையையும் பிறவற்றின் (கலாச்சாரம், மொழி போன்றவற்றின்) மேற்கட்டுமானத் தன்மையையும் ஏற்றல்,
ஃ வரலாற்றுப் பொருள்முதல் வாதம்,
ஃ உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவற்றிற்கிடையிலான இயங்கியல் தன்மை, அடித்தளத்திற்கும் மேற்கட்டுக்கும் இடையிலான பரஸ்பரத் தாக்கம்,
ஃ வர்க்கப் போராட்டத்தின் வழி சமூக அநீதிகளைக் களைந்து சமதர்ம அமைப்பின் வழியாக ஒரு புதிய பொதுவுடைமைச் சமூகத்தினை உருவாக்குதல் போன்ற கருத்துகள் அனைத்தும் சேர்ந்த தொகுதியை மார்க்சியம் என்று சுருக்கமாகக் கூறலாம்.

மிகுபழங்காலத்தில் ஒருவித புராதனப் பொதுவுடைமை நிலவியது. அதற்குப்பின், ஆதியிலிருந்தே உலகம் இரண்டு வர்க்கங்களாகப் பிளவுண்டு கிடக்கிறது. பொருள் உடையவர்கள், பொருள் இல்லாதவர்கள் என்று அந்த இருவர்க்கங்களையும் சுருக்கமாகப் பெயரிடலாம். (பொருள் என்பதிலே மனிதன் ஈட்டுகின்ற பணம், பெருந்தொழில்கள், அவை உருவாக்குகின்ற செல்வம், அதிகாரம் முதலியன அடங்கும்.) உற்பத்திக்கருவிகள், பொருள்கள், அவற்றின் விநியோகம், பரிமாற்றம் ஆகியவற்றை மக்களின் பொது உடைமை ஆக்குவதன் வாயிலாக ஒரு வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவது மார்க்சியத்தின் நோக்கம்.

மார்க்சியம் ஒரு பொருள்முதல்வாதக் கொள்கை. அதாவது நாம் வாழும் இயற்கை உலகம், சமூகம் ஆகியவற்றிற்கு அப்பால் கடவுள் போன்ற பேராற்றலோ பிற சக்திகளோ இருப்பதாகக் கருதி, அதன் வாயிலாக நம் உலகத்தை விளக்க முனைவதில்லை. புலன்களால் அறியக்கூடிய உலகி னைப் பருமையான, அறிவியல்ரீதியான, தர்க்கரீதியான முறையில் விளக்க முயற்சி செய்கிறது மார்க்சியம். (பொருள்முதல் வாதத்தின் எதிர்மறை, கருத்துமுதல் வாதம். அது, உலகிற்கு அப்பால் கடவுள் போன்ற பெரும் சக்திகள் இருப்பதாக் கருதுவதோடு, இவ்வுலகிலும் ஆன்மா, பேய், ஆவி போன்ற புலனுக்கெட்டா விஷயங்கள் இருக்கின்றன போன்ற கொள்கைகள் வாயிலாகவும் மதக் கொள்கைகள் வாயிலாகவும் உலகத்தை விளக்க முயற்சி செய்கிறது.)

மார்க்சியக் கருத்துகளுக்கு அடிப்படையாக அக்கால அரசியல், சமூக, பொருளாதார நிலை மட்டுமன்றி, வேறு சில செல்வாக்குகளும் தாக்கங்க ளும் இருந்தன. சான்றாக, ஹெகலின் இயங்கியல் கோட்பாடு மார்க்சியத் திற்கு அடிப்படை என்று கூறுவர். ஒன்றை ஒன்று எதிர்க்கும் சக்திகள், கருத்துகள் புதிய சூழல்களையும் கருத்துகளையும் உருவாக்கு கின்றன என்று இதைச் சுருக்கமாகச் சொல்லலாம்.

மற்றத் தத்துவங்கள்-மதம் சார்ந்தவையோ, அல்லாதவையோ-உலகத் தினைப் புரிந்துகொள்ளவே முயற்சி செய்கின்றன. மார்க்சியம் அத்துடன் உலகத்தை மாற்றவும் முயற்சிசெய்கிறது என்பது மார்க்சின் புகழ்பெற்ற கூற்று. பல்வேறு சமூக வகுப்பு களுக்கிடையிலான ஆதிக்கப் போராட்டத்தின் விளைவாக முன்னேற்றம் ஏற்படுகிறது. உலகிலுள்ள அடிப்படை யான இருவேறு வர்க்கங்களுக்கிடையில் இடைவிடாத போராட்டம் நிகழ்கிறது. மார்க்சியம், உலகத்தை அரச வம்சாவளிகளின் வரலாறாகவோ, தேசிய அடையாளத்தை அடைவதற்கான வரலாறாகவோ காண்பதில்லை. வரலாறு என்பதே வர்க்கப்போராட்டத்தின் வரலாறுதான். பொருளாதார, சமூக, அரசியல் ஆதாயங்களுக்காகவே வர்க்க சக்திகள் இயங்குகின்றன, போரிடுகின்றன.

இன்றும் எல்லையற்ற வகையில், உலகின் பெரிய முதலாளித்துவ சக்திகள் மக்களைச் சுரண்டுவதைக் காண்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்ஸ் கண்டதைவிட ஆயிரம் மடங்கு அதிகமான முறையில் இன்று சுற்றுச் சூழலையே சீரழித்து உலகத்தைப் பாலைவனமாக்கும் அளவுக்கு முதலாளித்துவ சக்திகள் சுரண்டலை மேற் கொள்வதோடு, தாங்களே உலகில் தனிப் பெருமுதலாளியாக வேண்டுமெனத் தனியாதிக்கப் போராட்டத்தையும் மேற்கொள்கின்றன. என்று பெருந் தொழில் சார்ந்த, எந்திரங்கள் சார்ந்த முதலாளித்துவம் தோன்றியதோ, அன்றிலிருந்து தொழிலாளிகளை முதலாளிகள் சுரண்டுவது மிகப்பெருகி விட்டது.

இந்தச் சுரண்டலின் விளைவாக அந்நியமாதல் நேர்கிறது. தொழிலாளி எந்தத் திறன் பெற்றிருப்பினும் இல்லாவிட்டாலும் இன்றைய முதலாளித்து வத்தில், தனித்தனியாகத் துண்டிக்கப்பட்ட, தொடர்பற்ற, திரும்பத்திரும்பச் செய்யவேண்டிய பணிகளுக்கு ஆளாக்கப்படுகிறான். நிலவுடைமைச் சமூகத்தில்-முதலாளித்துவ அமைப்புக்கு முன்னி ருந்த சமூக முறையில்-தொழிலாளர்களுக்குத் தாங்கள் எதை எதற்காகச் செய்கிறோம், யாருக்காகச் செய்கிறோம் என்பது தெரியும். அவர்கள் சமூகத்துடன் நேரடித் தொடர்பு கொண்டவர்களாக இருந்தார்கள். இன்றோ, தான் எதை உற்பத்தி செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம், அதனால் சமூகப் பயன் எதுவும் உண்டா என்பதெல்லாம் எந்தத் தொழிலாளிக்கும் தெரிவதில்லை.

முதலாளித்துவ இலக்கான பணம் சம்பாதிப்பதும் இலாபம் ஈட்டுவதும் மட்டுமே வாழ்க்கை என்று ஆகும்போது, மனிதர்கள் தங்கள் மானிடத் தன்மையை இழக்கிறார்கள். சமூகத்தில் இயல்பாக உள்ள பாசபந்தம், நட்பு, பிற மனிதர்கள்மீதான மனித நேயம் எல்லாம் அழிந்து பணத்துக்காக யாரை, எப்படிப் “பயன்படுத்துவது” என்று மட்டுமே மக்கள் யோசிக்க ஆரம்பிக் கிறார்கள். (ஆதிக்கமுள்ளவர்கள் நோக்கில், அவர்களைச் சுற்றியுள்ள மக்கள் தங்கள் மனிதத் தன்மையை இழந்து வெறும் பயன்படு பொருள்களாக, கருவிகளாகிறார்கள். அப்போதுதானே அவர்களைப் “பயன்படுத்த” முடியும்?) இதுதான் பொருளுறவாக்கல். சுருங்கச் சொன்னால், மக்கள், பொருள்களா கிறார்கள்.

மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படை இயங்கியல். ஒன்றுக்கொன்று எதிரான சக்திகள், கருத்துகள், போராடி, ஒன்றிணைந்து, புதிய சக்திகளை, கருத்துகளை உருவாக்குகின்றன. இது ஜெர்மன் தத்துவத்திலிருந்து பெற்ற கருத்து. பிரெஞ்சுப் புரட்சியிலிருந்தும், மார்க்சியம் பெற்ற கருத்துகள் உண்டு. முக்கியமாக, முதலாளித்துவத்தின் ஆதாரமான கருத்தான தனிமனிதப் பொருளாதார வளர்ச்சி மட்டுமே சமூக வளர்ச்சியையும் உலக வளர்ச்சியையும் உருவாக்கும் என்ற கருத்தைப் பிரெஞ்சுப் புரட்சி தகர்த்தது.

சமூகத்தில் அடித்தளம், மேற்கட்டுமானம் என்ற இருவித நிலைகள் இருப்பதாக மார்க்சியம் கருதுகிறது. உற்பத்தி சார்ந்த கருவிகள், அதன் விநியோகம், பகிர்வு சார்ந்த பொருளாதார விஷயங்கள் அடிக்கட்டுமானம் ஆகின்றன. சிந்தனைகளின் உலகம், கலை, மதம், சட்டம், போன்ற பிற துறைகள் அனைத்தும் மேற்கட்டுமானத்தில் அடங்குகின்றன. இவை தம்மளவில் கள்ளமற்றவை, அடித்தளப் பொருளாதார அமைப்பு எல்லாவிதக் கலாச்சார அமைப்புகளையும் நிர்ணயிக்கிறது என்பதுதான் பொதுவுடைமைக் கொள்கையின் அடிப்படை. இதைத்தான் பொருளாதார நிர்ணயவாதம் என்கிறார்கள். மரபுசார்ந்த மார்க்சியச் சிந்தனையின் மையக்கருத்து இது.

மார்க்சியக் கலை இலக்கியக் கொள்கை
மார்க்சிய அறிதல் கொள்கையின் அடிப்படையில் அதன் அழகியல் உருவாகிறது. “மனித உணர்வின் ஒரு வடிவம் கலை. அகவுலகிற்கு வெளியேயுள்ள புறவுலகை அது பிரதிபலிக்கிறது. அறியப்படுபொருளும், அதன் அகப் பிரதிபலிப்பும், உற்பத்தி நிலைகளுக்கும் வரலாற்றுக்கும் கட்டுப்பட்டவை. எல்லாக் கலைஞர்களும் சமூக வாழ்க்கையின் முரண்பாடு களிலிருந்துதான் கலைப்படைப்புகளைத் தொடங்குகிறார்கள். வாழ்க்கையின் இயக்கப்போக்கை அறிந்துகொண்டு வரலாற்றுக் கண்ணோட்டமும் தத்துவ நோக்கும் பெறும்போது அவர்களுடைய கலைப்படைப்புகள் செழுமையடை கின்றன” என்கிறார் நா. வானமாமலை. சுருங்கச் சொன்னால், தன்னைச் சுற்றியுள்ள சமூக, அரசியல் சூழல்களினால் இலக்கியம் பாதிப்படைகிறது. இது யாவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிக எளிய கூற்று.

இந்த பாதிப்பு எவ்வளவு தூரம் செயல்படுகிறது, எத்தன்மையானது என்பதில்தான் பிரச்சினை ஏற்படுகிறது. சமூக பொருளாதாரச் சக்திகளின் நேரடிப் பிரதிபலிப்பாக, செயலூக்கமற்ற பிரதிபலிப்பாகக் கலை அமைகிறது என்று கூறும் பொருளாதார நிர்ணயவாதத்தை முழுமையாக ஏற்கிறோமா, அல்லது சமூக பொருளாதார விசைகள் சற்றே தொலைவிலானவை, நுணுக்கமாகச் செயல்படுபவை என்று கொள்கிறோமா என்பது முக்கியம். கலை இலக்கியம் மூலம் மனிதன் தன்னை மறுபடைப்புச் செய்து கொள்கிறான் என்னும் மார்க்சிய நோக்கு முக்கியமாகிறது.

கலையை உருவம் உள்ளடக்கம் என்று மார்க்சியவாதிகள் பிரித்துப் பார்க்கிறார்கள். இவற்றின் உள்ளடக்கமே முக்கியமானது என்று சொல்பவர் கள் மிகுதி. “கலைப் படைப்பில் உள்ளடக்கத் தெளிவும் உருவச் சிறப்பும் இருத்தல் வேண்டும்-இரண்டும் இணைந்துதான் கலைப்படைப்பின் ஒருமை தோன்றுகிறது” என்று பெரும்பான்மையினர் சொல்வார்கள். புற உலக அனுபவங்களை இலக்கியம் பிரதிபலிக்கவேண்டும். இதற்கு யதார்த்தமாகப் படைப்பது இன்றியமையாதது. வகைமாதிரியான மனிதர்களை வகை மாதிரியான சூழல்களில் வைத்துப்படைப்பது (typical characters in typical situations) அவசியம்.

பொதுவாக மார்க்சியக் கொள்கை சார்ந்து படைக்கப்படும் படைப்புகளை மார்க்சிய இலக்கியம் என்று சொல்லலாம். ஆனால் மார்க்சியக் கொள்கை சார்ந்த எழுத்தாளர்கள் படைக்கும் எல்லாவற்றையும் மார்க்சிய இலக்கியம் என்றும் கொள்ள முடியாது. மார்க்சிய இலக்கியத்தை ஒட்டி, முற்போக்கு இலக்கியம், விமரிசன யதார்த்த இலக்கியம், சோஷலிச யதார்த்த இலக்கியம் போன்ற வகைகளையும் நாம் ஆராய வேண்டும்.
அ. மூடநம்பிக்கைகள் சாராமல், சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவுகின்ற கருத்து நிலைகளை அடிப்படையாக வைத்துப் படைக்கப்படுவது முற்போக்கு இலக்கியம் என்று கூறலாம்.
ஆ. சமூகத்திலுள்ள குறைகளை எடுத்துக்காட்டி, ‘இவற்றிற்கெல்லாம் தீர்வு என்ன’ என்ற சிந்தனையைத் தோற்றுவிக்கும் எழுத்துகளை விமரிசன யதார்த்த இலக்கியம் என்று சொல்லமுடியும்.
இ, இவற்றிற்கு மாறாக, மார்க்சியக் கொள்கை சார்ந்தவர்கள் முன் மொழிவது சோஷலிச யதார்த்த இலக்கியம். மார்க்ஸ் கூறிய பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்குத் துணையாக, வர்க்கப் போராட்டத்தைத் தீர்வாக முன்வைக்கும் முறையில் அமைந் திருக்கும் இலக்கியங்களை சோஷலிசயதார்த்த இலக்கியம் எனச் சொல்லலாம்.

எனினும், மார்க்சியக் கலை இலக்கிய நோக்கு யாது என்பது இன்றுவரை விவாதிக்கப் பட்டுத்தான் வருகிறது. கார்ல் மார்க்ஸ் இதனைத் தெளிவாக விளக்கவில்லை. ஆனால் சோஷலிச உலகைக் கட்டுதல் என்ற குறிக்கோளை மட்டும் வைத்து இலக்கி யத்தை அவர் பார்க்கவில்லை மார்க்ஸ். அதற்கு ஏதுவாக அவ்வக்காலச் சமூகத்தின் குறை நிறைகளைப் பிரதிபலிக்கும் யாவற்றையும் அவர் சிறந்த இலக்கியமாகக் கருதியிருக்கி றார். உதாரணமாக, கிரேக்கப் பழங்கலை, நாடகங்களை அவர் பெரிதும் பாராட்டியிருக்கிறார். பால்ஸாக், மேட்டுக்குடியைச் சேர்ந்தவர் ஆயினும் அவர் நாவல்கள் பெரிதும் யதார்த்தத்தை மாற்றாமல் முன்வைத்தன என்பது அவர் கருத்து.

ஜியார்ஜ் லூகாச்
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபல விமரிசகரான ஜியார்ஜ் லூகாச் முன்வைத்த இலக்கியக் கொள்கையை சோஷலிச யதார்த்தவாதம் எனலாம். இக்கொள்கை வாழ்க்கையைப் பொருள்முதல்வாத நோக்கிலும் வரலாற்றுப் பொருள்முதல் வாத நோக்கிலும் காண்பது. இயங்கியல் அடிப்படையில் இது வாழ்க்கையை அணுகுகிறது. “இலக்கியத்தில் சோஷலிச யதார்த்தம் என்பது சமூகவயப்பட்ட படைப்பாக்கங்களின் நடைமுறை அனுபவங்கள் தரும் உண்மைகளின் பிரதிபலிப்பாகவே வெளிப் படமுடியும்” என்பது மக்சீம் கார்க்கியின் கூற்று.

ஜியார்ஜ் லூகாச், யதார்த்தவாதக் கருத்தினை மிகவும் சிறப்பாக உருவாக்கியவர். மாறிக்கொண்டிருக்கும் சமூகத்தின் பிரதிபலிப்பாக இலக்கியம் அமையவேண்டும் என்றார் அவர். பிரதிபலிப்பு என்பது அவருடைய கருத்தினை நன்கு வெளிப்படுத்தக்கூடிய சொல். மேலோட்டமாகச் சமூகத்தைச் சித்திரிப்பதையும், இயற்கை வாதத்தையும் புறக்கணித்தார் அவர். ஆழமாக உட்சென்று யதார்த்தத்தின் மிக உண்மையான, மிக முழுமையான, விறுவிறுப்பான, ஆழமான பதிவினைத் தரவேண்டும் என்பது அவர் கருத்து. மார்க்சியத்திற்கே உரிய தனித்த இலக்கிய வகையாக அவர் நாவல் என்பதைக் கண்டார்.

ஒரு நாவல், சாதாரணமான பொதுப்புத்தித் தளத்தையும் தாண்டிச் சென்று யதார்த்தத்தைப் பற்றிய பருமையான ஆழ்நோக்கினை அளிக்கவேண்டும் என்று அவர் சொல்லுவார். நிகழ்ச்சிகளைத் தனிமைப் படுத்தி அவற்றை விவரிப்பதல்ல நோக்கம்; வாழ்க்கையின் முழுச் செயல் முறையை விவரிப்பது. ஆயினும் படிக்கின்ற வாசகர், நாவலே யதார்த்தமன்று, யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ஒரு சிறப்பான வடிவம் என்பதை உணர்ந்தே இருப்பார். ஆகவே யதார்த்தத்தைப் பற்றிய சரியான பிரதிபலிப்பு தேவை என்பது லூகாச்சின் நிலைப்பாடு.

ஹெகலிடமிருந்து வரலாற்றின் இயங்கியல் நிலைப்பாட்டினை மார்க்சியம் பெற்றதனால், படைப்பில் உள்ளடங்கிய ஒழுங்கினையும் சிறப்பான அமைப்பையும் லூகாச்சினால் வலியுறுத்தமுடிந்தது. வரலாற்று நாவல் (1937), ஐரோப்பிய யதார்த்தவாதத்தில் சில ஆய்வுகள் (1950) ஆகியவற்றில் ஹெகலின் இயங்கியல் பார்வையை முன்வைக்கிறார் லூகாச். சமகால யதார்த்தத்தின் அர்த்தம் (1957) என்ற நூலில் ஜாய்ஸையும் நவீனத்துவத்தையும் புறக்கணித்து, சோவியத் பார்வையை ஆதரிக்கிறார். ஜாய்ஸ் மற்றும் ஐரோப்பிய நவீனத்துவவாதிகள் தங்கள் படைப்புகளில் முன்வைக்கும் வரலாற்றுப் பார்வை இயக்கமற்றது என்பது அவர் கருத்து. பழங்காலச் சிறந்த யதார்த்தவாத நாவலாசிரியர்களின் சிறப்பு தாமஸ் மன் போன்ற இக்கால ஆசிரியர்களிடமும் காணக்கிடக்கிறது. தாமஸ் மன் சோஷலிஸ்டு அல்ல; ஆனால் அவருடைய விமரிசன யதார்த்தம் சிறப்பானது என்கிறார் லூகாச். நவீனத்துவக் கருத்தியலின் பிற்போக்குத் தன்மையை மட்டுமே வலியுறுத்தியதால், நவீனத்துவ எழுத்துகளின் சாத்தியங்களை அவர் காணத் தயாராக இல்லை. 1930அளவில் அவர் பெர்லினில் தங்கியிருந்தபோது நவீனத்துவ வடிவங்களைச் சாடுவதோடு, அவற்றை நாடகங்களில் பயன்படுத்திய பெர்டோல்ட் பிரெஹ்ட் என்னும் நாடகாசிரியரையும் அவர் தாக்கவேண்டி வந்தது.

பிரெஹ்ட்
லூகாச்சின் கொள்கைகளை எதிர்த்தவர் ஜெர்மன் நாடகாசிரியர் பிரெஹ்ட். லூகாச் புகழ்ந்த வடிவ ஒருமைப்பாட்டினை பிரெஹ்ட் விரும்ப வில்லை. அவருடைய காவியஅரங்கு, தொடர்பற்ற சம்பவங்களைக் கொண்டது. மிகத் திட்டமிட்ட கதைப் பின்னல்களைக் கொண்டதல்ல. சமகாலத் திரைப்படம், நவீனத்துவக் கலை இவற்றிலி ருந்தே கலைக்கான அகத்தெழுச்சி கிடைக்கிறது என அவர் கருதினார். இரண்டாவதாக, நிரந்தரமான அழகியல் விதிகள் என எவையும் கிடையாது. யதார்த்தத்தின் உயிருள்ள சக்தியைப் படைப்பில் கொண்டுவர, கலைஞன் எந்தவித வடிவவியல் கருவியையும் பயன்படுத்தவேண்டும், எந்தவிதச் சோதனை முயற்சியிலும் ஈடுபடலாம் என்பது பிரெஹ்டின் கருத்து. நாவல் ஒன்றே யதார்த்தத்தைச் சித்திரிப்பதற்கான ஒரே சிறந்த வடிவம் என லூகாச் பீடத்தில் உயர்த்தி வைப்பதே ஒரு அபாயகரமான உருவவாதம் ஆகிவிடும். பிற யதார்த்தவாதிகளை நாம் காப்பியடிக்கும்போது நாம் யதார்த்தவாதி களாக இல்லாமல் போகிறோம். புதுப்புதுப் பிரச்சினைகள் தோன்று0கின்றன, அவை தங்களைச் சித்திரிப்பதற்குப் புதிய கருவிகளை வேண்டுகின்றன. யதார்த்தம் மாறுகிறது, அதைச் சித்திரிப்பதற்கான வழிமுறைகளும் மாறித்தான் ஆகவேண்டும் என்பது பிரெஹ்ட்டின் நோக்கு.

பிரதிபலிப்புக் கோட்பாடு
மார்க்சியக் கலைஇலக்கிய நோக்கின் அடிப்படையாக அமைந்தது பிரதிபலிப்புக் கோட்பாடு. கலைஞன், யதார்த்தத்தில், புற அனுபவத்தில் எதைக் காண்கிறானோ அதை அப்படியே எடுத்துரைக்கும் விதத்தில் இலக்கியத்தை/கலையைப் படைக்கவேண்டும் என்று இது சொல்கிறது. புறஉலகம்தான் அகஉலகத்தை, வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. எதிரி லுள்ள பொருள்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடிபோன்று கலைஞனின் மனம் இருக்கவேண்டும். தான்காணும் சமூகத்தினை அவன் பிரதிபலிக்க வேண்டும் என்று பிரதிபலிப்புக் கொள்கை எதிர்பார்க்கிறது. ஆனால் அது இருப்பதை அப்படியே காட்டுவது மட்டும் அல்ல. கலைஞனின் பிரதிபலிப்பு, யதார்த்தத்தை உருவாக்க என்னென்ன கூறுகள் தேவை என்ற ஒரு தேர்வை உள்ளடக்கியது. எனவே பிரதிபலிப்பு என்ற சொல் பொருத்தமற்றுப் போகிறது.
“யதார்த்தவாதம் எது என்ற தெளிவில்லாமல் யதார்த்தத்தைச் சித்திரிக்கக் கூடாது. சித்திரிக்கமுடியாது. யதார்த்தம் என்பது வெறுமனே உள்ளது அல்ல. உள்ளதன் உண்மையைக் குறிப்பது. யதா+அர்த்தம்=எது பொருளோ, உண்மையோ அது” என்கிறார் கா. சிவத்தம்பி.
“நடப்பியல், சாதாரண மனோபாவம், உதாரண நிலைமைகளில் இயல் பாகச் சித்திரிக்கப்படும். சுபாவ மாறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டி ருக்கும்” என்று கூறினார் சி.சு. செல்லப்பா. செல்லப்பா கூறும் ‘உதாரண நிலைமை’ என்பதைத்தான் வகைமாதிரியான சூழல்கள் என்கிறோம். வாழ்க்கையைத் தனிமனிதச் செயல்பாட்டின் நிகழ்வுகளாகப் பார்க்காமல், சமூகச் செயல்பாடுகளாகக் காணுதல் இதன் அடிப்படை. மேலும் வாழ்க்கையைத் தனிமனித விருப்பு வெறுப்புகள் சார்ந்து நிகழ்வதாகக் கொள்ளாமல் வரலாற்றின் புறநிலை அம்சங்களால் இயக்கம் கொள்வதாக மார்க்சியம் நோக்குகிறது. இந்த நோக்குகளின் அடிப்படையில் பாத்திரங்கள் சம்பவங்கள் ஆகியவற்றைப் படைக்கிறது.

பிரதிபலிப்பு என்பதை மனித மனத்தினால் உண்மையில் செய்ய இயலாது. தன் சாயைகளைக் கூட்டியே மனம் அனுபவங்களைத் தருகிறது. மேலும் மொழியும் வெற்றுப் பிரதிபலிப்பினை அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு சொல்லிலும் தொடரிலும், இவற்றால் உருவாகும் சொல்லாடலிலும், முன்னரே வைக்கப்பட்ட இருப்புகளாக மனித மனம் காணத் தவறும் அர்த்தங்கள் நிறைந்துள்ளன. மனத்தின் சார்புகளும் மொழியின் சார்புகளும் அனுபவத்தோடு சேர்ந்து வெளிப்படும்போது அது நிச்சயம் பிரதிபலிப்பாக இருக்க முடியாது. ஒரு சார்பான கதையாடலாகவே இருக்கமுடியும். இதற்கு அடிப்படையாக இருப்பது கருத்தியல் அல்லது கருத்துருவம்.

எனவே பிரதிபலிப்பு அடிப்படையிலான சோஷலிச யதார்த்தம் என்பது இருக்க இயலாது என்பது வெளிப்படை. இதனால், இருபதாம் நூற்றாண்டில் 1950க்குப்பின் தோன்றிய தத்துவங்களும் கலைக்கொள்கைகளும் பிரதிபலிப்புக் கொள்கையை மூலையில் தூக்கி எறிந்துவிட்டன. அப்படியானால் அதற்கு மாற்றாக எதைக் கொள்வது? இதைப்பற்றி மார்க்சிய நோக்கு ஆழமாக ஆராயவில்லை என்று தோன்றுகிறது. சோஷலிச யதார்த்தத்திற்கு மாற்றாக, அதன் அடிப்படையாக அமைந்திருக்கும் பிரதிபலிப்புக் கொள்கைக்கு மாற்றாக, எதை வைப்பது என்ற யோசனையில் இறங்காமல், உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ தோன்றிவரும் இலக்கியக் கொள்கைகளை எல்லாம் நசிவுக் கொள்கை, நசிவு இலக்கியம் என்று முத்திரை குத்தும் பணியையே மார்க்சிய இலக்கியக் கொள்கையாளர்கள் செய்துவந்திருக்கிறார்கள்.

யதார்த்தவாத எழுத்து, மார்க்சியத்தை முறையாகக் கற்றுணர்ந்தோர், கற்றுணராதவர்கள் எவரிடமிருந்தும் வெளிப்படலாம். தங்கள் இயல்பான அனுபவத்தினாலும் புரிந்துகொள்ளலாலும் வாழ்க்கையை அதன் இருப்பில் சமூகநோக்கில் அணுகுவதன் வாயிலாக எவர் எழுத்திலும் அது வெளிப்படலாம். எனவேதான் மார்க்சியக் கொள்கை சார்ந்தது யதார்த்த வாதம் என்று மட்டும் கொள்ளாமல் மார்க்சியத்திற்குப் பொருத்தமான நோக்கில் அமையக்கூடிய ஒன்று என்ற விரிவான அர்த்தத்தில் நோக்குகிறோம்.

சரஸ்வதி பத்திரிகையை நடத்திய விஜய பாஸ்கரன், அதன் தலையங் கங்கள் ஒன்றில் கூறுகிறார்: “குறுகிய நோக்கோடு முற்போக்கு பிற்போக்கு அம்சங்களைக் கணித்து ஒதுங்கிப் போகாமல் மனித வளர்ச்சிக்குப் பாடுபடும் சகல சக்திகளையும் அரவணைத்துப் போவதே சரஸ்வதியின் லட்சியம்.” இக்கூற்றையே மார்க்சிய நோக்கிலான இலக்கியத்தின் இலட்சியமாகவும் கொள்ள இயலும்.
இத்துடன் நாம் மார்க்சியம் பற்றிய சிறிய அறிமுகத்தையும், மார்க்சிய இலக்கியக் கொள்கை பற்றிய சிறிய அறிமுகத்தையும் முடித்துக்கொண்டு மேற்செல்லலாம். உண்மையில் இதற்குப் பிறகான மார்க்சிய இலக்கியக் கொள்கையின் வரலாறு மிக நீண்டது. ஃபிராங்பர்ட் மார்க்சியர்கள், அமைப்பிய மார்க்சியர்கள், நவ இடதுசாரியினர் எனப் பல வகையினரால் மார்க்சிய இலக்கியக் கொள்கை வளம் பெற்றது.

தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கட்சிகளின் தோற்றம்
தென்னகத்தின் முதல் பொதுவுடைமையாளர் எனப்படும் சிங்காரவேலர் வழியாகத் தமிழகத்தில் மார்க்சியக் கருத்துகள் வேரூன்றத் தொடங்கின. அவர் ‘தொழிலாளன்’ என்னும் இதழை நடத்தியவர். பெரியாருடன் இணைந்தும் தமது கருத்துகளை வெளிப்படுத்தினார். 1848இல் மார்க்ஸும் எங்கெல்ஸும் சேர்ந்து பொதுவுடைமை அறிக்கையை வெளியிட்டு, ஏறத்தாழ 83 ஆண்டுகள் கழித்து முதன்முதலில் பொதுவுடைமைக் கட்சியின் அறிக்கை தமிழில் 04-10-1931 குடியரசு இதழில் வெளிவந்தது. குடியரசு, முன்னேற்றம், வெடிகுண்டு, தமிழன் ஆகியவை அக்கால மார்க்சிய இதழ்களில் சில. இவற்றின் வாயிலாகவும், தனித்தனி நூல்கள் வாயிலாகவும் பொதுவுடைமைக் கருத்துகள் முப்பதுகளில் அறிமுகமாயின. திரு.வி.க., சர்க்கரைச் செட்டியார், பாரதிதாசன், ஜீவானந்தம், அழகிரி, சாமிநாத சர்மா போன்றவர்களால் பொதுவுடைமைக் கருத்துகள் தமிழில் பரவின.

ப. ஜீவானந்தம், 1936இல் இடதுசாரிச் சிந்தனையாளர்களின் முதல் மாநாட்டைத் திருச்சியில் நடத்தினார். பின்னாளில் பொதுவுடைமை இயக்கம் சார்ந்த கலைஇலக்கியச் செயல்பாடுகளில் அமைப்புகள் வழிப்பட்ட நடவடிக்கைகளுக்கு வித்திட்டவர் இவர்தான்.

மார்க்சிய அடிப்படையிலான தமிழ் இதழ்கள்
தமிழகத்தில் பொதுவுடைமைக் கட்சி தோன்றிக் கால் நூற்றாண்டுக் காலம் வரை கட்சி சார்ந்த இலக்கிய அமைப்புகளோ, இலக்கிய இதழ்களோ தோன்றவில்லை. 1936இல் அகில இந்திய அளவில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டது. ஜீவா, 1937இல் ஜனசக்தி என்ற இதழைத் தொடங்கினார். (ஐம்பதுகளில், பொதுவுடைமைக் கட்சியின் அதிகாரபூர்வ இதழாக அது ஏற்கப்பட்டது.) 1948இல் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கியது. அக்காலப்பகுதியில் பொதுவுடைமைக் கட்சி அவ்வப் போது தடைசெய்யப்பட்டு வந்ததால் அது தொடர்ச்சியாக இயங்கியதாகத் தெரியவில்லை. 1954இல் பொதுவுடைமைக் கட்சியின் அதிகாரபூர்வ அமைப்பாகக் கலை இலக்கியப் பெருமன்றம் தோன்றியது. தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீணடும் 1975இல் தொடங்கியது. இதற்குள் 1964இல் பொதுவுடைமைக் கட்சி, சிபிஐ, சிபிஐ(எம்) என இரண்டாகப் பிளவுபட்டது. (அதாவது இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்டு) தனியாகப் பிரிந்தது). இந்த ஒவ்வோர் அமைப்புக்கும் ஒவ்வொன்று தலைமை இலக்கிய அமைப்பு ஆகியது.

த.மு.எ.ச.வின் கொள்கை அறிக்கை பின்வருமாறு கூறியது:
“வாழ்க்கை இன்று எப்படியிருக்கிறது என்று சித்திரிப்பதோடல்லாமல் அது எப்படி இருக்கவேண்டும் என்பதையும் தங்கள்(sic) படைப்புகளில் கோடிட்டுக் காட்டுவதன் மூலமே ஓர் எழுத்தாளன் தனது சமுதாயக் கடமையை முழுமையாகச் செய்யமுடியும். இதையே இலக்கியத்தில் சோசலிச யதார்த்த அணுகுமுறை என்று கூறுகிறோம். எனினும் இன்றுள்ள நிலைமையில் முற்போக்கு எழுத்தாளர்களாகிய நம்மிடையே யதார்த்த சித்திரிப்பு என்ற அணுகுமுறையைப் பொதுவாக நிலவ வேண்டிய வழிமுறையாகக் கொள்கிறோம்.”
தமிழ் இலக்கிய உலகில் சிற்றிதழ்களின் பங்கு கவனிப்பிற்குரியது என்பதை அனைவரும் அறிவர். மார்க்சியக் கட்சி அமைப்புகளும் பல சிற்றிதழ்களை நடத்தியுள்ளன. அவை தமிழிலக்கியத்திற்குப் பெருமளவில் பணிபுரிந்துள்ளன.

புதுமைப்பித்தன் எழுதிய கதைகள் பல, மார்க்சிய நோக்கிற்கு இணக்கமாக உள்ளன. அவருக்குப்பின் மார்க்சியவாதிகள் எனத் தோற்றம் பெற்ற பல படைப்பாளிகளுக்கு அக்கதைகள் உத்வேகம் அளித்தன. 1950களில் தமிழில் மார்க்சிய நோக்கிலான இலக்கியம் தோற்றம் பெற்றது எனலாம். இஸ்மத் பாட்சாவின் ‘சமரன்’, தொ.மு.சி. ரகுநாதனின் ‘சாந்தி’, விஜய பாஸ்கரனின் ‘சரஸ்வதி’ போன்ற இதழ்கள் முற்போக்குப் படைப்புக ளுக்கு ஊக்கமளித்தன. சரஸ்வதியின் பங்களிப்பு இதில் பெரியது.

சரஸ்வதி முதல் இதழில் விஜய பாஸ்கரன் கூறுகிறார்:
“உலகமொழிகள் பலவற்றிலும் பலப்பல அரிய கருத்துகள் தினம்தினம் வந்துகொண்டிருக்கின்றன. இவைகளைத் தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமல்லவா? ஆகவே மேலைநாட்டில் வளர்ந்துவரும் புத்தம்புதிய கருத்துகளைத் திரட்டித் தமிழர்களுக்த் தரவேண்டும். அத்துடன் மறைந்துவரும் நமது கலைச்செல்வங்களைத் தேடி¢எடுத்து வெளியிட வேண்டும். தமிழில் சிறந்த சிறுகதைகள், கவிதைகள் வெளிவருவதற்கு நம்மால் ஆன பணியைச் செய்யவேண்டும்.”
இதிலிருந்து அந்த இதழின் பரந்த நோக்கினை நாம் அறிய முடியும். சமரன், சாந்தி, சரஸ்வதி போன்ற இதழ்களில் எதுவுமே கட்சி அமைப்புச் சார்ந்ததாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு பொதுவுடைமைக் கட்சி (சிபிஐ) சார்ந்த இதழாகத் தாமரை தொடங்கப்பட்டது. இதில் சரஸ்வதியில் எழுதிய எழுத்தாளர்கள் பங்குகொள்ளவில்லை. ஆயினும் 1960-1980 காலப்பகுதியில் பல புதிய படைப்பாளிகள் தாமரை வாயிலாகத் தோற்றம் பெற்றனர். நீல. பத்மநாதபன், அசோகமித்திரன், சார்வாகன், வல்லிக்கண்ணன், பொன்னீலன், பிரபஞ்சன், டி. செல்வராஜ், பா. செயப்பிரகாசம், சி. ஆர். ரவீந்திரன, கோ. ராஜாராம், கொ. மா. கோதண்டம், ம. ந. ராமசாமி, தி. க. சிவசங்கரன், நா. பார்த்தசாரதி, போன்றவர்கள் இதில் எழுதிய சில முக்கிய எழுத்தாளர்கள்.

சி.பி.ஐ.(எம்) கட்சியின் முதல் இதழாக வெளிவந்தது ‘தீக்கதிர்’ என்ற வார இதழ். 1970இல் ‘செம்மலர்’ உருவாயிற்று. டி, செல்வராஜ், கு. சின்னப்ப பாரதி, தணிகைச் செல்வன், அஸ்வகோஷ், மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன், பறம்பைச் செல்வன் முதலியோர் இதில் பங்குகொண்டு எழுதினர். இதன்பின் ‘உதயம்’ என்ற இதழும் நடத்தப் பெற்றது.

1967இல் நக்சல்பாரி இயக்கம் தோன்றியபிறகு தமிழ்நாட்டில் அதன் பாதிப்பினால் இந்தியப் பொதுவுடைமைக் கடசி (மார்க்சிஸ்டு-லெனினிஸ்டு) [சிபிஐ-எம்எல்] தோன்றியது. இதன் சார்பு அமைப்பான மக்கள் கலாச்சாரக் கழகம், ‘மன ஓசை’ என்ற இதழை நடத்தியது. புரட்சிப் பண்பாட்டு இயக்கங்களின் கூட்டமைப்பு, ‘செந்தாரகை’ என்ற இதழை நடத்தியது. பா. கல்யாணி, கோச்சடை, சுந்தரம் போன்றோர் இதில் எழுதினர். இந்திய மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் எழுதியவர் இன்குலாப். தொடக்கத்தில் ரவிக்குமாரும் இதில் இருந்தார். மக்கள் கலை இலக்கியக் கழகம் என்னும் அமைப்பின் சார்பாகப் ‘புதிய கலாச்சாரம்’, ‘புதிய ஜனநாயகம்’ ஆகிய இதழ்கள் வெளிவந்தன. தொண்ணு£றுகளில் ‘சுபமங்களா’ என்ற இதழ் கட்சி சார்பின்றிப் பரவலாகச் செல்லும் இதழாக அமைந்தது.

மார்க்சிய எழுத்தாளர்கள் அணி சார்ந்தும், எழுதும் இதழ் சார்ந்தும் அறியப்பட்டனர். மார்க்சிய நோக்கிலான முழுமைப் புரட்சி என்பதைக் கைவிட்டு, பெரும்பாலும் உடனடிப் பயன் விளைவிக்கக்கூடிய ஆக்கங் களிலேயே பொதுவுடைமை இயக்கங்களின் கவனம் இருந்தது. பிரச்சினைகளை நேரடியாக வெளிப்படுத்தும் தெருநாடகங்கள், எழுச்சிப் பாடல்கள் போன்றவற்றில் அவர்கள் மிகுதியாக கவனம் செலுத்தினர். மார்க்சிய இதழ்களில் இடம் பெற்ற கதைகளும் வர்க்க முரண்பாட்டை வெளிப்படுத்துவனவாக மட்டுமே பெரும்பாலும் அமைந்தன. எனவே அவை பொதுவடைமை சாராத சிற்றிலக்கியக் குழுக்களின் கண்டனத்திற்கும் ஆளாயின. 1979இல் இலக்கு அமைப்பு தோன்றியதிலிருநது இம்முரண்பாடு கூர்மைபெற்றது.

கட்சிகள், அவை சார்ந்த அமைப்புகள் அன்றி, கட்சி சாராத மார்க்சியச் சிந்தனை அமைப்புகளும் ஆங்காங்கு உருவாயின. இவற்றில் கோவையில் ‘புதிய தலைமுறை’, ‘பரிமாணம்’ இதழ்களை வெளியிட்ட அமைப்பினைக் குறிப்பிட வேண்டும். எஸ். என். நாகராஜன், கோவை ஞானி, எஸ். வி. ராஜதுரை போன்றவர்கள் இதில் முக்கியப் பங்கு வகித்தனர். பாளையங்கோட்டையில் உருவாகிய நா. வானமாமலையின் ஆராய்ச்சிக் குழுவும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் நா. வானமாமலை தவிர, பேராசிரியர் எஸ். தோதாத்ரி போன்ற பல ஆய்வாளர்கள் இதன்வழி உருவாயினர். அ. மார்க்ஸ், தமிழவன், நாகார்ஜுனன் போன்ற சிலரும் மார்க்சிய எழுத்துகளில் தொடக்கத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சில இடங்களில் இம்மாதிரி அமைப்புகளில் கருத்துப்போர்கள் நிகழ்ந்தன. குறிப்பாக இலக்கு என்ற சிறுபத்திரிகை சார்ந்த அமைப்பு சில காலம் அவற்றுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது.

தமிழில் மார்க்சியப் படைப்புகள்
எல்லா இந்திய மொழிகளையும் போலவே கவிதையிலான இலக்கியத்தை மட்டுமே கொண்டிருந்த தமிழ், மேற்குநாட்டினரின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பின்னர் உரை நடையைப் பெற்றது. எல்லா இந்திய மொழிகளையும் போலவே இதிலும் நாவல்கள் முதலில் தோன்றின. தமிழின் தொடக்ககால நாவல்கள்(1879-1950) அறநோக்கினை அடிப்படை யாகக் கொண்டிருந்தன. அவற்றில் பெரும்பாலும் பொதுவுடைமைத் தாக்கம் இல்லை. ஆனால் பொதுவுடைமைக் கொள்கை பரவலாக அறியப்பட்ட பிறகும் இந்நிலை நீடித்தது. தமிழ் உரைநடை தோன்றிய காலம் முதல், காந்தியம், தமிழ்நேயம், திராவிட இயக்கம், தமிழ் தேசியம், பிறகு மார்க்சியக் கொள்கையில் ஈடுபாடு என வரிசையாகக் கருத்தியல்கள் செயல்பட்டு வந்த நிலையை வரலாறு காட்டுகிறது.
1930-40களில் அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களை மார்க்சியப் படைப்புகளுக்கு முன்னோடிகளாகக் கொள்ளலாம். இந்த நாவல்கள், விசுவாசத்தோடு உழைக்கும் பண்ணை யடிமைகளைச் சித்திரித்தன. சண்முகசுந்தரத்தின் நாகம்மாள், சட்டி சுட்டதடா போன்ற நாவல்களும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு விவசாயக் குடும் பங்களைச் சித்திரித்தன. ரகுநாதனின் பஞ்சும் பசியும் முதல் மார்க்சிய நாவல் என்ற பாராட்டைப் பெற்றது.

ஜெயகாந்தனின் தொடக்ககாலப் படைப்புகளும் (சிறுகதைகளும் குறுநாவல்களும்) ஒடுக்கப்பட்ட மக்கள்மீது கரிசனம் கொண்டவையாக இருந்தன. பிறகுதான் மார்க்சியச் சார்புடன் எழுதும் தனியான எழுத்தாளர்கள் உருவாயினர். டி. செல்வராஜ் (மலரும் சருகும் போன்ற நாவல்கள்), பொன்னீலன் (கரிசல், புதிய தரிசனங்கள் போன்ற நாவல்கள்), சின்னப்ப பாரதி (தாகம், சர்க்கரை போன்றவை), பூமணி (பிறகு, வெக்கை போன்றவை), சிறந்த படைப்புகளாகக் கருதப்பட்டன. தனுஷ்கோடி ராமசாமியின் தோழர், அஸ்வகோஷ் எழுதிய சிறகுகள் முளைத்து, தியாகுவின் சுவருக்குள் சித்திரங்கள், கே. முத்தையாவின் உலைக்களம், போன்ற நாவல்களும் சிறந்த நாவல்கள். புராணங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்துதல் என்ற முறையில் கந்தர்வனின் காந்தாரி, அருணனின் கசன் போன்றவை அமைந்தன. ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல், சோவியத் கட்சி அமைப்பு முறையின்மீதான் ஒரு எதிர்நிலை விமரிசனமாக அமைந்தது.

கட்சி அல்லது கொள்கைக்கான பிரச்சாரமாக அமையாமல், பொதுவாக அடித்தட்டு மனிதர்கள்மீது அனுதாபத்தைக் காட்டுபவை, ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய சமுதாய யதார்த்த விமரிசனச் சித்திரிப்புகள் என்ற விதத்தில் சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை, ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே, ஜெயகாந்தனின் பாவப்பட்ட ஜீவன்கள், போன்றவற்றையும் இவற்றுடன் சேர்க்கமுடியும். ஒரு பரந்த நோக்கில் மார்க்சியப் பார்வைக்கு அணுக்கமானவை என்ற நோக்கில் நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள், மாமிசப் படைப்பு, வண்ண நிலவனின் கடல் புரத்தில், மிதவை, ரெயினீஸ் ஐயர் தெரு, ராஜம் கிருஷ்ணனின் அலைவாய்க் கரையில், போன்ற நாவல்கள், நீல பத்மநாபனின் தலைமுறைகள், ஐசக் அருமைராஜனின் கீறல்கள், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், எம்.வி. வெங்கட் ராமின் வேள்வித்தீ, ப. சிங்காரத்தின் கடலுககு அப்பால், புயலில் ஒரு தோணி, சா. கந்த சாமியின் சூரியவம்சம், தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை, சி. ஆர். ரவீந்திரனின் அகுத்தாய், பிரபஞ்சனின் வானம் வசப்படும் போன்ற படைப்புகளையும் ஏற்றுக்கொள்ளலாம். இமையத்தின் நாவல்களையும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிப் பேசுபவை என்ற நோக்கில் ஏற்க முடியும்.

பாத்திரப் படைப்பு
மார்க்சியக் கொள்கை சாராத எழுத்தாளர்களாக இருப்பினும், பொதுவாக அவர்கள் அவ்வியக்கக் கருத்துகளில் அனுதாபம் கொண்டே படைப்பில் ஈடுபடுகிறார்கள். இதற்குப் பொதுவான மனிதாபிமானம் காரணமாகிறது. இப்படிப்பட்ட பழங்கால நாவலாசிரியர்களின் கதைகளில், பொதுவுடைமை வாதி என்ற நிலையில் ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்படுவது வழக்கம். இவர்களைப் பொறுத்தவரையில் “கம்யூனிஸ்டு என்பவன் ஆவேசமாகப் பேசுபவன். தேவை இருக்கிறதோ இல்லையோ அடிக்கடி தலை மறைவாகப் போய்விடுபவன். பல மாறுவேடங்கள் புனைந்து சாகசங்களில் ஈடுபடுபவன். எதற்கும் அஞ்சாதவன் என்ற இந்த அளவிற்கே இப்படைப்பாளர்களது கம்யூனிசப் புரிதல் இருந்திருக்கிறது” என்கிறார் அஸ்வகோஷ் (தமிழ்இனி2000, ப.466). இதற்குச் சான்றாக, கல்கியின் அலை ஓசையில் வரும் சூர்யா, அகிலனின் எங்கே போகிறோம் நாவலின் கணேசன், ராஜம் கிருஷ்ணனின் வேருக்கு நீர் நாவலின் கதிர், நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலரில் வரும் முருகானந்தம் போன்றோரைச் சுட்டிக்காட்டலாம். மார்க்சியம் சார்ந்த நாவல்களில் வரும் கதைத்தலைவன், சுரண்டப்படும் ஒரு சிற்றமைப்பின் வெளியிலிருந்து புகுபவன். வர்க்கப் போராட்டத்தைப் பிரச்சாரம் செய்பவன். இவனது கருத்துகள் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த அளவிலேயே கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டனர். எனவே இவர்கள் வகைமாதிரிப் பாத்திரம் என்ற நிலையிலிருந்து கையிருப்புப் பாத்திரங்கள் (ஸ்டாக் கேரக்டர்) என்ற அளவுக்குத் தாழ்ந்துவிட்டன. பொதுவுடைமைக் கருத்துகளை அடியோடு வெறுத்த நாவலாசிரியர்களும் உண்டு. ர. சு. நல்லபெருமாள் இப்படிப்பட்டவர்களில் ஒருவர்.

கட்சி சார்ந்து எழுதாவிட்டாலும், தொ.மு.சி. ரகுநாதன், ஜெயகாந்தன், தொடக்கத் தில் சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ஜி. நாகராஜன் போன்றோரின் சிறுகதைகள் மிகச் சிறப்பாக அமைந்தன. பின்னாட்களில் ரகுநாதனைத் தவிரப் பிறர் மார்க்சியச் சார்பிலிருந்து ஒதுங்கிவிட்டனர். விமரிசகர் தோதாத்ரி, ஜெயகாந்தன் படைப்புகளை அவர் கட்சிச் சார்புநிலை எழுத்தாளராக இருந்தபோது எழுதியவை, சார்புநிலையில்லாத எழுத்தாளராக இருந்தபோது எழுதியவை என்று பிரித்து நோக்கியுள்ளார்.

மார்க்சிய நோக்கு அடிப்படையிலான சிறுகதைகள் ஏறத்தாழ ஐம்பதாண்டுகளாகப் படைக்கப்பட்டு வருகின்றன. எனினும் அவை பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியவை எனக் கொள்ள முடியவில்லை. கந்தர்வன், தமிழ்ச்செல்வன், அருணன், மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ்கோடி ராமசாமி, சோ. தர்மன், சோலை சுந்தரப் பெருமாள் போன்றவர்கள் மார்க்சிய நோக்கிலான சிறுகதைகளைப் படைத்துள்ளனர். மேலாண்மை பொன்னுச்சாமியின் ரோஷாக்னி, கந்தர்வனின் காளிப்புள்ள, வே. ராமமூர்த்தியின் இருளப்பசாமியும் 21 கடாய்களும் போன்ற சிறுகதைத் தொகுதிகளைக் குறிப்பிடலாம். ஒத்தநோக்குடைய கதைகள் என்ற முறையில் காசியபனின் அன்பினைக் கூட என்ற தொகுப்பு போன்றவற்றையும் ஏற்கலாம்.

மார்க்சிய நோக்கிலான பல நல்ல படைப்புகள் தமிழில் மொழியாக்கம் பெற்று வெளிவந்துள்ளன. உதாரணமாக, கன்னடத்திலிருந்து (நிரஞ்சனாவின்) நினைவுகள் அழிவதில்லை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இது கையூர் விவசாயிகள் போராட்டம் பற்றிய கதை. கென்ய எழுத்தாளர் கூகி எழுதிய சிலுவையில் தொங்கும் சாத்தான் போன்றவற்றையும் கூறலாம்.

ஒரு நூற்றாண்டாகத் தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் அடிப்படையில் பார்க்கும்போது அதன் வரலாற்றுப் பிரதிபலிப்புகள் மார்க்சிய நாவல்க ளில் மிகவும் குறைவாகவே வெளிப்பட்டுள்ளன. 1968இல் விவசாயத் தொழிலாளர்கள் எரிக்கப்பட்ட கீழ் வெண்மணிச் சம்பவம், மார்க்சியர்களால் இலக்கியமாக்கப்பட வில்¬ல். மிகப்பல ஆண்டுகள் கழித்துத்தான் செந்நெல் என்ற நாவல் சோலை¢சுந்தரப்பெருமாளால் எழுதப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 1956 முதல் வாழவுக்கும் உரிமைக்கும் போராடி¢வரும் ஈழத் தமிழர்கள் பற்றிய சம்பவங்கள் எந்த மார்க்சிய எழுத்தாளரையும் பாதிக்கவில்லை.

எழுபதுகளில் இருத்தலியத்தின் தாக்கமும், எண்பதுகளில் அமைப்பியத்தின் தாக்கமும், தமிழ் இலக்கிய உலகில் நிகழ்ந்தன. கோவை பரிமாணக் குழு தவிரப் பிற மார்க்சியவாதிகள் எவரும் இவற்றில் அக்கறை கொள்ளவில்லை. கொதுவாகவே இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகள், இந்தியாவின் தனித்த பிரச்சினைகளான சாதியமைப்பு, தீண்டாமை, தேசிய இனப்பிரச்சினை போனறவற்றில் இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை கவனம் செலுத்தவில்லை. மரபு வழிப்பட்ட வர்க்கப் போராட்டத்தையே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வாக எண்ணியுள்ளன. மேற்குறிக்கப் பட்ட சமூக யதார்த்த விமரிசன எழுத்தாளர்களிடம் இருந்த அளவும் சோஷலிச யதார்த்தவாதிகளின் படைப்புகளில வாழ்க்கை பற்றிய யதார்த்தம் இல்லை. எனவே மக்களிடம் மார்க்சியப் படைப்புகள் பெருமளவு சென்று சேரவில்லை. அறுபது எழுபதுகளில் மு. வரதராசனாரும், நா. பார்த்தசாரதியும் எண்பது தொண்ணு£றுகளில் சுஜாதாவும் செல்வாக்குச் செலுத்திய அளவு எந்த மார்க்சியப் படைப்பாளியும் இளைஞர்கள், மக்கள் மனத்தில் செல்வாக்குப் பெறவில்லை.

மார்க்சிய இலக்கிய விமரிசனம்
தமிழ் இலக்கிய உலகில் மார்க்சிய இலக்கிய விமரிசனத்தின் பங்கு மிக முக்கியமானது. இதற்கு இணையாக வேறெந்த நோக்கிலான இலக்கிய விமரிசனமும் செல்வாக்குப் பெறவில்லை என்றே கூறலாம்.
மார்க்சிய இலக்கியத் திறனாய்வின் அடிப்படை சோஷலிச யதார்த்த வாதம். இது எவ்விதம் நிலைகொண்டது என்பதைப் பற்றி முன்னரே நோக்கினோம். இலக்கியத்தை அரசியல், பொருளாதாரத்தின் நேரடிப் பிரதிபலிப்பாக ஒருபோதும் மார்க்ஸோ எங்கல்ஸோ கருதியதில்லை என்றாலும் தமிழில் அப்படிப்பட்ட நிலை உருவாகிவிட்டது.

தமிழில் சோஷலிச யதார்த்த வாதத்தைப் பற்றி முதன்முதலில் எழுதியவர் ஜீவா. சமூக உள்ளடக்கம் சார்ந்து, ஒரு எழுத்தாளன் எப்படி வேண்டுமானாலும் தனது வடிவத்தை அமைத்துக்கொள்ளலாம் என்ற அளவில் அவனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் தமிழ்ச் சூழலில் வறட்டுச் சூத்திரமாக சோஷலிச யதார்த்தவாதம் என்பது பார்க்கப் பட்டதனால், மார்க்சிய இலக்கிய மதிப்பீடுகள் பெரும்பாலும் தவறாகவே அமைந்தன. மார்க்சியம், மனிதனது படைப்புத் திறனை வளப்படுத்தி மனிதனின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் துணைசெய்வதாக இருக்கவேண்டும். அவனைச் சிறைப்படுத்திவிடுவதாகி விடக்கூடாது. கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பது மார்க்சிய நோக்கின் அடிப்படை. சோசலிச யதார்த்தம் என்ற பதச் சேர்க்கையும், அதன் அர்த்த பாவமும் இன்று மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றார் தொ.மு.சி. ரகுநாதன்.

ஜீவானந்தம் காலத்திலேயே மார்க்சிய இலக்கியத் திறனாய்வு தோன்றிவிட்டது. அவரே பாரதியின் கவிதை, கம்பனின் கவிதை பற்றியெல்லாம் திறனாய்வு நோக்கிலான நூல்களை இயற்றியுள்ளார். தொ.மு.சி. ரகுநாதன் 1948இல் இலக்கிய விமரிசனம் என்ற நூலை வெளியிட்டார். ஒரு நல்ல கொள்கை அடிப்படையை அதில் காணலாம். நா. வானமாமலையின் ஆராய்ச்சி இதழ், மார்க்சியத் திறனாய்வுக்கெனவே வெளிவந்தது. பண்டைத் தமிழ் இலக்கியங்களை அவற்றின் காலப் பின்னணியோடு மார்க்சிய நோக்கில் அணுகி, தமிழ்ச் சமூகம் பற்றிய கட்டுரைகளை அது வெளியிட்டது. நாட்டுப்புறப் பாக்கள் பற்றிய தொகுப்புகளையும் ஆய்வுகளையும் வெளியிட்டது.

ஈழப் பேராசிரியர்களான க. கைலாசபதி, கா. சிவத்தம்பி இருவரும் தமிழகத்தின் விமரிசனத் துறையில், குறிப்பாக கல்வி வட்டாரங்களில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக நுஃமானைக் கூறலாம். கைலாபதியின் அடியும் முடியும், பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், ஒப்பியல் இலக்கியம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. கா. சிவத்தம்பியின் தமிழ்ச் சிறுகதை வரலாறு பற்றிய நூலும், நாடகத் துறை, இலக்கிய வரலாறு பற்றிய நூல்களும் குறிப்பிடத் தக்கவை. நுஃமானின் பாரதியின் மொழியியல் நோக்கு பற்றிய நூலும் குறிப்பிடவேண்டியது. பொதுவாகக் கூறினால், மார்க்சிய வரலாற்று நோக்கிலான ஆய்வு தரமாக இருந்ததுபோல, இலக்கிய மதிப்பீடுகள் சரிவர அமையவில்லை. சான்றாக, “படித்த நடுத்தர மேல்வர்க்கப் பகுதியினருக்கே உரிய நம்பிக்கையின்மை, நம்பிக்கை வறட்சி, தெளிவின்மை, அந்நியப்படல், போலித்தன்மை, தமிழ் மரபு அறியாமை, பொறுப்புணர்ச்சியின்மை, சமுதாய விரோதம், மட்டுமீறிய தனிமனித வாதம் முதலியன புதுக் கவிதைக் காரர்களின் சிறப்பியல்புகளாக இருந்தன” என்று கைலாசபதி எழுத்து கவிதைகளையும் தொடக்ககாலத் தமிழ்ப் புதுக்கவிதைகளையும் மதிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டலாம்.

நல்ல விமரிசனப் பார்வையோடு இயங்கிய மார்க்சிய விமரிசகர்களாகப் பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன், ஆர். கே. கண்ணன் போன்றோரைக் குறிப்பிட வேண்டும். ஆர். கே. கண்ணனின் பாரதி பற்றிய மதிப்பீடுகள், எஸ். ராமகிருஷ்ணனின் கம்பன் பற்றிய ஒப்பீட்டு நோக்குகள் ஆகியவை முக்கியமானவை. ச. செந்தில்நாதனை முதன்முதலாக கவனிக்க வைத்தது, அவரது தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய மதிப்பீட்டு நூல். கைலாசபதியைப் பின்பற்றி அந்தப் பாணியில் எழுதத் தொடங்கி, பிறகு வறட்டு மார்க்சியப் பாணிக்கு மாறிவிட்டவர் பேராசிரியர் கோ. கேசவன். இவரது மண்ணும் மனித உறவுகளும், பள்ளு இலக்கியம் ஒரு பார்வை ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

தி.க. சிவசங்கரன், வானமாமலை காலமுதலாக தமிழில் விமரிசனம் செய்து வந்தாலும், அபிப்பிராயம் கூறுவதற்குமேல் அவரது கருத்துகள் செல்லவேயில்லை. வல்லிக்கண்ணனும் சில நல்ல சமகால வரலாற்று நூல்களை வழங்கியிருந்தாலும மேலோட்டமான அபிப்பிராயங்களை மட்டுமே அவற்றில் முன்வைத்தார். இவ்ரகளுடைய கட்டுரைகளில் விமரிசனத்துக்குத் தேவையான தரமதிப்பீட்டையோ, வரலாற்று நோக்கையோ, அதற்கான காரணங்களையோ காண இயலாது.

இத்துறையில் மிக முனைப்பாக இயங்கிவரும் எழுது வயது இளைஞர் கோவை ஞானி. அவருடைய புதிய தலைமுறை, பரிமாணம், நிகழ், தமிழ்நேயம் போன்ற இதழ்கள் விமரிசனத் துறையில் சாதனை புரிந்தவை. ஆராய்ச்சி குழுவின் வெ. கிருஷ்ணமூர்த்தி, தி. சு. நடராசன் போன்றவர்களையும் குறிப்பிடவேண்டும். ந. முத்துமோகன், தத்துவ அடிப்படைகளை விளக்கும் நூல்களை எழுதியுள்ளார். அருணன், அ. மார்க்ஸ் இருவரும் தொடர்ந்து முனைப்பாக இயங்கிவருபவர்கள். அ. மார்க்ஸ் இணைந்திருந்த நிறப்பிரிகை இதழ் குறிப்பிடத்தக்க ஒன்று. மேற்கிலிருந்து வந்த தத்துவ அமைப்புகளை முன்வைத்து, தமிழிலக்கியங்கள் மறுவாசிப்புச் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டவர் இவர். அண்மைக்காலத்தில் பிரேம், தமிழ் விமரிசனத்துறையில் சற்றே மிகுதியாக எழுதிவருகிறார்.

மார்க்சிய இலக்கியப் படைப்பிற்கும் இலக்கிய விமரிசனத்திற்கும் அடிப்படையாக இன்றும் கருதப்படுவது யதார்த்தவாதம். இன்னும் தமிழிலக்கியத்தின் நிறைகுறைகளும் நவீனத்துவம்-பின்நவீனத்துவம் போன்றவற்றோடு அதன் ஊடாட்டங்களும் தொடர்புகளும் சரிவர உள்வாங்கப்படவில்லை. யதார்த்தவாதம் சார்ந்தே சிறந்த படைப்புகள் தோன்றாத நிலையில் நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் இங்கு கால்கொண்டுவிட்டன. தமிழில் இளம் படைப்பாளிகளை ஈர்த்து நம்பிக்கை ஊட்டுமளவிற்கு மார்க்சியம் சார்ந்த வீரியமிக்க இயக்கங்களோ அமைப்புகளோ இல்லை. எல்லாரிடமும் ஒரு பொதுவான மனிதாபிமான உணர்வு காணப்படுகிறது என்பதற்குமேல் கொள்கை அடிப்படையிலான பார்வை இல்லை. 1950களைவிட இன்று வளம் குன்றித்தான் மார்க்சிய இலக்கியமும் விமரிசனமும் காணப்படுகிறது.

இதற்கு ரஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் சோஷலிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவைச் சுட்டிக்காட்டி, சோஷ்லிசத் தத்துவமே தோற்றுப்போய்விட்ட ஒன்று என்று என்றும், அது நடைமுறைக்கு உதவாத ஒன்று என்றும் சிலர் கூறுகின்றனர். இதற்குத் தத்துவங்கள் தோற்பதில்லை, நடைமுறைகள்தான் தோற்கின்றன என்று மார்க்சியர்கள் விடையளித்தாலும், காலப்போக்கிற்கேற்ப மார்க்சியத் தத்துவத்தில் மாறுதல்களை ஆராய்ந்து கொள்ளவேண்டும் என்பதும் கவனிக்கத் தக்கது. எல்லாமே மாறும் என்றால் மார்க்சியம் மட்டும் மாறாமல் அப்படியே எவ்வாறு இருக்க இயலும்? மார்க்சிய அழகியல் என்பது வளர்ந்து வரும் அறிவுத்துறையாகும், எனவே அதன் வளர்ச்சி எந்த ஒரு நிலையிலும் முற்றுப்பெற்ற முழுமையை அடைந்துவிட்டதாகக் கருதமுடியாது என்று சிலர் இதற்கு விடையளிப்பார்கள். ஒருவகையில் இந்தக் கூற்றை பிராங்பர்ட் மார்க்சியம் சார்ந்த நோக்குகளும், அல்தூசர் போன்றோரின் அமைப்பியம் சார்ந்த நோக்குகளும் நிரூபிக்கின்றன என்று கருதலாம்.

யதார்த்தவாதத்தின் போதாமையா, தோல்வியா?
யதார்த்தத்தை மனத்தில் ஏற்று அதை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக இலக்கியத்தை உருவாக்க முடியும் என்ற அறிவொளிக்கால நேர்க்காட்சித் தத்துவத்தின் வெளிப்பாடுதான் யதார்த்தவாதம் என்பர். “யதார்த்தத்தைக் கையகப்படுத்திய இறுமாப்பை எழுத்தாளனுக்கும், அதனைப் புரிந்துகொண்ட போலி மகிழ்ச்சியைப் படிப்பவனுக்கும் அளிக்கிறது யதார்த்தவாதம்” என்று அ. மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

தமிழ் நாவல்களையும் சிறுகதைகளையும் படிப்பவர்கள், யதார்த்தவாத எழுத்து அதன் முழுவீச்சில் வெளிப்படவேயில்லை என்பதை உணரலாம். யதார்த்தவாதத்தின் சாத்தியங்கள் தமிழில் முழுவதுமாகப் பயன்படுத்தப்பட வில்லை. தணிக்கை செய்யப்படாத யதார்த்தவாத எழுத்து (இயற்கைவாதம் சார்ந்த எழுத்தை இங்கே குறிப்பிடவில்லை) என்பது தமிழிலே இல்லை. ஒழுக்க மதிப்புகள் சார்பாகத் தணிக்கை செய்யப்பட்ட எழுத்துகளே உள்ளன. இதேபோல வட்டார இலக்கியமும் யதார்த்தவாதம் சார்ந்தது என்று சொல்லப்பட்டாலும், அதுவும் சரியான கோணத்தில் வெளிப்படவில்லை என்றே தோன்றுகிறது.

நம்முன் இன்று உள்ளவை உண்மையான யதார்த்தமா என்ற கேள்வியை எழுப்பி, இருப்பவை யாவும் போலி யதார்த்தங்களே என்பாரும் உள்ளனர். இதனை ஓரளவுதான் ஒப்புக்கொள்ள முடியும். இன்று போலி யதார்த்தம் (வர்ச்சுவல் ரியாலிட்டி) பற்றி நிறையப் பேசத் திரைப்படமும் தொலைக்காட்சி பிம்பங்களும் கணினி வரைகலையும் இடமளித்தாலும், இன்றைய ஒடுக்கப்பட்டவர்கள் வாழ்க்கைநிலைகளையோ, விவசாயிகள் பிரச்சினைகளையோ, மக்கள் தினசரி இடர்ப்படுகின்ற வாழ்க்கை முறைகளையோ போலி யதார்த்தங்கள் என்று நாம் கொள்ளமுடியாது. யதார்த்தவாதம் ஒரு போலியான பாதுகாப்பு உணர்ச்சியை வாசகருக்கு அளிக்கிறது. சமூகத்தில் நிலவும் வன்முறையைக் கேள்விக்கிடமின்றி ஏற்றுக்கொள்ள வைக்கிறது என்றும் குறை சொல்லப்படுகிறது. இவை எல்லாம் பகுதி உண்மைகளே அன்றி முழு உண்மைகள் அல்ல.

யதார்த்தவாதம் பிற கொள்கைகளோடு கொண்டுள்ள முரண்பாடுகளை அரு£ய்ந்து அறிவதன்முன், அதன் சாத்தியங்களைப் படைப்புகளில் முழுவதுமாக உணரும் முன், நவீனத்துவம் நுழைந்துவிட்டது. நவீனத்துவம் யதார்த்தவாதத்திற்கு முரண்பட்டதல்ல என்று ஞானி போன்றோர் கூறினாலும், அது தன் முழு வீச்சினை இங்கு எட்டவில்லை. நவீனத்துவத்தின் சாத்தியப்பாடுகள் ஓரளவே உணரப்பட்ட நிலையில், பின்நவீனத்துவம், மேற்கத்தியத் தாக்கத்தினால், அரைகுறையாக, சரிவரப் புரிந்துகொள்ளப்படாமல், அதற்கான சமூகப் பின்னணியும் இல்லாமல் இடம்பெற்றுவிட்டது.

இலக்கியம்