வேர்களின் பேச்சு

வேர்களின் பேச்சு

(இந்தப் பெயர்கொண்ட சிறுகதைத் தொகுப்பு 2009இல் அடையா ளம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தபோது எழுதிய மதிப்புரை.)

meeranநாஞ்சில்நாடு தமிழுக்கு வழங்கியிருக்கும் சிறந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ என்ற நாவல் வழி தமிழ் எழுத்துலகிற்கு அறிமுகமாகி, ‘சாய்வுநாற்காலி’ போன்ற நாவல்களை எழுதியவர். சாகித்திய அகாதெமி உட்படப் பல பரிசுகளைப் பெற்ற இவரை அறிமுகம் செய்யத் தேவை யில்லை. இவரது சிறுகதைகளின் முழுத் தொகுப்பு ‘வேர்களின் பேச்சு’. முன்னர் ஆறு சிறுகதைத் தொகுப்புகளாக வெளி வந்தவை.

தமது எழுத்துகளில் மீரான் ஒரு பெரிய ஜாலமே செய்கிறார். என்ன அற்புதமான கவிதை ததும்பும் நடை! பல கதைகளின் தலைப்புகளே கவித்துவமாக உள்ளன. மீரானின் சிறுகதைகளில், நாவல்களைவிட மலையாளக் கலப்பு குறைவு. முஸ்லீம்களின் வட்டாரமொழிக் கலப்பு உண்டு. ஆனால் அது எவ்விதத்திலும் இக் கதைகளின் சுவாரசியத்தைக் குறைக்கவில்லை.

மீரான் பெரிய உலகளாவிய பிரச்சினைகளில் ஈடுபடுவ தில்லை. தமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி அறவே எழுது வதில்லை. தமது கிராமம். அதில் வசிக்கும் முஸ்லீம் மக்கள். அவர்கள் படும் பாடு, அவர்களின் மூடநம்பிக்கைகள். அவ்வளவு தான் அவரது உலகம். அவர்களைப் பற்றிய மிக நுட்பமான பதிவுகளை அளிக்கிறார். மீரானிடம் ஒரு ரொமாண்டிக் தன்மையும் இருக்கிறது. பழையதன் மீதுள்ள நாட்டம், தீமைகளுக்குத் தண் டனை காத்திருக்கிறது என்ற நம்பிக்கை. அவ்வப்போது வேடிக்கை யாக பேய்கள், ஜின்களும் வருகின்றன. மனிதர்களுக்கு புத்தியும் சொல்கின்றன பேய்கள்!

அவரைச் சுற்றியுள்ள சமூகத்தின் ஆதரவற்ற மனிதர்களின்-ஆனால் இச்சமூகத்தின் வேராக இருப்பவர்களின் உணர்ச்சிகள் அவரை பாதிக்கின்றன. அதைத்தான் அவர் தமது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்: வேர்களின் பேச்சு!

தமது சமூகத்திற்கு வெளியே சென்று அவர் எழுதியுள்ள கதைகள் மிகக் குறைவு. அவற்றில் குறிப்பிட வேண்டிய முக்கிய மான கதை ‘மிஸ்டர் மார்ட்டின்’. எவ்வளவு நைச்சியமாக நமது கிராமங்களின் உள்ளே நுழைகிறார்கள் உலக முதலாளிகள் என் பதை அழகாக வெளிப்படுத்தும் கதை. ‘ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்’ மிக மென்மையாக நமது நகர்ப்புற மனப்பான்மை யால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைப் பதிவுசெய்யும் கதை.

சிறிய வெற்றிகளில் அகமகிழ்ந்து போய்விடாமல் மிகச் சரியான முறையில் பதிவு செய்தலும் தகவல்கள் மீது துல்லிய மான கவனம் செலுத்துதலும் மீரானை மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆக்கியிருக்கின்றன. தொடக்க காலத்தில் அவர் முஸ்லிம் இதழ்களிலேயே எழுதிய சிறுகதைகளிலும் ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய அக்கறை-குறிப்பாக வேறு வழியின்றிப் பணியில் ஈடுபடுத்தப்படும் சிறுவர் சிறுமியரைப் பற்றிய கவனம் ஆழமாக வெளிப்படுகிறது.

சற்றுப் பிந்திய கதைகளில் முதியவர்கள் ஆதரவின்றிப் படும் வேதனைகளும், நடுத்தர வயதுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கப் படும் அவதிகளும், சிறியவர்கள் தங்களை ஆளாக் கிய முதியவர்கள் மீது காட்டும் அவமதிப்புகளும் போன்ற விஷயங்கள் முதலிடம் பெறுகின்றன. சமயமோதல் பற்றிய குறிப்பு அபூர்வமாக ஓரிரண்டு கதைகளிலேயே வருகிறது. மற்றப்படி மீரான் காட்டும் இஸ்லாமிய சமூகத்தினர், தாங்கள் சிருஷ்டித்துக் கொண்ட ஒரு வட்டத்திற்குள் அதன் படிநிலைகளுக்குள் ஏற்றத் தாழ்வுகளுக்குள் வெந்து நொந்துகொண்டோ சந்தோஷமாகவோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிற சமயத்தினர் பற்றிய பதிவுகள் மிகக் குறைவு என்றாலும் அவர்களுள் ஒடுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்ட முஸ்லிம் முதியோர் மீது காட்டும் பரிவு ஓரிரு கதைகளில் மிக நன்றாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகாலக் கதைகள் சில மிதமிஞ்சிய உணர்ச்சியைக் கையாண்டாலும், ஒரு செய்தியாளனின் பார்வையில் கதையைச் சொல்கிற மீரானின் நடை, பிரச்சின களைக் கூர்மையாக வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியாத ஒரு சமூகத்திற்குள் நுழைந்து அவர்களின் வாழ்க்கைகளைச் சந்திக்கும் அனுபவத்தைச் சிறப்பாகத் தருகிறார் முகமது மீரான். அடையாளம் பதிப்பகம் மிகச் சிறப்பான கட்டமைப்பில் இந்த நூலை வெளியிட்டுள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. மொத்தத்தில் தமிழ்ச் சிறுகதை உலகிற்கு ஓர் அருமையான பங்களிப்பு.


மார்க்ஸிய அழகியலும் ஞானியும்

மார்க்ஸிய அழகியலும் ஞானியும்

ஞானி தமிழுலகில் ஏறத்தாழ முப்பதாண்டுகளாகத் திறனாய் வாளராக இயங்கி வருபவர். படைப்புலகிலும் அவர் சில காரியங் களைச் செய்துள்ளார் என்ற போதிலும் அவை முக்கியமானவை அல்ல என்று கருதுகிறேன். ஆனால் திறனாய்வுலகில் அவரது சாதனை என்றும் நிற்கக்கூடியது. அத்திறனாய்வுகளுக்கெல்லாம் அடிப்படையாக அவருக்கு ஓர் தனித்த அழகியல் பார்வை இருக்கிறது. அது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாக இருப்பதால் அதனைப் பற்றிய கட்டுரையாக இது அமைகிறது.

அவரது பார்வைகள் பெரும்பாலும் எனக்கு உடன்பாடாக இருப்பத னால் ஞானியின் அழகியல் கொள்கை அல்லது விமரிசனக் கொள்கை பற்றி நான் இதுவரை எதுவும் எழுதியது கிடையாது. பொதுவாக அவருடைய அழகியல் என்பது மார்க்ஸிய சித்தாந்த எல்லைக்குள் இயங்குவதால் அதனை ‘மார்க்ஸிய அழகியல்’ என்பதற்குள் அடக்கலாம். ஆனால் அது பிற மார்க்ஸியவாதிகள் முற்றிலும் ஏற்கக் கூடிய அழகியலும் அல்ல.

ஞானி எங்குநல்லது காணப்படினும் அதை எடுத்துக்கொள்ளும் ஒரு விமரிசகர். நமது சித்தர் மரபிலிருந்து நாம் நமக்கென்ற பார்வைகளைப் பெறவேண்டும் என்பார். அதேசமயம் பக்தி இலக் கியத்தையும் பாராட்டுவார். பொன்னீலன் போன்ற மார்க்ஸிய நோக்குடைய எழுத்தாளர்களையும் பாராட்டுவார். ஒருபடி மேலேசென்று ஜெயமோகன், சுந்தர ராமசாமி போன்றவர்களின் படைப்பு களைப் புறக்கணிக்கக்கூடாது என்பார். இவையெல்லாம் கட்சிசார்ந்த பிற மார்க்ஸியர்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றவை. அவர்களது கட்சி சார்ந்த அழகியலுக்குப் புறம்பானவை. எங்கு நல்லது காணினும் எடுத்துக்கொள்ளக்கூடிய இத்தகைய பார்வையை ‘எக்லெக்டிக்’ என்பார்கள். இந்த எக்லெக்டிக் பார்வை மார்க்ஸிய அழகியலுக்கு முரணானது எனக் கட்சி சார்ந்த மார்க்ஸியர்கள் நினைக்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் நூல்களில் ஞானிக்கு முக்கியத்துவம் தந்தது கிடையாது.
மார்க்ஸிய அழகியல் என்ற பெயரில் ஞானி உட்படப் பலர் நூல் கள் எழுதியிருக்கிறார்கள். அவற்றின் ஆதாரக் கருத்துகளைத் தொகுத்து நோக்கி ஞானியின் அழகியல் பார்வை அவற்றிலிருந்து எப்படி மாறுபடுகிறது என்பதைப் பார்ப்பது நலம். எனவே அடிப் படையாக இங்கே சில செய்திகளைத் தொகுத்துக் கொள்வோம்.

மார்க்ஸ்-ஏஞ்சல்ஸ் எழுத்துகளில் கலை பற்றி முறையான கொள்கை எதுவும் காணப்படுவதில்லை. ஆனால் இருவருமே தங்கள் இளமை தொடங்கி வாழ்நாள் பூராவும் கலையில் பேரளவு ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பதை அவர்கள் எழுத்துகளில் ஆங்காங்கு காணப்படும் குறிப்புகளால் அறியலாம். அண்மைக் காலத்தில் பலரும் இத்தகைய குறிப்புகளைத்தான் மார்க்ஸிய அழகியல் ஒன்றை உருவாக்கப் பயன்படுத்திவந்துள்ளனர். குறிப் பாக, ஆங்கிலத்தில் ஆர்வன் (1973), லய்ங் (1978) ஆகியோரின் நூல்கள் இதற்குத் துணைபுரிகின்றன.

மார்க்ஸ்-ஏஞ்சல்சின் அழகியல் பொதுவாக அவர்களது இலக் கியப் பார்வையின் விளைவேயாகும். அவர்கள் படித்த இலக்கியங் களில் நாடகங்களும் அடங்கும். எனினும் இவை அழகியல் கொள்கையாக உருப்பெறக்கூடிய அளவுக்கு ஒருசீர்த்தன்மை உடையனவாக இல்லை. அவையும் பெரும்பாலும் உள்ளடக்கம் தொடர்பானவையாகவே இருப்பதால் பிற்காலத்தில் மார்க்ஸிய இலக்கிய விமரிசனம் முழுமையுமே உள்ளடக்கத் தொடர்பாக மாறிப்போயிற்று. வடிவத்திற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்க வில்லை. 1945வரை மார்க்ஸ்-ஏஞ்சல்சின் கடிதங்கள், அவர் களது அழகியல் கருத்துகள் ஆகியவை தொகுத்துத் தரப்படவே யில்லை. இதனால் அவர்களது பார்வைகளையும் பின்வந்த திற னாய்வாளர்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏஞ் சல்ஸ் மறைந்து ஏறத்தாழ ஐம்பதாண்டுகள் சென்ற பிறகே மார்க்ஸ்-ஏஞ்சல்ஸுடைய அழகியல்கருத்துகள் ஒருவாறாகத் தொகுக்கப்பட்டுத் திறனாய்வுக்கெனப் பயன்படுத்தப்படலாயின. இருந்தாலும் மார்க்ஸிய அழகியல் ஒன்றை உருவாக்கவேண்டு மென்று பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதி முதலாகவே முயற் சிகள் மேற்கொள்ளப் பட்டன. மெரிங் (1893), பிளஹெனாவ்(1912) ஆகியோர் செய்த முயற்சிகளை இங்கே குறிப்பிடலாம்.

பிந்தைய மார்க்ஸிய எழுத்தாளர்கள் செய்த முயற்சிகளின் சாரத் தினை ‘யதார்த்தத்தை வடிவமைத்தல்’ என்ற தொடருக்குள் அடக்கிவிடலாம். இதற்கு அடிப்படையாக அமைவது மார்க்ஸின் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் இயங்கியலுமாகும். இவற் றைப் பின்பற்றினால் யாரும் இலக்கியப் படைப்புகளையோ அவற் றின் அழகியலையோ பொருளாதார வரலாற்றுமைய வாதத்திற் குள் முடக்கிவிடமுடியாது. என்றாலும் எப்படியோ பின்னாளைய இலக்கியப் படைப்புகளும் விமரிசனங்களும் மார்க்ஸிய அடிப்படை யிலான ஓர் அறவியல் பிரசாரத்திற்குள் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. பெரும்பாலும் வர்க்கப் பார்வை, யதார்த்தத்தை மீள்படைப்புச் செய்தல் என்ற அளவிலேயே மார்க்ஸியப் படைப் புலகம் முடங்கிவிட்டது.

1840களில் பாட்டாளிவர்க்கத் தலைமை என்பதைச் சிந்திக்கத் தொடங்கிய நாள்முதல் வர்க்கப்பார்வை என்பது முக்கியமான மார்க்ஸியச் சிந்தனையாகிவிட்டது. உண்மையில் வர்க்கச் சமன் மைகள் (Class Equivalents) என்னும் விஷயம்பற்றி முதலில் பேசிய வர்கள் மார்க்ஸோ ஏஞ்சல்ஸோ அல்ல. பிளெஹனாவ்தான் இக் கொள்கையை உருவாக்கினார். இளம் ஹெகலியர்கள் வெளிப் படையாகவே அரசியல் பிரசாரத்தைத் தங்கள் படைப்புகளில் வைத்தபோது அவை வரலாற்று உணர்வுடையவை என்ற காரணத்தினால் மார்க்ஸ் ஓரளவு ஏற்றுப் பாராட்டவும் செய்தார். ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் வர்க்க உணர் வைத் தாண்டி ஒரு பிரபஞ்ச ஒத்துணர்வுத் தன்மைக்குச் சென்று தங்கள் படைப்பினை மேம்படுத்த முடியுமா என்பதில் மார்க்ஸுக்குப் பெரும் ஐயப்பாடு இருந்தது. வர்க்க உணர்வைத் தாண்டியும் பிரபஞ்ச ஒத்துணர்வோடு படைத்த பால்ஸாக் மாதிரியான எழுத் தாளர்களை அவர் பாராட்டத் தயங்கவில்லை. மாறாகத், தங்கள் வர்க்க மூலங்களைத் தாண்டி வெளியே வராமல், சமத்துவம் சகோதரத்துவம் என்று பெயர் பண்ணிப் படைத்த எழுத்தாளர்களை -உதாரணம் யூஜின் சூ போன்றவர்கள் – எள்ளி நகையாடத் தயங்க வில்லை.

பின்னாளில் வர்க்க இணைவுகள் பற்றிய பார்வைகள் எழுத்தாள ருக்கு எழுத்தாளர் வேறுபடத்தொடங்கின. பக்தின் முன்வைத்த தீவிர மனிதமையவாதம் (Humanism), புரட்சியை வலியுறுத்தியது. அதேசமயம், அவருக்கு முப்பதாண்டுகள் கழித்து லூசியன் கோல்ட்மன் முன்வைத்த ‘மரபுவழி அமைப்பியம்’ என்னும் கொள்கை ஒரு வர்க்கத்தினரின் உலகப்பார்வை என்பதை அடிப் படையான இலக்கிய அளவுகோலாகக் கொள்கிறது. 1930களில் போல்ஷ்விக் விமரிசனங்களில் ஓர் எழுத்தாளரின் வர்க்க அடிப்ப டையே இலக்கியத்தின் வர்க்க அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. இப்படிப்பட்ட பார்வைகள் வர்க்கச் சமன்மைகள் என்னும் பார்வை யை வெறுமனே பெயரளவுக்குப் பயன்படுத்துகின்றன. ஆனால் இதே பார்வையை சார்த்தர், ஃப்ளாபேரின் வர்க்கக் கல்வி பற்றிய நூலில் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

துண்டுதுண்டாக உள்ள இந்தக் குறிப்புகள், பலவேறு விதமான அழுத்தங்களும் நிலைப்பாடுகளும் மார்க்ஸிய அழகியல் கொள்கை யில் உருவாக வழிவகுத்துள்ள்ன. பொதுவாக நோக்கினால் மார்க்ஸின் எழுத்துகளை வைத்து ஓர் மனிதமைய அழகியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி கலை என்பது படைப்புச் சக்தி யுள்ள ஓர் உழைப்பு (creative labour). பிற அந்நியப்படாத உழைப்புக ளிலிருந்து இது எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல. கட்டடக் கலை ஞனையும் தேனியையும் தொடர்புபடுத்தி மார்க்ஸ் தமது மூல தனம் நூலின் ஐந்தாம் அத்தியாயத்தில் பேசுகிறார். இங்கு கட்டடக் கலைஞனை அவர் உதாரணம் தந்தது, அவனுக்குப் பிரதானம் தரவேண்டும் என்ப தற்காக அல்ல. மனித உழைப்பாளி ஒருவன் என்ற அளவிலேயே அங்கு அந்த உதாரணம் அளிக்கப் படுகிறது. அந்நியமாகாத எந்த உழைப்பும் படைப்பாற்றல் கொண் டதே ஆகும் என்பது மார்க்ஸின் கருத்து. மார்க்ஸின் இந்த அற்புதமான கருத்து, கலையினை அதன் மாயத் தன்மையினின்றும் விலக்கி, வரலாற்றுப் பூர்வமாக அதை நம்மை நோக்கவைத்து, பிற செயல்களிலிருந்து கலைச்செயல் உயர்ந்ததோ மாறுபட்டதோ அல்ல, அனவைர்க்கும் அது இயல்பாகக் கைவருவது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

முதலாளித்துவ அமைப்பில் பிற உழைப்புகளைப் போலவே கலை யும் மேலும் மேலும் அந்நியமாக்கப்படுகிறது என்பதை இப் பார் வையின் ஓர் உபதேற்றமாக நாம் கொள்ளலாம். கலை என்பது ஓர்விலைப் பண்டமாக மாறிவிடுகிறது. கலைஞனும் ஓர் சுரண்டப் படும் தொழிலாளியாகி, படைப்பின்மீது தனக்குள்ள உரிமையை இழந்துவிடுகிறான். பிற தொழிலாளரைப் போலவே உபரிமதிப்புக் கெனப் படைக்குமாறு தூண்டப்படுகிறான். ”முதலாளித்துவ முறை, சிலவித ஆன்மிகப் படைப்பு முறைகளுக்கு எதிரானது – உதாரண மாகக் கவிதையும் கலையும்” என்று மார்க்ஸ் சொல்வதை நாம் இங்கு மனத்திற் கொள்ளலாம். முதலாளித்துவத்தின் கீழ் கலை எப்படி உருமாற்றம் அடைகிறது என்பதை அவர் விளக்குகிறார்:

(முதலாளித்துவ நோக்கில்) “ஐந்து பவுண்டு காசுக்காக சுவர்க்கநீக் கம் படைத்த மில்டன் ஓர் உற்பத்தித் திறனற்ற தொழிலாளி. ஆனால் அதேசமயம் தொழிற் சாலையில் உற்பத்தி செய்வது போலத் தன் முதலாளிக்காகப் படைப்புகளை உற்பத்தி செய்து தள்ளும் ஓர் எழுத்தாளன் உற்பத்தித் திறன்மிக்கவன்-ஏனென்றால் அவன் படைப்பு ஆரம்பத்திலிருந்தே மூலதனத்தினால் உருவாக் கப்பட்டு அந்த மூலதனத்தினை மேலும் பெருக்க உதவுகிறது. தனது மனநிறைவுக்காகப் பாட்டுகளைப் பாடும் ஒருபாடகி உற்பத் தித்திறன் அற்றவள். ஆனால் அவளே ஒரு முதலாளியால் வேலைக்கு ஏற்கப்பட்டு முதலாளி சம்பாதிப்பதற்காகப் பாடினால், அவள் உற்பத்தித் திறன் கொண்டவளாகிவிடுகிறாள். ஏனென்றால் அவள் மூலதனத்தை உருவாக்குகிறாள்.”

இவை மார்க்ஸின் வார்த்தைகள். மார்க்ஸுக்குப் பின்னர் கலாச் சாரத் தொழிற்சாலை என (உதாரணத்திற்கு அடார்ணோ, ஹார்க் ஹைமர் போன்றோர் சொல்வது போல) கலைத் தொழிலைச் ‘சிதைத்து’ முதலாளித்துவத்தின் கீழ் விலைப்பொருளாக மாற்று வதைப் பகுப்பாய்வு செய்து கூறுவதே மார்க்ஸியக் கலைக் கொள்கை ஆயிற்று.

தேவை-உற்பத்தி என்னும் பொருளாதார விதிக்கேற்பக் கலைப் பண்டங்கள் வியாபாரப் பொருட்களாக மாற்றப்பட்டு விடுவதோடு மட்டுமல்லாமல், அவை முதலாளிக்கெனவும் அரசாங்கத்திற்கென வும் பிரசாரம் செய்வதற்கே ஆளாக்கப்பட்டுவிடுவதால் ஒத்துச் செல்லும் குணம் கொண்டவையாகவும், கூறியதையே திரும்பக் கூறுவனவாகவும் மாறி, அரசாங்கத்திற்குத் தேவையான ‘அமைதி’ யை மக்கள்பால் உருவாக்குவதற்கே அவை பயன்படுவன ஆகி விடுகின்றன.

விலைப்பொருள் பற்றிய மார்க்ஸின் கொள்கையிலிருந்து ‘வரலா றும் வர்க்கஉணர்வும்’ என்ற தமது கட்டுரையில் ஜார்ஜ் லூகாச் தமது கலைக்கோட்பாட்டினை உருவாக்கினார். முதலாளித்து வத்தின்கீழ் பொருளுறவாக்கப்பட்டு துண்டுதுண்டாகச் சிதிலமாகிப் போகின்றன மனித வாழ்க்கையும் அதன் அனுபவங்களும் என்ப தை அவர் காட்டுகிறார். சமூக, பொருளாதார உறவுகளைப் புரிந்து கொள்ளப் பொருளுறவாக்கப்பட்ட மனத்தினால் முடியாது என்ப தையும் அவர் விளக்குகிறார்.

தமது வாழ்நாள் முழுவதும் ஓர் இலக்கியக் கொள்கையை உரு வாக்கப் பாடுபட்ட லூகாச்சின் எழுத்துகளில் முழுமை என்பது ஓர் மையஇடத்தைப் பெறுகிறது. மேலோட்டமான தோற்றங்களுக்கு அப்பால் சென்று சமூக முழுமையை அதன் அடிப்படையான முரண்பாடுகளோடும் கண்டறிந்து வெளிப்படுத்துவதே பேரிலக்கி யம் என்பது லூகாச்சின்கொள்கை. இங்கு முழுமை, பேரிலக்கியம் என்று சொல்லப்படும் கருத்துகளுக்குச் சற்று நாம் பின்னால் வருவோம்.

இக்கொள்கையோடு தொடர்புடையது யதார்த்தவாதக் கொள்கை. வகைமாதிரியான கதைமாந்தர்களைக் கொண்டு முழுமையைப் படைத்துக்காட்டுவது நல்லதொரு யதார்த்த இலக்கியத்தின் பணி என்பார் லூகாச். மார்க்ஸியத்தை நிறுவிய மற்ற அறிஞர்களின் ஆதரவை இந்த யதார்த்தக் கொள்கை பெற்றது. மேலும் இதற்கு ஆதாரமாக 1880களில் ஏஞ்சல்ஸால் எழுதப்பட்ட இரு கடிதங்கள் அமைந்தன என்பதால் இக்கொள்கைக்கு ஆதரவு உறுதி பெற்றது. இக்கடிதங்களில் வெளிப்படையாக அரசியல் பிரசாரம் செய்கின்ற இலக்கியத்தை மறுத்து ஏஞ்சல்ஸ் எழுதியிருக்கிறார். அவ்வகை இலக்கியங்களை tendency literature என்று கூறி அவர் புறக்கணிக் கிறார். இதற்கு மாற்றாக அவர் வைப்பதுதான் சரியான யதார்த்த இலக்கியம் என்பது. இதிலும் அரசியல் அணுகுமுறை விவாதிக் கப்பட்டாலும் அது வெளிப்படையான பிரசாரமாக அமைவ தில்லை.

”எவ்வளவுக்கெவ்வளவு ஆசிரியனின் கருத்துகள் உள்ளாழத்தில் மறைந்திருக்கிறதோ அவ்வளவுக்கு ஓர் கலைப்படைப்புக்கு அது நல்லது. ஆசிரியன் கருத்துகள் வெளிப்படையாக இல்லாவிட்டா லும் அவன் குறிக்கும் கருத்துகள் பகுப்பாய்வில் வெளிப்படவே செய்யும்.”
(ஏஞ்சல்ஸ், மார்கரெட் ஹார்னசிற்கு எழுதிய கடிதம், 1888).
அவர் உதாரணம் காட்டும் எழுத்தாளர் பால்ஸாக்.

”இன்னும் சிலகாலங்களில் அழிந்தொழியுமாறு சபிக்கப்பட்டு விட்ட பிரபுத்துவ வர்க்கத்திற்கு அனுதாபம் காட்டும் ஒரு லெஜிடிமிஸ் டாக பால்ஸாக் இருந்தபோதிலும் அவர் நம்மை மிகு வியப்புக்குள் ளாக்கக்கூடிய ஃபிரெஞ்சு சமூக வரலாற்றைப் படைத்துக் காட்டு கிறார்” என்று அவரைப் பாராட்டுகிறார் ஏஞ்சல்ஸ்.

”வகைமாதிரியான கதைமாந்தர்களால் சமூக அமைப்பினை அதன் வர்க்கமுரண்பாடுகளோடு சேர்த்துத் துல்லியமாகப் படைத்துக் காட்டுவது யதார்த்தவாதம்”
என்னும் கொள்கை இதனால் மார்க்ஸியத்தின் மையஅழகியல் கொள்கையாகிவிட்டது. இன்னும் விரிவாக நோக்கினால், கலைக ளுக்கும் அவை உற்பத்தியாகின்ற சமூக அமைப்புகளுக்குமான உறவைப் பற்றிப் பேசும் கொள்கைகள் யாவிற்கும் அடிப்படையாக அமைவது மார்க்ஸ் 1859இல் Critique of Political Economy என்னும் பிரதிக்கு எழுதியமுன்னுரை. அதில்தான் அடிக்கட்டுமானம் மேற் கட்டுமானம் பற்றிய கருத்து இடம்பெறுகிறது. மேற்கட்டுமானத் தின் பகுதியாகவே அழகியல் அதில் சொல்லப்படுகிறது. வர்க்க முரண்பாடுகள் மோதிக்கொண்டு வெளிவரும் கருத்துருவ வடிவ மாகவும் அது குறிப்பிடப்படுகிறது.
பிளெஹனாவின் எழுத்துகளிலும் ‘கலை தனது காலத்தின் கருத் துருவ வெளிப்பாடு’ என்னும் கருத்து நன்கு வெளிப்படுகிறது. “சமூக வாழ்க்கையின் பிரதிபலிப்பே கலையும் இலக்கியமும்” என்பது அவர் கூற்று. இம்மாதிரிப் பார்வை, கலையைச் சமூக உறவுகள், வர்க்க அமைப்புகள் இவற்றின் பிரதிபலிப்பாகக் குறுக்கி விடுகின்றது. ஆகவே கலை என்பது சமூகத்தின் பொருளியல் தன்மைகளால் உருவாக்கப்படுவதாகவும் குறுக்கப்படுகிறது. ‘கருத் துருவத்தின் வெளிப்பாடே கலை’ என்பதை இன்னும் சிக்கலான முறையில் விளக்கி அண்மைக்காலத்தில் லூசியன் கோல்ட்மன் போன்றவர் கள் எழுதியுள்ளனர்.

இக்கொள்கையிலிருந்து சற்றே மாறுபட்டதொரு பார்வை, புரட்சிக் குக் கலை நிலைக்கள ஆற்றலாகும் தன்மையினையும் கலைஞ னுக்கு இருக்கவேண்டிய ஈடுபாட்டினையும் வலியுறுத்தி எடுத் துக்காட்டுகிறது. முன்பே ஏஞ்சல்ஸ் மிகச் சரியாகவே நேரடிப் பிரச்சாரத்திற்கும் யதார்த்த வகையிலான, மறைமுகமான படைப் புகளுக்குமான வேறுபாட்டினை எடுத்துக்காட்டியிருந்தபோதும், கட்சி மார்க்ஸியர்கள் எவ்வாறோ தீவிர நேரடிப் பிரசாரத்திற்கான ஒரு கொள்கையை மார்க்ஸ்-ஏஞ்சல்சிடமிருந்தே உருவாக்கியி ருக்கிறார்கள் என்பது விநோதம். ‘கட்சியின் சேவைக்காகவே கலை செயல்படவேண்டும்’ என்று லெனின் போன்ற மேதையும் ஒரு சமயம் கூறியிருக்கிறார். ஆயினும் அவரது டால்ஸ்டாயின் கலை பற்றிய விவாதங்களை வைத்து நோக்கும்போது இது அவரது மெய்யான கருத்தென்று தோன்றவில்லை.
மனிதர்கள் தங்கள் வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள், அரசியல்மாற்றத்தில் மனிதப்பிரக்ஞை முக்கியப் பங்காற்றுகிறது என்னும் மார்க்ஸியக் கொள்கை அடிப்படையில் மயகாவ்ஸ்கி, பிரெஹ்ட், பெஞ்சமின் முதல் கோடார்ட், பாசோலினி முதலான இருபதாம் நூற்றாண்டுத் திரைப்பட இயக்குநர்கள் வரை பலர் புரட்சிகர அழகியல் செயல்முறைக்கான வழிவகை ஒன்றைச் சிறப்பாகவே உருவாக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

சோவியத், சீன அடிப்படையில் அமைந்த சோஷலிஸ யதார்த்த வாதமானாலும், மேற்கத்திய யதார்த்த வாதமானாலும், அல்லது வேறுவித யதார்த்த வாதங்களானாலும், யதார்த்தவாதம் என்பது மார்க்ஸிய அழகியலின் மையக்கொள்கையாகவே ஆகிவிட்டிருக் கிறது. லூகாச்சுக்கும் பிரெஹ்டுக்கும் நடந்த விவாதத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் யதார்த்த இலக்கியம் இருபதாம் நூற் றாண்டுக்குப் பொருந்தாது என்றார் பிரெஹ்ட். மனித உணர்வை தீவிரப்படுத்தும் சக்தியை அது இழந்துவிட்டதே காரணம். ஆக இங்கு, கலை துல்லியமான விமரிசனயதார்த்த நிலைப்பாட்டில் சமூகத்தைப் படம்பிடிப்பதுமுக்கியமா, அல்லது கலையின் புரட் சிக்கான ஆற்றலை வைத்து அதன் மதிப்பைத் தீர்மானிப்பதா என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்வி, இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், வடிவவியல் நோக்கில் எழுதப்பட்ட கலை – அதாவது முன்னணிக் கலைக்கும் பழைய வடிவத்திலான கலைக்குமான முரண்பாட்டை விவாதிக்கும் விவாதமாக மாறிப்போயிற்று. இத னால் யதார்த்தவாதக் கொள்கைமீது பெருந்தாக்குதல்கள் முன் வைக்கப்பட்டன. நவீனத்துவ நோக்குக் கொண்டவர்கள், யதார்த்த வாதக்கலை, செயலூக்கமற்ற, சமூகத்தில் போதிய விமரிசனமற்ற ஒரு பங்கேற்பை முன்வைக்கிறது என்றார்கள்.

யதார்த்தக் கலை முன்வைக்கும் அழகியல், ஒருசீர்த் தன்மை யுடைய, முழுமை என்பதை வலியுறுத்துகின்ற, ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்ற எடுத்துரைப்புத்தன்மை வாய்ந்தது. ஆகவே பிரதிபலித்தலில் நிஜமான முரண்பாடுகளையும், எதிர்வுகளையும் அது சரிவரக் கொண்டுவர இயலுவதில்லை. உலகத்தைத் தனது எடுத்துரைப்பில் மீள்கட்டமைப்புச் செய்யும்போது செயற்கையான தோர் ஒருமைப்பாட்டினை உருவாக்கி அது வாசகர்களை மயங்க வைக்கிறது. ஆனால் நவீனத்துவப் பிரதி, பிரதிகளைச் சிதைத்தல், பிற குறுக்கீடுகள் போன்றவை வாயிலாக முரண்பாடுகளைக் கைப்பற்றிக் காட்டவும், உள்மறைந்திருப்பனவற்றையும் அமை தியில் ஓய்ந்துகிடப்பனவற்றையும் பேசவைக்கவும் முயற்சி செய்கிறது. நாவல் போன்ற யதார்த்த உரைநடைப் படைப்புகளையே பாராட்டிய பெரும்பான்மை நோக்கிற்கிடையே கவிதையின் பிறப்பு பற்றியும் இயல்புகள் பற்றியும் எழுதிய கிறிஸ்டஃபர் காட்வெல் லின் ‘மாயையும் மெய்ம்மையும்’ (Illusion and Reality) முக்கியமான நூலாகிறது.

நவீனத்துவப்போக்கு, குறிப்பாக பியர் மாஷரி, ரோலான் பார்த், ஜூலியா கிறிஸ்தவா போன்ற குறியியலாளர்கள் கருத்துகள் வாயிலாக முழுமைபெற்றது. கலையைக் கருத்தியலாகப் பார்க்கும் நோக்கு மேற்கத்திய மார்க்ஸிய அணுகுமுறையில் மட்டுமல்ல, முந்தைய கிழக்குஜெர்மனி, பிளவுபடாத சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் பார்வையிலும் புதுமைகளை ஏற்படுத்தியது.
முக்கியமானஅர்த்தத்தில் இன்றும் கலை என்பது கருத்துருவக் கருவியாகப் பார்க்கப்பட்டாலும், இன்று அது சமூக வாழ்க்கையின் பிரதிபலிப்பாக மட்டும் பார்க்கப்பட்டு புறக்கணிக்கப்படுவதில்லை. மாறாக, கருத்துருவத் தொடர்புறுத்தக்கருவி/வடிவம் ((art as mediated instrument or form) என்பதாக நோக்கப்படுகிறது. குறிப்பாக, கலை இலக்கிய வடிவங்களும், அவற்றில் கருத்துருவத்தைக் குறியமைக்கும் செயல்பாடுகளும் அவற்றிற்குரிய மரியாதையோடு
கவனிக்கப்படுகின்றன. இந்நோக்கை உருவாக்குவதில் அமைப்பியம், குறியியல் ஆகியவற்றின் செல்வாக்கு இணையற்றது. அதேபோல ரஷ்ய வடிவவியல்வாதிகள் மீதான கவனக்குவிப்பும் பல நல்ல விளைவுகளைத் தந்துள்ளது. மேலும் கலை இலக்கியத் தின் உற்பத்தி, இயல்புகள் போன்றவற்றைப் புரிந்துகொள்வதில் அவற்றை உருவாக்கும் நிறுவனங்கள், முறைகள் போன்றவற்றின் பங்கும் இன்று நன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. வெளியீட்டாளர்கள், இலக்கிய மன்றங்கள், அரங்குகள், விமரிசகர்கள் போன்ற நேரடி ஊடகர்களின் செய்கைகள் இப்போது ஓரளவேனும் ஆராயப்படுகின்றன. இவற்றை முன்பு எவரும் கருத்தில் கொண் டதே இல்லை. மேலும் கலையுருவாக்கத்தில் இன்று வாசகர்ககள் பார்வையாளர்களின் பங்கேற்பும் ஆக்கமும் குறித்தும் ஆராயப் படுகின்றது.

இந்த நோக்குகளுக்கு ஆதாரமும் மார்க்ஸ் ‘க்ருண்டிஸ்’ நூலுக் கான முன்னுரை அறிமுகத்தில் கூறிய ‘நுகர்வுதான் உற்பத்தி யைத் தூண்டுகிறது’ என்ற கருத்தேயாகும். மார்க்ஸிய மரபுக்குள் வராத பொருள்கோள், குறியியல், ஏற்பழகியல் போன்ற துறைகள் கலாச்சாரப் படைப்புகளை உருவாக்குவதிலும் அவற்றைப் பொருள் கொள்வதிலும் ஆழ்ந்த நுண்ணோக்குகளையும், அவற்றை ஆராய் வதற்கான கருவிகளையும் அளித்துள்ளன. ஒரு படைப்பின் அர்த்தம் என்பது அதற்குள் உறைவதல்ல, அது வாசகர்களைச் சார்ந்த ஒன்று என்ற முக்கியமான அறிவும் இவற்றால் ஏற்பட் டுள்ளது. இன்னும் அரசியலுக்கும் அழகியலுக்குமான பொருத்தப் பாடு பற்றிய விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. அவையனைத்திற் கும் மேற்கூறிய யதார்த்தவாதம் சம்பந்தமான விவாதங்களுடன் தொடர்பு உண்டு.

இம்மாதிரி விவாதங்கள் ரேமண்ட் வில்லியம்ஸ் (தன்னைக் கலாச்சாரப் பொருள்முதல்வாதி என்று கூறிக்கொண்டவர்), டெரி ஈகிள்டன் போன்றோர் நூல்களில் நன்கு ஆராயப்பட் டுள்ளன.
கலை இலக்கியங்களின் உள்ளடக்கமோ, அவற்றின் வடிவமாற்றங் களோ மட்டும் கலையைப் புரட்சிகரமானதாக மாற்றிவிட முடி யாது. பெஞ்சமின் சொன்னதுபோல, கலைப்படைப்பு உற்பத்தியை அரசியல்செயல்பாடாகவும் செயல்படுமுறையாகவும் மாற்றினால் தான் கலையைப் புரட்சிகரத்தன்மை வாய்ந்ததாக மாற்றஇயலும். மேற்கண்ட யதார்த்தவாதத்தின் ஏற்புடைமை, அமைப்பியம், நவீ னத்துவம், பின்நவீனத்துவம் ஆகியவற்றை ஏற்பதன் தேவை போன்றவற்றைக் குறிப்பிடும் ஞானி, வால்டர் பெஞ்சமினுடைய நிலைப்பாட்டைக் குறிப்பிடவோ ஏற்கவோ இல்லை.

இந்தவிதத் தில் ஞானி கட்சிசார்ந்த பிற மார்க்ஸியர்கள் போல மரபுரீதியான தொரு நிலைப்பாட்டில்தான் நிற்கிறார். வால்டர் பெஞ்சமின் போன்ற மேற்கத்திய மார்க்ஸியர்களின் கோட்பாடுகளுக்கு மாறாக, அவர் மாசேதுங்கின் கொள்கைகளுக்குச் சென்று கீழை மார்க்ஸி யம் என்ற ஒன்றினை வலியுறுத்தத் தொடங்குகிறார். (இதனை உருவாக்கியதில் அறிஞர் எஸ்.என். நாகராஜனுக்கு முக்கியப்பங்கு உண்டு). நமது நாட்டின் ஆன்மிக மரபுகள் போன்றவற்றையும் ஏற்றுக்கொண்டு, நமது மண்ணுக்கேற்ற தனித்ததொரு மார்க்ஸி யத்தினை உருவாக்கவேண்டும் என்கிறார். அந்தந்த மண்ணுக் கேற்ற வகையில் மார்க்ஸியம் உருவாக வேண்டும் என்பதை நாம் ஏற்கமுடியும். ஆனால் மார்க்ஸியத்திற்குள்ளாகவே பல சிக்கல்கள் உள்ளன.

மார்க்ஸியம், மனிதத்துவத்தின் வளர்நிலையில் மனிதனின் அறி வாற்றலை மதித்துப்போற்றும் மனிதமையத் தத்துவமாக எழுந்த ஒன்று. மனிதமையவாதத்தின் உடன்பாடான நல்ல அம்சங்களை மார்க்ஸ் ஏற்றுக்கொண்டார் எனப் பொதுவாகச் சொல்லலாம். அதன் மோசமான அம்சங்களை முதலாளித்துவம் ஏற்றுள்ளது. இயற்கையோடு மனிதன் போராடி, அதைக் கட்டுப்படுத்தித்தான் வாழமுடியும் என்பது மார்க்ஸிய சித்தாந்தத்திலும் உள்ளது. முதலாளித்துவமோ, ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என எல்லாவற்றையும் இடைவிடாது சுரண்டுகிறது. சுரண்டலை மார்க்ஸியம் எதிர்த்தாலும் மனிதமையத் தத்துவத்தி லிருந்து விலகவில்லை.
நாம் ஆன்மிகம் என்று பேசும்போது மனிதமையத்தினைப் புறக்கணிக்கவேண்டும் என்கிறோம்.

மனிதமையம் என்பதுதான் மானிடச் சிந்தனையின் வீழ்ச்சி. மேற்கத்திய நாகரிகத்தின் சுரண் டல் பார்வை பைபிளிலிருந்து தொடங்குகிறது. ஆண்டவர் எல்லா வற்றையும் மனிதனின் நுகர்வுக்காகவே படைத்தார் என்று மனிதன் பிற ஜீவராசிகள், தாவரங்கள் அவை சார்ந்துள்ள இயற் கைப் பின்புலம் எல்லாவற்றையும் எல்லையற்றுச் சுரண்டத் தொடங்கி விட்டான். மனிதன்
எல்லாவற்றையும் அனுபவித்து,நுகர்ந்து வாழ்வதில் தவறில்லை. ஆனால் தன் சிந்தனையாற்றலால், பிற உயிர்கள், இயற்கை யாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றலால், தனது பேராசையால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கான மூலவளங்கள் யாவற்றையும் இரண்டே நூற்றாண்டுகளில்-வித்து அழித்து உண்ட உழவன்போல -அழித்துவிட்டான். இயற்கையை மனிதன். பத்தொன்பதாம் இருப தாம் நூற்றாண்டுகளில் அறிவியலின் பெயரால் எல்லையற்றுச் சுரண்டியதன் விளைவே இன்று தண்ணீருக்கும் உணவுக்கும் பெரும்பான்மை மக்கள் அலையும் நிலையும் இன்றைய இயற் கைச் சீற்றங்களும். அகழ்வாரைத் தாங்கும் எல்லையற்ற பொறுமை கொண்ட பூமிக்கும் சீற்றம்வ்ந்துவிடுகிறது, சுரண்டல் எல்லையற்றுப் போகும்போது.

எனவே மனிதமைய வாதத்தைத் தகர்த்து, மார்க்ஸியத்தில் மனிதமையமற்ற ஒரு நிலைப்பாட்டினைக் கொள்ள வேண்டும். அமைப்பியம், பின்னமைப்பியம் தொடங்கி வளர்ந்துவரும் கோட்பாடுகள் யாவுமே மனிதமையமற்ற நிலைப்பாடுகள்தாம். ஆனால் மேற்சொன்னவாறு மனிதமையத்தைத் தகர்த்து, இயற்கையை மையத்தில் வைக்கும் கோட்பாடுகள் அல்ல அவை. மாறாக, மனிதமையத்தைத் தகர்த்து, மனிதனின் ஆக்கங்களில் ஒன்றான மொழியை மையத்தில் வைக்கின்றன.

இன்றைய சுற்றுச்சூழல்விமரிசனம், தலித்திய, பெண் ணிய விமரிசனங்கள் ஆகியவை இயற்கைமையக் கோட்பாடு களாக அமைகின்றன, அமையவேண்டும். இதனை மார்க்சியம் ஏற்க வேண்டும். ஒருவகையில் காந்தியடிகள் முன்பே சொன்னது போல, கனரகப் பெருந்தொழில்களால் மனிதகுலத்துக்கு நன்மை யில்லை. (காந்தியடிகள் கனரகப்பெருந்தொழில்களுக்குக் கூறிய தை இன்றைய கணினித்தொழில்களுக்கும் பொருத்திப் பார்க்க லாம்). அதற்காகக் குடிசைத் தொழில்களை நம்பியும் இனி வாழ்வ தற்கில்லை. பிற உயிர்கள் யாவற்றையும் அழித்துவிட்டு மனித இனம் மட்டுமே எல்லையற்றுப் பெருகிப்போய் 800 கோடிக்கும் மேல் பூமியில் வாழும்நிலையில், குடிசைத்தொழில்களாலும் அவை சார்ந்த நிலவுடைமைச் சமூகத்தாலும் பயனில்லை. வரலாறு என்றும் பின்னோக்கிச் செல்வதில்லை. அப்படியானால், எப்படிப் பட்ட தொழில்கள் வேண்டும், எப்படிப்பட்ட வளர்ச்சி வேண்டும் என்பது இன்றைய அடிப்படையான கேள்வி. இத்தகைய கேள்விகளுக்குச் சரியான விடை காணாமல் (விடை காணாவிட் டாலும் சரியான நோக்காவது தேவை) வெறுமனே இலக்கியம் பற்றிப் பேசிவிட இன்று முடியாது. மாவோவின் தத்துவத்திலும் மனிதமையவாதம் அடிப்படையாக இருக்கிறது என்பதே கீழை மார்க்ஸியத்தை நாம் முழுதும் ஏற்றுக்கொள்ளவும் தடையாக உள்ளது.

எனவே இன்றைய மார்க்ஸியம், மனிதமைய வாதத்தினை விட்டு விட்டு, பிரபஞ்சவாதத்தை ஏற்று, பிற உயிர்களின் இணக்கத்தோடு மனிதன் வாழும்வகையைப் பேசவேண்டும். இதற்கு வள்ளலார் போன்றவர்களின் கொள்கைகள் ஓரளவு துணைபுரியக்கூடும். ஞானி கூறுவதுபோல நமது சித்தர் தத்துவங்கள் இதற்குப் பயன் படக்கூடும். கட்சிசார்ந்த பிற மார்க்ஸியர்கள் இவற்றையெல்லாம் பற்றிச் சிந்திப்பதில்லை. அவர்கள் வாய்பாடுபோல மக்களை ஒன்றுதிரட்டிப் புரட்சிசெய்தல் என்பதை மட்டுமே பேசிக்கொண்டி ருக்கிறார்கள்.

முதலாளித்துவம் எல்லைமீறிய வளர்ச்சி பெற்றுப் பன்னாட்டு முதலாளித்துவமாக, எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக்கொள் ளும் ஒற்றையாதிக்க முதலாளித்துவமாக வளரும் என்று மார்க்ஸ் எதிர்நோக்கவில்லை. எனவே அவரது எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போயிருக்கின்றன. ரஷ்யாவும் சீனாவும்கூட ஒற்றை யாதிக்கப் பன்னாட்டு முதலாளித்துவத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ரஷ்யா வீழ்ந்து விட்டது, “எங்கள் ஒற்றை உலகம் மட்டுமே நிலைத்திருக்கிறது” என்று அமெரிக்கா கொக்கரித்ததுபோல இன்று “மார்க்ஸியம் அழிந்துவிட்டது, எங்கள் ஏகபோக முதலாளித்துவம் மட்டுமே உல கத் தத்துவம்” என்றுசொல்லி முதலாளித்துவம் கொக்கரிக்கிறது. இந்த நிலையை எதிர்கொள்ளப் புரட்சி என்பது சாத்தியமா, மக்களை ஒன்று திரட்டுதல், ஒற்றை நோக்கின்கீழ்த் திரட்டுதல், நிறுவனமாக்கல் என்பவற்றிற்குள்ளாகவே மேற்கத்திய மார்க்ஸி யத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்த சக்திகள் செயல்பட வில்லையா, ஆதிக்கம் ஏற்படவில்லையா என்பன பின்நவீனத்து வம் கேட்கும் அடிப்படைக்கேள்விகள். எனவே மார்க்ஸ் ஒன்றரை நூற்றாண்டிற்குமுன் உறுதிபடக்கூவியது போல ‘உலகத்தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்’ என்று நாம் கூவ முடியவில்லை. சந்தேகம் எழுகிறது. ஒற்றைத்தத்துவத்தின்கீழ் இலட்சக்கணக்கான மக்கள் திரளும்போதே ஆதிக்கம் என்பதும் உருவாகிவிடுகிறது.

ஒரு ரசமான விவாதம் நடைபெற்றதை எடுத்துக்காட்டலாம். இது எவ்விதம் இன்று மார்க் ஸியக்கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வது என்பது பற்றியதுதான். தொலைக்காட்சிக்கு ஒரு பெரும் பார்வையாளர் பின்புலம் இருக்கிறது, மேலும் பல பிரெஹ்டிய உத்திகளையும் புதுமையாக்கங்களையும் அதில் எளிதாகக் கையாள இயலும், அதனால் முற்போக்குக் கருத்துகளைத் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்குக் கொண்டுசெல்லவேண்டும் என்ற கருத்து ஒரு சாராரிடம் உள்ளது. மற்றொரு சாரார், தொலைக்காட்சி ஊடகத் தையும் அதன் பெரும் ஜனரஞ்சகசக்தியையும் மார்க்ஸியக் கருத் துப் பரப்பலுக்கும் புரட்சிக்கும் சாதகமாகக் கட்டமைக்கவே இய லாது, ஏனெனில் அங்கு தொழில் சார்ந்த, அமைப்புசார்ந்த சுதந்தி ரம் அறவே கிடையாது. அம்மாதிரி ஊடகங்களை ஆட்சிசெய்யும் பெருமுதலாளிகள் இதற்கு ஒத்துழைக்கமாட்டார்கள். எனவே சிற்றளவாக இருந்தாலும் திருப்பக்கூடிய ஒரு பார்வையாளர் குழுவுக்காகவே வீதிநாடகங்கள் போன்ற ஊடகங்கள் வாயிலாகச் சுதந்திரமான கருத்துகளை முன்வைக்கலாம் என்று கருதுகின் றனர்.

இது ஒருபுறமிருக்க, இன்று மார்க்ஸியத் தத்துவத்திற்குள்ளாக வே சில குறுக்கீடுகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாகப்பெண்ணியத்தின் பங்களிப்பு. மார்க்ஸியத்திற்குள்ளும் செயல்படும் ஆணாதிக்கப் போக்குகளைப் பெண்ணிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவற்றை மேற்கத்திய மார்க்ஸியம் இன்று ஏற்றுள்ளது. இதே போல இன்று அவ்வளவாகச் சக்தியுடன் இல்லாவிட்டாலும், கருப்பினக் கொள்கை என்பது சிலகாலம் வலிமையோடு செயல் பட்டுள்ளது. நமதுநாட்டில் கருப்பினக்கொள்கையின் நிழல்போல உருவானது தலித்தியக் கொள்கை எனலாம். முன்பெல்லாம் நம்நாட்டுக் கட்சிசார்ந்த மார்க்ஸியர்கள் வர்க்கபேதமற்ற ஒரு சமத்துவ சமுதாயம் அமையும்போது தானாகவே சாதியும் அழிந்து போய்விடும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தனர். சமூக மாற்றத்துக்கான ஒரு கூறாக அதையும் பார்க்கவேண்டும் என்ற ஞானம் இப்போது சிலகாலமாகத்தான் உருவாகியிருக்கிறது. இதில் அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் பங்களிப்பு சிறப் பானது. இன்று தலித்தியம், பெண்ணியம் ஆகிய கொள்கைக ளோடு மார்க்ஸியம் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தான் கருதும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கப் போராடமுடியும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. ஞானியும் இத்தகையதொரு நோக்கினைத்தான் தமது விமரிசனங்களில் வலியுறுத்தி வருகிறார் என்பது பாராட்டுக்குரியது.

மார்க்ஸிய அழகியல், காலங்காலமாக நமது நாட்டில் வலியு றுத்தப்பட்டுவரும் அழகியல் மதிப்பு என்ற கருத்தாக்கத்தின் அடிப் படையையே கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறது. இது நாம் க்டைசி யாகச் சிந்திக்கவேண்டிய முக்கியமான விஷயம். கலைகள் மட்டு மல்ல, கலைகள் சார்ந்து செயல்படும் நிறுவனங்களும் விமரிசகர் களும், சார்பியல் நோக்கிலேயே காணப்பட வேண்டும். இந்த ஞானம் இங்கு (தமிழ்நாட்டில்) ஓரளவு உருவாக (எதிர்மறைக்) காரணமாக இருந்தவர், அந்தக் காலத்திலேயே மார்க்ஸுக்குக் கல் லறை கட்டிய வெங்கட் சாமிநாதன். ஏனென்றால் அவர் ‘பாலை யும் வாழையும்’ ‘ஓர் எதிர்ப்புக்குரல்’ என்றெல்லாம் தமிழினத்தின் அழகியல் வறட்சி என்னும்நோக்கினை முன்வைக்கப் போய்த்தான் பலரும் அதற்கு எதிர்வினை புரியவும், அதற்கு எதிரான பார்வைக் கோணத்தில் சிந்திக்கவும் தொடங்கினர். ஞானியும் அதனைச் செய்துள்ளார். மேற்குநாடுகளில் அமைப்பியத்தாலும் மறுவாசிப்புக ளாலும் இத்தகைய நோக்குகள் உருவாயின. இங்கு தலித்தியம் இத்தகைய மறுவாசிப்புகள் பலவற்றை முன்வைத்துள்ளது. இவற்றின் வாயிலாக மரபுசார்ந்த கலைபற்றிய, அழகியல்பற்றிய பார் வைகள் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளன. அண்மைக்காலம்வரை அழகியல் பற்றிய மீள்நோக்கு உருவாகவே யில்லை. லூகாச் போன்றவர்களும் ஒரு மரபான உயர்கலைப் பார்வையையே கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட எஃப்.ஆர்.லீவிஸ் கூறிய உயர்மரபுக் கலை போன்ற பார்வையாகவே அது இருந்தது. இப்போது இம்மாதிரிப் பார்வைகள் மாறிவருவது வரவேற்கப்படவேண்டியது. இதில் ஞானியின் பங்களிப்பு கணிசமானது.

இங்கு ஞானிக்கு முன்னும் அவரது சமகாலத்திலும் தமிழு லகில் மார்க்ஸிய விமரிசன முன்னோடிகளாக அமைந்தவர்க ளைப்பற்றியும் கொஞ்சம் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டில் முதன் முதலாக ஒரு பரந்த பார்வையுடன், பாரதி, கம்பன் முதலாக எல்லா இலக்கியங்களையும் இரசனைநோக்கில் பாராட்டியவர் ஜீவா. ஒரு விமரிசகர் என்று மதிப்பிட இயலவில்லை என்றாலும், ஜீவா மார்க்ஸிய விமரிசனத்துக்கு ஒரு நல்ல தொடக்கம் என்ப தில் ஐயமில்லை.

ஜீவாவைத் தொடர்ந்து முக்கிய இடம் வகித்தவர் நா. வான மாமலை. ‘ஆராய்ச்சி‘ என்ற இதழை நடத்தி மார்க்ஸிய நோக்கில் இலக்கியத்தை அணுகக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கிய வர். அவரது ‘புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்’ போன்ற நூல்களைப் படிப்பவர்களுக்கு பெரிய ஏமாற்றமே ஏற்படும். இன் றும் அவர் பெயரைச் சொல்ல தி.சு. நடராஜன், முத்துமோகன் போன்றவர்கள் இருக்கிறார்கள். எஸ்.தோதாத்ரி, வெ. கிருஷ்ண மூர்த்தி போன்றோர் கொஞ்சம் மிகையாகவே அவரது பாடங்க ளைக் கையாண்டு நிறைய வாங்கிக்கட்டிக் கொண்டவர்கள். ஜீவா, வானமாமலை போன்றோரைப் பின்தொடர்ந்து பலர் மார்க்ஸிய விமரிசகர்களாக ஆயினர். ச.செந்தில்நாதன், ஆர். கே. கண்ணன், முத்தையா போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. செந்தில் நாதனின் ஆரம்பகாலப் படைப்பான ‘தமிழ்ச் சிறுகதை விமரிசனத்’ தைப் படித்தபோது வெறும் வறட்டுவாதமாகவே காட்சியளித்தது. முக்கியச் சிறுகதைப் படைப்பாளிகளான தி.ஜானகிராமன், லா.ச. ராமாமிருதம், மௌனி போன்றோரை அவரால் சரிவர அணுக முடியவேயில்லை. ஆர்.கே. கண்ணனின் பாரதி பற்றிய நூல் ஒரு சரியான பார்வையைத் தந்தது. இந்தப் பாரம்பரியம் – கட்சி சார்ந்த ஒன்று, இப்போது மக்கள் கலைஇலக்கியக் கழகத்தின் மருதை போன்றவர்கள் வரை தொடர்கிறது.

தமிழ்நாட்டில் மிக முக்கியமான தாக்கத்தை உருவாக்கிய இலங்கை விமரிசகர்களையும் குறிப்பிடவேண்டும். க.கைலாசபதி அவர்களுள் முக்கியமானவர். க. கைலாசபதியின் விமரிசனமும் சரியான பாதையில் சென்றதாக எனக்குத் தோன்றவில்லை. சில ஆண்டுகளுக்குமுன் ஒருகட்டுரையில் க.நா.சு.வையும் கைலாசபதி யையும் ஒப்பிட்டபொழுது ‘கைலாசபதி சரியானஆய்வுமுறையைக் கையாண்டு தவறான முடிவுகளுக்கு வந்தார், க.நா.சு.வோ எந்த ஒரு முறையும் இன்றி சரியான முடிவு களைக் கூறினார்’ என்று குறிப்பிட்டிருந்தேன். அக்கருத்தில் இன்றுவரை மாற்றமில்லை. கா. சிவத்தம்பியின் சிறுகதைபற்றிய நூலைத் தவிரப் பிறஅனைத்தும் இலக்கியவரலாறு, நாடகக்கலை தொடர்பானவை. எந்த மதிப் பீடுகளையும் நேராக முன்வைப்பன அல்ல. இவர்கள் இருவரைத் தவிர ஏ.ஜே. கனகரட்ணா, நுஃமான் போன்ற பலர் நினைவுக்கு வருகிறார்கள். ஏ.ஜே.கனகரட்ணா ‘எழுத்து’ பத்திரிகையிலேயே மௌனி வழிபாடு குறித்து எச்சரித்தவர். நுஃமான் வெங்கட் சாமி நாதனுக்கு எதிராக எழுதிய விமரிசனம் இன்றும் ஞாபகத்தில் நிற்கிறது.

தமிழவனும் முதலில் மார்க்ஸிய விமரிசகராகத்தான் தொடங் கினார். ஆனால் ‘படிகள்’ பத்திரிகையின் ஆரம்பகாலத்தில் அவர் ஒரு நவமார்க்ஸியராக மாறி, பிறகு அமைப்பியம் பற்றி எழுதலா னார். ஆனால் அமைப்பியத்தையோ பின்னமைப்பியத்தையோ அவர் ஜீவனோடு புரிந்துகொண்டாரா என்பது ஐயமே. அல்தூசர் தவிர ஏனைப் பின்னமைப்பியவாதிகளோடு அவருக்கு மானசீக மாகத் தொடர்பில்லை என்றே சொல்லலாம். அவற்றைச்சரிவர விமரிசனத்தில் அவரால் நடைமுறையில் கையாளவும் இயல வில்லை. எஸ்.வி. ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற சிலரும் மார்க் ஸிய விமரிசகர்களாகத் தொடங்கி வெவ்வேறு பாதைகளில் இன்று பயணம் செய்கின்றனர்.

இப்படித் தமிழ் மார்க்ஸிய விமரிசனப் பாரம்பரியத்தை ஒரு நோட்டம் விடும்போது சரியான திறனாய்வாளர்களாகவும், மார்க் ஸிய விமரிசனம் என்ற களத்தில் முனைப்போடு தொடர்ந்து இயங்கியவர்களாகவும்- ஞானி ஒருவரைத் தவிர வேறெவரையும் காணமுடியவில்லை. எல்லாவகை இலக்கியங்களையும் ஏற்று ஆராயும் பரந்தமனப்பான்மையில் அவரை ஜீவாவின் வாரிசாகக் காணலாம் என்று தோன்றுகிறது.

ஞானியை எனக்கு முதலில் அறிமுகம் செய்துவைத்த நூல் அவரது சிறு வெளியீடான ‘கலை இலக்கியம் ஒரு தத்துவப் பார்வை’ என்பது. அந்த நூலிலேயே இந்திய ஆன்மிகத் தத்துவங் களுடன் இணைந்து மார்க்ஸியம் இந்த மண்ணுக்கேற்றபடி மாறி வேர்பிடிக்கவேண்டும் என்ற அவா காணப்படுகிறது. ஞானக் கூத்தன், கலாப்ரியா போன்றவர்களை அவர் அந்நூலில் விமரி சனம் செய்திருந்த விதமும் என்னைக் கவர்ந்தது. ஏறத்தாழ அதேசமயத்தில் ‘பிரக்ஞை’ பத்திரிகையில் அவர் எழுதிய சில கட்டுரைகள் எனக்குள் மிகுந்த பாதிப்பினை உண்டாக்கியவை. காரணம், அடிப்படையில் ஆங்கில இலக்கியம் படித்து புதுவிமரிச னத்தையும் ஓரளவு அமைப்பியத்தையும் அக்காலத்தில் கற்றி ருந்த எனக்கு மார்க்ஸிய விமரிசனப்பார்வை பற்றிய அடிப்படைப் புரிந்துகொள்ளலை உருவாக்கியவை ஞானியின் கட்டுரைகள்தான். இதற்குப் பிறகுதான் லூகாச், காட்வெல், வால்டர்பெஞ்சமின், பிரெஹ்ட் போன்றவர்கள் எனக்கு அறிமுகமானார்கள்.

ஞானியின் குறைகளாக நாம் நோக்க வேண்டியவை சில உண்டு. அவர் சிறுகதை பற்றிய ஆய்வில் தீவிர அக்கறை காட்ட வில்லை. பொதுவாகக் கவிதைகள், நாவல்கள் பற்றியே அதிகம் எழுதியுள்ளார். புனைகதைகளில் நாவலுக்குள்ளஇடம் தனியானது. பழங்காலக் காவியங்கள்போல இன்று மனித வாழ்க்கையின் பன்முக வீச்சுகள் அத்தனையையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரே வடிவம் நாவல்தான். அதனால் ஞானி நாவலில் மிகுதியான அக்கறை காட்டுகிறாரோ என்றுதோன்றுகிறது. ஆனால் தமிழில் நாவல் பற்றி மிகுதியாக எழுத ஒன்றுமில்லை என்பது என் கருத்து. எந்த அழகியல் அளவுகோல்களை வைத்துப் பார்த்தாலும், தமிழ்நாவல்கள் சர்வதேசஅழகியல் தரத்தினையோ இந்திய அளவி லான தரத்தையோ கூட எட்டவில்லை.

தமிழ்ச் சிறுகதைகள் விதிவிலக்காக, மிகச் சிறப்பாகப் படைக்கப் பட்டுள்ளன. அவற்றைப் போதிய அளவு ஞானி ஆராயாதது மிகப் பெரிய குறை எனத் தோன்றுகிறது. கவிதை இலக்கிய ஆய்வில் குறையில்லை. கவிதைகள் காலங்காலமாக எல்லாமொழிகளிலும் இருந்து வருபவை. உயர்ந்த அந்தஸ்து அளிக்கப்படுபவை. எனி னும் பக்தி இலக்கியத்தை இன்னும் நன்றாக ஆராயவேண்டும். தமிழ் இலக்கியத்தின் பெரும்பகுதியை பக்தி இலக்கியம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. பக்திப்பாக்களில் பல உயர்ந்த சிந்தனை கள் வெளிப்பட்டிருந்தாலும், அவற்றில் எதிர்மறைக் கருத்துகளும் உள்ளன. மேலும் அவை பாடல் தன்மை கொண்டவை. பாடல்கள் சிறப்பாக அமைந்தாலும் கவிதையாக மாட்டா. அவற்றிற்கு இசை என்ற ஊன்றுகோல் வேண்டும். மேலும் கூறியதுகூறல் பாடல்க ளில் மிகுதி. தேவாரத்தைப் படிப்பவர்கள் என்னதான் உருகி உருகிப் படித்தாலும் திரும்பத்திரும்ப சிவபெருமான் முப்புரத்தை அழித்ததும், கயிலையை எடுத்த இராவணனுக்கு அருள் செய்ததும் போன்ற ஒரேவிதமான வருணனைகளில் சிக்கி அவஸ்தைப்பட வைக்கின்றன. ஒரு பேரிலக்கியத்திற்கான செறிவும் பன்முகத்தன் மை யும் வாழ்க்கை பற்றிய நோக்குகளும் பக்தி இலக்கியத்தில் உண்டா என்பது தெரியவில்லை. உணர்ச்சிவெள்ளம்தான் பெருக் கெடுத்து ஓடுகிறது. இலக்கியத்திலே உணர்ச்சிதான் பிரதானம் என்ற கோட்பாடு உருவாக பக்தி இலக்கியங்கள்தான் வழிவகுத் துத் தந்தன. இம்மாதிரியான விஷயங்களை ஞானி எடுத்துக்காட்டி யிருக்கிறாரா என்பது சந்தேகமே. ஒருவகையில் ஞானியின் விமரிசனமும் வடிவநோக்கினைவிட உள்ளடக்கத்துக்கே முதன் மை தருவதாக அமைவதால் இத்தகைய சிக்கல்கள் எழுகின்றன.

மேலும் எல்லாவற்றையும் பாராட்டிவிடும் பரந்த மனப்பான்மை ஞானிக்கு உண்டு. வல்லிக்கண்ணனோடும், ஓரளவு தி.க. சிவ சங்கரனோடும் அதனால் ஞானியை ஒப்பிடத் தோன்றுகிறது. இங்கு வெளிச்சம் தொகுதிக்கு அவர் எழுதிய ஆர்வக்கோளாறான முன்னுரை போன்றவை நினைவுக்கு வருகின்றன. இன்றுவரை வானம்பாடி இயக்கம்பற்றி மிகையான மதிப்பீடுகளும் எதிர்மறை மதிப்பீடுகளும்தான் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு சரியான பார் வையில் அதனை மதிப்பிட்ட நூல் இதுவரை தோன்றவில்லை. வானம்பாடி இயக்கம் பற்றிய மதிப்பீடுகளை ஆரம்பித்து வைத் தவரும் ஞானிதான். மார்க்ஸியத்தின்மீதுள்ள அளவில்லாப்பற்றும் தமிழமீதான ஆர்வமும் அவரைப் பலசமயங்களில் தவறான முடிவுகளுக்குத் தள்ளுகின்றன.

மேலும் ஞானியின் மொழிநடை பற்றியும் குறிப்பிட்டாகவேண் டும். தெளிவான, எளிய, ஆற்றொழுக்கான, எதிரிலிருப்பவரை நேராக விளித்துப் பேசும் நடை ஞானியினுடையது. ஆனால் கூறியது கூறலும் சொற்களை விரயமாக்குதலும் மிகுதி. செறிவு என்பது அடியோடு கிடையாது. இதனை அவரது குறையாகக் கூறவும் இயலவில்லை. பார்வையற்ற நிலையில் வாயினால் சொல்லிப் பிறர் எழுதவேண்டிய நிலை ஏற்படும்போது இது தவிர்க்கப்படமுடியாதது என்றாலும், எதிர்வரும் வாசகர்கள், எழுதி யவரைப் பார்க்கமாட்டார்கள், எழுத்தை மட்டுமே பார்ப்பார்கள் என்பதனால் இதனைக் கூற நேர்கிறது.

ஞானியின் அழகியல்பார்வை சிறப்பானது. பாசிஸத்தை எந்த ரூபத்திலும் எதிர்க்கின்ற, பன்முகநோக்குகளுக்கு இடம் தருகின்ற, மேற்கத்திய ஆதிக்கப்போக்குக்கு எதிரான, கீழைமார்க்ஸியத்தோடு இணைந்த நோக்கு அது. நவீன இலக்கிய, திறனாய்வு இயக்கங்க ளையும் புறக்கணிக்காமல் உள்வாங்கி ஏற்கின்ற தன்மை கொண் டது. எவ்வளவு தடைகள் வந்தபோதும் மானிடம் வெல்லும் என்ற நன்னோக்கும் கொண்டது. அதேசமயம் மனிதனின் இன்றைய வாழ்நிலை பற்றிய ஆழ்ந்த கவலைகளும் கொண்டது. பெண்ணி யம், தலித்தியம், சுற்றுச்சூழல் திறனாய்வு போன்ற இயக்கங்கள் முன்வைக்கும் எதிர்நிலைப்பாடுகளையும் உள்வாங்கி, ஏற்று, மேலும் போராடவேண்டும் என்ற கருத்தினைக் கொண்டது. ஒரு நிலையிலும் அறிவுத் தேட்டத்தில் தேங்கிவிடாதது-இத்தகைய தொரு அறிவியல்பூர்வமான வழியையே மார்க்ஸ் இன்று இருந்தால் ஆதரிப்பார் என்பதில் ஐயமில்லை.