மரபணுத் தொழில்நுட்பம்-சில சிந்தனைகள்

marabanu
மரபணுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரித்த உணவுப்பொருள்கள்-காய்கறிகள், கீரைகள், கிழங்குகள் முதலியன நம்நாட்டில் எவ்வித எதிர்ப்புமின்றி நுழைந்துவிட்டன. இவற்றைக் கேள்வி கேட்க ஆளில்லை. நாம் தினந்தோறும் வேலையுடனும், பசியுடனும், உழைப்புடனும், ஊழல்போன்ற மோசமான சமூக நிலைகளுடனுமே போராடிக்கொண்டிருக்கும்போது இதில் எப்படிக் கவனம் செலுத்தமுடிகிறது? மேலும் உணவுப்பொருள்களின் விலைகளும் ஏறிக்கொண்டே செல்கின்றன.

இந்த ஆண்டு பணவீக்கம் மிக அதிகமாகச் சென்றதற்கு வெங்காய விலைதான் காரணம் என்கிறார் நிதியமைச்சர், ஆனால் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தான் இல்லை. இம்மாதிரி நிலைமைகளின் மத்தியில் வாழுகின்ற மத்தியதர வர்க்கத்தினர், மரபணுப் பொறியியலில் உருவான உணவா? அல்லது இயற்கையாக உருவான உணவா? என்பதில் எல்லாம் என்ன அக்கறை காட்டப்போகிறார்கள்?

இந்த நம்பிக்கையில் தான் மரபணுத் தொழில் நுட்பக் குழுமங்கள் செயற்கை உணவுப்பொருள்களைத் தயாரித்து நம்மிடையில் சந்தடியில்லாமல் விடுகின்றன. இவற்றால் எவ்வளவோ பாதிப்புகள் நிகழலாம். இவற்றை நாம் கேள்வி கேட்டுத்தான் ஆகவேண்டும்.

maramapnu-stil-2
உதாரணமாகக் காலங்காலமாகப் பழங்கள் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் இப்போது மரபணு மாற்றத்தால் உருவான ஆப்பிள்கள், பப்பாளிகள், மாதுளைகள் போன்றவை தான் கிடைக்கின்றன. (சிலசமயம், இயற்கைப் பழங்களோடும் சேர்த்து, இரண்டு வகையான பழங்கள் கடைகளில் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.) சென்னை, பெங்களூர் முதலாகச் சிறுநகரங்கள் வரை ரிலையன்ஸ், மோர் போன்ற பெருங்குழுமங்கள் நடத்தும் கடைகளில் இப்படிச் செயற்கையாகத் தயாரான பழங்கள் மட்டுமே கிடைக்கின்றன. (உங்களுக்கு எப்படி சார் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம், அதற்கு பதில் சொல்வதற்கு முன், இப்படி எந்த வித லேபிலும் இன்றி-இது இயற்கையா, செயற்கையா என்ற அறிவிப்புக்கூட இன்றி, விற்பதுதான் இலாபம் கொள்ளையடிக்கும் பெருங்குழுமங்களுடைய வேலை என்பதைச் சொல்லிவிடுவோம்.

maramapnu-stil-3
வழக்கமாக நான் பப்பாளிப்பழம் சாப்பிடுபவன். அதில் கரிய நிறமுள்ள விதைகள் மிகுதியாக உள்ளே இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் சிலகாலமாக நான் வாங்கி உண்ணும் பப்பாளிகளில் விதைகளே இருப்பதில்லை. வெறுமையாக இருக்கும் உட்கூடு. விசாரித்த பிறகுதான் தெரிந்தது – இது செயற்கைப் பப்பாளி என்று. இதுபோலத்தான், சிவப்பாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறதே, இதுதான் நல்ல ஆப்பிள் என்று நம்பி வாங்கிவிடாதீர்கள்.

மரபணுப் பொறியியல் என்றால் என்னஅது எவ்விதம் செய்யப்படுகிறது?

ஒரு மீனைத் தக்காளியுடனோ, அந்துப்பூச்சியுடன் கோழிக்குஞ்சையோ ஒரு விவசாயி கலப்பின வளர்ப்புச் (ஒட்டுச்) செய்வதாகக் கற்பனை செய்யுங்கள். அபத்தமான சிந்தனையாக இருக்கிறதே என்கிறீர்களா? இது இயலாதது என்று நமக்குத் தெரியும், காரணம் இயற்கை இதை அனுமதிப்பதில்லை. ஆனால் இன்று மரபணுப் பொறியியலாளர்கள் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். ஓர் உயிரியின் பாரம்பரிய வரைபட வார்ப்பினை மாற்றுவதன் வாயிலாக.

maramapnu-stil-4
மரபணுப் பொறியியலுக்கு 25 வயதுதான் ஆகிறது. வாழும் உயிரிகளின் டிஎன்ஏ அல்லது பாரம்பரிய அமைப்பை மாற்ற விஞ்ஞானிகளை அனுமதிக்கிறது இந்தத் தொழில்நுட்பம். அவர்கள் டிஎன்ஏவின் இழைகளையோ, ஓர் உயிரியின் டிஎன்ஏ விலிருந்து குறித்த மரபணுக்களையோ வெட்டவும், முழுமையாகத் தொடர்பே அற்ற வேறொரு உயிரியின் டிஎன்ஏ -வுக்குள் அவற்றை ஒட்டவும் செய்கிறார்கள். மனிதன், விலங்குகள், பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சணங்கள், தாவரங்கள் போன்ற முழுமையாக வேறுபட்ட இனங்களிலிருந்து மரபணுக்களைக் கலப்படம் செய்யும் இந்த முறைக்குப் பலவேறு பெயர்கள் உண்டு-நவீன உயிர்த்தொழில் நுட்பம், மரணுத் தொழில்நுட்பம், மரபணு மாற்றம், மரபுக்குறுக்கீட்டு மறுசேர்க்கைத் தொழில்நுட்பம். மரபணுக்களின் அடுக்கினைக் கலைத்துப்போட்டு இதுவரை இல்லாத புதிய உயிரிகளைப் படைக்கும் செயலாக இது சொல்லப்படுகிறது. இப்படித்தான் நாம் பழங்களில் மீனின் மரபணுக்களையோ, தாவரங்களில் அல்லது வைரஸ்களில் பூச்சிகளின் மரபணுக்களையோ, மீன்களில் கோழியின் மரபணுக்களையோ, பன்றிகள் அல்லது ஆடுகளில் மனித மரபணுக்களையோ, பலவாறாகக் காண முடிகிறது.

maramapnu-stil-5
புதுச் செல்லில் படையெடுப்பற்கோ அல்லது மரபணுத் துப்பாக்கி மூலமாக மரபணுவைப் புதுச் செல்லில் செலுத்துவதற்கோ செய்கின்ற மாற்றம், ஒரு பாக்டீரியத்தை அல்லது  வைரஸை  மரபணுவுக்கு வாகனமாகப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. (இது உயிரியல் தொழில்நுட்பத் தொழில்துறையினர் செய்வதை அவ்வளவு துல்லியமாக எடுத்துரைப்பதல்ல. சுமாரான விவரிப்புதான்.) எந்த மரபணுப் பொறியியலாளரும் டிஎன்ஏவில் எங்கே புதிய மரபணு செருகப்படப் போகிறது என்பதைச் சொல்ல இயலாது. இது ஒரு குருட்டுத்தனமான, மாமரத்தின் கீழிருப்பவன், மாங்காய்க்குக் கல்லெறிவது போன்ற செயல். விழுந்தால் மாங்காய், விழாவிட்டால் கல்லோடு போயிற்று.

இடையில் ஒரு குறிப்பு-மரபணுப் பொறியியலுக்குள் நாம் செல்வதற்குமுன் டிஎன்ஏ என்றால் என்ன என்று சற்றே தெரிந்துகொள்வோம்.

டிஎன்ஏ: வாழ்வின் குறியமைப்பு:

ஒவ்வொரு தாவரமும், மனிதரும் அல்லது விலங்கும் ஒன்றிலிருந்து மற்றது வேறுபடுவதற்குக் காரணம், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான டிஎன்ஏ (டிஆக்ஸி ரிபோநியூக்ளியிக் அமிலம்) என்ற மரபணு வரைபடம் இருப்பதுதான். தன் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு உயிரியும் இதைப் பெறுகிறது. ஓர் உயிரி வளர்வதற்கும், செயல்படுவதற்கும் அல்லது வாழ்க்கையைக் காப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்குமான முழுமையான தகவல்களின் தொகுப்பு இது. இந்தத் தகவல்கள், நடைமுறையில் உடலின் எல்லாச் செல்களிலும் காணப்படுகிறது. டிஎன்ஏவின் பகுதிகளில்-மரபணு என்று சொல்லப்படுபவற்றில்-குறிகளாக அமைந்துள்ளன. பாரம்பரியத்தின் அலகுகளான இவையே ஓர் உயிரியின் எல்லாச் சிறப்புப் பண்புகளையும் நிர்ணயிக்கின்றன. காக்கையா அல்லது சிட்டுக்குருவியா, பூவின் நிறமா, அல்லது உங்கள் தோற்றமா-எல்லாம் நிர்ணயமாவது இவற்றினால்தான். மரபணுக்கள், புரோட்டீன்களை உருவாக்கவும் செய்கின்றன. புரோட்டீன்கள்தான் நம் வாழ்க்கையின் அடிப்படைப்பொருள். உடலைக் கட்டும் தசைகளுக்காக, நாளமுள்ள, நாளமற்ற சுரப்பி நீர்களுக்காக,  நமது ஆற்றல்நிலைகளைச் செயல்படுத்த, உடல் இயக்கங்களுக்காக, இன்னும் சிந்திப்பதற்காகக் கூட இப்படிப் பல காரணங்களுக்காக எல்லா உயிரிகளுக்கும் புரோட்டீன்கள் தேவை.

maramapnu-stil-6
ஆனால் டிஎன்ஏவைப் பற்றி மிகக் குறைவாக-அதன் செயல்பாடுகளில் 3.5% தான் தெரியும் என்று அறிவியலாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். மீதியிருப்பது ஒதுக்கப்பட்ட பகுதி (ஜங்க் டிஎன்ஏ எனப்படும்.) மனித மரபணுத்தொகுதி எழுதியறியப்பட்ட போதிலும் எப்படி மரபணுக்கள் செயல்படுகின்றன, தமக்குள் இடைவினை புரிகின்றன என்பது பற்றிய பகுதி இதுதான்

மரபணுப்பொறியியல்மாற்ற உணவு என்றால் என்ன?

தாங்கள் பாடப்புத்தகத்தில் கற்றுக்கொண்டதை மரபணுப் பொறியியலாளர்கள் நாம் உண்ணும் உணவில் செயல்படுத்திப் பார்க்கிறார்கள். அந்த உணவுகளின் பண்புகளை மேம்படுத்துவதாக அல்லது முழுமைப்படுத்துவதாகச் சொல்கிறார்கள். உதாரணமாக, கடுங்குளிரைத் தாங்கமுடியாத தக்காளிகளை எடுத்துக் கொள்வோம். ஆர்க்டிக் நீரிலும் உயிர்பிழைத்திருக்கும் மீன்களையும் பாருங்கள். ஆர்க்டிக் குளிரைத் தாங்கக்கூடிய மரபணு ஒன்றைத் தட்டை மீன்களில் விஞ்ஞானிகள் கண்டனர். அந்த மீனிலிருந்து அந்த மரபணுவை மட்டும் வெட்டி, தக்காளியின் டிஎன்ஏவில் ஒட்டினார்கள்.

maramapnu-stil-7
இந்தப் புதிய தக்காளி கடுங்குளிரைத் தாங்க வல்லது. அதனால் நீண்டகால வளர்ச்சிப்பருவம் அதற்கு உண்டு. ஆனால் இந்த மரபணுப்பொறியியல்மாற்ற தக்காளியை நம்மால் சாதாரணத் தக்காளியிலிருந்து பிரித்துக் கண்டறிய முடியாது. மீன்களின் பக்கத் துடுப்புகளுடனோ செதில்களுடனோ தக்காளி வந்தால் அல்லவா நமக்குத் தெரியும்?

பல வாரங்களுக்கு அழுகாத, பூச்சிகளைத் தாங்கக்கூடிய தக்காளியைப் பாருங்கள். (பெங்களூர் தக்காளி என்று இதற்குப் பெயரிட்டிருக்கிறார்கள் கடைக்காரர்கள். நம் ஊர்த் தக்காளி, நாட்டுத்தக்காளியாம்.) களைக்கொல்லிகளையும், வைரஸ்களையும், பூஞ்சணத் தாக்குதல்களையும் தடுக்கக்கூடியவை இவை. அதேபோலப் பெரிய அளவில் உள்ள, பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் நன்றாக இருக்கக்கூடிய பழங்களையும் காய்களையும் பாருங்கள். விவசாயிகள், கப்பல்காரர்கள், உணவு விளைவிப்பவர்கள், சிறு வியாபாரிகள் ஆகியோர்க்கு இவ்வகைப் பண்புகள் பிடித்திருக்கின்றன. அவற்றால் அதிக இலாபம் பெறமுடியும். ஆனால் இவ்வகை உணவு நமக்கு நல்லதா என்பது முறறிலும் வேறு விடயம்.

உதாரணமாக, மரபணுப்பொறியியல்மாற்ற உணவுகள் பல வாரங்களாக ரிலையன்ஸ், ஹெரிடேஜ், மோர் போன்ற பெருங்கடை அலமாரிகளில் இருந்தபோதும், அவை புதியவை என்பது போலக் காட்சியளிக்கின்றன. நன்கு சிவப்பாகவும் புதியதாகவும் காணப்படும் அவற்றில் எந்த ஊட்டச்சத்தும் மிஞ்சியிருக்காது. அழுகவியலாத் தக்காளிகளில் பாக்டீரியாக்களின் மரபணுக்கள் உள்ளன. இவை எதிருயிரிகளுக்குத் தடுப்புச் சக்தியை அளிக்கின்ற

குளிர்தாங்கும் தக்காளிகளைச் செய்கிறார்களேஎப்படி?

maramapnu-stil-8
விஞ்ஞானிகள் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாவிலிருந்து மரபணுப் பொருள்களின் துணுக்குகளை எடுத்துக்கொள்கிறார்கள். இவற்றிற்கு ஊக்கி (புரோ மோட்டர்), பிளாஸ்மிட் என்று பெயர்கள். இவை ஓரினத்திலிருந்து (மீன் என்று வைத்துக்கொள்வோம்) மற்றோர் இனத்திற்கு (தக்காளிச் செடிக்கு) ஒரு மரபணுவை மாற்றுவதற்கு உதவும். வைரஸ்களும் பாக்டீரியாவும் மரபணுவைக் கடத்திச் சென்று தாவரத்தின் டிஎன்ஏவில் செருகுவதற்காகப் பயன்படும் கடத்திகள். (குறிப்பு: ஊக்கி (புரோமோட்டர்) என்பது, தாவரம் வெளிமரபணுவைத் தன் சொந்தமரபணுவாகக் கருதி ஏற்றுக்கொள்ள வைக்கும் தந்திரத்தைப் புரிகிறது. டிஎன்ஏவுக்குத் துணைக்கருவியாகச் செயல்படுகின்ற டிஎன்ஏவின் வட்டவடிவத் துணுக்கு, பிளாஸ்மிட்.

அக்ரோபாக்டீரியம் என்பது தாக்குதல்சக்தி வாய்ந்த பாக்டீரியம். இது தாவரங்களில் கழலைகளை ஏற்படுத்தும். பிளாஸ்மிக்குள் ஊக்கியும் குளிரெதிர்ப்பு மரபணுவும் செருகப்படுகின்றன. இந்தப் பிளாஸ்மிட், அக்ரோபாக்டீரியத் துக்குள் வைக்கப்படுகிறது. இந்தப் புதிய பிளாஸ்மிடுடன் சேர்ந்த புதிய பாக்டீரியம் மில்லியன்கள் கணக்கில் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

ஒரு தட்டிலுள்ள தாவரசெல்களில் மேற்கண்ட அக்ரோபாக்டீரியா பற்றித் தொற்றிக் கொள்கின்றன. குளிரெதிர்ப்பு மரபணுவையும் ஊக்கியையும் (மற்றும், எதிருயிரித் தடுப்பு மரபணுவையும்) தாவர டிஎன்ஏவுக்கு மாற்றிவிடுகின்றன. தாவர செல் பிரியும் போது, ஒவ்வொரு தாவரசெல்லும் புதிய அந்நிய மரபணுக்களைப் பெறுகிறது. இவற்றில் ஒவ்வொன்றும் பின்னர் ஒரு முழுத்தக்காளிச் செடியாக வளர்க்கப்பட முடியும்.

வாசனை-ருசித் தக்காளி வகை ஒன்று 1994இல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலும் குறைகள் இருந்தன. அது மிக மிருதுவாகவும் எளிதில் அடிபடக்கூடியதாகவும் இருந்தது. செடியும் உறுதியாக இல்லை. நுகர்வோர் அதன் விசித்திரமான உலோகச்சுவை பற்றிக் குறைகூறினார்கள். அதனால் 1994 இல் ஃபுளோரிடா மாகாணத்தில் அந்தத் தக்காளியின் முழு விளைச்சலும் பயன் இல்லாமல் போனது. கடைசியாகத் தோல்வி என ஒப்புக்கொள்ளப்பட்டு, கைவிடப்பட்டது.

அதேபோலப் பூச்சியெதிர்ப்புப் பருத்தி ஒன்று 1997 இல் அறிமுகமாயிற்று. இது தனக்குள்ளேயே பூச்சிக்கொல்லியை உருவாக்கிக்கொள்ளவல்லது. அமெரிக்க நாட்டில் இலட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டபோது, செடிகளிலிருந்து பருத்திப்பந்துகள் தானாகவே உதிர்ந்துவிட்டன. விவசாயிகள் அமெரிக்க அரசாங்கத்திடம் கேட்ட இழப்பீடு ஒரு மில்லியன் டாலரையும் தாண்டியது.

ஏன் இந்த மரபணுப்பொறியியல்மாற்ற பயிர்கள் முழுமை அடைய முடியாது?

மரபணுப்பொறியியல்மாற்ற உருவாக்கங்களின் உள்ளார்ந்த முக்கியக் குறை, அவற்றின் உருவமைப்பிலுள்ள நிலைத்தன்மையின்மை (இன்ஸ்டெபிலிடி). (இங்கிலாந்தின் திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த) மரபியலாளர் டாக்டர். மே வான் ஹோ கருத்துப்படி, இம்மாதிரித் தாவரங்களின் மூலக்கூற்று மரபியல் தகவல்கள் எதுவும் நிலைத்தன்மையைக் காட்டவில்லை. செயற்கை மரபணுக் கட்டமைப்புகள் வேறு மரபணுப் பொருள்களுடனும், தவறான முறையில் உடையவும் சேரவுமான இயல்பைப் பெற்றுள்ளன என்று இதற்கு அர்த்தம். இதன் விளைவு, புதிய, முன் கணிக்கமுடியாத சேர்க்கைகள்.

மரபணு மாற்றிய மரபணு மாற்றப்பட்ட தாவரச்சேர்க்கைகளின் நிலையின்மை விஞ்ஞானிகளால் நன்கு அறியப்பட்ட ஒன்று. மமா தொழில்துறை இது ஒரு தொடரும் பிரச்சினை என்று ஒப்புக்கொள்கிறது. அடுத்தடுத்த சந்ததிகளில், இந்தத் தவறுகள் பெருக்கமடைகின்றன. நாம் விரும்பாத, தாறுமாறான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக எல்லா உயிர்களிலும் ஒன்றிசைந்து இருந்துவருகின்ற இயற்கையான, நிலைத்த மரபணுச் சேர்க்கைகளுக்கு இது முரணாக உள்ளது.

மரபணு மாற்றப்பட்ட தொழில் நுட்பம் எவ்வளவு சரியானது?                           

maramapnu-stil-9-300x123
மரபணுக்களைச் செருகும் முறைகள், முன்பே சொன்னதுபோல, வந்தால் சரி, போனால் போகட்டும் என்ற நிலையில்தான் உள்ளன. ஒருமுறை சரியான சேர்க்கையைப் பெற ஆயிரக்கணக்கான முறை போடவேண்டியுள்ளது. அப்படி வெற்றிபெறுபவையும் கட்டுப்பாடற்ற, எதிர்பாராத முடிவுகளைத் தருகின்றன. விஞ்ஞானிகள் முடிவுகளைக் கட்டுப்படுத்த இயலாத, முன்னுணர முடியாத நிலையில்தான் உள்ளனர். உதாரணமாக, வளர்ச்சி ஹார்மோன் ஒன்றின் மனித மரபணுவை எலிகளுக்குள் செலுத்தியபோது, மிகப்பெரிய எலிகள் உண்டாயின. அதே மரபணுவைப் பன்றிகளுக்குள் செலுத்திய போது மிகப் பெரிய பன்றிகள் உருவாகவில்லை, மாறாக, நோயுற்ற, வளர்ச்சி குன்றிய, மாறுகண் கொண்ட,  மலட்டுப் பன்றிகள்தான் கிடைத்தன.

ஏன் இப்படி?

டிஎன்ஏ, மரபணுக்கள் பற்றிய அறிவியலும் அவற்றின் பணிகளும் இன்னும் நன்கு தெளிவாகவில்லை. உயிர்த்தொழில்நுட்ப ஆதரவாளர்கள் சொல்வதைப் போலன்றி, அவர்கள் தொழில்நுட்பம் தவறான, காலத்துக்கொவ்வாத யூகங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இடையில் ஒரு தகவல்: நாம் மரபுவழி வந்த நமது நாட்டு மக்காச் சோளத்தை உண்பதை அறவே விட்டுவிட்டோம். பெரிய நகரங்களில் அது கிடைப்பதே இல்லை. மாறாக, ஸ்வீட் கார்ன், பேபி கார்ன் போன்ற பெயர்களில் எல்லாம் இறக்குமதியான மரபணு மாற்றப்பட்ட சோளங்கள்தான் கிடைக்கின்றன. அவை எப்படிச் செய்யப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

உயிர்த்தொழில்நுட்பச் சோளத்தைச் செய்தல்:

சில பூச்சிகளுக்குக் கடுமையான விடமான ஒரு புரோட்டீனை உருவாக்குகின்ற பசிலஸ் துரிஞ்சியென்சிஸ் என்பதிலிருந்து விஞ்ஞானிகள் ஒரு மரபணுவைப் பிரிக்கின்றனர். இதை மாற்றியமைத்து, வேதிமுறையில் இதனை ஓர் எதிருயிரித் தடுப்பு மரபணுவில் இணைக்கின்றனர்.

இந்த மரபணுக்கள் மிகநுட்பமான 24 காரட் தங்கப் பொடியில் சேர்க்கப்பட்டு, கால்அளவு பிளாஸ்டிக் தட்டில் பரப்பப்படுகின்றன.

ஒரு வலைத்தடுப்பின்மீது இந்தத் தட்டு ஜீன் துப்பாக்கி ஒன்றினால் வீசப்படுகிறது. அப்போது மரபணுவைக் கடத்தும் துகள்கள் சென்று சோள செல்கள் அல்லது விதைக்கருக்கள் உள்ள தட்டின் மீது விழுகின்றன.

புதிய மரபணுக்கள் சில சோளச் செல்களுக்குள் சென்றுசேர்கின்றன. இவற்றைக் கண்டறிய, விஞ்ஞானிகள் இவற்றில் எதிருயிரித் தடுப்பு மரபணு கொண்டவற்றைத் தவிரப் பிற செல்களை அழித்துவிடும் எதிருயிரி ஒன்றைச் சேர்க்கின்றனர்.

இந்த மாறிய செல்கள் புதிய தாவரங்களாக முதிர்கின்றன. எல்லாச் செடிகளும் அல்ல இப்படிப்பட்ட ஒருசில செடிகளும் அவற்றின் சந்ததிகளும் பூச்சிக்கொல்லிப் புரொட்டீனை உற்பத்தி செய்கின்றன. இவற்றிலிருந்துதான் விதைகள் உருவாக்கப்பட்டு இப்போது நாம் விரும்பி உண்ணும் பேபிகார்ன், ஸ்வீட் கார்ன் போன்றவை உண்டாக்கப்படுகின்றன.

முன்பு மரபணு மாற்றப்பட்ட இணைப்புகள் தாறுமாறாக விளைவுகளை உண்டாக்குகின்றன என்று பார்த்தோம். அதற்குக் காரணம் என்ன?

“மரபணுக்கள் என்பவை எளிய குறியமைப்புகளை உடையவை, ஒரு குறித்த பண்புக்கு ஒரு மரபணுக்குறி மட்டுமே உண்டு” என்ற எளிமையான, குறுக்கல் வாதச்சிந்தனையின் விளைவு இது. ஓர் உயிரியின் டிஎன்ஏவை உடைத்து அதற்குள் ஓர் அந்நிய மரபணுவைச் செருகுதலாகிய செயல் எதிர்நோக்க இயலாத எதிர்பாராத விளைவுகளைக் கொண்ட வெடிப்புகளையும் மாற்றங்களையும் உண்டாக்குகிறது.

இயற்கையில், மரபணுக்கள் ஒன்றாக, ஒன்றுசேர்ந்து, ஒழுங்காகச் செயல்படுகின்றன, தங்களுக்குள்ளாகவும் ஒழுங்கமைப்பினாலும் பாதிக்கப்படுகின்றன. விஞ்ஞானிகள் நினைப்பதுபோல ஒரு மரபணு மட்டும் தனித்துச் செயல்படுவதில்லை. இந்த அடிப்படைக் கருத்தைப் புரிந்துகொள்ளாவிட்டால், சோதனைகள் நோய்பட்ட பன்றிகள் அல்லது பச்சை சால்மன் மீன்கள் போன்ற தாறுமாறான முடிவுகளைத் தருவதுதான் தொடரும்.

மரபணுப்பொறியியல்மாற்ற உணவுகள் இயற்கை உணவுகளைப் போன்றவையே என்று விளம்பரம் செய்யப்படுகிறதேஇந்தக் கூற்று உண்மையா?

maramapnu-stil-10
இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் மரபாக இயற்கை உணவைப் பதப்படுத்துவதன் (ரொட்டி, பீர் அல்லது ஒயின், பதப்படுத்திய தயிர், பாலடை போன்றவை செய்தல்) மற்றும் இயற்கை வளர்ப்பின் விரிவாக்கமே மபொ என்று கூறுகின்றன.

நீங்கள் எவ்வளவு ஒட்டுவளர்ப்புச் செய்தாலும், உங்கள் வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கும் தக்காளியில் மீன் அல்லது பூச்சியின் மரபணுப் பொருள் வரவே முடியாது. நாம் இயற்கையாகக் கிடைக்கின்ற ஈஸ்ட்டு போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துகிறோம். மனிதனாக உருவாக்கிய, செயற்கையாக மாற்றப்பட்ட மரபணுக்களை ரொட்டி, பாலடை, ஒயின் போன்றவை செய்வதற்கு யாரும் பயன்படுத்துவதில்லை. பண்ணைகளில் ஒரே அல்லது ஒரேமாதிரியான இனத்திலிருந்துதான் ஒட்டு வளர்ப்புச் செய்யத் தேர்ந்தெடுக்கிறோம்.

மரபு வளர்ப்பு நவீன மரபணுப்பொறியியல் தொழில்நுட்பங்கள்:

மரபான வளர்ப்பு முறை பாரம்பரியமாக, பல நூற்றாண்டுகளாக வருவது. அதற்கு யாரும் உரிமை (பேடண்ட்) கொண்டாட இயலாது. மரபு வளர்ப்பிலும் சந்ததிகள் தங்கள் பெற்றோரிடமிருந்து வேறுபடத்தான் செய்கின்றன, ஆனால் அவற்றின் பண்பு வேறுபாடுகள் மிகக் குறைவு.

நவீன மரபணுப் பொறியியல் தொழில்நுட்பத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று அல்லது மிகச்சில மரபணுக்கள் புகுத்தப்பட்டு, அவற்றிலிருந்து செயற்கையான வளர்ச்சியைச் செய்து, அவற்றிலிருந்து விதைகளை உருவாக்கி, பிறகு பயிர் என்ற நிலைக்கு வருகிறது.

இவற்றிலும் சந்ததிகள் தங்கள் பெற்றோரிடமிருந்து வேறுபடுகின்றன, அவற்றின் பண்பு வேறுபாடுகள் மிகப் பெரிய அளவில் உள்ளன.

தாவரங்கள், பிராணிகள், பாக்டீரியா, வைரஸ்கள், மனிதன் போன்ற முற்றிலும் தொடர்பற்ற உயிரிகளிலிருந்து மரபணுப் பொருள்களை ஆய்வகங்களிலும் சோதனைக் குழாய்களிலும் கலப்பதை மரபணுப் பொறியியல் செய்கிறது.

இந்த இரு முறைகளும் எவ்வளவு வேறுபட்டவை என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

செயற்கை முறையில், புதிய டிஎன்ஏவில் அந்நிய மரபணுக்களைச் செருகுவதற்கு பாக்டீரியாக்களையும் வைரசுகளையும் வைத்து மரபணுப் பொறியியலாளர்கள் அவற்றில் தாக்கி நுழைதலையும், படையெடுப்பையும் நடத்துகிறார்கள்.

இயற்கை வளர்ப்பில் (தாவரங்கள் அல்லது பிராணிகள்) இரு பெற்றோரிடமிருந்தும் டிஎன்ஏ முழுமையாக அப்படியே குரோமோசோம் வடிவில் செல்கிறது. இயற்கையாக ஒழுங்கமைத்த சங்கிலிகள் உடையாமல், ஒருங்கிசைவுடன் உள்ளன.

ஆனால் மரபணுப்பொறியியல்மாற்ற சந்ததியில் இயற்கைச் சங்கிலிகள் எதிர்நோக்கவியலாத வழிகளில் குலைக்கப்பட்டு, மறுஅமைப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன.

மபொ பழங்களும் காய்கறிகளும் முற்றிலும் தொடர்பற்ற இனங்களிலிருந்து (பூச்சிகள், விலங்குகள், பக்டீரியா, மனிதர்களிலிருந்தும்) டிஎன்ஏக்களைக் கொண்டுள்ளன என்பது அவற்றை இயல்புக்கு மாறானவை ஆக்குகிறது. அவ்வாறில்லை என்றால், உயிர்த் தொழில்நுட்பக் குழுமங்கள் ஏன் அவற்றிற்கு உரிமை பதிவு செய்து, அவற்றைப் பயன்படுத்த ராயல்டி (உரிமத்தொகை) பெற்று, பல்வேறு நாட்டு விவசாயிகளையும் பல்வேறு முரண்பாடுகள் கொண்ட ஒப்பந்தங்களுக்கு ஏன் உடன்படுத்தவேண்டும்?

உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள், மபொ உணவுகள், இயற்கை உணவுகளுக்குச் சமமானவை என்று கூறுவது ஏன்?

இந்த உணவுகளை உருவாக்க மிகப் பெரிய அளவு பணம் முதலிடப்படுகிறது. பிற போட்டியாளர்களுக்கு முன்னரே பாதுகாப்பான சந்தைகளில் தங்கள் விளைபொருள்களைத் தள்ளிவிட இந்தக் குழுமங்கள் விரைகின்றன.

உயிர்த்தொழில் நுட்பத் தொழிலகங்களின் விளக்கம் இப்படிச் செல்கிறது:

“ஒரு மரபணுப்பொறியியல்மாற்ற உணவின் மாற்றப்பட்ட பெரும்பான்மைப் பண்புகள் அதே போன்ற இயற்கை உணவின் பண்புகளுக்கு ஒத்தவையாக இருந்தால், அந்த மபொ உணவு இயற்கை உணவைப் போன்றே, எல்லா விதங்களிலும் இருக்கவேண்டும்”.

இந்த விளக்கம் தர்க்கத்துக்கு முரணானது. நான்கு கால்கள், மீசைகள், ஒரு வால், இரு காதுகள், உடல் முழுவதும் மயிர் போன்ற ஒரே மாதிரிப் பண்புகளைக் கொண்டுள்ளதால், ஒரு நாயும் எலியும் சமமாகிவிடுமா?

விலங்குகளையும் மனிதர்களையும் பயன்படுத்தி, மிகுதியான செலவு பிடிக்கின்ற, காலவிரயம் செய்கின்ற, நீண்டகாலச் சோதனைகளின் தேவை இன்றியே தங்கள் விளைபொருள்களை எவ்வளவு விரைவாக விற்கமுடியுமோ அவ்வாறு விற்பதற்காக உயிர்த்தொழில் நுட்பத் தொழிலகங்கள் மேற்கண்ட சமன்மை வாதத்தை மிகச் சாதுரியமாக பிரச்சாரம் செய்துவருகின்றன. துரதிருஷ்டவசமாக, நம்நாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் ஒழுங்குபடுத்தும் அமைப்புகளும் தொழிலகங்கள் கண்டுபிடித்த இந்த “சாராம்சச் சமன்மை”யின் சட்ட நிபுணத்துவ நுட்பத்தை ஒப்புக்கொள்கின்றன. நுகர்வோரும் ஏமாற்றப்படுகிறார்கள். அதை அரசாங்கமும் ஏற்றுக் கொள்கிறது. பெரிய பெரிய முதலாளிகள்

அதனால் மரபணுப்பொறியியல்மாற்ற விளைபொருட்கள் உணவுப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், கடுமையான நீண்டகாலச் சோதிப்புகள், அடையாளப்படுத்துதல் (அதாவது இவை செயற்கையாகத் தயாரிக்கப்பட்டவை என்று லேபல் இடுதல்) உட்பட்ட செயல்களைத் தவிர்த்து வந்துவிடுகின்றன. நம் நாட்டில் நுகர்வோருக்கு எந்தவிதப் பாதுகாப்புமே இல்லை.

இந்தக் கட்டுரை தொடரும் . . .

மரபணுத் தொழில்நுட்பம்-சில சிந்தனைகள் (முன் கட்டுரையின் தொடர்ச்சி)

marapanu-stil-1

(மபொ-மரபணுப் பொறியியல்,     மமா-மரபணு மாற்றப்பட்ட)

நம் நாட்டிலும் ரிலையன்ஸ், மோர், ஹெரிடேஜ் போன்ற பெருநிறுவனங்கள் கடைகளை நடத்தத் தொடங்கிய போதே மமா உணவுப் பொருள்கள் மிகுதியாக நாட்டில் பெருகிவிட்டன. தனியாக அடையாளமிடப் படாததால் மக்கள் தாங்கள் மபொ உணவுகளை உண்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் இன்றும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பீட்சா, பர்கர் போன்ற உணவுகளில் மமா நஞ்சு மிகுதி.

இதற்கு மேல் நமது அரசாங்கம் வால்மார்ட் போன்ற அமெரிக்கக் குழுமங்களைச் சிறிய அளவிலான கடைகள் வைக்கவும் அனுமதி அளிக்கிறது. அமெரிக்கா தான் மபொ நஞ்சுகளின் தாயகம் என்பதை மறந்துவிடாதீர்கள். ஏற்கெனவே மான்சாண்டோ குழுமத்தின் விதைகளை வாங்கிப் பயிரிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது அரசாங்கம். இதுவரை கிரீன் பீஸ் போன்ற சில தனி அமைப்புகளே இவற்றை எதிர்த்து வருகின்றன. மக்களுக்கு இதுபோன்ற விசயங்கள் தெரியவும் இல்லை, அவர்களுக்கு இருக்கும் வாழ்க்கைப் போராட்ட நிலையில் இவற்றின்மீது அக்கறையும் இல்லை.

மபொ உணவுகள் பாதுகாப்பானவையா?

1989 -இல் ஒரு புத்தம்புதிய கொள்ளைநோய் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரவியது. அதற்கு பலியானவர்கள் கடுமையான தசை வலியாலும் மிக அதிக எண்ணிக்கையிலான இரத்த வெள்ளை அணுக்களாலும் பாதிக்கப்பட்டனர். பக்கவாதம், நீண்டகால நரம்பியல், இதயப் பிரச்சினைகள், தோலில் வலிமிக்க வீக்கங்களும் வெடிப்புகளும், தன்னிச்சையான நோயெதிர்ப்புக் குறைபாடுகள், ஒளியைத் தாங்கமுடியாமை போன்றவை அவர்களைப் பீடித்த மற்ற சில அறிகுறிகள்.  சில மாதங்களுக்குள், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 5000 பேரில் 37 பேர் இறந்தனர், 1500 பேர் நிரந்தரமாக ஊனமாயினர். மருத்துவர்கள் இந்த வலிமிக்க, உயிருக்கு ஆபத்தான இரத்தச் சீர்கேட்டுக்கு ஈசனோ ஃபீலியா-மையால்ஜியா குறைபாடு என்று பெயரிட்டனர். அவர்கள் முயற்சி பலனளிக்கவில்லை.

marapanu-stil-2
பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் குறிப்பிட்ட உணவுக்கடைகளில் விற்கப்பட்ட ஓர் உணவுச்சேர்க்கையை ட்ரிப்டோஃபன் என்பதை உண்டனர் என்று கடைசியாக நோய்க்கட்டுப்பாட்டு மையம் கண்டுபிடித்தது. இந்த ட்ரிப்டோஃபன், ஒரு ஜப்பானியக் குழுமத்தினால் (ஷோவா டெங்கோ-ஜப்பானின் மூன்றாவது மிகப்பெரிய வேதிக் குழுமம் அப்போது) செய்யப்பட்ட மபொ உணவு என்பதை மேலும் செய்த ஆய்வுகள்  கண்டுபிடித்தன.

எனவே சந்தேகமின்றி ஒரு மபொ உணவு, உடல் நலத்துக்கு பாதுகாப்பானது என்று கூறமுடியாது. நமது பாரம்பரிய இயற்கை உணவுகள் நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயன்பட்டுச் சேகரித்த அனுபவத்தினால் பாதுகாப்பானவை என்று நமக்குத் தெரியும். மாறாக இந்தப் புதிய தொழில் நுட்பம் நீண்டகால விளைவுகள் ஏற்படுவதைக் கணிப்பதில்லை. மபொ உணவுகள், விரும்பத்தகாத பக்கவிளைவுகளைத் தருபவையாக இருக்கக்கூடும். சில பத்தாண்டுகளுக்கு முன்னர், இப்படித்தான் டிடிடி -யினை உண்ட பசுக்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆரோக்கியத்துக்கு மாறான அந்த விளைவுகளைக் கண்டுபிடிக்கப் பல ஆண்டுகள் ஆயிற்று.

marapanu-stil-3
மபொ டிரிப்டோஃபனின் விசயத்தில், அதை மேலும் உற்பத்தி செய்ய ஒரு பாக்டீரியத்தில் நான்கு மரபணுக்கள் செருகப்பட்டன. அந்த மரபணுக்கள் உண்டாக்கிய என்சைம் பாக்டீரியத்தின் வேதியமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியதால் அது மேலும் மேலும் இந்த அமினோ அமிலத்தை உற்பத்தி செய்யலாயிற்று. அந்த அமிலம் புதிய வேதி மாற்றங்களைப் பக்கவிளைவாக ஏற்படுத்திப் புதியதொரு கூட்டுப்பொருளை உருவாக்கியது. அது டிரிப்டோஃபனை ஒத்ததாக இருந்தாலும் மனிதர்களுக்கு மிகுந்த நச்சுப்பொருள். புதிதாக உருவாகிய டிரிப்டோஃபன், 98.5% தூயதாக இருந்தாலும் அதில் மிகச் சிறிய அளவில் கலந்திருந்த நச்சுப்பொருளே மனிதர்களைக் கொல்லவோ செயலிழக்கச்செய்யவோ போதுமானதாக இருந்தது. (இந்தப் பிரச்சினை தெரியவந்தவுடனே அந்தக்குழுமம் எல்லா மாதிரிகளையும் அழித்துவிட்டது. அதற்கு லேபில் இட்டிருந்தால் தேடுதல் வேகமாக நிகழ்ந்திருக்கும்-இந்த வழக்கு இதுவரை தீர்க்கப்படாமலே இருக்கிறது.)

இயற்கையான பாக்டீரியா தயாரிக்கும் டிரிப்டோஃபன் நஞ்சானதல்ல. ஆகவே மாற்றப்பட்ட பாக்டீரியாதான் நச்சுப்பொருளை உற்பத்திசெய்த காரணி என்று நாம் சுட்டிக்காட்டலாம்.

marapanu-stil-4
நீண்டகாலம் மனிதர்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தால் ஒழிய மபொ உணவுகள் உண்பதற்குப் பாதுகாப்பானவை என்று யாரும் 100% உறுதிகூற முடியாது.

தாறுமாறான முறையில் மரபணுக்களைத் தாவரத்திலோ விலங்கிலோ செருகுவது, எதிர்பாராத மாற்றங்களை அவற்றில் ஏற்படுத்தி, புதிய அல்லது உயர் அளவிலான தீங்கு பயக்கும் பொருள்களை உணவில் சேர்த்துவிடுகிறது. மபொ உணவுகளில் தீங்கான பொருள்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் கூறுவதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை.

ஒரு புதிய மருந்து முழுமையாகச் சோதிக்கப்பெறவில்லை. அதன் மோசமான விளைவுகளைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்பதாலேயே நீங்கள் அதைப் பயன்படுத்திப் பார்ப்பீர்களா? இதைத்தான் நாம் மபொ உணவுகள் விசயத்திலும் கடைப்பிடிக்கச் சொல்கிறோம். ஆனால் தொழிலகங்களும், கட்டுப்பாட்டு அமைப்புகளும் அவை முழுமையாக ஏற்கத்தக்கவை என்று அழுத்திச் சொல்கின்றன.

உள்ளார்ந்த உடல்நல அபாயங்கள் நிகழ்ந்த சில சந்தர்ப்பங்கள்

marapanu-stil-5
* உயர்ந்த வேதிமாற்ற வீதம் இருக்குமாறு ஈஸ்டை மபொ வாயிலாக மாற்றினார்கள். அதனால் நொதித்தல் வேகமாக நிகழும், ரொட்டி செய்தல் அல்லது பீர் வடித்தலை விரைவுபடுத்தமுடியும். குளூகோஸில் வேதிமாற்றங்களை விரைந்து ஏற்படுத்தும் மரபணுக்கள் ஈஸ்டில் செருகப்பட்டன. இதனால் நஞ்சான மரபணுமாற்றப் பொருளான மெதில் கிளையோக்ஸால் என்பதன் சேர்க்கை ஈஸ்டில் ஏற்பட்டுவிட்டது என்று 1995 இல் ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள்.

* புகையிலைத் தாவரங்கள் மபொ வாயிலாக காமா-லினோலீயிக் அமிலத்தை உற்பத்தி செய்யுமாறு மாற்றப்பட்டன. இது உடல்நல உணவுத் தொழிலில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. 1996 இல், இந்தத் தாவரம் எதிர்பாராதவிதமாக வேறொரு நச்சுப் பொருளை (ஆக்டாடெகாடெட்ரேனிக் அமிலம்) உருவாக்கத் தொடங்கிவிட்டது. இந்த நஞ்சு இயற்கையான புகையிலைத் தாவரங்களில் இருப்பதில்லை.

marapanu-stil-6
* 1998இல், பூச்சிகளைக் கொல்வதற்காக உருவாக்கப்பட்ட மபொ உருளைக்கிழங்கு, நோயெதிர்ப்பு மண்டலப் பிரச்சினைகள், முடமாக்கப்பட்ட உறுப்புவளர்ச்சி, தொண்டைக்குழல் உட்புறத்தோலில் மாற்றங்கள் எனப் பல கடுமையான உயிரியல் பிரச்சனைகளை எலிகளில் சோதித்தபோது ஏற்படுத்தியது என்று ஆய்வாளர் ஆர்பத் புஸ்டாய் காட்டினார். இந்த மபொ உருளைக்கிழங்கை உண்ணும் மனிதர்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்குமா?

மபொ உணவை உண்பதால் வேறு பக்க விளைவுகள் உண்டா?

ஒவ்வாமை பற்றிய பிரச்சினைகள் உள்ளன. பெரியவர்களுக்கு 2% வீதமும் குழந்தைகளுக்கு 8% வீதமும் உணவு ஒவ்வாமை இருக்கிறது, ஏறத்தாழ நான்கிலொரு வீத மக்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதற்குக் காரணம் புரோட்டீன்கள். புரோட்டீன் உற்பத்தியில் தான் மபொ ஈடுபடுகிறது. பொதுவாக ஒவ்வாமையை ஏற்படுத்தும் மூலங்களான பருப்புகள், மீன்கள், முட்டைகள் மற்றும் பால் பொருள்களிலிருந்து மட்டுமல்ல. மபொ உணவு, கூருணர்ச்சி மிக்க எவரிடமும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். எதிர்பாராத, இதுவரை தெரியவராத ஒவ்வாமை விளைவிக்கும் பொருள்கள் உணவில் தோன்றுவதே இதற்குக் காரணம். ஒருவருக்கு இதுவரை பாதுகாப்பாக இருந்த உணவு, மபொ மாற்றத்திற்குப் பிறகு அபாயகரமானதாக மாறிவிடக்கூடும். புதிய புரோட்டீன்கள் அவற்றில் உற்பத்தி ஆவது ஆபத்தான வேதிவினையைத் தூண்டுவதாகிவிடலாம்.

marapanu-stil-7
களைக்கொல்லிகளை எதிர்க்குமாறு உருவாக்கப்பட்ட மபொ சோயா அவரையில் பாக்டீரியா, பெடூனியா, ஹெபாடைடிஸ் பி மற்றும் எச்ஐவியை உண்டாக்கும் வைரஸ் போன்றவை அடங்கியுள்ளன.

அதிகமான புரோட்டீனைத் தருவதற்காக சோயா அவரைக்குள் பிரேசில் பருப்பிலிருந்து எடுத்த ஒரு மரபணு செலுத்தப்பட்டது. ஒவ்வாமை உடைய நபர்கள் எல்லோருக்கும் இந்த சோயா அவரையால் மோசமான எதிர்வினை உண்டாயிற்று என்று பின்னர் நடந்த சோதனைகள் காட்டின. அந்த உற்பத்திப் பொருள் நிறுத்தப்பட்டது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மபொ சோயா அவரையினால் உணவு ஒவ்வாமை 50% கூடுதலாக அதிகரிக்கிறது என்று காட்டினார்கள். செரித்த பிறகுதான் இந்த புரோட்டீன் எதிர்வினைகளைத் தூண்டுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், குடல் எரிச்சல் உணர்வு, செரிமானப் பிரச்சினைகள், தோல்நோய்கள், மிகுகளைப்பு அறிகுறிகள், தலைவலை, வேலைசெய்ய இயலாமை போன்றவை ஏற்படுவதாகப் புகார் கூறினர்.

ஒவ்வாமை வேதிகள் இருக்கின்றனவா? என்று உங்களால் சோதித்துத்தான் அறிய முடியும். ஒவ்வாமை உணவுகளைச் சாப்பிட்ட பிறகு கொஞ்சநேரம் கழித்துத்தான் எதிர்வினைகள் நிகழ்கின்றன. பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள், பூச்சிகள், தாவரங்கள் அல்லது விலங்குகள் போன்ற உயிரிகளிலிருந்துதான் மரபணுக்கள் எடுக்கப்படுகின்றன. இவை உணவில் இதுவரை சேர்க்கப்படாதவை. எனவே அவை உற்பத்திசெய்யும் பொருள்கள் (புரோட்டீன்கள்) என்ன, எப்படிப்பட்ட பாதிப்பைத் தரும் என்பது தெரியாது.

உங்களுக்கு இதுவரை தெரியவராத ஒன்றை எவ்விதம் சோதிக்க முடியும்? இவற்றைப் பற்றிய லேபில்கள் (அறிவிப்பு ஒட்டிகள்) இன்றி இவற்றையும் இயற்கை உணவையும் வேறுபடுத்தி அறியமுடிவதில்லை என்பதால், மேலும் கேடு நிகழ்கிறது, நுகர்வோரால் இம்மாதிரி உணவுகளைத் தவிர்க்கமுடிவதில்லை.

மபொ உணவுக்கும் எதிருயிரி எதிர்ப்புக்கும் உள்ள தொடர்பு என்ன?

உயிர்த்தொழில்நுட்பத்தில் எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்களின் பயன்பாடு இன்னொரு பிரச்சினை. கிருமிகளுக்கெனப் பயன்படுத்தும் எதிருயிரிகள் (ஆண்ட்டிபயாடிக்ஸ்-நோய்களுக்கும் தொற்றுகளுக்கும் சிகிச்சைக்கெனப் பயன்படுத்தும் பயனுள்ள மருந்துவேதிகள்) எல்லாக் கிருமிகளையும் அழிப்பதில்லை. சில கிருமிகள் ஏற்கெனவே மருந்து எதிர்ப்புச் சக்தி பெற்றுவிட்டதால் பிழைத்துவிடுகின்றன. பாக்டீரியாக்களில் எதிருயிரிமருந்துக்கு எதிர்ப்பு உருவாக்கும் மரபணுக்களை மரபணுப் பொறியியலாளர்கள் “காட்டி”களாகப் பயன்படுத்துகிறார்கள்.

marapanu-stil-8
புதிய உயிரிக்குள் வேண்டப்பட்ட மரபணுக்களோடு இவையும் செலுத்தப்படுகின்றன. இந்தக் காட்டிகளைக் கொண்டு, இந்த அந்நிய மரபணுக்களை ஏற்றுக்கொண்ட செல்களை விஞ்ஞானிகள் பிரித்தறிய முடியும். (காட்டிகளை ஏற்ற செல்கள் மட்டும்தான் எதிருயிரிமருந்து இருக்கும் நிலையில் பிழைத்திருக்கமுடியும், பிற செல்கள் அனைத்தும் அழிந்துவிடும்.)

சுற்றுச்சூழலில் உள்ள பாக்டீரியாக்களும், எளிய உயிரிகளும் மபொ பயிரிலிருந்து இந்த எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதுதான் அபாயம். சிறிதுகாலத்தில் இவை இவற்றைப் பண்ணையிலிருக்கும் பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் கடத்திவிடும். எனவே மபொ உணவின் பரவலான பயன்பாடு, தொற்றுகளுக்கும் நோய்களுக்கும் பயன்படுத்தும் மருந்துகளுக்கு எதிர்ப்புச் சக்தியைப் பரப்புவதாகவே முடியும்.

எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்களைக் கொண்ட மபொ உணவை நாம் உண்ணும்போது எவ்வித பாதிப்பு நமக்கு ஏற்படுகிறது?

டிஎன்ஏவும், மரபணுக்களும் மிகத் தயாராக பாக்டீரியாக்களுக்கும் பிற எளிய உயிரிகளுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன என்பதைப் பல ஆய்வுகள்  நிரூபித்துள்ளன. மபொ தொழிலகங்கள் சொல்வதற்கு மாறாக, அவை முழுமையாக மபொ உணவிலிருந்து பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் வாய், உணவுப்பாதை வழியாகப் புகுந்துவிடமுடியும்.

மரபணுக்களும் டிஎன்ஏவும் செரிப்பிலும் உயிர்பிழைத்திருக்கும்

* எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்கள், மபொ உணவிலிருந்து அப்படியே மனித உணவுப் பாதைக்குள் குதித்து, குடலில் பல நிமிடநேரம் உயிர்வாழ முடியும். ஆகவே மபொ உணவிலிருந்து நேராகவே எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்கள் மனிதருக்கும் (அல்லது விலங்குகளுக்கும்) பரவ முடியும். மபொ உணவை உண்ணும் மனிதர்கள் நோயுறும்போது எதிருயிரி மருந்துகளால் அவர்களுக்குப் பலனிருக்காது.

marapanu-stil-9
* உணவுப்பாதையின் செரிப்பு மாற்றங்கள் டிஎன்ஏவை பாதிப்பதில்லை. எலிகளுக்குத் தரப்பட்ட டிஎன்ஏவை அவற்றின் இரத்த வெள்ளை அணுக்கள், மண்ணீரல், கல்லீரல் செல்கள் பெற்றுக்கொண்டன. எலிகளின் டிஎன்ஏவுடன் அவற்றில் சில ஒருங்கிணைந்துவிட்டன.

எதிருயிரிக் காட்டி மரபணுக்கள் ஒருவேளை பாக்டீரியா அல்லது வைரஸ்களுக்குக் கடத்தப்பட்டால், எதிருயிரி மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்கள் வனவிலங்குகளுக்கும் பண்ணை விலங்குகளுக்கும் மனிதருக்கும் பரவக்கூடும். இப்படிப்பட்ட காட்டி மரபணுக்களையும் அவற்றின் விளைபொருள்களையும் கொண்ட பயிர்களைப் பரவலாகப் பெருமளவில் பயிரிடுதலும் நுகர்தலும் நுணணுயிர்கள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் எல்லாரிடத்திலும் மிகப்பெரிய அளவில் எதிருயிரி மருந்தெதிர்ப்பு மரபணுக்களை உருவாக்கிவிடும் என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள்.

உதாரணமாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (எஃப்டிஏ) 90களில், பாலில் எதிருயிரிகளின் அளவை 100 மடங்கு அதிகப்படுத்த அனுமதி அளித்தது. தங்கள் பண்ணைகளிலிருக்கும் பசுக்களுக்குத் தொற்று ஏற்படாமலிருக்க மிகுதியாக எதிருயிரி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்த இது வாய்ப்புத்தந்தது. ஆனால் இதனால், எதிருயிரிகளுக்குக் கட்டுப்படாத புதிய நோய்க்கிருமிகள் அவற்றில் உருவாயின. இவற்றின் பாலைக் குடித்த மக்கள், மேலும் அதிக அளவிலான மருந்துகளையும், புதிய மருந்தெதிர்ப்பு பாக்டீரியாக்களையும் ஏற்க நேரிட்டது.

ஏற்கெனவே, அதிக எண்ணிக்கையிலான நோய்களை (காச நோய், காலரா, நிமோனியா போன்றவற்றை) குணப்படுத்த முடியவில்லை. பலவகை எதிருயிரி மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்திகொண்ட உயர்வகைக் கிருமிகள்தான் இதற்குக் காரணம். உபயோகமான மருந்துகளை மருத்துவர்கள், விவசாயிகள், பிராணிஉணவுத் தயாரிப்புத் தொழிலகத்தினர் போன்றோர் மிகுதியாகவும் தவறாகவும் பயன்படுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டது.

மரபணுப் பொறியியல்பக்கவாட்டு (சமதள) மரபணுப் பெயர்ப்பு என்ற கொள்கை 

அடிப்படையில் நிகழ்கிறது. இதற்கு ஓர் இனத்திலிருந்து தொடர்பற்ற இன்னொரு இனத்திற்கு மரபணுக்களை  மாற்றுவது என்பதுதான் அர்த்தம்.

மேலும் மோசம், பக்கவாட்டு மரபணுப் பெயர்ப்பு நிகழும் போது, நோய்க் கிருமிகள் எதிருயிரி மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் போவதால், இம்மாதிரிச் சமதள மாற்றத்தில் அவை புதிய சேர்க்கைகளில் அல்லது இடமாற்றங்களில் புதிய நோய்களை உண்டாக்குகின்ற புதிய, அதிக ஆற்றலுள்ள கிருமிகளை உருவாக்கிவிடும்.

மரபணுப் பொறியியலில் அபாயகரமான பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் பயன்படுத்துவதில் பிற ஆபத்துகள் ஏதேனும் உண்டா?

marapanu-stil-10
புதிய நோய்களைத் தொடங்கும் அபாயம் இருக்கிறது. உயிர்த்தொழில் நுட்பத் தொழிலகங்களால் பயன்படுத்தப்படும் பல பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவை கழலைகள், பற்றுகள், நோய்களைத் தாவரங்களிலும் பிராணிகளிலும் உண்டாக்கக் கூடியவை. உதாரணமாக, மபொ பயிர்களில் காலிபிளவர் மொசாய்க் வைரஸ் மரபணுக்களை செயலூக்கம் செய்யவோ செயல்மட்டுப்படுத்தவோ ஊக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஹெபாடைடிஸ் பி-யை ஒத்தது, எச்ஐவிக்குத் தொடர்புள்ளது. நாய்க்கடி வைரஸ் (ரேபீஸ்) பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது. பயிர்களுக்குப் பல நோய்களை எதிர்ப்பதற்காகப் பயன்படுத்தும் கிருமிக்கொல்லிகளில், ஒரு பூச்சியின் வைரஸில் தேளின் விசத்திலுள்ள மரபணுவைச் சேர்த்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அது ஒருவேளை மனிதர்களுக்குக் கடத்தப்பட்டால், நரம்புமண்டலம் அல்லது நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

மரபணுப் பொறியியலில் இயற்கைக்கு மாறான முறையில் மரபணு மாற்றம் செய்வது, புதிய நோய்களின் தோற்றத்துக்குக் காரணம் எனச் சில விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். இவை இனங்களின் எல்லைகளை மீறிக் குதிப்பதால், மனிதனுக்கும் விலங்குக்கும் ஏற்படுபவை. இவை பாக்டீரியாவும் வைரஸ்களும் முன் கணிக்க இயலாத மாற்றங்களுக்கு உட்பட்டதால் ஏற்பட்டவை. உதாரணமாக, பழ ஈக்களிலிருந்து ஒரு மரபணு மனிதர்களுக்குத் தாண்டிக்குதித்ததால் நரம்பியல் சார்ந்த ஒரு க்ஷீணநோய் ஏற்படுகிறது என்று புதிதாகக் கண்டுபிடித்தார்கள்.

தொடர்பற்ற பல நோய்க்கிருமிகள் புதிய செல்களில் தாக்கக்கூடிய மரபணுககள் பலவற்றைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழல் பக்கவாட்டு மரபணு இடப்பெயர்ச்சிகளால் மட்டுமே நேர்ந்திருக்கமுடியும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார்கள். இவற்றின் விளைவாகப் பலவேறு இனங்களுக்கிடையில், தாவரங்களிலிருந்து பூஞ்சைகளுக்கும், பூச்சிகளிலிருந்து பிற விலங்குகள், பண்ணைப் பிராணிகள் ஆகியவற்றிற்கும், இவற்றிலிருந்து கடைசியாக மனிதராகிய நமக்கும் புதிய நோய்களும் தொற்றுகளும் கடத்தப்படும்.

உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் சொல்லுவதுபோலபயிர்களின் மரபணுப் பொறியியல்,நச்சுவேதிப்பொருள் பயன்பாட்டைக் குறைக்கிறதா?

இல்லை. மாறாக, அதிகமான நச்சுவேதிப் பொருள் எச்சங்களைத்தான் நாம் எதிர் பார்க்கமுடியும். மபொ பயிர்களில் பெரும்பான்மையானவை, இவற்றின் விதைகளை விற்கும் குழுமங்கள் தயாரிக்கும் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி வளருமாறுதான் உருவாக்கப்படுகின்றன. எனவே, இயல்பாகவே இந்தக் களைக்கொல்லிகளின் விற்பனை மிகுதியாகியுள்ளது.

ஆகவே எப்போதையும் விட இன்று நச்சுவேதிப்பொருள்களைச் சார்ந்திருப்பது மிகுதியாகியிருக்கிறது. மபொ பயிர்கள், களைக்கொல்லிகளின் செயலை எதிர்ப்பதால், முன் போலன்றி, விவசாயிகள் இப்போது தங்கள் பயிர்களைப் பாதுகாக்க, மேலும் அதிக நச்சுப் பொருள்களைத் தெளிக்கக்கூடும். இதன்விளைவாக, நாம் உண்ணும் பயிர்களில் முன் எப்போதையும்விட அதிக நச்சுப்பொருள்கள். சில மபொ பயிர்கள், தங்கள் ஒவ்வொரு செல்லிலுமே பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்குமாறு உருவாக்கப்படுகின்றன. (அமெரிக்காவில் இப்பயிர்களே பூச்சிக்கொல்லிகளாகத்தான் வகைப்படுத்தப்பட்டுள்ளன.) ஆனால் எதிருயிரித் தடுப்புக் கிருமிகளைப் போலவே, இவற்றில் பிழைத்திருப்பவை எதிர்ப்பை ஏற்று, ‘மீயுயிரி’களாக மாறிவிடும். இது விவசாயிகளுக்குப் புதிய சுற்றுப் பிரச்சினைகளை உருவாக்கும், மேலும் அதிகப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்த நேரிடும்.

இம்மாதிரி தங்கள் செல்களுக்குள்ளாகவே உள்கட்டமைக்கப்பட்ட நஞ்சுகளைக் கொண்ட பயிர்கள், நாம் உண்பதற்குப் பாதுகாப்பானவை என்று உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் சாதிக்கின்றன.

ஆனால் இவை புதிய பயிர்களாக இருப்பதாலும், மனிதர்களிடம் இவற்றைச் சோதிக்கப் பல ஆண்டுகள் ஆகும் என்பதாலும், இவை சோதிக்கப்படுவதே இல்லை. இவற்றின் பக்க விளைவுகள் தெரியவரப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். இதுவரை மனிதர்கள்மீது எவ்வித ஆய்வும் நடத்தப்பட்டதில்லை என்பதால் அவை பற்றி யாருக்கும் தெரியாது.

சில பயிர்கள், பூச்சிகளைக் கொல்லுமாறும், களைக்கொல்லிகளை எதிர்க்குமாறும் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட உணவுகள், நம்மை அதிக அளவு நச்சு வேதிப் பொருள்களை நாம் விழுங்க வைக்கும் என்பது உறுதி.

marapanu-stil-11
பிடி (Bt) பயிர்கள்: பூச்சிக்கொல்லி உள்அமைப்பு ஒவ்வொரு செல்லிலும் தங்கள் பூச்சிக்கொல்லிகளைத் தாங்களே படைத்துக்கொள்ளுமாறு உருவமைக்கப்பட்டவை.

இன்று பல தாவரங்கள், தாங்களே தங்களுக்குள் நஞ்சு உருவாக்கிப் பூச்சிகளைத் தடுக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மிகப் பிரபலமான ஒன்று, Bt எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் பசிலஸ் தூரிஞ்சியென்சிஸ். இது இயல்பாக மண்ணில் காணப்படுவது. இது உருவாக்கும் நஞ்சு இப்போது எல்லா உணவுகளிலும் உள்ளது. இயற்கைப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் விவசாயிகள் மிக ஆர்வத்தோடு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நஞ்சைத் தெளித்து வருகிறார்கள். சில பூச்சிகளின் உணவுப்பாதையில் சேரும்போது மட்டுமே நஞ்சாகுமாறு இவ்வேதி அமைந்துள்ளது. இந்த நச்சுக்குக் காரணமான பிடி மரபணுவைப் பலவேறு பயிர்களில் (உருளைக்கிழங்கு, சோளம், தக்காளி, ஆப்பிள், புகையிலையிலும்கூட) செருகினார்கள். இந்தத் தாவரங்கள் உருவாக்கிய Bt நஞ்சு, பரந்த எண்ணிக்கையிலான பூச்சிகளை-வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள், மகரந்தச் சேர்க்கைசெய்யும் பிற பூச்சிகள் போன்ற நன்மை செய்பவற்றையும்கூடக் கொல்லும் அல்லது அவற்றிற்குத் தீங்கு செய்யும் சாத்தியத்தைக் கொண்டிருந்தது.

Bt தொழில்நுட்பத்தால் நஞ்சு உட்புகுத்தப்பட்ட பயிர்களில் தாவரங்கள் தாமே இந்த நஞ்சைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதால், செல்களில் உயர்அளவில் இது தேங்கி விடுகிறது. இந்த நஞ்சு பூச்சிகளின் உணவுப்பாதைகளைத் தகர்த்து ஒழிக்கிறது. விலங்குகளிலும், மனிதர்களிலும்கூட, உயர்அளவிலான இந்த நஞ்சு ஏதேனும் உயிரியல் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. Bt உணவை மிக அதிக அளவில் உண்ணும் நுகர்வோருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம், அல்சருக்கான மருந்துகளை அல்லது வயிற்று அமிலத்தன்மையைக் குறைக்க ஆண்டாசிடுகளைப் பயன் படுத்துவோரிடம் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

மபொ பயிர்களை வளர்ப்பதால் வேறுபிற எதிரான விளைவுகள் உண்டா?

உண்டு. மரபணு மாசுபாடு என்பது பெட்ரோல் அல்லது கச்சாஎண்ணெய் பரவியதைத் துடைப்பதைப் போல எளிதில் துடைத்துவிடக் கூடியதல்ல. மபொ உயிரிகளும், பாக்டீரியாக்களும், வைரஸ்களும் வெளிச்சூழலில் விடப்படும்போது, அவற்றைக் கட்டுப்படுத்தவோ மீட்டுக்கொள்ளவோ இயலாது. மரபணுக்களில் நிகழ்த்தப்பட்ட தவறுகளைச் சரிசெய்வது கடினம். ஏனெனில் இவை வேதி மாசுகளைப் போன்றவை அல்ல. இவை வளர்கின்ற, வாழ்கின்ற, மாற்றமடைகின்ற, இனப்பெருக்கம் செய்கின்ற உயிரிகள். இதன் விளைவாக, விலங்குகளிலும், சுற்றுச்சூழலிலும் எதிர்பாராத முடிவுகளை ஏற்படுத்துமாறு சூழலியல் மாசுபடலாம்.

இப்போதே மபொ பயிர்களிலிருந்து மகரந்தம் காற்றாலும் மழையாலும் அடித்துச் செல்லப்படுகிறது, வண்டுகள், மகரந்தத்தைப் பரப்பும் தேனீக்கள் போன்ற காட்டு உயிரிகளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, பண்ணைப் பயிர்களுக்கும், மைல் கணக்கில் தொலைவிலுள்ள அப்பூச்சிகளின் இனங்களுக்கும் பரவுகின்றன.

உள்வளரும் பூச்சிக்கொல்லிகளைக் கொண்ட மபொ பயிர்கள் தீங்குசெய்யும் பூச்சிகளை மட்டுமல்ல, வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள் போன்ற மகரந்தச் சேர்க்கை செய்வனவற்றையும், தீங்கான பூச்சிகளை உண்டு உதவுவனவற்றையும் கொல்லும் இயல்பு படைத்தவை.

இப்படியிருப்பினும்இந்தப் புதிய பயிர்கள் வளர்க்கப்படுவதும் உணவாக விற்கப்படுவதும் ஏன்?

மிகப் பெரிய அளவிலான பணம் இவற்றில் கொட்டப்பட்டிருக்கிறது. (2000இல் உலக அளவிலான உயிர்ப்பொருள் சந்தையின் மதிப்பு 2000 பில்லியன் அமெரிக்க டாலர், இது இன்னும் பலமடங்கு அதிகரித்துள்ளது.)

உயிர்த்தொழில் நுட்பம், உணவு, சேர்க்கைப்பொருள்கள், மருந்துப்பொருள்கள், வேதிப் பொருள்கள், விதைகள் ஆகிய தொழில்களில் கட்டுப்படுத்தும் ஆற்றலோடு இறங்கியிருப்பவை ஒருசில இராட்சசத் தொழிலகங்களே. இந்த பன்னாட்டுத் தொழிலகங்கள், தாங்கள் பெரும்பணம் செலவிட்டு வளர்த்த மபொ விளைபொருள்களின் உரிமைகளையும் முழு அதிகாரத்தையும் கையில் வைத்துள்ளன. ஆகவே போட்டியாளர்களை மீறிச் சந்தைகளை அடைய அவை வேகமாகச் செயல்படுகின்றன. அரசாங்கத்தின் பாதுகாப்பு நிபந்தனைகளைத் தளர்த்தவும் விரைகின்றன.

marapanu-stil-12
இதனால்தான் உணவுப் பயிர்கள், பிராணிகள் போன்றவற்றை மரபணுப் பொறியியல் மாற்றம் செய்வது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பண்ணைகளில் நடைபெறும் இயற்கையான வளர்ப்புமுறையின் ஒரு வகையே என்று உயிர்த் தொழில்நுட்பத் தொழிலகங்கள் கூறிவருகின்றன. அவற்றின் வாதங்களைச் சுருக்கிச் சொன்னால்-

* மபொ உணவுகள், நாம் உண்ணும் இயற்கை உணவுகளோடு ஒத்தவை ஆதலின் (சாராம்சச் சமன்மை என்பது இங்கு பயன்படுத்தப்படும் சொல்) அவைகளிலிருந்து வேறுபட்டவை அல்ல.

* மபொ உணவுகள், இயற்கை உணவுகளைப் போன்றவையே ஆதலின், அவற்றை மிகுந்த பணச்செலவு பிடிக்கக்கூடிய, மனிதர்கள், விலங்குகள் மீதான முழுமையான நீண்டகாலச் சோதனைக்கு உட்படுத்துவது தேவையில்லை;

* ஆகவே இம்மாதிரி மபொ உணவுகளைத் தனியாக அடையாளமிடுவதுகூடத் தேவையில்லை, ஏனெனில் அவை இயற்கை உணவுகளைப் போன்றவையே என்று அத்தொழிலகங்களின் வாதம் செல்கிறது.

அரசாங்கங்களும், பன்னாட்டு ஒழுங்குபடுத்தும் அமைப்புகளும் (எஃப்ஏஓ, டபிள்யூஎச் ஓ போன்றவை) இந்த வாதங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆகவேதான் இப்போது எங்கு பார்த்தாலும் மபொ பயிர்களை வளர்ப்பதும் விற்பனை செய்வதும் நடக்கிறது, அடையாளமிடப்படாத செயற்கை உணவுகள் எங்கும் கிடைக்கின்றன.

சாராம்சச் சமன்மையினால் ஏற்படும் பிரச்சினை

சாராம்சச் சமன்மை என்ற வாதத்தின் காரணமாகத்தான் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மபொ உணவுகளை நீங்கள் இப்போது சாப்பிடுகிறீர்கள். பாரம்பரியத் தாவர அல்லது பிராணி வளர்ப்பு முறையின் சற்றே மாறிய வடிவமே மபொ என்று தொழிலகங்கள் சொல்வதைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒப்புக்கொள்கிறார்கள். ஊட்டச்சத்துப்பொருள்கள், ஒவ்வாமை பயக்கும் வேதிகள், இயற்கை நஞ்சுகள் போன்ற சில அடிப்படைகளில் மட்டுமே மபொ உணவுகள் சோதிக்கப்படுகின்றன. அவற்றில் புதிதாக நஞ்சாகவோ, தீங்குபயப்பதாகவோ இருக்கக்கூடிய தெரியாத பொருள்களைச் சோதனைகள் கருத்தில் கொள்வதில்லை.

டிரிப்டோஃபனால் கொடிய விளைவுகள் ஏற்பட்டபோதிலும் அந்தக் குழுமம், சாராம்சச் சமன்மை என்ற கோட்பாட்டு அடிப்படையில், தனது மபொ விளைபொருள், “தூய்மையானது”, இயற்கைப்பொருளைப் “போன்றே உள்ளது” என்று காட்டமுடிந்தது. விலங்கு அல்லது மனிதன் மீது இந்தப் பொருள் சோதிக்கப்பட்டிருந்தால், இந்த விளைபொருள் இயற்கையான டிரிப்டோஃபனைப் போன்றது அல்ல என்று உடனே தெரிந்திருக்கும்.

மமா உணவு பாதுகாப்பானது. பாரம்பரிய உணவு சோதிக்கப்படுவதை விட அது இன்னும் முழுமையாகவே சோதிக்கப்படுன்றது. ஆகவே மேலும் பாதுகாப்பானதாகவே இருக்கும்” என்று உயிர்த்தொழில்நுட்பத் தொழில் சொல்கிறது. இதை நாம் நம்ப முடியுமா?

இந்தத் தொழில்நுட்பம் இன்னும் புதியது தான். 30 வயது கூட ஆகவில்லை. மரபணுக்களின் நடத்தையைப் பற்றிப் போதிய அளவு நமக்குத் தெரியாது. ஆகவே இவ்வகை உணவு பாதுகாப்பானது என்ற கூற்றை ஒப்புக்கொள்ள முடியாது. மான்சான்டோ போன்ற முன்னணி நிறுவனம்கூட, “மபொ உணவுகளை நீண்டகாலம் உண்பதன் விளைவுகளைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது, எங்கள் விளைபொருள்களைப் பாதுகாப்புக்கென மனிதர்கள்மீது ஒருபோதும் சோதித்துப் பார்த்ததில்லை” என்று ஒப்புக்கொள்கிறது.

தொழில்நிறுவனங்கள் அபாயங்கள் இல்லை என்று கூறினாலும், இவ்வளவு சிக்கலான ஆபத்துகளும், ஏதேனும் தவறாகப் போனால் யார் பொறுப்பு என்னும் கேள்வியும் எழுவதால் காப்பீட்டுக்கழகங்கள் தொழிலைக் காப்பீடு செய்வதற்கான செலவைக் கணிக்க முடியாமல் திணறுகின்றன.

எந்த மபொ உணவிலும் மரபணுக்களைத் தாறுமாறாக மாற்றுவதே முன்கணிக்க இயலாத விளைவுகளைக் கொண்டதுதான். எந்த அபயாகரமான பொருளையும் கண்டு பிடிக்க முழுமையாக நம்பத்தகுந்த முறை எதுவும் இப்போது கிடையாது.

marapanu-stil-13
மருந்துகளின் பாதுகாப்பைச் சோதிக்கும் இப்போதுள்ள முறைகள் மிகவும் செலவு பிடிப்பவை, காலம் எடுத்துக்கொள்பவை. அப்படியும் அவையும்கூட, சந்தையில் புதிதாகப் புழக்கத்துக்கு வரும் மருந்துகளில் 13% அளவு ஏற்படுத்தும் தீங்கான விளைவுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இம்மாதிரிச் செலவுமிகுந்த நீண்டகால சோதனைகளைத் தவிர்க்க, உயிர்த்தொழில் நுட்பப் பெருந்தொழில், மிகப் பெரிய முயற்சியை மேற்கொண்டு ஒழுங்குபடுத்தும் அமைப்புகளைப் பாரம்பரிய வளர்ப்புமுறையின் ஒரு மாறுபாடுதான் மரபணுப் பொறியியல் என்று நம்பவைத்துள்ளது.

வேடிக்கை என்ன என்றால், ஒழுங்குபடுத்தும் அமைப்புகளே விளைபொருள்களைச் சோதிக்கவும் மதிப்பிடவும் மேற்கண்ட உயிர்த்தொழில்நுட்பத் தொழிலகங்களைத்தான் சார்ந்துள்ளன.

நீதிபதியே தீர்ப்புச் சொல்லக் குற்றவாளியை நம்பியிருக்கும் நிலைதான்!

அரசாங்கத்தின் அமைப்புகளிலுள்ள விஞ்ஞானிகளுக்கு இவை எல்லாம் நன்றாகத் தெரியும். ஆனால் அரசாங்கத்துக்கு பயந்தோ, பெரிய குழுமங்களிலிருந்து கிடைக்கும் பெருந்தொகைகளுக்கு ஆசைப்பட்டோ அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அணுவின் ஆபத்து தெரிந்தும் கூடங்குளங்களை வரவேற்கும் விஞ்ஞானிகள் போலத்தான். அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் பொறுக்கினால் போதும். அவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் மபொ நஞ்சுகள் எல்லார் உடலிலும் கலந்தால் யாரும் விளைவுகளைத் தவிர்க்க இயலாது. பணமுள்ளவர்கள் லஞ்சம் கொடுத்தும் தப்பித்துக்கொள்ள முடியாது. ஒருவேளை வளரும் நாடுகளின் அரசாங்கங்கள், இம்மாதிரி உணவை உண்டு மக்கள் தாங்களாகவே தங்கள் தொகையைக் குறைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்களோ என்றும் நினைக்கவேண்டியுள்ளது.

(அடுத்த வாரம் இக்கட்டுரையின் இறுதிப்பகுதி)

மரபணுத் தொழில்நுட்பம்-சில சிந்தனைகள் – கட்டுரையின் இறுதிப்பகுதி

marapanu-stil-14
மரபணுத் தொழில் நுட்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நிறுவனங்களே தங்கள் சோதனைகளுக்கு அத்தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஆய்வகங்களைச் சார்ந்துள்ளன என்று முன்பே குறிப்பிட்டோம். அந்த நிறுவனங்கள் மிக மேலோட்டமாகத்தான் சோதனைகளை நிகழ்த்துகின்றன. மனித உயிரின் மாண்பு என்பது அந்நிறுவனங்கள் அறியாதது. அவை அறிந்ததெல்லாம் காசு பார்ப்பது ஒன்றே.

நிறுவனங்களின் மேலோட்டமான சோதிப்பு முறைகளுக்கு உதாரணங்கள்:

மபொ உருளைக்கிழங்கு: Bt நஞ்சினைத் தன் மபொ உருளைக்கிழங்கில் மான் சாண்டோ சோதித்தது ஒரு மேலோட்டத்தன்மைக்கு ஒரு நல்ல உதாரணம். இந்த உருளைக்கிழங்கு பலபேருக்கு ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்தியது. பூச்சிக்கொல்லி எதிர்ப்பு உருளைக் கிழங்கிலிருந்து போதிய அளவு நச்சுப் பொருளைப் பிரித்தெடுக்க முடியவில்லை என்று குழுமம் என்று சாக்குக் கூறியது. ஆகவே Bt மரபணுவை E.கோலை கிருமிகளில் புகுத்தினார்கள். இந்தக் கிருமிகளிலிருந்து வெளிப்பட்ட நஞ்சினைத் தனிமைப்படுத்திச் சோதனைகளில் பயன்படுத்தினார்கள். இந்த நஞ்சு, குறிப்பாக ஒவ்வாமைகளுக்குக் காரணமாக அமையும் தன்மையில் மபொ உருளைக்கிழங்கில் வெளியாகும் அதே நஞ்சாக இருக்க வாய்ப்பில்லை.

பூச்சித்தடுப்புச் சோளம்: (Bt சோளம் என்று சொல்லப்படுவது) மனிதர் உணவுக்கானது. நோவார்ட்டிஸ் நடத்திய உணவுச்சோதனைகள் இந்தச் சோளத்தைப் பயன்படுத்திச் செய்யப்படவில்லை. இதற்கும் ஒரு மாற்று ஏற்பாடுதான். (Bt நஞ்சு, E.கோலையிலிருந்தே பெறப்பட்டது.) இந்தச் சோளத்தைச் சரியாகவும் சோதிக்கவில்லை. மனிதருக்கு பதிலாக எலிகள் பயன்படுத்தப்பட்டன. மக்களுக்கு இந்த மபொ சோளம் விஷமூட்டும் அளவுக்குப் பாதுகாப்பற்றதாக இருக்கும் என்ற சாத்தியத்தை இந்தக் குழுமம் அறவே புறக்கணித்துவிட்டது.

நட்பான, இலக்கு நிர்ணயிக்காத பூச்சிகளின்மீது Bt சோளத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வுகள் மோசமானமுறையில் அமைக்கப்பட்டிருப்பது, தனியார் உளவுநிறுவனம் ஒன்றினால் கண்டறியப்பட்டது. யதார்த்தமான முறையில் இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. பூச்சிகள் அந்த நஞ்சுகளை உண்டனவா என்பதே ஐயத்திற்கிடமானது. இந்நிலையில் எந்த எதிரான விளைவுகளும் அறியப்பட வாய்ப்பில்லை. குழுமத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உணவுச் சங்கிலி எதிர்வினைகளையும் புறக்கணித்துவிட்டார்கள், வேதி நஞ்சுகளைச் சோதிக்கப் போதுமான முறைகளை அவர்கள் கையாளவில்லை.

marapanu-stil-21
மான்சாண்டோவின் rBGH: பசுக்கள் மிகுதியாகப் பால் கொடுக்கவேண்டி அவற்றின் உடலில் இந்த மறுசேர்க்கைக் கால்நடை ஹார்மோன் ஊசியாகப் போடப்பட்டது. இதற்கான சோதனை, முப்பது எலிகளின்மீது 90 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது. (வழக்கமாக, மனிதர்கள் பயன்பாட்டுக்கான புதிய மருந்தினைக் குறைந்தபட்சம் பல நூற்றுக்கணக்கான எலிகள்மீது இரண்டு ஆண்டுகளேனும் நடத்துவதுதான் முறை.)

ஆனால் அந்தக் குறைந்த நாட்களிலேயே மருந்து எலிகளுக்குத் தீங்குசெய்வது குழுமத்திற்குத் தெரிந்துவிட்டது. எலிகளில் எதிர்ச்செயல்செல்கள், தைராயிடு கழலைகள், புரோஸ்டேட் சுரப்பி பாதிப்பு ஆகியவை கண்டறியப்பட்டன. பசுக்களிலும் 20க்கு மேற்பட்ட கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புத் தெரிந்தது. தொற்றுகள் அவற்றிடையே மிகுதியாகப் பரவுதல், குறிப்பாகப் பால்மடிகளில் தொற்று, சினைப்பைகளில் குழிப்புண்கள், கருப்பையிலும் செரிப்பு மண்டலத்திலும் ஒழுங்கீனங்கள், உறுப்புகளில் காயம், கால்களில் கோளாறுகள், கன்றுகள் பிறப்புக் குறைபாடு ஆகியவை ஏற்பட்டன. தொற்றுக்கு ஆட்பட்ட பசுக்களின் பாலில் அதிக சீழ், மிகவலுவான கிருமிகள், இரத்தம் ஆகியவை காணப்பட்டன. மற்ற முடிவுகள்: பாலின் சுவை மாற்றம், வீட்டில் வைத்திருக்கும் கால அளவில் குறைபாடு, அதிகக் கொழுப்பு, குறைந்த புரோட்டீன் அளவு போன்றவை. இவ்வளவு குறைகள் இருந்தும், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை(FDA), rBGHக்கு அனுமதி வழங்கியது. இதனால் தொற்றுகளைத் தடுக்க அதிக அளவில் எதிருயிரி மருந்துகள் தேவையாயின. பாலில் அனுமதிக்கப்படும் எதிருயிரிகளின் அளவை 100 மடங்கு (10000%) FDA உயர்த்தியது.

அமெரிக்க FDAவுக்கு மான்சாண்டோ அளித்த ஆய்வு, சுதந்திரமான அறிவியல் மதிப்பீட்டுக்கு அளிக்கப்படவே இல்லை. மான்சாண்டோவின் மதிப்பு சரிப்படுத்த இயலாத அளவுக்குக் கெட்டுப்போகும் என்ற கருத்தினால் இதுவரை FDA ஆய்வின் அடிப்படைத் தகவல்களை மதிப்பிட அனுமதி வழங்கவே இல்லை.

marapanu-stil-31

ரவுண்ட்அப் ரெடி சோயா அவரை (RRS): மீன்களுக்குப் பத்துவார அளவு வரை உணவாக அளிக்கப்பட்ட பின்பு, மான்சாண்டோவின் RRS மனிதர்களுக்குத் தகுதியானது என்று சான்று அளிக்கப்பட்டுவிட்டது. சிறிய எண்ணிக்கையிலான கோழிக்குஞ்சுகள், எலிகள், பசுக்களுக்கு சிற்றளவுச் சோதனைகள் நடத்தப்பட்டன. சோதிக்கப்பட்ட RRSக்கு ரவுண்ட்அப் களைக்கொல்லி தெளிக்கப்படவே இல்லை. எனவே அதில் பாதிக்கக்கூடிய வேதிப்பொருளான கிளைபோசேட்டின் அளவு மிகக்குறைவாகவே இருந்திருக்கும். முறையான நஞ்சுச் சோதனைகளாக இவை ஏற்கப்படாது என்று மான்சாண்டோவிற்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் இதற்கு உடல் நலத்திற்கு ஏதுவான சோதனை என்று குழுமம் பெயர் இட்டது. மேலும் பல விடுபாடுகளும் யூகங்களும் இருந்தன. புதிய புரோட்டீன்கள் பாலில் இருப்பது புறக்கணிக்கப்பட்டது. விவாதிக்கவே படவில்லை. ஒவ்வாமையை உண்டாக்கும் தெரிந்த புரோட்டீன்கள் மட்டுமே சோதிக்கப்பட்டன. சாதாரணப் பசுக்கள், கோழிக்குஞ்சுகளோடு ஒப்பிட்டால், சோதிக்கப்பட்ட சிறிய அளவிலான பசுக்களின் பாலில் அதிகக் கொழுப்பும், கோழிக்குஞ்சுகளுக்கு அதிக மாமிசமும் காணப்பட்டன. ஏன் என்று சோதிக்க மேலும் சோதனை எதுவும் நடத்தப்படவே இல்லை. RRSஇன் சுவை நன்றாக இருந்ததால், அது மிக அதிகமாக உண்ணப்பட் டதுதான் காரணம் என்று மான்சாண்டோ கூறிவிட்டது. அதிக எண்ணிக் கையிலான பிராணிகளை வைத்துச் சோதித்திருந்தால் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்திருக்கக்கூடும்.

ஒழுங்குபடுத்தும் அதிகாரஅமைப்புகள் இத்தகைய ஆய்வுகளை முதலில் எவ்விதம் ஒப்புக்கொண்டன என்பதே விந்தையானது. இப்படிப்பட்ட புதிய உற்பத்திப் பொருள்களை நீண்டகாலம் மனிதர்களுக்குக் குறைந்த அளவில் உணவாக அளித்துச் சோதிப்பது ஒன்றே உணவுப்பாதுகாப்பினைத் தகுந்த அளவு உறுதிப்படுத்த ஒரே வழி.

(குறிப்பு: 1998 மே மாதத்தில் அமெரிக்காவில் அறிவியலாளர்கள், மதத் தலைவர்கள், உடல்நல அதிகாரிகள், நுகர்வோர், உணவுசமைப்போர் ஆகியோர் அடங்கிய கூட்டமைப்பு ஒன்று FDAவின்மீது வழக்குத் தொடர்ந்தது என்பதில் வியப்பில்லை. கடுமையான சோதனைகள் இன்றியும், அடையாளப்படுத்தப் படாமலும் மபொ உணவுகளைச் சந்தையில் விடுவதன் வாயிலாக FDA உலகம் முழுவதுமுள்ள பொதுமக்கள் நலத்தைப் புறக்கணிக்கிறது, மத சுதந்திரத்தைக் குலைக்கிறது என்பது அதன் சாரம்.

போதுமான பாதுகாப்பு மதிப்பீடுகள் இல்லாததைப் பற்றிக் குழுமத்தின் சொந்த அறிவியலாளர்கள், நலத்திறனாளர்கள் ஆகியோரின் பரவலான எதிர்ப்பையும் எஃப்டிஏ புறக்கணித்துவிட்டது என்பதை எடுத்துக்காட்டுமுகமான ஆவணங்க ளையும் நினைவுக்குறிப்புகளையும் இந்த வழக்கு வெளிப்படுத்தியது.)

மருந்துகளிலும், பாரம்பரிய நோய்களைக் குணப்படுத்துவதிலும் நமக்கு மரபணுப் பொறியியல் உதவ முடியுமா?

மரபணுநகலெடுத்தல் (குளோனிங்) உள்ளிட்ட மருத்துவ ஆய்வுகள் மரபணுப் பொறியியலைப் பயன்படுத்துகின்றன. இவற்றில் வேறு முரணான பிரச்சினைகள் எழுகின்றன. இங்கு மபொ உணவுகள் பற்றி மட்டுமே பார்ப்பதால் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி இங்கு எழுதஇயலாது. ஆயினும், அதே தவறான தொழில்உத்திகள், கருதுகோள்கள் அடிப்படையில்தான் ஆய்வு அமைந்திருப்பதால், விவசாயத்தில் எழும் அதே பிரச்சினைகளே மருத்துவத்திலும் எழுகின்றன.

நாம் மபொ உணவுகளை உண்கிறோமா? இந்தியாவில் மபொ உணவுகள் விற்கப் படுகின்றனவா?

——————–

மரபணுரீதியில் கெடுக்கப்பட்டு, இந்தியாவில் விற்கப்படும் உணவுகள்

சீஸ் ஸ்ப்ரெட்-”கிரீம் சீஸ்”

கிரீம்டு ஹனி-”குழந்தைகளுக்கு ஏற்றது”

marapanu-stil-41

டெய்ரி மில்க்-சாக்கலேட்

பேபி பிஸ்கட்-”தனியாகக் குழந்தைகளுக்கெனச் செய்யப்பட்டது”

கார்ன் ஆயில்

வைட்டமின் ஈ சப்ளிமெண்ட்

குழந்தைகளுக்கான செயற்கைப் பால்

இன்னும் பல.

——————————

மபொ சோயா அவரை (களைக்கொல்லி எதிர்ப்பு) விற்கப்படுகிறது. மற்றசில தாவர வகைகளும்-சோளம், தக்காளி, உருளைக்கிழங்கு முதலியவை விற்கப்படுகின்றன. இவை இயல்பாக விளைந்து வந்த உணவுகள் அல்ல, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, பெருங்கடைகளில் கிடைக்கின்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

வேகஉணவுத் தொடர்கள், உணவுக்கடைகள் போன்றவை பொதுவாக மற்றொரு ஆதாரம். மெக்டொனால்டு கடைகளின் பர்கர் பன்களிலும், கேஎஃப்சியின் பன்களிலும் ரவுண்ட்அப் ரெடி சோயா பீன்ஸ் இருப்பதை கிரீன்பீஸ் நிறுவனம் கண்டறிந்தது. (இந்த நிறுவனத்தின் சிக்கன்65 விளம்பரங்களைப் பெருநகரங் களில்-ரூ.25க்கு இது கிடைக்கிறதாம்-எங்கும் காணலாம்.)

அடையாளமிடப்படாததால், குறித்த ஒரு பொருள் மபொவா இல்லையா என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. சோயா அவரையைப் பொறுத்தமட்டில், இயற்கையான சோயாபீன்ஸ் உடன் செயற்கை உணவைத் தயாரிப்பாளர்கள் கலந்துவிடுவதால் உங்களால் தனியாக அதைத் தேர்ந்தெடுக்க முடியாது.

மபொ உணவுகளின் வகைகள்

பொதுவாக மபொ உணவுகளில் மூன்று வகைகள் உள்ளன:

ஃ புதிதாக வரும் உணவு அல்லது இயற்கைவிளைச்சல்களிலிருந்து மாறுபடும் உணவு. உதாரணமாக, வைட்டமின் ஏ மிகுதிப்படுத்திய அரிசி அல்லது உறைவுஎதிர்ப்பு ஸ்ட்ராபெரிப் பழங்கள்.

ஃ ஓரளவு பதப்படுத்தலுக்கு ஆளாகிய, சோயா பால் போன்ற மபொ உணவுகள் அல்லது உணவுப்பகுதிகள். அவற்றில் மாற்றப்பட்ட புரோட்டீன் அல்லது டிஎன்ஏ உள்ளது.

ஃ கடைசியாக, மபொ தாவரங்களிலிருந்து பெறப்பட்ட, மிகுதியான பதப்படுத்தலுக்கு ஆளான உணவுகள். உதாரணம், மபொ கரும்பிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை. இவற்றில் மாற்றப்பட்ட புரோட்டீன் அல்லது டிஎன்ஏவின் அளவு இருக்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். அதைக் கண்டுபிடிப்பது கடினம்.

மபொ உணவைத் தவிர்ப்பது எப்படி?

மபொ உணவுகளைத் தவிர்ப்பது மிகக்கடினமாகி வருகிறது. எதிலும் அடையா ளமிடுவதே கிடையாது என்பதால், நீங்கள் மபொ உணவு எது என்றே கண்டறிய வழியில்லை. ஆகவே வாங்குவதா தவிர்ப்பதா என்பதையும் முடிவெடுக்க முடியாது. மிகச்சாதாரணமாகக் கடைகளில் கிடைக்கின்ற மபொ சோயாவை எடுத்துக்கொள்ளுங்கள். வடஇந்தியர்கள் அதிக அளவு சோயா பீன்ஸை உண்கி றார்கள். தமிழ்நாட்டிலும் இப்போது சோயாவை உண்பது அதிகரித்து வருகிறது. பலவேறு சோயா பீன்ஸ் உணவுவகைகளையும் தயாரிப்பு முறைகளையும் தயாரிக்கும் குழுமங்களே அறிமுகப்படுத்துகின்றன. மேற்கிலும்கூட சோயா எண்ணெய், சோயா மாவு, சோயா லெசிதின் போன்ற தயாரிப்புகள் உட்பட அவை எல்லாப் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் 60%க்குக் குறையாமல் உள்ளன. பெரிய முதலீட்டாளர்களின் கடைகளில் விற்கப்படும் ஐஸ்கிரீம், தானியங்கள், பிஸ்கட்டுகள், குழந்தை உணவு, மரக்கறி பர்கர்கள் முதலியவற்றிலிருந்து சமையல் எண்ணெய் வரை மபொ உணவுகள் தான்.

marapanu-stil-51
சோளம், கனோலா போன்றவை சமையல் எண்ணெயிலும் மார்கரீனிலும் பயன்படுத்தப்படும் பொதுவான மபொ உணவுகள். தக்காளி, உருளைக்கிழங்கு, ஸ்க்வாஷ் போன்றவை பிற பொருள்கள்.

உணவுச்சேர்க்கைகளுக்கும் (அமிலேஸ், கேடலேஸ், லாக்டேஸ் போன்ற) என்சைம்களுக்கும் உணவுத்தயாரிப்புத் தொழிலகங்களும் பரவலான பொருள்களைத் தயாரிக்க மபொ உணவுகளையே நம்பியிருக்கின்றன. இவற்றில் ரொட்டி, குழந்தை உணவுகள், சர்க்கரை, கார்ன்சிரப், பழச்சாறுகள், ரொட்டிசோடா, மென்பானங்கள் போன்றவை அடங்கும். இப்போது பாலடைகளைத் தயாரிக்க உதவும் ரென்னெட்டுக்கு மபொ பாக்டீரியா பயன்படுத்தப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு அதிகமாகக் கடைகளில் பாலடை (சீஸ்) கிடைக்காது. இப்போது எங்குபார்த்தாலும் பாலடை கிடைக்கிறது. மபொதான்! நம் உயர்குடி யினர் மொழியிலும், தொலைக்காட்சி மொழியிலும் இது ‘ப(ன்)னீர்’! இப்போது கடைகளில் பன்னீர் என்றால் வாசனைத் தெளிப்பு நீர் கிடைக்காது. பாலடையைத்தான் கொடுப்பார்கள். அந்த அளவு பழக்கத்துக்கு வந்துவிட்டது.

‘பனீர்’ தயாரிப்பில் பக்கவிளைவுகளாகக் கிடைப்பன, சாக்கலேட், மார்கரீன் போன்றவற்றைத் தயாரிக்கப் பயனாகின்றன. ரொட்டி, பரப்பிகள், உணவுச் சேர்க்கைகள், பீட்சா, பீர், ஒயின் போன்றவற்றைத் தயாரிக்க மபொ யீஸ்டு பயன்படுகிறது. நீரிழிவுக்காரர்களுக்கான செயற்கைச் சர்க்கரைகளும் மபொ தயாரிப்புகளே.

அடையாளமிடுதல் இல்லை ஆகையால், நீங்கள் நேரடியாக விளைந்துவரும் உணவுகளை உண்டாலொழிய, மபொ உணவுகளைத் தவிர்க்க இயலாது. சலவைப் பொருள்கள், அழகுசாதனங்கள், சோப்பு, ஷாம்பு, பபிள்பாத் போன்ற தனிமனித பராமரிப்புப் பொருள்கள் ஆகியவற்றிலும் மபொ கலப்புகளை உயிர்த் தொழில் நுட்பத் தொழிலகங்கள் கலந்துவிட்டன. கால்நடைகள், மீன் போன்றவை உண்ணும் பொருள்களிலும் மபொ தயாரிப்புகள் மிகுதியாகக் கலந்து விட்டன. இவை கடைசியாக நமது உணவுத்தட்டுகளுக்குத்தான் வந்து சேர்கின்றன.

நான்-ஜிஎம்ஓ, ஜிஎம்ஓ-ஃப்ரீ என்ற வகைகளுக்கான வித்தியாசத்தை நாம் உணர வேண்டும். (ஜிஎம்ஓ என்றால் ஜெனடிகலி மாடிஃபைடு ஆர்கானிம்-மரபணு மாற்றப் பட்ட உயிரி என்பது பொருள்). நான்ஜிஎம்ஓ என்றால் குறிப்பிட்ட அளவைவிட (1% என்று கொள்ளுங்கள்) அப்பொருளில் கலப்பு குறைவு என்று பொருள். ஜிஎம்ஓஃப்ரீ என்றால் கலப்பு இல்லவே இல்லை என்று பொருள்.

(குறிப்பு: அமெரிக்காவில் 2000இல் ஏறத்தாழ 5 கோடி ஏக்கரில் மபொ பயிர்கள் இடப்பட்டன. இப்போது அயல்மகரந்தச் சேர்க்கையாலும், அளிப்புத்தொடரிலுள்ள கலப்பினாலும், அந்த நாட்டில் மபொ உயிரிக் கலப்பற்ற உணவு என்பதைப் பிரித்துக்கூறவே முடியாது என்கிறார்கள்.)

உணவுப் பகுதிப்பொருள்களிலும் உணவுப்பொருள்களிலும மபொ கலப்புகள்

இயற்கையாக விளைந்தது என்று வெளிப்படையாகக் கூறாமல், கீழே கூறப்பட்ட பகுதிப்பொருள்கள் பொருளின் அடையாளஅட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தால், அதில் ஒருவேளை மபொ கலப்பு இருக்கலாம். வெறுமனே “மாற்றப்பட்ட” ஸ்டார்ச் என்று குறிப்பிட்டிருந்தால், அது மபொ என்று பொருளல்ல. அதற்கு அப்பொருள் வேதிமுறை அல்லது வெப்பம் வாயிலாக மாற்றப்பட்டது என்பதே அர்த்தம். (ஆனால் அந்த ஸ்டார்ச் ஒருவேளை மபொ சோளத்திலிருந்து பெறப்பட்டிருக்கலாம்.)

பின்வரும் பொருள்களில் மபொ சேர்க்கை இருக்கலாம்

முதல் வகை

marapanu-stil-61
சோயாஅவரை: சோயா மாவு, சோயா எண்ணெய், சோயா பானங்கள், தாவர அல்லது சோயா சாறு, சோயா புரோட்டீன், சோயா தனிப்பிரித்த புரோட்டீன், ஹைட்ரலைஸ்டு தாவர புரோட்டீன். மபொ சோயா சார்புகளைப் பெற்ற பொருள்கள்: வைட்டமின் ஈ, தானியங்கள், மரக்கறி பர்கர்கள், சாஸேஜ்கள், சோயா சாஸ், சிப்ஸ், ஐஸ்கிரீம், உறைதயிர், குழந்தை உணவு, சாஸ்கள், புரோட்டீன் பவுடர், மார்கரீன், சோயா சீஸ், நொறுக்குத்தீனிகள், ரொட்டிகள், குக்கிகள், சாக்கலேட், இனிப் புகள், பொரித்த உணவுகள், மேம்டுத்தப்பட்ட மாவுகளும் பேஸ்டாக்களும்.

மக்காச்சோளம் அல்லது சோளம்: சோள மாவு, சோள ஸ்டார்ச், சோள எண்ணெய், சோளச் செயற்கைச் சர்க்கரை, சோள சிரப். மபொ சோளப் பொருள்களைக் கொண்ட உற்பத்திப் பொருள்களான  வைட்டமின் சி, சிப்ஸ், மிட்டாய்கள், ஐஸ்கிரீம், குழந்தை உணவுகள், சாலட் மேலிடுபொருள்கள், தக்காளி சாஸ்கள், ரொட்டிகள், பருப்புகள், ரொட்டி சோடா, ஆல்கஹால், வனிலா, மார்கரீன், சோயா சாஸ், பொரிக் கப்பட்ட உணவுகள், மாவுச்சர்க்கரை, மேம்படுத்தப்பட்ட மாவுகள், பேஸ்டாக்கள்.

கனோலா: எண்ணெய். மபொ கனோலாப் பொருள்களைக் கொண்டவை-சிப்ஸ், சாலட் மேலிடுபொருள்கள், குக்கிகள், மார்கரீன், சோயா பாலடை, பொரித்த உணவுகள்,

* பருத்தி: எண்ணெய். மபொ பருத்தி அல்லது அதன் பொருள்களைக் கொண்டவை:

சிப்ஸ், கடலை எண்ணெய், நொறுக்குகள், குக்கிகள்.

* உருளைக்கிழங்கு: மாவு, உருளைக்கிழங்கு ஸ்டார்ச். மபொ உருளைக்கிழங்கு அல்லது அதன் பொருள்களைக் கொண்டவை-அடையாளமிடாத பதப்படுத்திய உணவுகள் (பொரித்தவை, பிசைந்தவை, சுட்டவை, கலந்தவை போன்றவை), சிப்ஸ், நீரகற்றிய உருளைக்கிழங்கு மென்நறுக்குகள், சூப்புகள்.

* தக்காளிப் பொருள்கள்: மபொ தக்காளியை அல்லது தக்காளிப் பொருள்களை உடையவை. சாஸ்கள், பீட்சா, லாசேன்.

*  பசுக்களிலிருந்து பெற்ற பால் பொருள்கள்: கால்நடை வளர்ச்சிக்கான ஹார் மோன்களைக் கொண்டவை (அமெரிக்காவில் rBGH எனப்படுபவை)-பால், பாலடை, வெண்ணெய், மோர், புளிப்புகிரீம், யோகர்ட் (தயிர்), பிற பதப்படுத்திய பொருள்கள்.

பிராணிகளிலிருந்து பெறும் பொருள்கள்: பல நாடுகளில், பிராணிகளுக்கான உணவுகளில் மபொ பகுதிப்பொருள்கள் சேர்ந்திருப்பதால், பிராணிகளிலிருந்து பெறும் பொருள்கள் அலலது அல்லது உப பொருள்கள் யாவுமே பாதிக்கப்பட்டிருக்கும். அமெரிக்காவில், மபொ வளர்ச்சி ஹார்மோன்கள் (ஏறத்தாழ 6 வகைகள்) கால்நடைகளின் வளர்ச்சிக்கெனப் பயன்படுத்தப்படுகின்றன. மாட்டிறைச்சியில் இதன் எச்சங்கள் காணப்படும்.

இரண்டாம் வகை

மபொ மூலங்களிலிருந்து தயாரித்தவற்றைக் கொண்ட சேர்க்கைகளும் பதப்படுத்தும் உதவிப்பொருள்களும்

சோயா லெசிதின்/லெசிதின்(E322), காரமெல் நிறப்பொருள்(E150), ரிபோஃபிளேவின் (வைட்டமின் பி2), கைமோசின் போன்ற என்சைம்கள் (மரக்கறிப் பாலடை தயாரிக்க உதவும் மபொ என்சைம்), வெள்ளைச் சர்க்கரை செய்ய உதவும் ஆல்ஃபா அமிலேஸ், மால்டோடெக்ஸ்ட்ரின்கள், சத்துமிக்க கார்போஹைட்ரேட் இனிப்பாக்குபொருள்கள் (கார்ன் சிரப்), அடுமனைத் தயாரிப்புகளைப் புத்தம்புதிதாக வைக்கப்பயன்படும் நோவாமைல்(TM), புல்லுலானேஸ் (உயர்அளவு ஃப்ரக்டோஸ் கொண்ட கார்ன் சிரப் தயாரிக்க உதவுவது). விற்பனைப் பொருள்களின் லேபில்களில் என்சைம்களைக் குறிப்பிடத் தேவையில்லை-காரணம், அவை பீர்கள், ஒயின்கள், பழச்சாறுகள், சர்க்கரை, எண்ணெய்கள், பால்பொருள்கள், அடுமனை உணவுகள் போன்றவற்றில் சேர்க்கப்பட்டாலும் உணவுப் பொருள்களாகக் கருதப்படுவதில்லை.

மூன்றாம் வகை

மபொ மூலங்களிலிருந்து பெறப்பட்டாலும், பெருமளவு மபொ சேர்க்கைகளைப் பதப்படுத்துதல் நீக்கிவிடும் தன்மை பெற்றவை

சோயா எண்ணெய், தாவர எண்ணெய், ஹைட்ரஜனேற்றம் செய்த தாவர எண்ணெய்,

தாவரக் கொழுப்பு, மாற்றப்பட்ட சோள ஸ்டார்ச், குளூகோஸ் சிரப், சோளச்சர்க்கரை, சோள சிரப், டெக்ஸ்ட்ரோஸ், ஃப்ரக்டோஸ், மால்டோடெக்ஸ்ட்ரின்.

மபொ உணவுகளை அடையாளப்படுத்த வேண்டுமா?

கட்டாயம். நமது உணவு மபொ வா இல்லையா என்பதை அறியும் உரிமை நமக்கு உண்டு. நாம் விரும்பும் உணவுப்பொருளைத் தேர்ந்தெடுப்பது அடிப்படை உரிமை. அடையாளப்படுத்துதல் அறியும் உரிமையை காக்கிறது. வெறும் சுவைக்காகவோ விருப்பத்திற்காகவோ மட்டுமின்றி, உடல்நலத்துக்காகவும் நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆஸ்துமா, நீரிழிவு, புற்றுநோய், இதய நோய்கள், பிற நெடுங்கால நோய்கள் உள்ளவர்கள் மட்டுமல்ல, எடைகுறைப்பவர்கள், குழந்தையை எதிர்பார்க்கும் தாய்மார்கள், விளையாட்டுவீரர்கள், மரக்கறிஉணவை உண்பவர்கள் போன்றவரும் தங்கள் உணவு களைப் பற்றிப் பெரிதும் கவலைப்படுவார்கள்.

உணவு ஒவ்வாமை உடையவர்களும் அவ்வாறே. வேர்க்கடலை, பிற கொட்டைகள், ஷெல்மீன், பால், பால்பொருள்கள் போன்றவை ஒவ்வாமைக்குக் காரணமாகலாம். தினவு, தடிமன்கள் முதலாக மூச்சிறைப்பு, வேற்றுப்பொருள்களால் ஏற்படும் ஒவ் வாமை அதிர்ச்சிகள் உட்பட இவற்றின் எதிர்வினை உடனடியானது.

மரபணுப் பொறியியல் உணவுகளில் ஆபத்தானவைகளைச் சேர்ப்பதால், உடல்நல முள்ளவர்களும் நீண்டகால அளவில் மபொ உணவுகளை உண்ணும்போது உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மபொ பற்றி-குறிப்பாகத் தாறுமாறாகப் புதிய புரோட்டீன்களை உண்டாக்குவது பற்றி இன்னமும் மிகப்பெரிய அளவிலான அறிவியல் நிச்சயமின்மை காணப்படுகிறது. இவற்றின் எதிர்பாராத விளைவுகளைப் பற்றி ஒருவருக்கும் தெரியாது, டிரிப்டோஃபனில் கண்டது போல, எந்த விஞ்ஞானியும் எதிர்பாராத விளைவு ஏதும் 100% ஏற்படாது என்று உறுதிகூற இயலாது. விளைவுகள் வெளிப்படச் சில பத்தாண்டுகள்கூட ஆகலாம். மேலும் அடையாளப்படுத்தல் இன்றி, சுகாதார அதிகாரிகள், பிரச்சினைகளின் மூலத்தைத் தேடியறிய முடியாது.

கடைசியாக, நுகர்வோர் பாதுகாப்புக்காக அல்லாமல், ஒழுக்கவியல் காரணங்களுக் காகவும் பலர் மபொ உணவுகளைத் தவிர்க்க விரும்பலாம். அவர்கள் இந்தச் சிந்தனைக்கும் அல்லது முழுத் தொழிலுக்குமே ஆட்சேபணை தெரிவிக்கக்கூடும்.

அடையாளப்படுத்தலுக்கும் மேலாக இதில் பிரச்சினைகள் உண்டா?

தகவல் தராமை நுகர்வோர் சரியான தேர்ந்தெடுப்பைச் செய்கின்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகிறது. அடையாளமிடுதல் இன்றி நுகர்வோர்கள் அறியாமையில் தள்ளப்படுவது மட்டுமல்ல, ஏதேனும் தவறாகப் போகும் நிலையில், மூலங்களை அல்லது காரணங்களைக் கண்டறிவதும் மிகக் கடினமாகிவிடும். டிரிப்டோஃபன் விஷயத்தில், புதிய விசித்திர நோயின் மூலத்தையும் உற்பத்தியாளரையும் அறிவதில் அமெரிக்க அதிகாரிகள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதற்குள் குழுமம் தன் சேமிப்புகள் அனைத்தையும் அழித்துவிட்டதால் எவ்விதச் சோதனையும் செய்ய இயலாமல் போயிற்று.

அடையாளமிடுதல் இன்மை முறையான வாணிகமும் அல்ல. நுகர்வோரைத் தவறான வாங்குதலுக்குட்படுத்தல், ஏமாற்றுதல் இதில் உள்ளது. நுகர்வோர்கள் அடையாளமிடு தலை அமைப்புகள் வாயிலாகக் கேட்கும்போது, உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் உரிமம்பெறும் அலுவலகத்திற்குத் தங்கள் பொருள்கள் இயற்கைப் பொருள்கள் போன்றவை என்று கூறியவாறு உரிமம் பெற ஓடுவதைப் பார்த்தாலே இது தெளிவாகும்.

நமது மத மற்றும் ஒழுக்கவியல் பார்வைகளுக்கும் மபொ உணவுகளுக்கும் என்ன தொடர்பு?

marapanu-stil-71
நிறைய இருக்கிறது. இந்தியா, வெவ்வேறு மதங்களும் கலாச்சாரங்களும் கொண்ட பலவேறு இனத்தவர் வாழும் நாடு. ஹராம் அல்லது தடைசெய்யப்பட்ட உணவு முஸ் லிம்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தும். அறியாத அல்லது அடையாளமிடப்படாத மூலங்களிலிருந்து பெறப்பட்ட மரபணுக்களைப் பயன்படுத்திய மபொ உணவுகளின் இயல்பு (ஹலால்) பற்றி இயல்பாகவே அவர்கள் கவலைப்படுவர். குறிப்பாக இது வரை உணவாகப் பயன்படுத்தப்படாதவை பற்றிக் கவலை இருக்கும். பன்றியின் மரபணுக்களைப் பயன்படுத்தியவைகளையும், இஸ்லாமிய முறைப்படி கொல்லப்படாத பிற பிராணிகளையும் அவர்கள் உண்ண விரும்பமாட்டார்கள்.

இந்துக்களும் பௌத்தர்களும்-குறிப்பாக மரக்கறி உணவு உண்பவரும், மாட்டிறைச்சி உண்ணாதவர்களும் விலங்கு மரபணுக்கள் கொண்ட உணவுகளைப் பற்றிக் கவலைப்படுவார்கள். மரக்கறி உணவுப்பழக்கமுள்ளவர்கள், விலங்குகள் அல்லது மனித மரபணுக்களைக் கொண்ட எந்த உணவையும் எதிர்ப்பார்கள்.

வலுவான மத நம்பிக்கை உடையவர்கள், கடவுளின் படைப்புக்கு மரபணுப பொறியியல் மாறானது என்ற அடிப்படையில் மபொ உணவுகளை எதிர்ப்பார்கள். உயிர்ப் பிராணிகளுடைய வாழ்வின் பாரம்பரிய அமைப்புகளை மாற்றுவதும் கலப்பதும் கடவுளின் ஆட்சிக்கும் அவரது தெய்விகத் திட்டத்திற்கும் மாறானது என்று கருதுவார்கள்.

உலகத்தில் வறுமையையும் பசியையும் மாற்றித் தங்கள் மபொ பயிர்கள் உணவளிக்கும் என்ற உயிர்த்தொழில்நுட்பத் தொழிலகங்களின் பேச்சை நாம் நம்பமுடியுமா?

உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் வணிக நிறுவனங்கள், தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பவை என்பதை நாம் மறந்துவிடலாகாது. இது ஒரு மிகப்பெரிய வாணிகம். 1999இல் மபொ பயிர்களுக்கு ஜப்பான், கிழக்கு ஐரோப்பா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை தடைவிதித்தபோது அமெரிக்காவின் ஏற்றுமதிக்கு ஒரு பில்லியன் (நூறுகோடி) டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டதாக அமெரிக்க விவசாயத் தொழிலகங்கள் கணக்கிட்டன. ஹார்மோன் பயன்படுத்திய அமெரிக்க மாட்டிறைச் சிக்குக் கிழக்குஐரோப்பிய நாடுகள் இறக்குமதித் தடைவிதித்ததால் மட்டும் 20 முதல் 30 கோடி டாலர் இழப்பு ஓராண்டில் அமெரிக்காவுக்கு ஏற்படுகிறது.

ஆகவே நுகர்வோருக்கு மபொ உணவுகளினால் விளையுமென எதிர்பார்க்கும் நன்மை நிஜமாக இதுவரை உண்டாகவில்லை. இதுபற்றி மிகையாகச் சொல்லப்படுகிறது. ஆபத்துகளும் எதிர்மாறான விளைவுகளும் வெளியிடப்படுவதில்லை. ஏழை நாடுகளில் பசியையும் பஞ்சத்தையும் போக்க, அதிகரித்துவரும் உலக மக்கள் தொகையைக் காப்பாற்ற, நமக்கு மரபணுப் பொறியியல் தேவை என்பது புதிதாக இக்குழுமங்கள் கண்டுபிடித்த வாதம்.

ஐக்கியநாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின்படி, உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் தேவையான உணவைப்போல இப்போதே ஒன்றரை மடங்கு இருக்கிறது. உலக மக்கள் தொகையின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற, மபொ அற்ற உணவுகளே போதுமானவை என்று 2000 ஜூலையின் அறிக்கையில் உணவு விவசாய நிறுவனம் கூறியிருக்கிறது.

ஊட்டச்சத்துக் குறைந்த மக்களுக்கென அதிகச் சத்துவாய்ந்த பயிர்களை (வைட்டமின் ஏ மேம்படுத்தப்பட்ட அரிசி போன்றவற்றை) உருவாக்குவதாக உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் கூறினாலும், அவை யாருக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறதோ அவர்கள் அவற்றை வாங்கவும் இயலாது. இதற்குத் தீர்வு விவசாயத்துக்கு வெளியில் தான். (அதாவது ஏழைகளின் வருவாயைப் பெருக்குதல் போன்றவை). உணவு தானியங் களைக் கால்நடைகளுக்குத் தீனியாகக் கொடுத்தல் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் சொல்லுவதுபோல மபொ வளரும் நாடுகளுக்கு உதவ இயலுமா?

மாறாக, இருக்கும் பிரச்சினைகளை மரபணுப் பொறியியல் மேலும் மோசமாக்கவே முடியும். நிறுவனங்களின் வாக்குறுதி ஒருபுறம் இருக்க, வளரும் நாடுகள், பெரும் நிறுவனங்கள் மற்றும் முதல் உலகத்தின் உதவிக்கு அலையவும் அவர்களிடம் கடன்பெறவும் அவர்களைச் சார்ந்திருக்கவும் நேரிடும். மபொ பயிர்கள் “அதிநவீன” விவசாயத்தொழில் நிறுவனங்களுக்கானவை. வேதிப்பொருள்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்ற, ஒரேமுறை பயிர்செய்கின்ற, (மிக அதிகமான நீர், வேதியுரங்கள், களைக்கொல்லிகள் பூச்சிக்கொல்லிகள் தேவைப்படுகின்ற) பெரிய பண்ணைகளை வைத்திருக்கின்றவர்களுக்கானவை. வளரும் நாடுகளில் இவை சிறிய, குடும்ப விவசாயநிலங்களை வைத்திருப்பவர்களை பலியாக்கும். உணவுப்பயிர் வளர்ப்பது மேலும்மேலும் பெரிய நிறுவனங்களின் ஒற்றை மேலாண்மையின்கீழ் வருவதால், நிலமின்மை, ஏழ்மை ஆகியவற்றை மபொ அதிகரிக்கச் செய்யும்.

முக்கியமாக, உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் தங்கள் விதைகளுக்கு உரிமம் வாங்கி விடுகின்றன. ஆகவே அவற்றைப் பயன்படுத்தும் விவசாயிகள், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தாங்கள் செய்துவருவதுபோல, அந்த விதைகளை விற்பனை செய்யவோ, பிறரிடம் பரிமாறிக்கொள்ளவோ, அடுத்த ஆண்டுக்கெனச் சேமித்து வைக்கவோகூட முடியாது. இந்த விதைகளைப் பகுப்பாய்வு செய்யவோ இவற்றை ஆராய்ச்சிக்குட்படுத்தவோ முடியாது. இந்தக் கட்டுப்பாடுகளுக்குமேல், மான்சாண்டோ போன்ற கம்பெனிகள் தொழில்நுட்பக் கட்டணம் ஒன்றையும் வசூலிக்கின்றன. சோயா விதையின் 25கிலோ கொண்ட பை ஒன்றுக்கு ஆறரை டாலர் கட்டணம். (1998இல் இந்தக் கட்டணமே இக்குழுமத்திற்கு 200 மில்லியன் டாலர்களை ஊதியமாகப் பெற்றுத்தந்தது.)

ஒவ்வோராண்டும் இத்தகைய கட்டணம் செலுத்தி இந்த விதைகளை வாங்க மூன்றாம் உலக விவசாயிகளால் முடியுமா? தொன்றுதொட்டுத் தாங்கள் விதைகளைச் சேமித்து வைக்கும், பரிமாறிக் கொள்ளும் உரிமையை அவர்கள் விட்டுத்தரமுடியுமா? (அமெரிக்க விவசாயிகள் தங்கள் ஒப்பந்தங்களை முறித்ததற்காக மபொ நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்தன. உலகெங்கிலும் உள்ள விவசாயிகள் விதைத் திருட்டுச் செய்வ தாக ஆயிரக்கணக்கான வழக்குகள்.)

பயிர்கள் அழுகுவதைத் தடுக்கவும், அவற்றை நீண்டகாலம் சேமித்து வைக்கவும், அவற்றில் நோய்களைத் தடுக்கவும், பூச்சிவிழுவதைத் தடுக்கவும், அவற்றிற்கு நல்ல தோற்றத்தை அளிக்கவும் பெருங்குழுமங்கள் செய்த முயற்சிகள் யாவும் ஏற்றுமதிக்காரர்கள், வேதிவிவசாயக் குழுமங்கள், உற்பத்தியாளர்கள், சிறுவியாபாரிகள் ஆகி யோருக்குப் பயன்பட்டனவே தவிர, மூன்றாம் உலகத் தேவைகளுக்குப் பயன்படவேயில்லை. நிலநடுக்கோட்டு விரைவுப் பயிர்களுக்கு பதிலாக மாற்றுகளைப் பயிரிட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் (சான்றாக, தென்னை, பாமாயில், வனில்லா, கோகோ) மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற தெற்குநாடுகளின் ஏற்றுமதி முயற்சிகளுக்கு ஊறுசெய்தன.

உண்மையில் மபொ தொழில் நுட்பம், உலகத்தின் செல்வத்தை மிகச்சில ஒற்றை யாதிக்கக் குழுமங்களுக்கே குவியச்செய்யும்.
உயிர்த்தொழில் நுட்பம் பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?  

மரபணுத் தொழில் நுட்பத்தின்மீதான அரசாங்கத்தின் நிலைப்பாடு ஈரடியாக இருப்பதுபோலத்தான் தோன்றுகிறது. ஒருபுறம் அது பொதுமக்கள் ஆரோக்கியம், பாது காப்புப் பற்றித் தன் அக்கறையினைத் தெரிவிக்கிறது; மறுபுறம் விவசாயத்திற்கு இரு பத்தோராம் நூற்றாண்டின் தேர்வாக உயிர்த்தொழில் நுட்பத்தை ஆதரிக்கிறது.

சர்வதேச அளவில் மலேசியாவின் நிலைப்பாடு உதாரணநிலையில் உள்ளது. உயிர்ப் பாதுகாப்பு பற்றிய கார்ட்டெக்னா உடன்பாட்டு ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட்டுள்ளது. உடல்நலம், சுற்றுச்சூழல் மீது உயிர்த்தொழில்நுட்பத்தின் கோளாறான விளைவுகளைக் குறைக்க இது ஒரு முன்வரைவாகும். கார்ட்டெக்னா ஒப்பந்த உடன்படிக்கை மரபணுரீதியாக மாற்றியமைக்கப்பட்ட உயிரிகளின் பயன்பாடு, இட மாற்றம், கையாளுகை, எடுத்துச்செல்லுதல், புகுத்துதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்து கிறது. இறக்குமதி செய்யும் நாடுகள் முழுஅளவு அறிவியல் ஆபத்துகள், இடர்ப்பாடு களின் நிச்சயின்மை பற்றித் தெரியாமல் இவற்றைத் தடைசெய்யவும் கட்டுப்படுத்த அனுமதிக்கவும் இவற்றுக்கு அடையாளமிடவும் அது வழிசெய்கிறது. ஜிஎம்ஓக்களை நிர்ப்பந்தமான தரநிர்ணயித்தலின் வாயிலாக நாடுகள் ஒழுங்கு படுத்த அனுமதிக்கிறது.

தேசிய விவசாயக் கொள்கை, விவசாய வணிகத்தை மேம்படுத்துவதற்கு உயிர்த் தொழில் நுட்பத்தை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான கருவியாக நோக்குகிறது. இதனால் விளைச்சலை மேம்படுத்தவும், தாவரப்பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றால் ஏற்படும் இழப்பினைக் குறைக்கவும், உழைப்பு மற்றும் நிலத்தின் விளைவை முன்னேறச்செய்யவும் நினைக்கிறது. கார்ட்டெக்னா உடன்பாடு 2003இல் அமுலுக்கு வந்தது.

கூட்டாக எஃப்ஏஓ-டபிள்யூஎச்ஓ உயிர்த்தொழில்நுட்பம் மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைத்த நிபுணர் ஆலோசனையையே-அதாவது, பாரம்பரிய முறைகளால் வளர்க்கப்பட்ட இயற்கை உணவுகளுக்கு மபொ உணவு ஒப்பானது என்ற நிலைப்பாட்டையே பெரும்பாலான வளரும் நாடுகளின் உடல்நல அமைச்சகங்கள் பின்பற்றுகின்றன.
உயிரியல் பலதரத்தன்மை பற்றிய அமைப்பு முன்வைத்துள்ள முன்னெச்சரிக்கைக் கொள்கையின் சார்பாக இந்நாடுகள் நின்றிருக்கலாம். நிச்சயின்மை இருக்கும்போது, அதாவது ஜிஎம்ஓக்களின் மற்றும் அவற்றின் உற்பத்திப் பொருள்களின் பாதுகாப்பு பற்றிய தெளிவான சான்று கிடைக்கும்வரை, அவற்றின் இறக்குமதியையும் பயன்பாட்டையும் மறுப்பது என்பதுதான் அந்த முன்னெச்சரிக்கைக் கொள்கை.

இடர்க் கணிப்பு முறை :

நம் நாட்டில் பழங்கள், காய்கறிகள், நெல், சோயா, ஆர்க்கிடுகள் போன்ற துறைகளில் சோதனைகளுக்காகப் பல ஆய்வு நிறுவனங்கள் ஆய்வக மற்றும் களச்செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளும், உயிர்ப்பாதுகாப்பு பற்றிய சட்டங்களும் உருவாக் கப்பட்டு, உரிய இடம் அளிக்கப்படும்வரை, இடர்க்கணிப்பு என்பது வெறும் வாய்ச் சொல்லாகவே இருக்கும். பாதுகாப்பைப் பற்றிய பல பிரச்சினைகள் மற்றும் சூழலியல் தாக்குதல்கள் இன்னும் கவனத்தில் கொள்ளப்படவே இல்லை.

இந்த நாடும், ஏனை வளரும் நாடுகளைப் போல, பன்னாட்டுக் குழுமங்கள் பரிந்துரைக்கும் உள்ளார்ந்த அபாயகரமான ஆய்வுகளுக்குச் சோதிக்குமிடமாகவும் அவற்றின் கழிவுகளைக் கொட்டும் இடமாகவும் மாறிவிடக்கூடும் என்று நாம் கவலைப்படுகிறோம். மேலும் இப்போது மேற்கில் மபொவுக்கு எதிராக நுகர்வோரின் எதிர்ப்புக்குரல் எழுச்சி பெற்றிருப்பதால், மபொ குழுமங்கள் தங்கள் குவிமையங்களையும் திட்டங்களையும் கிழக்குநாடுகளையும், வளர்ச்சி குறைந்த நாடுகளையும் நோக்கித் திருப்பியுள்ளன. மபொ உணவின் உடல்நல ஆதாயங்களை விளம்பரப்படுத்துகின்றன. மபொவை உலக அளவில் பசிக்கும் வறுமைக்கும் ஒரு தீர்வாகவும் இவை முன்வைக்கின்றன.

அமெரிக்கா, கானடா, ஆர்ஜெண்டினா ஆகிய மூன்று நாடுகளும்தான் அதிகபட்சமாக மபொ உணவுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவை. இவற்றிற்கு மியாமி நாடுகள் என்று குறிப்புப் பெயர். இவை கார்ட்டெக்னா உடன் பாட்டை ஏற்றுக் கொள்ளவே இல்லை. அதற்குப்பின் வந்த நகோயா உடன்பாட்டையும் ஒதுக்கி யிருக்கின்றன.

வளரும் நாடுகள் பல, பூச்சிகளுக்கும் களைக்கொல்லிகளுக்கும் தடைச்சக்தி பெற்றுள்ள, அழுகாத இந்த “அற்புதப்” பயிர்களுக்குக் கதவுகளைத் திறந்துள்ளன. பெருங்குழுமங்களின் இலவச முன்னோட்டங்களுக்கும், தொழில்நுட்பத் திட்டங்க ளுக்கும் இந்நாடுகள் தடைசொல்வது கடினம்தான். தங்கள் சொந்த நலன்க ளுக்கு மட்டுமே பாடுபடும் நம் நாட்டு அமைப்புகளின் பக்கபலமும் இவற்றுக்கு உள்ளது. அமெரிக்க வணிகத் துறை அல்லது எஃப்டிஏ, உலகவங்கி, யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புகள் உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்களுக்கும் வளரும் நாடுக ளுக்கும் இடையில் சமரசம் செய்கின்ற விவசாயத்தொழில் பயன்பாடுகளை ஏற்கும் சர்வதேசச் சேவை போன்ற அரசுசாராத் தன்னார்வ அமைப்புகள் போன்றவை பின்னணியில் பேரத்தில் ஈடுபடுகின்றன. இவை போகும்போக்கில் வளரும் நாடுகளின் தொழில்நுட்பத் தேவைகளைக் கண்காணிப்பதோடு, அவற்றின் விஞ்ஞானிகளுக்கும் பயிற்சிதருகின்றன.

நம் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?  

நுகர்வோரின் பாதுகாப்புக்காகவும் உடல்நலத்துக்காகவும், பின்வருவனவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்:

ஃ மபொ சோயா அவரை உள்ளிட்ட எல்லாவிதமான மபொ உணவுகள் மற்றும் விளைபொருள்களின் இறக்குமதி, விற்பனை ஆகியவற்றைச் சட்டப்படி நிறுத்தி வைக்கவேண்டும்.
இத்துறையில் புறவயமான, அறிவியல் பூர்வமான, கட்டுத்திட்டமான, தன்னிச்சையான சோதனைகளை நிகழ்த்தவேண்டும். மபொ உணவுகள், விளைபொருள்கள் பாதுகாப் பானவை என்று நிரூபிக்கும் பொறுப்பை அவற்றை உற்பத்தி செய்வோரும், ஏற்றுமதி செய்வோரும்தான் ஏற்க வேண்டும்.
ஃ உடல்நலத்தின்மீதும் சுற்றுச்சூழலின்மீதும் எதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, மரபணுப்பொறியியல் உருவாக்கிய உயிரிகளை உற்பத்திசெய்து சுற்றுச்சூழலமைவில் நுழைக்கும்விதமான விவசாய மற்றும் பிறதுறை சார்ந்த மரபணுத் தொழில்நுட்பம் தடைசெய்யப்பட வேண்டும்.
ஃ பன்னாட்டு உயிர்ப்பாதுகாப்பு விதித்தொகுப்பினை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஏற்றுச் செயல்படுத்தவேண்டும். இதன்படி, கடுமையான தேசிய உயிர்ப்பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அவை சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சத் தரங்களை ஏற்றிருக்க வேண்டும்.
ஃ மபொ உணவுகளும் விளைபொருட்களும் கண்டிப்பாக அடையாளமிடப்பட வேண் டும். தாங்கள் எதை உண்கிறோம் என்று அறிந்துகொள்ளும் உரிமை, அதுவும் அபாயங்கள் இருக்கும்போது, மத மற்றும் ஒழுக்க விதிகளோடு அது சம்பந்தப்பட்டி ருக்கும்போது, நுகர்வோருக்குக் கண்டிப்பாக உண்டு.
ஃ விவசாயிகளுக்கும் அந்தந்த வட்டார மக்களுக்கும் பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு ஏற்றவிதமான நீண்டகாலப் பயனுடைய விவசாய, உற்பத்தி முறைகளில் முதலீடு செய்யவேண்டும். இப்போதுவரை, பெரிய, பன்னாட்டுக் குழுமங்களுக்கு இலாபம் ஈட்டித் தருகின்ற, போதிய அளவு சோதிக்கப்பெறாத, தொழில்நுட்ப விரைவு ஒட்டு வேலைகளுக்கே அதிக அழுத்தம் அரசினால் தரப்பட்டு வந்துள்ளது.


தமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்

tamil-ilakkiya-1
ரெனி வெல்லக்ஆஸ்டின் வாரன் எழுதிய ஒப்பிலக்கியக் கொள்கை நூலில் இலக்கியக் கல்வியை இலக்கிய வரலாறுஇலக்கியக் கொள்கைஇலக்கியத்திறனாய்வு என மூன்றாகப் பிரித்துஒன்று இன்றி மற்றது இல்லை எனக் காட்டினார்கள். இலக்கியக்கொள்கை அடிப்படையிலேயே மதிப்பிடுதல் நிகழ்வதால், இலக்கியக் கொள்கை இன்றித் திறனாய்வு இல்லை. எவை சிறந்த நூல்கள் என்பதை மதிப்பிடும் துறைதான் இலக்கியத்திறனாய்வு ஆகையால் இலக்கிய வரலாற்றில் எந்தெந்த நூல்களை நாம் தேர்ந்தெடுத்து எப்படி விளக்கப் போகிறோம் என்பதற்குத் திறனாய்வே அடிப்படை. இலக்கியத் திறனாய்வோ, இலக்கிய வரலாறோ இன்றி இலக்கியக்கொள்கை என ஒன்றை வகுக்கவோ வரையறுக்கவோ முடியாது.

ஒப்பிலக்கியத்திற்கு அடிப்படை இலக்கிய வரலாறு என்றார்கள், ஃபிரெஞ்சு இலக்கியவாதிகள். தமிழில் இதுவரை சரியான இலக்கிய வரலாறு எழுதப்படாத காரணத்தினாலேயே ஒப்பிலக்கிய வளர்ச்சியும் சரிவர ஏற்படவில்லை என்று தோன்றுகிறது. வையாபுரிப்பிள்ளைதெ.பொ.மீசி. ஜேசுதாசன்மு.வ. போன்றோர் எழுதிய இலக்கிய வரலாறுகள் எல்லாம் முழுமைத் தன்மையுடையனவாக இல்லை. பிறர் எழுதிய இலக்கிய வரலாறுகள் யாவும் தேர்வுக்குறிப்புகளாகபட்டியல்களாக அமைந்துள்ளன.

      மு.அருணாசலம்பிள்ளைமயிலை சீனி. வேங்கடசாமிஆ.வேலுப்பிள்ளை போன்றோர் முயற்சிகள் குறிப்பிடத்தக்கன. என்றாலும் முழுமையான இலக்கிய வரலாறுகளாக இவற்றையும் பல காரணங்களால் கருதமுடியவில்லை. மு. அருணாச்சலத்தின் இலக்கிய வரலாறு சில நூற்றாண்டுகளுக்கு மட்டுமே விரிவாகக் கிடைக்கிறது. தமிழில் இலக்கிய வரலாற்றுப் பிரச்சினைகளைக் கோடிட்டுக்காட்டும் முறையிலும்எப்படித் தமிழ் இலக்கிய வரலாற்றை அமைக்க வேண்டும் என ஆலோசனை கூறும் முறையிலும் கா. சிவத்தம்பியின் தமிழில் இலக்கிய வரலாறு என்னும் நூல் அமைந்துள்ளது.

tamil-ilakkiya-2

“உண்மையான இலக்கிய வரலாறு என்பது ஒரு சமுதாயத்தின் வரலாற்றை,அதன் இலக்கியங்களைக் கொண்டுஅதன் இலக்கியங்களின் அடிநாதங்கள்,வெளிப்பாடுகள்தாக்கங்கள் ஆகியன கொண்டு எடுத்துக்கூறுவதாகும். இலக்கிய வரலாறு என்னும் தொடரை நாம் நான்காம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு விட்டோம். அதனை ஓர் உம்மைத் தொகையாகக் கொண்டு இலக்கியமும் வரலாறும் இன்றியமையாவகையிற் பின்னிப் பிணைந்து கிடப்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் சிவத்தம்பி. (தமிழில் இலக்கிய வரலாறுப.9)

இலக்கியப்போக்கில்வரலாற்றில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை இலக்கிய வரலாறு உணர்த்த முனைய வேண்டும். ஆனால் அவற்றுக்குப் பாதுகாப்புரை வழங்கவோ அவற்றை நியாயப்படுத்தவோ முனையக்கூடாது. காலப்போக்கில் ஒரு மொழியில் ஏற்பட்ட படைப்புணர்வு அனுபவங்களின் பரிணாமத்தை வெளிப்படுத்துவதாக இலக்கிய வரலாறு அமையவேண்டும்.

tamil-ilakkiya-3

ஆங்கிலத்தில் இலக்கிய வரலாறு எழுதிய ஜார்ஜ் சாம்சன்செயிண்ட்ஸ்பரிகாம்டன் ரிக்கட் போன்றவர்கள் காலவரிசை அடிப்படையிலே தங்கள் இலக்கிய வரலாற்று நூல்களை எழுதினார்கள். தமிழ் இலக்கிய வரலாற்று முயற்சிகள் இவற்றைப் பின்பற்றிஆனால் சுருக்கமாக அமைந்தன. ராபர்ட் இ. ஸ்பில்லர் போன்ற நவீன அறிஞர்கள் கால அடிப்படை இல்லாமலே இலக்கிய வரலாற்றை அமைத்துள்ளார்கள். குறித்த ஒரு மொழியில் நிகழும் படைப்பியக்க வெளிப்பாடுகள் தற்செயலாக ஒரு காலப்போக்கில் அமைந்து விடுகின்றன. இவற்றில் சில எழுத்துருப் பெறுகின்றன,சில எழுத்துருப் பெறாமலே மறைந்துபோகின்றன.

ஒரு நல்ல இலக்கிய வரலாறு இலக்கியப் பிரதிகளின் நம்பகத்தன்மைமூலபாடம்இலக்கியத் தகுதி,மொழியடிப்படைகள்இவற்றிற்கும் மூலமாக உள்ள சிந்தனைக் கட்டமைப்புகள் போன்ற அனைத்தையும் கணக்கில் கொண்டு விவாதிக்க வேண்டும். தமிழில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடைக்கின்றஅல்லது கிடைக்காத நூல்களின் வரலாற்றுத்தன்மை முழுவதையும் கணக்கில் கொண்டு ஓர் இலக்கிய வரலாற்று நூலை உருவாக்குவது மிகக்கடினம்.

tamil-ilakkiya-4

தமிழில் ஒரு நல்ல இலக்கிய வரலாற்று நூலை உருவாக்குவதற்கு இரு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்றுநமக்குக் கிடைக்கும் மூல ஆதாரங்கள் மிகக்குறைவானவை. இரண்டுஇவற்றை நாம் எந்த அளவுக்குப் புறவயநோக்கில் (முழு அளவிலான புறவயநோக்கு என்பது இயலாதது என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும்இயன்ற அளவிற்கு இதனைக் கையாள முயலுதல் சிறப்பு) கிடைக்கும் தகவல்களை விளக்கி எழுத முனைகின்றோம் என்பது. இந்த இரண்டிலுமே எண்ணற்ற குறைகள் இருப்பதனால் ஒரு சரியான இலக்கிய வரலாற்றை உருவாக்க இயலவில்லை. இலக்கிய வரலாறு என்பது காலப்போக்கில் என்னென்ன படைப்புகள் தோன்றின எனப்பட்டியலிடுவதன்று. இப்பட்டியல்களுக்கு ஆதாரமாக அமையக்கூடிய மெய்ம்மைகள்அதற்கு அடிப்படையாக உள்ள காலச்சூழல் போன்றவை எப்படி அக்கால அனுபவங்களோடு தொடர்புறுகின்றன என்று காட்டவேண்டும். எந்திரத்தனமாகஅடுத்தடுத்துக் காலவரிசைப்படி தோன்றுதல் என்னும் முறையில் இலக்கிய வகைகள் தோன்றவில்லை. குறித்த ஒரு காலத்தில் எப்படி ஒரு இலக்கியப் படைப்பு தோன்றியதுஎப்படி அது சமூகத்தில் வெளியானதுஎப்படி ஏற்கப்பட்டது என்பனவற்றை எல்லாம் இலக்கிய வரலாறு சொல்லவேண்டும்.

இலக்கிய வரலாற்றின் பிரச்சினைகளை ஆராய மரபு ரீதியாகக் கையாளப்படும் வழிமுறைகள் சில உள்ளன. அவற்றுள் முதலாவதும் பழையதுமான வழிமுறைஇலக்கியப் படைப்புகளைத் தேர்ந்தெடுத்துஅவற்றைக் காலவரிசையின்படி அமைத்துக் கூறுவதாகும். ஆங்கில இலக்கியத்தில் பேராசிரியர் ஜார்ஜ் செயின்ட்ஸ்பரி இம்மாதிரி முறையில் எழுதியவர். ஆனால் இம்முறையைத் தமிழில் கையாளுவதில் அடிப்படையான வினாக்கள் உள்ளன.

“தமிழின் இலக்கிய வரலாற்றை எழுதுவதிலுள்ள மிக முக்கியமான பிரச்சினைகி.பி.1300க்கு முந்தியனவாக நம்மிடத்தே இன்றுள்ள தமிழிலக்கியங்கள் எந்த அளவுக்குப் பூரணமானவைஎந்த அளவுக்கு உண்மையில் இருந்த இலக்கியங்களின் முற்று முழுதான தொகுதியாகக் கொள்ளப்படத்தக்கன என்பதாகும். அதாவது உள்ள இந்த இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு நாம் முற்று முழுதானஐயந்திரிப்பற்ற இலக்கிய வரலாற்று ஆய்வினில் இறங்கலாமா? என்பதே பிரச்சினையாகும் என்கிறார் கா. சிவத்தம்பி. அதாவது இருக்கும் இலக்கியங்களை நம்பி இலக்கிய வரலாறு எழுத முடியுமா? என்பதே பிரச்சினை. இதற்குள் இன்னும் ஒரு பிரச்சினையும் உண்டு. அதாவது குறிப்பிட்டதொரு காலப்பகுதியிலிருந்தாவது (சங்க காலம் என்று வைத்துக் கொள்வோம்) தமிழில் இயற்றப்பட்ட எல்லா இலக்கியங்களும் இன்று நமக்குக் கிடைக்கின்றனவா? என்பதும் சந்தேகம்.

tamil-ilakkiya-5

இன்னொரு வழி இலக்கிய வரலாற்றுக்குரிய படைப்புகளை அவற்றின் வரலாற்று மூலங்களுடன் சேர்த்தும்படைப்பாளிகளின் இலக்கிய அனுபவங்கள் கலாச்சார அனுபவங்கள் ஆகியவற்றோடும் சேர்த்தும் கூறுவதாகும். மூன்றாவது முறை,காலத்தின் இயக்கத்திற்கேற்ப இலக்கியப்படைப்புகளைத் தொடர்புபடுத்தல். இலக்கியப் படைப்புகள் காலப்போக்கில் சுழற்சிமுறையில் அமைகின்றன என்ற கருத்தை அடிப்படையாக வைத்து அமெரிக்க இலக்கிய வரலாற்றை எழுதியவர் ராபர்ட் இ. ஸ்பில்லர் என்பவர். இதுவரை எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாறுகளை ஆராயும் கா. சிவத்தம்பி அவற்றிற் காணப்படும் பலவேறு குறைபாடுகளையும் சுட்டியுள்ளார். உதாரணமாகசைவத்தை மட்டுமே தமிழ் இலக்கியத்திற்குரிய பாரம்பரியமாகக் கொண்டுபிற சமயத்தவர்கள் தமிழுக்குத் தொண்டாற்றியதாகக் கருதும் மனப்பாங்கு அடிப்படையில் காணப்படும் ஒன்று. இதைப்பிற சமயத்தவர்களும் (கிறித்தவர்களும்முஸ்லீம்க ளும்) எதிர்க்கவில்லை.

இன்னொன்றுபிறநாட்டு அறிஞர்கள் தமிழில் எழுதியுள்ளனவற்றை ஆராயும்போது அவற்றுள் அந்த அறிஞர்களின் தாய்மொழி மரபு எவ்விதம் தொழிற்பட்டுள்ளது என்பதை இதுவரை எவரும் ஆராய்ந்ததில்லை. “உதாரணமாக வீரமாமுனிவருடையஅன்றேல் தத்துவபோதகருடைய தாய்மொழி இலக்கிய மரபுகள் எந்த அளவுக்கு அவரவர் ஆக்கங்களிலே காணப்படுகின்றன என்பது பற்றி நாம் இதுவரை ஆராயவில்லை (மு.நூ.,ப.172).

tamil-ilakkiya-6

மேலும் தமிழ்மக்களின் முழுமையான இலக்கிய வரலாற்றை எழுதுவது பற்றிச் சிந்திக்கும்போது, “தமிழர்களால் வடமொழியில் எழுதப்பட்டுள்ள நூல்கள் பற்றிய முற்று முழுதான ஆய்வு மேற்கொள்ளப்படல் வேண்டும் என்கிறார் கா. சிவத்தம்பி. வடநாட்டில் முஸ்லிம்கள் ஆட்சி நிலைபெற்ற பின் தமிழ்நாட்டிலிருந்தே பிரதானமாக வடமொழி இலக்கியங்கள் எழுதப்பட்டன என்று கூறிஆதாரமாக பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி எழுதிய வடமொழி இலக்கிய வரலாற்றைக் காட்டுகிறார். மேலும் தெற்கிலிருந்து எழுதப்பட்ட சமஸ்கிருத இலக்கியங்கள் மொழிமரபுத்தொடர்நடை ஆகியவற்றில் வடக்கிலிருந்து எழுதப்பட்டவையிலிருந்து மாறுபடுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இத்தகையதொரு ஆய்வினை – அதாவது கேரளத்திலிருந்து எழுதப்பட்ட சமசுக்கிருத இலக்கியங்கள் பற்றிய ஆய்வினை குஞ்சுண்ணி ராஜா என்பவர் மலையாளத்தில் எழுதியுள்ளார். அதுபோன்றதொரு முயற்சி தமிழில் உருவாக வேண்டும்.

தமிழில் பிராமண மனப்பான்மையுடையவர்கள்அனைத்தும் சமஸ்கிருதத்திலேயிருந்தே வந்தன என்னும் மனப்போக்கை இன்றளவும் கொண்டுள்ளார்கள். இது ஒரு தலைச்சார்பானது என்பது மட்டுமன்றி,தமிழ்க்கலாச்சாரம் சார்ந்த அவர்களது பங்களிப்பை அவர்களே மறுப்பதாகவும் அமைகிறது. எனவே நடுநிலையானசமஸ்கிருத இலக்கியமும் தமிழிலக்கியமும் திரிபறக்கற்ற அறிஞர்கள் இத்துறையில் ஈடுபட வேண்டும். இது இந்தியப் பண்பாட்டில் தமிழரின் பங்களிப்பினை நன்கு வெளிப்படுத்துவதாகவும் அமையும். வடமாநிலத்தவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் நிலவும் தேவையற்ற மொழிகலாச்சாரப் பிரச்சினைகள் பலவற்றைத் தீர்ப்பதாகவும் அமையும். இதுபோலவே பிற திராவிட மொழிகளுக்கும் தமிழுக்குமான உறவும் சரிவர ஆராயப்படவேண்டும். இதற்கு ஒப்பிலக்கியத்துறையின் வளர்ச்சி தேவை.

இதனை ஒட்டிக் கருத்துரைக்கும் கா. சிவத்தம்பி, “நேர்சீரான தமிழிலக்கிய வரலாறானதுதமிழர்களின் சிந்தனை வளர்ச்சியின் தன்மையையைம் அளவையும் நன்கு நிறுவிக் கொள்வதற்காக வடமொழிதெலுங்குமலையாளம்,சிங்களம் போன்ற மொழிகளிலுள்ள தொடர்பான நூல்கள் பற்றிய ஆய்வையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். அத்தகைய ஓர் ஆய்வினாலே தான் தமிழின் இந்தியத் தன்மையை நிறுவுதல் முடியும். தமிழிலக்கியத்தின் சர்வதேசியத் தன்மை (நாவல்சிறுகதைபுதுக்கவிதை போன்ற இலக்கிய வகைகளின் வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் மூலம்) இன்று வற்புறுத்தப்படுவது போன்றுதமிழிலக்கியத்தின் இந்தியத் தன்மையும் நன்கு வலியுறுத்தப்படல் வேண்டும் என்கிறார் (மு.நூ.,ப.175)

இதுவரை நாம் கண்ட கருத்துகளே தமிழ் இலக்கிய வரலாற்றிற்கும்ஒப்பிலக்கிய ஆய்வுக்கும்தமிழின் தனித்தன்மை பற்றி நாம் பேசுவனவற்றை நிரூபிக்க வேண்டிய நிலைக்குமான தொடர்புகளை நன்கு எடுத்துக்காட்டக்கூடியவை.

இவையன்றிஇலக்கிய இயக்கங்களுக்கும் இலக்கிய வரலாற்றிற்கும் ஒப்பிலக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இலக்கிய இயக்கங்கள் யாவும்அடிப்படையில்பொதுவான கலை இயக்கங்களே. எனவே பல்வேறு கலைகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கலாச்சார அடிப்படையில் ஆராய்வது முக்கியமானது. உதாரணமாக, “கி.பி.600க்குப்பின்வரும் இலக்கியங்களில் வரும் மரபுநிலைப்பட்ட உவமைகள் படிமக்கலையை ஆதாரமாகக் கொண்டவை என்பது அதிகம் உணரப்படுவதில்லை(மு.நூ.ப.177). எனவே கலையியக்கங்கள்-செவ்வியம்ரொமாண்டிசிசம் முதல் படிம இயக்கம்குறியீட்டியம் போன்றவை ஊடாக இப்போதைய பின்நவீனத்துவபிற்காலனியதலித்தியபெண்ணிய இயக்கங்கள் வரைஎந்தெந்தத் தாக்கங்களால் எவ்விதம் காலப்போக்கில் பரவியுள்ளனஒரு குடும்ப மொழிகளுக்குள்ளும்பிறமொழிகளின் ஊடாகவும் இவை எவ்வகை மாற்றங்களை இலக்கியத்திலும் பிற கலைகளிலும் ஏற்படுத்தியுள்ளன என்பதையெல்லாம் ஆராய வேண்டியிருக்கிறது. உதாரணமாகவங்காளி மொழியின்தாகூரின் பாதிப்பினால் தான் தமிழின் ரொமாண்டிய இயக்கம் கூர்மைப்பட்டது என்பதை மறுக்க இயலாது.

இவற்றோடு புத்தக அபிவிருத்தி (புத்தக உற்பத்திபுத்தக வியாபாரம்புத்தக விநியோகம்நூல் மதிப்புரை முறைகள்எழுத்தறிவு வீதம்நூலகங்கள் போன்றவை) பற்றிய ஆய்வு இன்றி நவீன கால இலக்கிய வரலாறு எழுதப்படவும் முடியாது என்பதை சிவத்தம்பி வலியுறுத்தியுள்ளார்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழில் இனிவரும் இலக்கிய வரலாறுகள் எழுதப்படவேண்டும். இம் முயற்சிகள் தமிழில் ஒப்பிலக்கியத்தின் வளர்ச்சிக்கும்தமிழுக்கும் பிறமொழிகளுக்குமான உறவுகள் சீர்ப்படுவதற்கும் பெரிதும் துணை புரியும்.


திராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை

thiraavida-iyaaka-1

இருபதாம் நூற்றாண்டில் மூன்று இயக்கங்கள் தமிழ்நாட்டில் முதன்மைபெற்றன. அவை தமிழக இலக்கியப்போக்குகளையும் தீர்மானித்தன. தேசியம்-காந் தியம் என்பது முக்கியமான ஓர் இயக்கமாகச் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் அமைந்தது. பாரதி, வ.வே.சு.ஐயர் முதற்கொண்டு பல எழுத்தாளர்கள் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டவர்கள். அதற்குப் பின் திராவிட இயக்கம் மதிப்புப் பெற்றது. கடைசியாகத் தமிழகத்தில் வந்த இயக்கம் மார்க்சியம்.

காந்திய இயக்கத்தினர் நாவல், சிறுகதை, கவிதைத் துறைகளில் ஓரளவு ஆக்கம் புரிந்தபோதிலும் திறனாய்வுத்துறையில் அவ்வளவாக ஈடுபடவில்லை. இருபதாம் நூற்றாண்டில் காந்தியவாதிகளாகவும் திறனாய்வாளர்களாகவும் எஞ்சியவர்கள் நாமக் கல் கவிஞரும் சி.சு. செல்லப்பாவும் மட்டுமே.

ஆங்கிலேயர்கள் ஏறத்தாழ இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சிக்கீழ் கொண்டுவந்தபோது, இந்தியா முழுவதும் சமஸ்கிருதக் கலாச்சாரமே நிலவுவதாக நினைத்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களுக்கு ஒரு தாழ்வுணர்ச்சி ஏற்பட்டது. சமஸ் கிருதத்தை விடப் பல நூற்றாண்டுகள் பின்னர் தோன்றியவை ஐரோப்பிய மொழி கள். அவை தங்கள் கலாச்சாரத்தை இந்தியாவில் புகுத்த முற்படும்போது தாம் அடிமைகளாக இருந்து அதை ஏற்றுக் கொள்வதா என்ற எதிர்ப்புமனநிலை தோன்றியது. இதனால் தேசியவாதிகள் சமஸ்கிருதத்தின் மேன்மை, இந்திய நாகரிகத் தின் பழமை, வேதங்களின் தொன்மை, உபநிடதங்களின் பெருமை போன்ற வற்றை வலியுறுத்தலாயினர். இந்தியா முழுவதும் ஒரு சமஸ்கிருத எழுச்சி ஏற்பட்டது. இதற்கு சமஸ்கிருத மொழியிலிருந்து நூல்களை மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்ததும் உதவியது.

இந்த சமஸ்கிருத எழுச்சியை தேசியவாதம், இந்திய சுதந்திரப்போருக்கு ஆதரவாக மிக நன்றாகப் பயன்படுத்திக்கொண்டது. பாலகங்காதர திலகர், காந்தியடிகள், வினோபா பவே போன்ற தேசியவாதிகள் பலரும் பகவத்கீதைக்கு உரை எழுதினர். மேலும் தேசிய இயக்கம், இந்தியா என்ற கற்பனையான ஒற்றைத் தேசத்தைக் கட்டி யெழுப்பி, அதற்கு ஒற்றைத் தேசியமொழியாக இந்தியை முன்வைத்தது.

இந்தியா முழுவதும் சமஸ்கிருதக்கலாச்சாரம் உண்மையில் என்றும் நிலவவில்லை, இன்றும் நிலவவில்லை. சமஸ்கிருதத்தை முற்றிலும் தவிர்த்தும் இயங்கக் கூடிய முக்கிய மொழியாகத் தமிழ் இருந்தது. சமஸ்கிருதத்தினாலேயே ஒதுக்கப்பட்ட,, ‘தேசி’ என்று சொல்லக்கூடிய நாட்டார் கலாச்சாரங்களும், பழங்குடி இனத்தவர்களின் கலாச்சாரங்களும் இருந்தன. தெற்கில் திராவிடக் கலாச்சாரம் இருந்தது. மேலும் இந்தியாவில் முஸ்லிம்களும், கிறித்துவர்களும், பார்சி போன்ற பிறமதத்தினரும் இருந்தனர். இந்தியக் கலாச்சாரம் உண்மையில் பன்முகத்தன்மையுடையது. சமஸ்கிருதம் அல்லது இந்துமதம் என்ற ஒற்றைக் கலாச்சார அடையாளம் உடையதல்ல.

எனவே தேசியத்துடன் சமஸ்கிருதமும் இந்தியும் சேர்ந்துவந்தபோது அதை ஏற்றுக்கொள்ளத் தமிழகத்தில் மனத்தடை ஏற்பட்டது. சமஸ்கிருதத்திற்கு இணையாகவோ அல்லது அதற்கும் முற்பட்டதாகவோ உள்ளதோர் கலாச்சார அடையாளத்தைக் கொண்டவர்கள் தமிழர்கள். எனவே தமிழர் தங்கள் அடையாளத்தை முன்வைக்க முற்பட்டனர். கலாச்சார அளவில் வடமொழியை எதிர்ப்பதாகவும், ஆதிக்கநிலையில் இந்தியை எதிர்ப்பதாகவும் இது அமைந்தது.

இன்னொரு வகையிலும் இந்த நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 1909இல் மிண்டோ மார்லி குழு இந்தியாவுக்கு வந்தபோது இந்தியச் சாதிகளை வகைப்படுத்த வேண்டிய நிலை உருவாகியது. சாதியடிப்படையில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கை எழுந்தது. பார்ப்பனர்களே எல்லாப் பதவிகளிலும் அமர்ந்திருந்த நிலையில் அடுத்தநிலையில் படித்திருந்தவர்கள் தங்களுக்குப் பதவிகளில் தக்கவாறு இடஒதுக்கீடு வேண்டுமெனக் கேட்டனர். தமிழகத்தில் பார்ப்பனர்-அல்லாதார் என்ற பார்வை உருவாக இதுவும் ஒரு காரணம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சிந்துவெளி அகழ்வாய்வு நடத்தப்பட்டது. சர் ஜான் மார்ஷல், இதனை நடத்தியவர். ஹீராஸ் பாதிரியார் சிந்துவெளி எழுத்துகளைப் படிக்க முற்பட் டவர். இவர்கள் இருவரும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்ற கருத்தை வலுவாக முன்வைத்தனர்.

ஏற்கெனவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ராபர்ட் கால்டு வெல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதி, திராவிட மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளினின்றும் (சமஸ்கிருதம் இந்தோஐரோப்பிய மொழிகளில் ஒன்று) வேறுபட்டவை, தமிழ் அதன் மூலமொழி என்ற கருத்தை முன்வைத்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து சங்க இலக்கியங்கள் பதிப்பிக்கப்படலாயின. சங்கஇலக்கியங்கள் வாயிலாகத் தெரியவந்த கலாச்சாரம் முற்றிலும் வடநாட்டுக் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டதாக, சிறந்ததாக இருந்தது.

இவை அனைத்தும் தமிழின் மேன்மையான இடத்தையும், திராவிட மொழிகளில் அதன் முதன்மையையும், சமஸ்கிருதத்தைவிட மூத்ததான அதன் கலாச்சாரத்தை யும் வலியுறுத்துவனவாக அமைந்தன.

எனவே 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்தே திராவிட நாகரிகம் பற்றிய சிந்தனையும் தமிழரின் தொன்மை பற்றிய சிந்தனையும் தமிழ்ப்பற்று மிக்க சிந் தனையாளர்களிடம் தோன்றியிருந்தன. இவ்விரண்டின் முதற்பிரதிநிதி பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை.

     ஆரியர் X திராவிடர், (ஆரியர்கள் = பார்ப்பனர், திராவிடர்கள் = தமிழர்)

     ஆரியரது மொழி சமஸ்கிருதம் X திராவிடரது மூலமொழி தமிழ்,

     ஆரியக் கலாச்சாரத்தை வலியுறுத்துவோர் பார்ப்பனர் X அதனை எதிர்ப்போர்      திராவிடர்

என்ற வகையில் இருமை எதிர்வுகள் முன்வைக்கப்பட்டன. (இன்றும்கூட பார்ப்பனர் கள் நடத்தும் உணவுவிடுதிகளுக்கும் ஆரியவிலாஸ் என்று பெயர்வைப்பதையும், பார்ப் பனர்கள் மட்டுமே ஆர்யா என்று பெயர்வைத்துக்கொள்வதையும் காணலாம். இது இன்றும் மேற்கொண்ட கொள்கைக்கு ஆதாரம் இருப்பதை நினைவூட்டுகிறது.)

இந்த எதிர்வுகளை உட்கொண்டு எழுந்ததுதான் திராவிட இயக்கம். எனவே திராவிடர் இயக்கம், பழமைவாத, மீட்புவாத இயக்கமாகக் காலத்தின் கட்டாயத்தினால் தோன் றிய ஒன்று.

ஆனால் சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்குமான முரண் பழங்காலத்திலேயே தோன் றியிருந்ததை நம்மால் உணரமுடிகிறது. நக்கீரர் பற்றி வழங்கிவரும் கதை இதை உணர்த்தும். குயக்கொண்டான் என்பவன் சமஸ்கிருதம் உயர்ந்தது என்று வாதிட, நக்கீரர் தமிழே உயர்ந்தது என்று வாதிட்டும் இறந்தவனைப் பிழைக்க வைத்தும் நிரூ பித்ததாகக் கதை. இதனைத் தாழ்வு மனப்பான்மையினால் எழுந்த கதை என்றுதான் மதிப்பிட முடியும். இந்தத் தாழ்வு மனப்பான்மையை தமிழுக்கு இலக்கணம் எழுத முன்வந்தவர்களிடமும் காணலாம். இலக்கணக் கொத்து எழுதிய சாமிநாத தேசிகர் என்பவர், “ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று அறையவும் நாணுவரே அறிவுடை யோர்” என்று தமிழை இழித்துக் கூறியுள்ளார்.

’1800ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலினைப் படைத்த வி. கனக சபை, பழந்தமிழர் நாகரிகம் குறித்தும் திராவிடர் வரலாறு குறித்தும் முதன் முதலில் சிந்தித்தவர். திராவிட இயக்கத்தின் பிற முன்னோடிகள் எனப் பின்வருவோரைக் கூறஇயலும்: பரிதிமாற் கலைஞர், (பார்ப்பனராக இருந்தாலும் தனித்தமிழ் வளர்க்க முற்பட்டவர், தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை முதன்முதல் வலியுறுத்தியவரும் ஆவார்), ஞானியாரடிகள் (சைவப்பற்று மிகுந்தவராயிருந்தாலும், திராவிட உணர்வி லும் தனித்தமிழ்ச் சிந்தனையிலும் ஈடுபட்டவர், இந்தித்திணிப்பை எதிர்த்தவர்), திரு.வி.க. (தூய தமிழும் காந்தியமும் சமுதாயச் சிந்தனைகளும் வளர உழைத்தவர்), இப்படிப் பலர் தமிழகத்தில் பழந்தமிழ்ச் சிறப்பையும் திராவிட இனப்பற்றையும் வளர்த்தனர். முற்றிலும் காந்தியவாதியாக இருந்த திரு.வி.க.வும், காங்கிரஸ் இயக்கத் தில் காணப்பட்ட பார்ப்பன ஆதிக்கம் காரணமாகவே திராவிடச் சார்புக்கு மாற நேர்ந்தது.

‘திராவிட’ என்ற சொல்லை அமைப்பு ரீதியாக முதன்முதலாகப் பயன் படுத்தியவர் டாக்டர் சி. நடேசன். 1912இல் உருவாகிய சென்னை ஐக்கிய சங்கம் என்னும் அமைப்பிற்கு 1913இல் திராவிடர் சங்கம் என்ற பெயரை வைத்தவர். (திராவிடன் இல்லம் என்ற மாணவர்களுக்கான விடுதியையும் நடேசன் நடத்தினார்.) இந்தத் திராவிடர் சங்கமே நீதிக்கட்சியாக மாறியது என்று கூறுவர். 1925 காஞ்சிபுரம் மாநாட்டில் பெரியார் காங்கிரஸிலிருந்து பிரிந்து திராவிட இயக்கத்தைத் தொடங் கினார். (இதற்குப் பின்னணியில் வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவியில் நடத்திய பாட சாலையில் உணவுப்பரிமாறலில் சாதிய நோக்கு கடைப்பிடிக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் இருந்தன.)

     பழங்காலத்தில் திராவிட என்ற சொல் தமிழை மட்டுமே குறிப்பதாக சமஸ்கிரு தத்தில் கையாளப்பட்டது. அது தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுபவர்களைக் குறிக்கவில்லை. திருஞானசம்பந்தரை சங்கராச்சாரியார் திராவிட சிசு என்று குறித்தது நோக்கத்தக்கது. சமஸ்கிருதத்தின் வாயிலாக இந்த நோக்கு மலையாள, கன்னட, ஆந்திர மாநிலங்களில் பரவியிருந்ததால் அங்குள்ளவர்கள் தங்களை திராவிடர்களாக எண்ணவே இல்லை என்பது நோக்கவேண்டிய ஒன்று. ஆனால் தமிழகத்தில் மட்டும் சில ஆந்திரர்களும் மலையாளிகளும் நீதிக்கட்சியில் ஈடுபட்டிருந்தனர் (அவர்களும் திராவிட என்ற நோக்கினை ஏற்றவர்களா என்பது சந்தேகத்திற்குரியது.)

     1944 ஏப்ரல் 4இல் சேலத்தில் நடந்த மாநாட்டில் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக மாற்ற அண்ணாதுரை தீர்மானம் கொண்டுவந்தார். (சக்கரவர்த்தி இராஜ கோபாலாசாரியார் கொண்டுவந்த குலக்கல்வி முறையும் இந்தித்திணிப்பும் ஓரளவு இதற்குக் காரணங்கள். 1938இல் இதற்குமுன்பே முதல் இந்தி எதிர்ப்பு இயக்கம் தோன்றிவிட்டது.) அண்ணாவின் தீர்மானத்தை ஏற்ற பெரியார் ஈ.வெ.ரா., புதிய இயக்கத்தை ஆரம்பித்தார். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து திராவிடர் கழகம் உருவாகியது. சில ஆண்டுகள் பின்னர், பெரியார் ஈ.வெ.ரா. திருமணத்திற்குப் பிறகு “கழகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகக் கழக நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டன.”

     இந்நிலையை    மாற்றப் பெரியார் தலைமைப் பதவியை இராஜிநாமா செய்

     யாமல் கழகத்தில் செயலாற்றிக் கொண்டிருப்பதால் இப்பொழுதிருக்கிற நாட்டு

     நிலையில் மக்களின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரிதும் ஊறு பயக்கும் என்று

     இக்கமிட்டி கருதுவதால் கழகக் கொள்கைகளும் இலட்சியமும் நசுக்கப்பட்டுப்

     போகும் என்று அஞ்சுவதால் திராவிட முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை

     ஏற்படுத்திக்கொண்டு செயலாற்றுவது

என்று தீர்மானம் கொண்டுவந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் அண்ணா.

     சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் இலக்கியநோக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. பகுத்தறிவை வலியுறுத்துகின்ற சிந்தனை பெருகியது. 1930 முதல் 1965 வரை பேசியும் எழுதியும் பகுத்தறிவுக் கருத்துகளை வளர்த்துவந்தனர் திராவிட இயக் கத்தினர்.

     திராவிட இயக்கங்கள் செய்த பத்திரிகைப் பணி குறிப்பிடத்தக்கது. வடமொழி கலவாத தமிழை ஜனரஞ்சகப்படுத்தியதில் இப்பத்திரிகைகளுக்குப் பெரியபங்குண்டு. நாவல் சிறுகதை போன்ற துறைகளில் சாதனை படைக்கவில்லை என்றாலும், திரைப் படம், நாடகம், கவிதை, பத்திரிகைத் தமிழ் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தது திராவிடஇயக்கம். பட்டிமன்றம் என்ற புதிய சமூகநிகழ்வினை அறிமுகப்படுத்தியதும் திராவிட இயக்கமே.

     பெரியார் 1925ஆம்ஆண்டு குடிஅரசு வார இதழைத் தொடங்கினார் பகுத்தறிவு  எழுத்தாளர்களுக்குக் குடிஅரசு இதழ் வாய்க்காலாக அமைந்தது. 1935ஆம் ஆண்டு விடுதலை நாளிதழ் பெரியாரால் தொடங்கப்பட்டது. 1942இல் திராவிட நாடு என்ற இதழை அண்ணா தொடங்கினார். 1949இல் மாலைமணி என்ற இதழைத் தொடங் கினார். 1953இல் நம்நாடு இதழ் தொடங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியால் முரசொலி இதழ் 1942இல் தொடங்கப்பட்டது. 1963இல் அண்ணாவால் காஞ்சி என்னும் இதழ் தொடங்கப்பட்டது. தமிழ் உலகம், தனிஅரசு, தம்பி, தென்னகம், அறப் போர், தென்னரசு, அறிவுப்பாதை, போர்வாள் போன்ற வார ஏடுகளும், சமதர்மம், குயில், மன்றம், புதுவாழ்வு, குத்து£சி, பூமாலை போன்ற வார ஏடுகளும் நடத்தப் பட்டன.

     தமிழின் முதன்மையை வலியுறுத்தியவர்களில் இரு பிரிவினர் இருபதாம் நூற்றாண்டில் உருவாயினர். ஒருபிரிவினர், கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்று, ஈ.வெ.ரா. பெரியாரின்பின் சென்றவர்கள். இன்னொரு பிரிவினர், சைவ சித்தாந்தக் கொள்கையே தமிழரின் தனிக்கொள்கை என்ற சிந்தனைகொண்டவர்கள். அநேகமாக இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பார்ப்பனரல் லாத புலமை/கல்வித்துறை ஆய்வாளர்கள் அனைவருக்கும் தமிழும், சைவமும் இரு கண்களாகவே இருந்தன. இவர்களை நாம் திராவிட இயக்கத்தினராக ஏற்க முடியாது என்றாலும் திராவிட இயக்கச் சார்பு கொண்டவர்கள் என நோக்கலாம். அல்லது சைவத்தமிழ் ஆய்வாளர்கள் என்று குறிக்கலாம். 1950வரை இந்த நிலை இருந்தது. அதற்குப் பின்னர், புதிய கல்வித்துறை ஆய்வாளர்கள் வந்த போது, அவர்கள் தமிழின் முதன்மையை ஏற்ற திராவிட இயக்கச் சார்பாளராக மாறினர். சைவம் பின்னுக்குச் சென்றது.

     திராவிட இயக்கச் சார்பான சைவசமயப் புலவர்கள், தமது நம்பிக்கைகளை உறுதியாக ஏற்றனர், அவர்கள் சில சமயங்களில் கம்பராமாயணத்தில் உள்ள ஆரியக் கற்பனைகளை மறுத்தும் எழுதினர். தாங்களே சமயத்தை நம்பும் இவர்கள், பிறர் நம்பிக்கைகளை மறுக்கும் முயற்சியில் ஈடுபட்டது ஏன்? சைவசமயம் தமிழரின் முதற்சமயம் என்றால், அதில்மட்டும் புராணக்கதைகள் இல்லையா? இது போன்ற கேள்விகள் இவர்களிடம் ஏன் எழவில்லை என்பது நம் சிந்தனைக்குரியது. பார்ப்பன/ பார்ப்பனிய எதிர்ப்புச் சிந்தனையுடனும் கடவுள் மறுப்புக் கொள்கையுடனும் இலக்கிய விமரிசனத்தில் ஈடுபட்டவர்களை திராவிட இயக்க இலக்கிய விமரிசகர்கள் எனலாம்.

திராவிட இயக்க முன்னோடி, சைவத்தமிழ் ஆய்வாளர்-பெ. சுந்தரம் பிள்ளை

     திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி, மனோன்மணீயம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். மனோன்மணீய நாடகத்தில் தமிழ்த்தெய்வ வணக்கமாக இடம்பெற்ற செய்யுள்தான் இப்போது சிற்சில மாற்றங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைந்துள்ளது. இப்பாட்டில் ‘ஆரியம்போல் வழக் கொழிந்து போகாமல் இளமையாக உள்ளது தமிழ்’ எனக்குறிப்பிடுகின்றார். ‘கன்னட மும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும்’ என்று தமிழே தென்னிந்திய மொழிகளின் தாய் என்பதையும் வலியுறுத்துகிறார். தமிழ்நாட்டை திரவிடநாடு என்று குறிப்பிடுகிறார். இச்செய்யுளில் சில விமரிசனங்களும் உள்ளன.

     வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள்

     உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி

என்பதில் வடமொழியின் மனுநூல் மீதான விமரிசனம் அடங்கியுள்ளது.

     பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

     எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

என்பதில் பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களின் இயற்கையான கற்பனைநெறி வயப்பட்ட இலக்கியங்களைக் கற்றவர்கள் பொருளற்ற புராணக் கற்பனைகளை உடைய வடமொழிச் சார்பான நூல்களைப் படிப்பார்களோ என்ற விமரிசனத்தை முன்வைக்கிறார். புராணக்கதைகளையும் சாடுகின்றார். தமிழ், இயற்கையான கற்பனை நெறியில் அமைந்த இலக்கியங்களைக் கொண்டது, வடமொழி அவ்வாறல்ல என்பது உட்கிடை.

     வடமொழிப் புராணக் கதைகளில் சமஸ்கிருதத்தை உயர்த்த வேண்டுமென்று, கல்வித்தெய்வம் சரஸ்வதிக்கு வலது கண் வடமொழி எனவும், தமிழ் அவளுடைய இடது கண் எனவும் புனைந்துரைத்துள்ளனர். (வலப்புறம் உயர்வு, இடப்புறம் தாழ்வு என்ற கருத்து நிலை. இக்கருத்துநிலை பெண்ணை அடிமைப்படுத்துவதாக, சிவன்-பார்வதி அர்த்தநாரீஸ்வர உருவிலும் இருப்பதைக் காணலாம்). அதேசமயம், சரஸ்வதி கிழக்குநோக்கி அமர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளனர். கலைமகள் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தால், அவளது வலது கண் தெற்குப்புறத்திலும், இடக்கண் வடப் புறத்தி லும்தானே அமைந்திருக்க முடியும? எனவே தென்மொழியாகிய தமிழே வாணியின் வலக்கண் என்று புலனாகிறது என்று தர்க்கரீதியாக வாதிடுகிறார் சுந்தரம் பிள்ளை.

     முதன்முதலில் திராவிடர் பெருமையைத் தமது நூல்களின் மூலமாக உணர்த்த முயன்ற இவரைத் திராவிட ஆராய்ச்சிகளின் தந்தை என்று கூறுவது பொருத்தமாகும். சென்னைக் கிறித்தவக் கல்லு£ரித் திங்கள் இதழிலே முதலில் கட்டுரைக¬ளாக வரையப்பெற்றுப் பிறகு நூல்வடிவம் பெற்ற இவரது ஆய்வுரைகள் குறிக்கத்தக்கன என்று கைலாசபதி கூறியுள்ளார். பத்துப்பாட்டு என்னும் பொருள் பற்றிப் பொது வாகவும் நெடுநல்வாடை பற்றிச் சிறப்பாகவும் சொல்லும் ஆய்வுரை The Ten Tamil Idylls  என்பது.

பெரியார் ஈ.வெ. ராமசாமி (1897-1973)

பெரியாரின் இலக்கிய விமரிசனம், அவருடைய பின்வரும் பணிகளோடு தொடர்புடையது.

1. பகுத்தறிவு-கடவுள் எதிர்ப்பு, மத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு.

2. சீர்திருத்தம்-எழுத்துச் சீர்திருத்தம், புராண இதிகாச எதிர்ப்பு, கலப்பு மணம், கைம் பெண் மணம், பெண்ணுரிமை.

3. ஆரிய எதிர்ப்பு-கடவுள் நம்பிக்கை, மூட நம்பிக்கை, விழாக்கள் ஆகியவற்றை எதிர்த்தல்.

4. பொதுவுடைமைச் சார்பு-நிலவுடைமை சார்ந்த கருத்துகளை எதிர்த்தல், வர்க்கப் பிரிவு, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஆகியவற்றை எதிர்த்தல்.

5. இலக்கியம்-புராணங்கள், இதிகாசங்கள் எதிர்ப்பு, மொழி பற்றிய கருத்துகள்.

     பெரியார் ஆராய்ச்சிநூல்கள் எழுதவில்லை. சொற்பொழிவாளராகவே இருந்தவர். மக்களை நேரடியாகச் சென்று அடையவேண்டும் என்பதே அவரது நோக்கம். அவருடைய சொற்பொழிவுத் தொகுதிகள் நூல்களாக வந்துள்ளன. வே. ஆனைமுத்து வின் பெரியார் சிந்தனைக் களஞ்சியம் என்னும் தொகுப்பு முக்கியமானது.

மொழி பற்றிப் பெரியார்

     பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல. அவர் வாழ்நாள் முழுதும் ஆங்கிலத்தைக் கொண்டாடுவதையும் தமிழை இழித்துப் பேசிவந்ததையும் காணலாம். குறிப்பிட்ட இடத்தில் வாழும் மனிதர்கள் தங்கள் கருத்து களைப்பகிர்ந்து கொள்ளத் தாங்கள் உணர்வதிலிருந்து எழுந்ததே மொழி என்னும் அவருடைய கருத்து குறையுடையது. மொழி வெறும் பகிர்வுச்சாதனமாக மட்டும் அமைவதல்ல. அது பண்பாட்டையும் உருவமைக்கிறது என்ற விஷயத்தை அவர் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை.

     தொல்பழங்காலத்திற்கு முன்னரே மக்களினம் எல்லாம் கலந்து பழகும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பின் ஒரே மொழி உலகம் முழுவதும் பரவியிருக்கும் என்பது பெரியாரின் கருத்து. (விடுதலை 15-10-1962 தலையங்கம்). இது கத்தோலிக்கக் கிறித்துவச் சிந்தனை.

     எவ்வாறு மதமானது புகுத்தப்படுகிறதோ அவ்வாறே தாய்மொழியும் புகுத்தப்

     படுவதுதான். மொழிமீது வீணான பற்றுக் கொள்ளக்கூடாது. ஒன்றன் பயனறியாமல்

     தொடர்போ மதிப்போ பற்றோ வைக்கக் கூடாது. ஒருமொழியின் தேவை

     முக்கியத்துவம் எல்லாம் அது பயன்படுகிற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது

     எவ்வளவு பெரிய காவிய, இலக்கியங்களை உடைய மொழியாக இருந்தாலும் சரி.

     மொழி அன்றாட வாழ்வில் அறிவை வளர்ப்பதாக எப்படி உதவுகிறதோ அதைக்

     கொண்டே மொழியை அளக்க வேண்டும்.

என்று விடுதலைஇதழ்க் கட்டுரை ஒன்றில் கூறுகிறார்.

     பயனற்ற ஒன்றை முயன்று கற்பது அறிவற்ற செயல், அதனால் ஆங்கிலத்தைக் கற்கவேண்டுமே தவிர தமிழைக் கற்பதில் பயனில்லை என்றார். சாதிநோக்கிற்காக வடமொழியை இகழ்ந்த பெரியார், சாதியை வெறுத்து சமதர்மத்தை மலரச்செய்ய உதவுவது ஆங்கிலமே என்றார். ஆனால் இப்படிப்பட்டவர், இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் எப்படி மனமுவந்து ஈடுபட்டார் என்பது நம் மனத்தில் எழும் கேள்வி.

     சமூகத்தில் மொழிபற்றி வழங்கிவரும் இருவிதக் கருத்துகளைக் காணலாம். ஒருவிதநோக்கு, மொழி கருத்துணர்த்துவதற்கும் வாழ்க்கையில் பலவிதமான பயன் பாடுகளுக்குமான கருவியே என்பதாகும். இதனைக் கருவிநோக்கு (Instrumental outlook)எனலாம். இப்படிப்பட்டவர்கள் நமக்கு ஆங்கிலம் பயன்படுமானால் அதனையே தாய் மொழியாக வைத்துக்கொள்ளலாமே என்று சொல்பவர்கள். ஆங்கிலப் பள்ளிகளையும் ஆங்கிலக் கல்வியையும் வலியுறுத்துபவர்கள். நம்நாட்டில் பெரும்பாலான பார்ப்பனர் களிடமும் மேட்டுக்குடி மக்களிடமும் இத்தகைய நோக்கே உள்ளது. பெரியாரின் நோக்கு இதிலிருந்து வேறுபட்டதன்று. மொழிபற்றிய வெற்றுக் கூச்சல்கள் கூடாது, அதனால் மொழி வளராது என்ற அளவில் பெரியாரது கருத்துகளை நாம் உடன்படலாம்.

     இன்னொருவித நோக்கு கலாச்சார நோக்கு (Cultural outlook). மொழி வெறும் கருவியல்ல. நமது கலாச்சாரத்தை நமக்குள் உருவாக்குகின்ற ஒன்று. மொழியின்றிக் கலாச்சாரம் அல்லது பண்பாடு என்பது இல்லை. எனவே நமது பண்பாட்டை நாம் அறிந்து போற்றவும் அதனைக் கடைப்பிடிக்கவும் மொழி என்பது மிக முக்கியமானது. கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்தது மொழி என்பதால் நமது வாழ்க்கையோடும் இரண்டறக்கலந்த தொடர்புடையது. இம்மாதிரி நோக்குதான் பெரியாரைத் தவிர்த்த ஏனை திராவிட இயக்கத்தவர்களுக்கு இருந்தது. எனவே தமிழுக்காக உயிரும் கொடுப் போம் போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள். இந்தி எதிர்ப்பில் ஈடுபட் டார்கள். பாவாணர் முதல் பெருஞ் சித்திரனார், குணா வரை இத்தகைய நோக்கில் ஊறியவர்கள்.

     இந்தப் பார்வையின் கிளைத்தேற்றங்கள் பின்வருமாறு அமையும்:

1. மொழி நமது கலாச்சாரத்திற்கு ஆதாரமானது. எனவே அதைப் பிறமொழிகளின் ஆதிக்கத்திலிருந்து காக்கவேண்டும். இல்லாவிட்டால் அது அழிந்துவிடும்.

     (அதனால்தான் மொழிக்காவலர், முத்தமிழ்க்காவலர் போன்ற காவல்காரச் சொற்களை விரும்பிப்பட்டங்களாக ஏற்றார்கள் திராவிட இயக்கத்தினர்)

2. மொழி அழிவதிலிருந்து காப்பாற்றவேண்டுமென்றால் புதிதுபுதிதாகச் சொற்களை உருவாக்க வேண்டும். அவை தனித்தமிழ்ச் சொற்களாக அமையவேண்டும்.

     (இதன் விளைவாகத் தமிழுக்கு நல்ல தமிழ்ச் சொற்கள் கிடைத்தன. குறிப்பாக முப்பதுகளின் இறுதியில் சென்னைமாகாணத் தமிழ்ச்சங்கம் கலைச்சொல்லாக்கத்தில் ஆற்றிய பணி சிறப்பானது).

     மூன்றாவதான ஒரு சிந்தனைப் போக்கும் உள்ளது. அதுதான் மிகவும் முக்கியமானது. மொழியின்றிச் சிந்தனை இல்லை. ஒருவன் குழந்தைப் பருவத்தில் சிந்திக்கத் தொடங்குவதே மொழியின் வாயிலாகத்தான். மொழியற்ற விலங்குகளுக்கோ, அல்லது ஓநாய்மனிதன் (நாகரிகமின்றி விலங்குகளுக்கு மத்தியில் காட்டில் வளர்ந்த மனிதன்) போன்றவர்களுக்கோ சிந்தனை என்பது கிடையாது. அடிப்படை உள்ளுணர்வுகள் (basic instincts) மட்டுமே உண்டு. பசி, பாலியல் நாட்டம், எதிரிகளிடம் பயம் போன் றவை அடிப்படை உணர்வுகள். எனவே மனிதன் மனிதனாக இருப்பதில் சிந்தனை-பகுத்தறிவு மிக முக்கியமானது. பகுத்தறிவை உண்டாக்குவது மொழி. ஃப்ராய்டுக்குப் பின்வந்த லக்கான் போன்ற பின்னமைப்புவாதிகள், மனிதன் சமூகத்திற்குள் புகுவதே மொழியின் வாயிலாகத்தான் என்று கூறியுள்ளனர். எனவே மொழியில்லையேல், சிந்த னையில்லை, சமூகம் என்பது இல்லை, பண்பாடு இல்லை, சுருங்கச் சொன்னால் எதுவுமே இல்லை.

எழுத்துச் சீர்திருத்தம்

     மொழியும் எழுத்தும் ஒன்றே எனப் பலர் நினைக்கின்றனர். அது தவறு. ஒரு மொழியைப் பலர் பலவிதமான எழுத்துமுறைகளால் எழுதலாம். அதனால் மொழி மாறுபடுவதில்லை. எந்த எழுத்து வகையில்-லிபியில் எழுதினாலும் மொழி தனது தனித்தன்மையைப் பெரும்பாலும் இழப்பதில்லை. சமஸ்கிருதம், கிரந்தம், நாகரி, ரோமன் முதலிய எழுத்து வடிவங்களில் இன்று எழுதப்படுகிறது. ரோமன் லிபியில் படிக்கும் ஒருவன் தான் சமஸ்கிருதம் படிப்பதாக உணர்கிறானே ஒழிய ஆங்கிலமோ, ஜெர்மனோ படிப்பதாக நினைப்பதில்லை. இதற்குக் காரணம் மொழி என்பது லிபி யில் (எழுத்துவடிவத்தில்) இல்லை,

     (இன்று தமிழ்வாக்கியங்களையும் ரோமன் எழுத்துவடிவில் எஸ்எம்எஸ் அல்லது மின்னணுஅஞ்சல் போன்றவற்றில் அனுப்பும் வழக்கம் வந்துவிட்டதால் இந்தக் கருத்து இக்கால இளைஞர்களுக்கு எளிதில் புரியும்.)

     மேலும் லிபி அல்லது எழுத்துமுறை அல்லது வரிவடிவம் என்பது காலத் திற்குக் காலம் மாறி வருவது. தமிழின் எழுத்துமுறை எப்படியெல்லாம் மாறிவந்திருக் கிறது என்பதை ஐராவதம் மகாதேவன் போன்ற எழுத்து வல்லுநர்கள் பல நூல் களில் விளக்கியுள்ளார்கள். பெரியார் எழுத்தைப்பொறுத்தவரையில் மிகவும் முன் னேற்றமான கருத்துகளைக் கொண்டிருந்தார். அதனால் எழுத்தமைப்பில் சில சீர்திருத் தங்களைச் செய்தார். அவை இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இலக்கிய விமரிசனம்

     தமிழிலக்கியம் எல்லாமே பார்ப்பனரின் வருகைக்குப் பின்னர் இயற்றப் பட்டதே. தமிழனுக்கு என்று தனித்த இலக்கியம் ஒன்று கூட இல்லை என்பது பெரியார் கருத்து. சங்க இலக்கியத்திற்குப் பிறகு தமிழரின் நாகரிகம் பண்பாடு கலை போன்றவற்றைக் காண்பது அரிது. நமக்கு இருக்கும் இலக்கியங்கள் எல்லாம் கடவுள் தன்மையைப் புகுத்தக்கூடியதாக, மடமையை வளர்க்கக் கூடியதாக, அறிவைப் பாழாக்கக்கூடியதாக, நம்மை மானமற்றவராக்கி இழிவு படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. நமது இலக்கியங்கள் தன்னம்பிக்கையை இழக்கச் செய்கின்றன என்கிறார். சில சமயங்களில் பெரியாரின் வாதங்கள் நகைச்சுவையாகவும் இருக்கும்:

     பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்க அடிகள் எல்லாம் தமிழ்படித்துச் சாமி

     யானவர்கள். தமிழ் படித்தவனெல்லாம் சாமியானானே தவிர எவனும் பகுத்தறிவு

     வாதியாகவில்லை.

     சங்கஇலக்கியம் பற்றிப் பெரியார் அதிகம் பேசவில்லை. அவர் அதிகமாகக் குறைகூறாத ஒரே இலக்கியம் திருக்குறள்தான்.

திருக்குறள் பற்றிப் பெரியார்

     வள்ளுவர் யார், எந்தக் குலதைச் சார்ந்தவர் என்று நிச்சயமாகக் கூறமுடி

     யாது. வள்ளுவர் ஆரியத்தை எதிர்ப்பவர்; ஆரியக் கருத்துகளைக் கண்டிப்பவர்;

     அவைகளை வெறுப்பவர் என்றுதான் நமக்குத் தெரிகிறது…குறளாசிரியர்

     கடவுளையும் மோட்ச நரகத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. குறளில் அறம்

     பொருள் இன்பம் என்ற அளவில்தான் காணமுடியுமே தவிர, வீடு-மோட்சம்

     பற்றி அவர் கூறியிருப்பதாக இல்லை…திருக்குறளின் முதல் அத்தியாயத்தில்

     கடவுள் வாழ்த்து என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக்

     கொள்கைகள் இடம்பெறவில்லை. கடவுள் வாழ்த்து கூறப்படும் பத்துப்

     பாட்டிலும், ஒரு பாட்டிலாவது வள்ளுவர் கடவுள் என்ற சொல்லைக் கையாள

     வில்லை…வள்ளுவர் கடவுள் வாழ்த்து பாடியிருப்பதெல்லாம் ஒவ்வொரு

     நற்குணத்தை வைத்து அந்தப்படியாக நடக்கவேண்டும் என்பதாகவே பத்துப்

     பாட்டிலும் பத்துவிதமான குணங்களைக் கூறினார்

என்பவை பெரியாரின் கருத்துகள்.

     குறள் முக்காலத்திற்கும் முழுவதும் பொருந்துமென்பது தவறு. இக்காலத்திற்கு ஒவ்வாதனவும் சில அதில் உண்டு; குறளில் காணப்படும் அனுபவ உண்மைகளும், அறிவுப் பண்புகளும், இழிவுநீக்க முயற்சிக்கும் முன்னேற்ற முயற்சிக்கும் பெரும் ஆதரவு தரக்கூடியனவாய் உள்ளன. திருக்குறளில் ஆபாசத்திற்கு இடமில்லை. பாவம் என்பதற்காக பயப்படும் கோழைத்தனமான கருத்துகளுக்கு இடமில்லை. அதனால் தான் அதைக்காட்டிப் பிழைக்கமுடியாது எனக் கருதினர் ஆசாரியர். அதனால் திருக்குறள் அதிக செல்வாக்குப் பெறமுடியாது போயிற்று. திருக்குறள் பெருமையை அடையாததற்குக் காரணம், அது ஒரு திராவிட நூல் என்பதால்தான். குறளிலும் ஆரி யத்திலுள்ளது போலச் சில காட்டுமிராண்டிப் பண்புகள் உள்ளன. மூடநம்பிக்கையும் நிறைந்துள்ளது என்றும் பெரியார் கூறுகிறார்.

சிலப்பதிகாரம் பற்றி

     சேரன் செங்குட்டுவன் மாடலன் என்னும் மறையவனின் சூழ்ச்சிவலை

     யில்சிக்கி ஆரியத்திற்கும் ஆரியமடமைக்கும் மண்டியிட்டவன் ஆனான். ஆரியப்

     படையை வென்ற சேரனால் ஆரியப் பஞ்சாங்கத்தை வெல்லமுடியவில்லை.

     சிலப்பதிகாரத்தால் தமிழகம்பெற்ற பயன் யாது? ஆரியத்தை வென்ற வீரமா?

     ஆரியத்தின் முன் வீழ்ந்த வீழ்ச்சியா?

     கண்ணகி சாபமிட்டு மதுரையை எரிக்கும்போது ஆரியர்களைத் தீ எரிக்கக்

     கூடாது என்று கட்டளையிடுகிறாள்.  இது எப்படிப்பட்ட சூழ்ச்சி?

     சிலப்பதிகாரமானது போன ஜன்மத்தையும் வருகிற ஜன்மத்தையும் கூறி

     தலைவிதியைக் காட்டி மனிதனை இழிவுக்கு அழைத்துச் செல்கிறது. முட்டாள்

     தனமான கற்பையும் பெண்ணடிமைத் தனத்தையும் வலியுறுத்தும்

     சிலப்பதிகாரம் நமக்குத் தேவையா?

     பாண்டியன் விசாரணை செய்து தண்டனை கொடுத்தான் ஆனால் கண்ணகி

     விசாரணை எதுவும் புரியாமல் அப்பாவி மக்களைக் கொல்கிறாள். அவள்

     எப்படிக் கற்புக்கரசியாவாள்? வணங்குவதற்கு உரியவள் ஆவாள்? தெய்வம்

     ஆவாள்? பாண்டியன் குற்றவாளி என்பதுதானே சிலப்பதிகாரக் கதையாக

     உள்ளது? தமிழனைக் குற்றவாளியாக்கிக் காட்டுவதுதான் தமிழர் பண்புகூறும்

     இலக்கியமா?

இப்படியெல்லாம் வினவும் பெரியார் தமக்கே உரிய முறையில் சுருக்கிச்சொல்லி விடுகிறார்: “சிலப்பதிகாரம் விபசாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷமாகும்”.

     கம்பராமாயணத்துக்கும் சிலம்புக்கும் இந்த நாட்டில் மதிப்பு இருக்கிறது என்றால் இந்த

     நாட்டு மக்களுக்கு அறிவும் இல்லை, மானமும் இல்லை, இன உணர்ச்சியும் இல்லை

     என்றுதானே பொருள்…இவைகளின் தன்மையே இப்படி இருந்தால், இவைகளைத்

     தாங்கி நிற்கும் தேவாரம், திருவாசகம், திருமறை, பிரபந்தம், பெரியபுராணம் முதலிய

     குப்பை கூளங்களின் யோக்கியதை எப்படி இருக்கும்?

இராமாயணம் பற்றி

     பெரியாருடைய இராமாயணப் பாத்திரங்கள் என்ற நூல் 1930இல் வெளி வந்தது. இராமாயணப் பாத்திரப் படைப்பின் ஆபாசத்தைச் சுட்டிக்காட்டுவதாக அந்நூல் உள்ளது.

     புத்தநெறி, ஓரளவிற்கு அறிவூட்டுவதாக அமைந்ததால் அதை அழிததுத் தம் நெறியைப் புகுத்தவே இராமாயணக் கதை உருவாக்கபட்டது. புத்தருக்குப் பின்னரே இராமன் கிருஷ்ணன் போன்ற கதைகள் உருவாக்கப்பட்டன.

     கம்பராமாயணம் வெறும் பொய்க்களஞ்சியம். அதன் கற்பனை சிற்றின்ப சாக ரம். ஒருவிதத்தில் இது ஒரு காமத்துப்பால். அதன் நடப்பு காட்டுமிராண்டித் தனத்தின் உருவம்.

1. இராமாயணம் எந்த ஒரு சரித்திர சம்பந்தமானதோ நடந்த நடப்புகளைக் கொண்டதோ அல்ல.

2. காட்டுமிராண்டிக் காலத்திய உணர்ச்சியைக் கொண்டது. ஆரியப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.

3. கோர்வையற்றது. முன்னுக்குப் பின் முரணாக உள்ளது, மனிதப் பண்பிற்கு ஏற்றதல்ல.

4. உண்மையான வீரமும் யுத்த முறையும் இல்லாது கற்பனைவீரமாக உள்ளது.

5. அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தொடர்பில்லை. தேவர்கள் இராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கமில்லை. பாத்திரங்களின் வயது முரண்பாடாக உள்ளது.

6. ஆதாரங்களும் பொருத்தமாகத் தரப்படவில்லை. பாத்திரங்களின் சக்தி சில நேரங்களில் காணாமல் போகிறது.

7. இராமாவதாரம் இராவணனைக் கொல்வதற்கே உருவானது போல் உள்ளது.

     பெரியார் இராமாயணத்தைப் பற்றிக்கூறிய செய்திகள் யாவுமே வான்மீகியின் இராமாயணத்தை அடியற்றி உள்ளனவே தவிரக் கம்பரைப் பற்றியனவாக இல்லை.

புராணங்கள் பற்றி

     புராணம் என்றாலே பொய். கிறுக்கியல் மூளைகளின் படைப்பே புராணங்கள். அக்கிறுக்கியல் மூளைக்கு மதம் என்னும் கள் ஊற்றிச் சாதிநலம் என்னும் தேளையும் கொட்டவிட்டால் அந்த மூளை எப்படிச் செயல்படுமோ அப்படிச்செயல்பட்டதன் வெளிப்பாடே புராணங்கள்.

     கந்தபுராணக் கதையும் இராமாயணக் கதையும் ஒரே அடிப்படைக் கருத்தை உடையதாகும். ஒன்றை ஆதாரமாக வைத்துப் பிறிதொன்று இயற்றப்பட்டுள்ளது. இப்படிச் சொல்பவர், தமது நகைச்சுவைப்பாணியில் சொல்கிறார்:

     மக்கள் காட்டு மிராண்டிகளாய் வாழ்நதபோதே உருவாக்கப்பட்ட கடவுளே சிவன்.

     விஷ்ணு சிறிது நாகரிகமடைந்தபின் உருவாக்கப்பட்ட கடவுள். எனவே சிவன்

     முந்தியவன். அதனால் கந்தபுராணமே இராமாயணத்தைவிட முந்தியதாகும்.

கலைகள்

     கலை கலைக்காகவே என்ற கொள்கையைப் பெரியார் ஏற்கவில்லை. கலை மக்களுக்காக இருக்கவேண்டுமென விரும்பினார். மக்களிடம் மறைந்திருக்கும் அறிவை வெளிப்படுத்தவும் தமக்கு வேண்டியவற்றைக் கற்கவும் து£ண்டுவனவாகக் கலைகள் அமையவேண்டும். கற்கத்தகுந்தவைகளையும் அறியவேண்டியவைகளையும் தொகுத்துத் தருவதே கலைகளின் பணியாக இருக்க வேண்டும்.

     கலையானது வெறும் இன்பமூட்டுவதாகமட்டும் அமைந்துவிடக்கூடாது. மக்கள் முன்னேற்றத்திற்காகவும், சமூகமுன்னேற்றத்திற்காகவும் உழைத்திடுவனவாகத் திகழ்தல் வேண்டும்.

     நம் கலைகளெல்லாம் மூடநம்பிக்கைகளையும் முட்டாள்தன்மைகளையும் விளைவித்து அவ்விளைவின் பயனைப் பார்ப்பனரின் ஏகபோகமாக்கி அதனால் ஆரியப் பார்ப்பனரின் மேலாதிக்கத்திற்கு நல்ல கொழுகொம்புகளாக மாற்றப் பட்டுவிட்டன.

     நாடகக்கலை பிற கலைகளைப் போல வெறும் பொழுதுபோக்கிற்காகவோ காமம் போன்ற சுவையுணர்வுகளுக்காகவோ இருநதுவிடக்கூடாது. நாடகம் என்பது ஒருவிஷயத்தைத் தத்ரூபமாய் நடித்துக்காட்டுவதோடு மக்கள் நடத்தைக்கு வழிகாட்டி யாகவும் ஒழுக்கங்களைக் கற்பிப்பதாகவும் இருக்க வேண்டும்.

     புராணக்கதைகளைக் கலைத்துக்காட்டியதிலும், கலை மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கினைத் தமிழ் மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிய வைத்ததிலும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் சமகால வாழ்க்கைக்குமான தொடர்பினைக் கேள்வி கேட்டதிலும் பெரியாரின் முக்கியத்துவம் உள்ளது.

     பாரதியையும் பெரியார், கிறுக்கன் பாரதி என்றுதான் குறிப்பிடுகிறார். ஒரு சமூகத்தின் கருத்துநிலையை அதன் இலக்கியங்கள் பெருமளவு வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அதனைத்தீர்மானிக்கவும் செய்கின்றன. பெரியார் அவ்வளவு து£ரம் இலக்கியத்தின் இன்றியமையாமையைக் குறித்துச் சிந்திக்க வில்லை. அவர் இலக்கியப் புலவரோ படைப்பாளியோ அல்ல. என்றாலும் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதன் தேவையை ஓரளவு அவர் உணர்ந்திருந்தார்.

அண்ணாதுரை (1909-1969)

     தி.மு.க. என்னும் கட்சியைத் தொடங்கி 1967இல் ஆட்சியைப் பிடிக்க வைத்தவர் பேரறிஞர் என்று போற்றப்பட்ட அண்ணா. தமிழ் மொழி, இலக்கியம், இனம், நாடு, தமிழர் பண்பாடு ஆகியவற்றில் உணர்வூட்டினார். சிறந்த பேச்சாளராகவும் ஓரளவு நல்ல எழுத் தாளராகவும் திகழ்ந்தார். பத்திரிகைக் கட்டுரைகள், நாடகம், திரைக்கதை, அரசியல் தமிழ், கடித இலக்கியம் என அவரது உரைநடைப் பணி பரந்துபட்டது. எண்ணற்ற கட்டுரைகளைப் படைத்துள்ளார். அதனால் அறிஞர் அண்ணா என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார்.

     உரைநடையில் புதிய இலக்கிய வடிவங்கள் பலவற்றை அண்ணா அறி முகம் செய்தார். ஊரார் உரையாடல், அந்திக் கலம்பகம், கார்ட்டூனாயணம் என்பவை அவற்றுள் சில. மாலைப்பொழுதில், திண்ணையிலும் குளத்தடியிலும் மரத் தடியிலும் ஆண்கள் ஊர்வம்பு அளப்பதுண்டு. இதனை ஊரார் உரையாடல் என அண்ணா வெளியிட்டார். அரசியல், சமுதாயநிலை பற்றி இவற்றில் விளக்கமாகப் பேசுவார். பெண்கள் ஓய்வுநேரங்களில் ஒன்றுகூடி ஊர் வம்பு அளப்பர். இதனை அந்திக் கலம்பகம் என்ற பகுதியாக ஆக்கினார். இவற்றில் மக்கட்பண்புகளையும் அரசியல் போக்குகளையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் அறிவியல் செய்திகளையும் எழுதி னார். அரசியல் கார்ட்டூன்களை வைத்து நகைச்சுவையாகக் கார்ட்டூனாயணம் என்ற பெயரில் எழுதினார்.

     அண்ணாவின் கட்டுரைகள் இலக்கிய மணம் உடையவை. அவரால் தமிழகத் தில் இதழ்கள் படிப்போர் எண்ணிக்கை பெருகியது. அண்ணாவின் எழுத்தினால் இதழ்ச் செய்திகள் இலக்கிய வடிவமாயின. தலையங்கம், கட்டுரை, சிறுகதை, புதினம், உரையாடல், கடிதம், என்னும் வடிவங்களில் சமுதாய, பொருளாதார, இலக்கியச் சிந்தனை களை அளித்தார். நாடகத்திற்குப் புத்துயிர் அளித்தார். நீதிதேவன் மயக்கம், கண்ணீர்த் துளி, இரக்கம் எங்கே, கல்சுமந்த கசடர் என 46 நாடகங்கள் எழுதினார்.

     சில நாவல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அண்ணாவின் மொத்தப்படைப்புகளாக சுமார் 1235க்குமேல் உள்ளன. இவை பதிப் பிக்கப்பட்டவை மட்டுமே. இன்னும் பல அவருடைய குறிப்பேடுகளில் உள்ளன. இதழ்களில் ஆசிரியர் என்ற முறையில் அவர் தீட்டிய இதழுரைகள் இரண்டாயிரத் திற்கும் மேல் என்பர். மேடைப்பொழிவுகள் கிடைப்பவை 200 இருக்கலாம். சட்ட மன்றச் சொற்பொழிவுகள் 1760 என பி. இரத்தினசபாபதி குறிப்பிடுகிறார்.

     ஆரியமாயை, நாடும் ஏடும், ஏ தாழ்ந்த தமிழகமே, நிலையும் நினைப்பும், தீ பரவட்டும், கம்பரசம், போன்ற நூல்களிலும், திராவிட நாடு, காஞ்சி, போன்ற இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளிலும் இலக்கியவிமரிசனங்கள் உண்டு.

     அண்ணாவின் காலத்திற்குமுன் இதழ்களில் மணிப்பிரவாளமும் கொச்சை மொழியும் ஆங்கிலக்கலப்பும் ஆட்சிசெய்தன. விடுதலை, குடிஅரசு, திராவிடநாடு இதழ்களில் தொடர்ந்து எழுதி இந்நிலையை மாற்றினார் அண்ணா. இதழ்களில் செய்திகள், இலக்கியவடிவம் பெறத் தொடங்கின. இதழியல் எழுத்து இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற நெறிமுறை உருவானது. இதனால் இதழ்கள் படிப்போர் எண்ணிக்கை அதிகமானது.

     தலையங்கம், கட்டுரை, சிறுகதை, புதினம், கற்பனை உரையாடல், கடிதம், இசைப்பாடல், கருத்துரை, திறனாய்வு, குறிப்புகள், கார்ட்டூன் போன்ற பகுதிகளில் சமுதாய, பொருளாதார, இலக்கியச் சிந்தனைகளை வழங்கியுள்ளார். சௌமியன், வீரன், குறும்பன், பரதன், துரை, சமதர்மன், ஒற்றன், நீலன், ஆணி, காலன், சம்மட்டி, பேகன், வழிப்போக்கன், வேலன், சிறைபுகுந்தோன், பாரதி, கொழு, நக்கீரன், கிராணிகன், சாவடி, பித்தன் போன்ற  புனை பெயர்களில் எழுதியுள்ளார். ஒரு முழு நேர அரசியல்வாதி என்னும் நிலையில் அவர் செய்த இந்தப் பணிகள் மிகப் பெரியவைதான்.

மொழி எளிமை அவர் வற்புறுத்திய ஒன்று.

     இலக்கியம் கோபுர உச்சியிலிருந்து குப்பைமேட்டுக்கு வரத் தயாராக

     இருக்கவேண்டும். கற்றோரும் மற்றோரும் பண்டிதரும் பாமரரும் பணக்

     காரனும் ஏழையும் படித்துணரும்பாங்கிலே எளிய நடையிலே இயற்கைக்

     கருத்துகள் கவின்பெற எடுத்துரைத்தும், ஏடுகள் எழுதப்படவேண்டும்.

என்று கூறும் அண்ணா நம்நாட்டு இலக்கிய கர்த்தாக்கள் இதற்கு நேர்மாறாகச் செய்து விட்டனர் என்கிறார். பகுத்தறிவற்ற தன்மையுடனே நம் இலக்கியங்களைப் பண்டிதர்கள் உருவாக்கினர். இதனால் சிற்றறிவுடையோர் நூல்களைப் படித்துச் சிந்திக்க முடியாவண்ணம் ஆகிவிட்டது என்று அவர் கூறினாலும், இது முழுவதும் ஏற்கக்கூடிய கொள்கை அல்ல. ஓர் அரசியல்வாதி, சமூகசீர்திருத்தவாதி என்ற அளவில் இது சரி.

     இலக்கியங்களுக்கு உரைஎழுதும்போது அவ்வுரை எளிதாகப் புரியும்படி இருக்க வேண்டும். ஆனால் நம் இலக்கிய உரைகள் மூலநூலைவிடப் பன்மடங்கு கடினமாகத் திகழ்கின்றன என அண்ணா கூறுகிறார்.

     நாட்டின் நிலை நவிலா ஏடு மாளட்டும். இலக்கியம் இறக்கட்டும். கலை

     கலையட்டும். நமக்கு வேண்டுவது ஏட்டைப் புரட்டினால் நாடு, நாட்டின்

     மக்கள், மக்கள் வாழ்க்கை, நாகரிகம், இன்னபிறவும் தெள்ளிதின் விளங்

     குதல் வேண்டும்.

என்பதில் இலக்கியத்தின் சமகாலத்தன்மையை வலியுறுத்துகிறார்.

     ஒரு காலத்திய ஏடுகள் பிறிதொரு காலத்தில் நிலைக்கும் கருத்திற்கும்

     பொருந்தாவெனின் அவை மாற்றப்பட வேண்டும். அந்தந்த காலத்திற்

     கும் கருத்திற்கும் ஒத்த ஏடுகள் உண்டாக்கப்பட வேண்டும். மக்கள் உள்

     ளத்தில் உண்மையை உள்ளவாறு ஊட்டும் ஏடுகள்தான் தேவை. மடமை

     யை மடியவைக்க வழிகோலும் வழிகாட்டும் வளம் பொருந்திய காவியங்

     கள், கதைகள்தான் தேவை. அங்ஙனமில்லாத ஏடுகள் நமக்கு வேண்டாம்.

புதிதாக உருவாக்கும் ஏடுகளை நம் விருப்பத்திற்கு ஆகலாம். பழைய ஏடுகளை மாற்றுவது எப்படி?

     நாவலர்களும் பாவலர்களும் சங்க இலக்கியங்களைச் சுற்றி நாலுபக்கமும் வேலிகள் அமைத்து அங்கே எட்டாத அளவிற்கு எழுப்புச் சுவரை எழுப்பி “உள்ளே ஆடுது காளி, வேடிக்கை பார்க்க வாடி” என்பதுபோலத் “தொல்காப்பியத்தைப் பாரீர்! அதன் தொன்மையைக் காணீர்!” என்று கூறினால் அதனிடம் யார்தான் போவார்கள் என்று சங்க இலக்கியத்தைப் பண்டிதர்கள் ஒளித்துவைத்து விட்டதாகக் கூறுகிறார் அண்ணா.

     தொல்காப்பியத்தைச் சிறுசிறு நூல்களாக வெளியிடவேண்டும். சங்க இலக்கியங்களைச் சிறுசிறுபகுதிகளாக வெளியிடவேண்டும். எல்லோர் வீடுகளிலும் இந்நூல் கள் இருக்க வகைசெய்யவேண்டும் என்பது 1947ஆம் ஆண்டிலேயே அண்ணா சிந்தித்த ஒன்று.

     சங்க இலக்கியப் பாடல்களின் செய்திகளைப் புராணக் கதைக¬ளாக மாற்றி யிருக்கிறார்கள். சான்றாக, மேடையில் நடிக்கப்படும் வள்ளி திருமணத்தைக் கூறலாம். வேட்டைக்குச்செல்லும் தலைவைனைப் பெண்ணொருத்தி கண்டு காதல்கொள்கிறாள். யானையன்று பிளிற அவள் அவன் தோள்களில் சாய்கிறாள் என்பது குறிஞ்சிப் பாட்டின் செய்தி. இச்செய்தியே மதச்சாயம் பூசப்பட்டு வள்ளி திருமணம் ஆகியுள்ளது என்று மானிடவியல்நோக்கில் விமரிசனம் செய்கிறார்.

     ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்பு அகம் புறம் என்னும் அமைப்புகள் இரண் டினை அறிந்து அவை மக்கட்குத் தேவை என்பதால் புலவர் இயற்றினர். கட்டற்ற களியாட்டத்திற்கு அல்ல. இல்லற இன்பம் குறைவற்றதாக இருத்தல் வேண்டும். வாழ்க்கை ஒரு கலை. அதனை மக்கள் உய்த்து உணரவேண்டும் என்பதற்காகவே சங்கப்பாடல்கள் இயற்றப்பட்டன என்ற கருத்தையே பின்னர் வ.சுப.மாணிக்கம் உளவியலின் துணையோடு தமது தமிழ்க்காதல் நூலில் நிரூபித்துள்ளார்.

     புராணங்களை அண்ணா பலநிலைகளில்நோக்கித் தம் விமரிசனக் கருத்து களை இதழ்களில் எழுதியுள்ளார். குறிப்பாகக் கம்பராமாயணம் திராவிட இயக் கத்தினரால் வன்மையாகச் சாடப்பட்டுள்ளது. இதற்கு அண்ணாவும்விலக்கல்ல. நடைமுறை வாழ்விற்கு ஒத்துவராத ராமாயணத்தைச் சாடுவதில் அண்ணா உறுதியாக இருந்தார்.

     கலையை அழிக்கின்றனர், கம்பன் புகழை மறைக்கின்றனர் எனப்பழி

     கூறுகின்றனர். கம்பரின் இராமாயணமும் சேக்கிழாரின் பெரியபுராண

     மும் கலை என்று கருதும் அன்பர்கள் ஒரு பெரியாரின் பெயரால்,

     அண்ணாவின் பெயரால் அக்கலை அழிந்துபடும் என்று கூறுவரானால்,

     அத்தகைய கலை கலை ஆகாது. அத்தகைய கலை இருந்தாலும் பயன்

     இல்லை. எமது கலையிலே புரட்சியை  உண்டாக்க விழைகின்றோம்.

என்று தீ பரவட்டும் நூற்கட்டுரையில் சொல்கிறார். ஆனால் புரட்சி உண்டாக்க அண்ணாதுரையிடம் இருந்த திட்டம் அல்லது கொள்கை என்ன?

     இராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் கொளுத்துவதனால் நமது இலக் கியம் அழிந்து விடாது. கம்பர் எழுதியுள்ள முறை தமிழர் ஆரியத்தை ஏற்றுக் கொள் ளத் து£ண்டுகோலாகவும் தமிழினம் ஆரிய இனத் தலைவனிடம் தோற்றுவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளச் செய்வதாகவும் இருப்பதனால் அந்நூலைப்படிக்கும் தமிழினம் அழிந்து விடும் என்கிறார். இலக்கியத்தை வெறும் கருத்துநிலையை மட்டும் வைத்து மதிப்பிட்டது அண்ணாதுரை செய்த தவறு.

     தேவபாடையில் இதனை மூவர் செய்தனர் மூவருள் முதல்வரான வால்மீகியது நூலை நான் மூலமாகக் கொண்டேன் எனக் கம்பர் கூறுகிறார். இங்கே வடமொழி யைக் கம்பர் எப்படி தேவபாடை எனலாம்? ஆரியரால் தேவபாடை எனக் கூறப் படும் வடமொழி எனக் கூறாது கம்பரே ஏற்றுக்கொண்டு கூறுவது தமிழரைத் தாழ்த்துவதல்லவா? பண்டிதர்கள் கம்பரை எந்தத் திறமைக்காகப் புகழ்கின்றனரோ அதே திறமையே தமிழர் கெட வழிசெய்தது.

     கதையிலே வரும் பாத்திரங்களின் மனப்பாங்கையும் செயலையும்விளக்

     குவதிலே கம்பர் மிக சமர்த்தர் என்றுரைப்பர் அறிஞர்கள். அந்தச்

     சமர்த்துதான் குற்றம்குறைகொண்ட ஆரியரைத் தலைவராக்கி வணக்கத்

     துக்குரியவராக மாற்றியது.

வான்மீகி இராமாயணத்தில் குற்றம்குறை கொண்ட பாத்திரங்களைக் கம்பர் ஆரியத் தலைவராக்கி நல்லவர்களாகக் காட்டுகிறார். இது நாம் ஆரிய இனத்தவரை வணங்க வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்டது போலல்லவா உள்ளது?

     இராமன் கடவுளாக்கப்பட்டும் சீதை கற்புக்கணியாக்கப்பட்டும் இராவணன் இரக்கமில்லா அரக்கனாக்கப்பட்டும் அனுமன் ஆண்டவனாக்கப்பட்டும் வாலி கொடியவனாகக் கொல்லப்பட்டும் கூறப்படுவதில் கம்பர் ஒரு ஆழ்வாராகவே மாறி விட்டார் என்றல்லவா தோன்றுகிறது?

     இராவணன் சீதையைக் கவர்ந்தது காமத்தினாலன்று, போர்மரபு முறையி னாலே என்கிறார். அக்காலப் போர்களிலே ஆநிரைகளைக் கவர்தல், மாதரை எடுத் தல், கோட்டையைத் தாக்குதல் என்பன முறைகள். தன் தங்கையை மானபங்கம் செய்த பின்னர் இராமனைப் போருக்கிழுக்க இராமனிடம் எஞ்சியிருந்த விலை மதிக்கக்கூடிய பொருள் சீதை மட்டுமே ஆகையால் சீதையை எடுத்துச் சென்றான்.

     இராவணன் சீதையை பர்ணசாலையுடன் து£க்கிச் சென்றதைச் சுட்டிக்காட்டி இராவணன் பெருந்தன்மையுடன் நடந்துள்ளான் என்கிறார். இராம இலக்குவர்கள் சூர்ப்பணகையை மானபங்கப்படுத்த, இராவணன் சீதையைத் தொடாது து£க்கிச் சென் றதே அவனது உயர்வைக் காட்டுகிறது.

     இராமனைவிடப் பண்பில் உயர்ந்தவன் பரதனே. அதனால் தான் இராமனின் பாத அணிகளைத் து£க்கிச்சென்றான். கற்புக்கு உதாரணமாக அகலிகை சொல்லப்படு கிறாள். ஆனால் அவள் சிறந்த கற்புடையவள் அல்ல என்று எடுத்துக் காட்டுகிறார் அண்ணா. இப்படிப்பட்ட பெண் முன்னால் இராமன் விழுந்துவணங்கியதை எடுத்துக் காட்டி அவன் பண்பினை மதிப்பிடுகிறார். அகலிகையின் மனத்தில் தவறில்லை, அதனால் அவள் கற்புடையவள் என்று இராமன் நினைத்திருக்கலாம். அவ்வாறாயின் அதே அளவுகோலை ஏன் தன்மனைவி சீதைக்குப் பயன்படுத்தவில்லை?

     கம்பராமாயணம் வெறும் பொய்க்களஞ்சியம். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் சிற்றின்ப சாகரம்; நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவம் என்கிறார். தமிழர் தம்மை இகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகக் கம்பர் சீதையைக் கற்புப் பெண் ணாகப் படைக்கிறார். சங்கப் புலவர்களையும் தமிழ் மன்னர்களையும் கடவுளாக்கிப் பார்க்காத பொழுது வடஇந்திய இராமனைக் கடவுள் ஆக்குவது தவறு.

     இராமாயணத்திலுள்ள வீரம் காதல் நட்பைவிட நல்ல சான்றுகள் தமிழி லக்கியத்தில் உள்ளன. கம்பராமாயணம் முழுக்க்வும் ஆபாசமாகவே உள்ளது. பெரிய புராணம் அதிகமான பக்தியை ஊட்டி மக்களை ஏமாற்றுகிறது. தொழில் ஜாதிப் பாகு பாட்டை வலியுறுத்துகிறது. சீர்திருத்தக் கருத்துகள் சிறிதுமில்லை.

     கம்பராமாயணத்தில் ஆபாசச் செய்திகளை அண்ணா தொகுத்துக் கம்பரசம் என்னும் நூலாகப் படைத்தார். எந்தெந்த இடங்களில் ஆபாசச் செய்திகள் மிகுந்துள்ளன என்பதைத் தொகுத்தார்.

 பத்துப்பாடல்களுக்கு ஒரு முறையாவது கம்பர் பெண்களைப் பற்றி வருணிக்கிறார். அயோத்தியிலுள்ள மக்களெல்லாம் அயோக்கியர்களாகவும் காட்டுமிராண்டிக ளாகவும் உள்ளனர். அயோத்தி வீரர்கள் ஓடத்தில் செல்லும் போது பெண்களின் மறைவிடங்களைக் கண்டு மகிழ்கின்றனராம். (குகப்படலம், பாடல் 56). நடிப்புக்கலை யில் சிறந்த நடனப் பெண்கள் தங்கள் உடலை அலங்கரித்து பஞ்சணையில் ஆடவரை அழைக்கின்றனர்.

 அனுமனிடம் இராமன் தன் மனைவி எப்படியிருப்பாள் என்று கூறும் போது சீதையின் முழு உடலமைப்பையும் வருணிக்கிறான். சீதையின் வெளி உடலமைப்பை மட்டும் வருணிக்காது மறைவிடங்களையும் வருணிக்கிறான்.

     வாராழி கலசக்கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள்தன்

     தாராழிக் கலைசார் அல்குல் தங்கடற்கு உவமை தக்கோய்

என்பதுபோன்ற வருணனைகள் கம்பனில் ஏராளம்.

     உலகிலுள்ள எந்தப் பித்தனும் வெறியனும்கூட தன் மனைவியின் மறைவிடத்தை

     வேறொருவனிடம் வருணிக்கமாட்டான். அங்ஙனம் வருணிக்கும் கதாநாயகனை

     எந்த நாட்டு இலக்கியத்திலும் எந்தக்கவியும் சித்திரிக்கவில்லை.

     சீதையும் இராமனும் காட்டுவளம் காணச் செல்கிறபோது இயற்கைக் காட் சிகளை வருணிக்காது இராமன் சீதையின் உடலழகை வருணிக்கிறான். இராமன் சீதையை நோக்கும்போது அவளது கண்ணை மட்டும் நோக்காது உடலுறுப்புக்களைப் பார்த்து ரசிக்கிறான். கடவுளின் அவதாரமும் அயோத்தியின் மன்னனாகப் போகின்ற வனுமாகிய இராமனுடைய மனமே இவ்வாறு உள்ளது!

     இராமன் பட்டாபிஷேகத்திற்கு அரண்மனை அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங் குள்ள இயற்கைக்காட்சிகளைக் கம்பர் பெண் உறுப்புகளோடு உவமைப்படுத்துகிறார். செவிலித்தாயரின் கால்களில் கன்னியர் படுத்திருக்கின்றனர். தெங்கின் குரும்பை போன்று செவிலித்தாயரின் மார்பமைப்பும் தாமரைமலர் போன்று கன்னியரின் மார் பமைப்பும் உள்ளது.

     இராமன் வில்லொடிக்கும்போது சீதையின் மேகலை கீழேவிழுவதைக் கம்பர் வருணிக்கிறார். இராமன் கானகம் செல்லும்போது அயோத்திப் பெண்களெல்லாம் அழுகின்றனர். அவர்களது கண்ணீர் அருவிகள். மலைகளைத் தாண்டி கடலைச் சேர்வது போலப் பெண்களின் உடல்மேல் ஓடுகிறதாம்.

     அதர்மத்தை வீழ்த்தி தர்மத்தைத் தழைக்கச் செய்ய அவதரித்த ஆண்டவன்

     வரலாற்றில் இந்த வர்ணனையா? கடவுள் கதையில் தேவாரம் இருக்கலாம்,

     பக்தி ரசம் சொட்டலாம், தேவரகசியங்கள் வெளியிடலாம். இதையெல்லாம்

     விட்டு காமரசத்தைக் கொட்டுவது முறையா?

என அண்ணா கூறுகிறார். வள்ளுவரும் தம் அனுபவத்தால் உலகம் வியக்கும் இலக் கியம் படைத்தார். ஆனால் கம்பரோ சொந்த நாட்டின் வரலாறும் சொந்தக் கற்பனை யும் மொழி பெயர்ப்பும் அல்லாத ஒன்றைப் படைத்துள்ளார்.

     பெரியபுராணம் பற்றியும் இறையடியார்களின் பத்தித்திறம் பற்றியும் அண்ணா பின்வருமாறு கூறுகிறார். பெரிய புராணக் கதைகளைப்படிப்பதனால் மக்களின்அறிவு பாழ்படுகிறது. பெரியபுராண அடியவர்களின் கதைகளிலுள்ள கடவுள் கருத்துகள் அறிவீனமாக உள்ளன. பெரியபுராணம் வருணாசிரம தர்மத்தைப் போதிக்கிறது. பகுத்தறிவைப் பாழ்செய்வதாகவே இக்கதைகள் உள்ளன. ஜாதியையும் தொழிற்பாகு பாட்டையும் வலியுறுத்துகிறது.

     சமரசம் போதிக்கிறது பெரியபுராணம் என்கின்றனர். புலையனேனும்

     சிவனடியாராக இருந்தால் மோட்சம் பெறுவர் எனக்கூறுகிறது. புலை

     யனேனும் – இதிலுள்ள உம் எதைக் குறிக்கிறது? ஜாதியிலே ஏற்றத்

     தாழ்வு இருக்கிறது, எனவேதான் தாழ்ந்தோரும் பக்தி செய்தால் முக்தி

     பெறலாம் என்கிறது.

     பெரியபுராணக் காலத்துக்குப் பின் நாட்டில் செல்வம் குறைந்துபோயிற்று. பாடுபடுவோர் பட்டினி கிடக்கின்றனர். பாடுபடாத பார்ப்பனர்கள் செழுமையில் வாழ்கின்றனர். மக்கள் கிடைக்கின்ற பொருள்களையெல்லாம் பக்திக்காகச் செல விடுகின்றனர்.

     செல்வம் கொடுத்த தமிழகத்திலே பட்டினிக் குரல். தங்கச் சிலைகள் கோயி

     லிலே. வைரமுடிகள் அவைதம் சிரங்களிலே. சிங்கத் தமிழன் செத்து வீழ்ந்தான்

     பாதையிலே. பஞ்சத்தால். பக்தியையும் சிவத்தையும் உண்டாக்கிய ஏடன்றோ

     என்று கொண்டாடுகிறார்கள் பெரிய     புராணத்தை. ஆனால் அதை நாட்டிலே

     பரப்பி மக்களையும் மன்னரையும் நீறுபூசிகளாக்கிய பிறகு நாடு செழித்ததோ?

     வளம் வளர்ந்ததோ? இல்லை. கிடைத்ததை எல்லாம் ஆலயத்திருப்பணிக்கும்

     அம்மையப்பன் திருவிழாவிற்கும் செலவிட்டு மக்கள் ஓய்ந்தனர்.

     அன்பை போதிக்கும் பெரியபுராணத்தில் சிவபெருமானுக்குப் பிடித்தது மனித உயிர்களே. இறைவனை நேசித்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று பக்தியை வலியு றுத்தும் பக்தனிடம் சீர்திருத்தத்திற்கு ஏது வேலை?

     சிவலிங்கத்தின் கண்ணில் இரத்தம் வடிந்தது என்பதை ஏற்கஇயலாது. கருவில்

     உருவான உடலில்தான் இரத்தம் வடியும். கல்லில் கட்டையில் செம்பில் இரத்

     தம் உருவாகும் என்பது கற்பனையே.

     கடல்நீரை எங்கு மொண்டாலும் உப்புநீராக இருக்கும். பெரியபுராணத்

     தில் சமணர்களைப் பற்றி எங்கு பேசப்பட்டிருந்தாலும் அங்கெல்லாம் அவர்

     களை இழித்தும் பழித்தும் திட்டியும் அன்றோ பேசப்பட்டிருக்கிறது? மறந்

     தேனும் ஒரு சொல்கூட அவர்கள் செய்த நன்மைக்காக அவர்களைப் பாராட்

     டும் குறிப்பு இல்லையே? இப்படிப்பட்ட ஒரு நூலுக்குப் பெரிய புராணம்

     என்ற பெயரைக்காட்டிலும் சமணர் வசைப்புராணம் அல்லது குண்டர்

     புராணம் என்று வைத்திருக்கலாமே?

என்று திராவிடநாடு இதழின் கட்டுரைகளில் எழுதியுள்ளார்.

     அண்ணாவின் விமரிசனக்கருத்துகளின் சாராம்சம் இதுதான்: தமிழறிஞர் களிடம் பற்றின்மையே தமிழ்வளராமைக்குக் காரணம். வாழ்க்கையை உயர்த்த மொழி உதவுகிறது. தமிழரைப்போல் தமிழ்ப்பற்றற்றவர்களை வேறெங்கும் காண இயலாது. இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும். நமது இலக்கியங்கள் வாழ்க்கைக்குப் பொருந்தாதவையாக உள்ளன. சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன.

     பெரியார் இலக்கியத்தில் புலமைக்கல்வி பெறாதவர், எனவே அவரது நோக்கு வெறும் கதைகள் சார்ந்ததாக இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அண்ணா நன்கு படித்தவர். தமிழிலக்கியப் பரப்பு முழுவதையும் ஓர் இலக்கிய மாணவன்போல் அறிந்திருக்க மாட்டார் என்றாலும் சங்க இலக்கியத்தின் முக்கியமான பகுதிகள், சிலப் பதிகாரம், கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள் போன்ற முதன்மையான தமிழிலக்கியப் பகுதிகளை அவர் நன்கு படித்திருப்பார் என நாம் நினைக்கமுடியும். அண்ணாவின் ‘ஏ தாழ்ந்த தமிழகமே!’ பாரதிதாசன் கவிதைகளின் இலக்கியச் சிறப்பு பற்றிய சொற்பொழிவு.

     கலை வாழ்க்கைக்குப் பயன்படுவதாக அமையவேண்டும் என்ற அடிப்படையி லேயே இலக்கியத்தை மதிப்பிடுகிறார். ஆரியர்களின் கொள்கைகள், தமிழருக்கும் அவர்களது பண்பாட்டிற்கும் ஏற்புடையவை அல்ல என்பதனால் எதிர்மறையாக மதிப் பிடுகிறார். மக்களைச் சிந்திக்க வைத்தல், பகுத்தறிவைப் பயன்படுத்தத் து£ண்டுதல் என்ற அளவில் அண்ணாவின் கருத்துகள் ஏற்புடையனவே ஆகும்.

     ஆனால் அவரது இலக்கிய விமரிசன நோக்கு ஏற்புடையதன்று. தமிழிலக்கியத் தைப்போல (அல்லது வடமொழி இலக்கியத்தைப்போலவே) ஏராளமான புராணக் கதைகள் கிரேக்க-ரோமானிய மொழிகளில் உள்ளன. இங்குள்ளவற்றை விட ஆபாச மான வருணனைகளும் அவற்றில் உள்ளன.

     ஆண்களின் நோக்கிலிருந்து பெண்களை வருணித்தல் உலகெங்கும் எல்லா மொழிகளிலும் காணப்படும் வருணனைப் பொது இயல்பு. இதற்குக் காரணம், உலக முழுவதுமே ஆணாதிக்கம் நிலைபேறு கொண்டிருப்பதுதான்.

     அறிவியல் பார்வை தோன்றாத நாட்களில், தெய்வங்களையும் தேவர்களையும் பேய்களையும் மக்கள் நம்பிய அந்நாட்களில், இம்மாதிரிப் புராணக் கதைகள் தோன்று வதில் ஆச்சரியமில்லை. அமைப்பிய அறிஞரான லெவிஸ்டிராஸ், இம்மாதிரிப் புரா ணக் கதைகளை ஆதிஅறிவியல் என்ற மதிப்புத் தந்து நோக்குகிறார்.

     பழங்கால மனிதன் மனத்தில் எழுந்த அறியவேண்டும் என்ற ஆசையைத்தான் புராணக்கதைகள் காட்டுகின்றன. இருத்தல் சார்ந்த வினாக்களுக்கு ஏதோ ஒருவகை யில் அக்கால அறிவுக்கேற்றவாறு அளிக்கப்பட்ட விடை என்றுதான் புராணக்கதை களைக் கொள்ள வேண்டுமே தவிர, இக்கால நோக்கில் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என விமரிசனம் செய்வதில் பொருளில்லை.

     கலையில் எது ஆபாசம்-எது அழகு என்ற முடிவற்ற கேள்வி ஒன்று உண்டு. கலைத்திரைப்படங்களிலும் நிர்வாணக்காட்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றைவைத்து அத்திரைப்படங்களை ஆபாசமானவை என எவரும் முடிவுகட்டுவதில்லை. அதுபோல உலகத்திலுள்ள அனைத்துமொழிக் காப்பியங்களிலும் உடல் சார்ந்த வருணனைகள் உண்டு. அவற்றை வைத்து அவை ஆபாசமானவை, மனத்தைக் கெடுப்பவை அல்லது பண்பாட்டைக் கெடுப்பவை என்று சொல்லி விடமுடியாது.

     இந்தக் கேள்வி ஏறத்தாழ இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பிளேட்டோவின் மனத்தில் எழுந்து, கவிஞர்களை நாடுகடத்தவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். சாக்ரடீஸ், இங்கர்சால் போன்றோரின் அறிவு மரபின் கூறுகளை ஏற்றுக்கொண்ட திராவிட இயக்கத்தினரும் இதே கேள்விகளுக்கு இதே விடைகளை மொழிந்ததில் ஆச்சரியமில்லை.

     பத்தாயிரம் பன்னிரண்டாயிரம் பாடல்கள் வாயிலாகப் பெரிய கதை ஒன்றைக் காவியகர்த்தா படைக்கும்போது அதன் பாவிகம், மொத்தச் செய்தி என்பனவற்றைக் காணவேண்டுமே தவிரத் தனித்தனிப் பகுதிகளாகப் பார்க்கக் கூடாது என்பது முக்கியமானது. மேலும் மிகச் சிறந்த புலமையாளர்கள் தவிர வேறு எவரும் எளிதில் கம்பரை அணுகிவிட முடியாது. கம்பரை முழுதும் கற்கும் திறன்படைத்த திறமை யாளர்கள் இத்தகைய வருணனைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள் என உறுதியாகச் சொல்லலாம். மாறாக, அனைத்துப் பொதுமக்களும், கற்றவரும் கல்லாதவரும்-மன முதிர்ச்சியற்றவர்கள் உட்பட இன்றைய திரைப்படங்கள் (இப்போது தொலைக்காட்சித் தொடர்கள் உட்பட) போன்ற ஊடகங்களாலேயே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் ஆபாசப்போக்கின்றிப் பார்த்துக்கொள்வதே முக்கியமானது.

     அண்ணாவின் இலக்கிய விமரிசனப் பார்வையை நாம் குறைகூற வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. எனினும் இலக்கியத்தில் பகுத்தறிவுநோக்கும் தேவையான ஒன்றேயாகும். இன்றைய இலக்கியம் படிப்பவர்களுக்கு அது இன்னும் மிகுதியாகத் தேவை.

     இன்றும் இதேபோலப் புராணக்கதைகளைக் கருத்துமாற்றமின்றி எடுத்தாண்டு கொண்டிருக்கும் சாதியக்கட்சிகளால் உள்ளன. (இன்றும் இராமன்கட்டிய பாலம் பாக் ஜலசந்தியில் இருக்கிறது என்று வாதிடுபவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அதனால் பகுத்தறிவுநோக்கு இன்று மிகுதியாகவே தேவைப்படுகிறது). அறிவியல் நோக்கு என் பது வாழ்க்கையில் முக்கியமானது. இவ்விதத்தில் அறிஞர் அண்ணாவின் பங்களிப்பு முதன்மையானது. திராவிட இயக்கம் கொண்டிருந்தவை போன்ற நோக்குகளை இப்போது நாட்டார்வழக்காற்றிலும் மானிடவியலிலும் பயன்படுத்துவதைக் காணலாம்.

     அண்ணாவின் கம்பரசம் நூலுக்கு அக்காலத்திலேயே பல எதிர்நூல்கள் உருவாயின. சான்றாக, கு. பாலசுப்பிரமணிய முதலியார் என்பவர் எழுதிய கம்பரச மறுப்பு (1951) என்னும் நூலைக் கூறலாம்.

திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் பிறர்

     1947-60 காலப்பகுதியில் திராவிடப்பார்வையிலான திறனாய்வு தீவிரமடைந் தது. பெரியாரைப் பின்பற்றிப் புராண இதிகாச காவியங்களில் காணப்படும் கடவுட் கொள்கை, ஆபாசவருணனைகள் ஆகியவற்றைக் கண்டிக்கும் ஆய்வுநூல்கள்பெருகின. பெரியாரையும் அண்ணாதுரையையும் தவிர்த்த ஏனை திராவிட இயக்கத்தினரின் பார்வைகள் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரிய புராணம், பாரதிதாசன் படைப்புகள் ஆகிய இலக்கியங்களில் மட்டுமே குவிந்திருந்தன. சில சமயங்களில் சங்க இலக்கியத்தைச் சேர்த்துக்கொண்டனர், பிற இலக்கியங்கள் பற்றி அவர்கள் கவலைப்படவும் விமரிசனம் செய்யவும் இல்லை.

     ஆங்கிலப் பேராசிரியராக விளங்கியவர் மு. சி. பூரணலிங்கம் பிள்ளை. அவர் தமிழ் இலக்கிய வரலாற்றையும் எழுதியுள்ளார். திராவிட இயக்கக் கருத்துகளை ஏற்று, இராவணப் பெரியார் என்னும் நூலை வரைந்துள்ளார். பா.வே. மாணிக்கநாயக்கர், கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் என்னும் நூலை எழுதியுள்ளார்.

     இ.மு. சுப்பிரமணிய பிள்ளை (1896-1975), பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க வர். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுக் குடிஅரசு இதழில் சந்திரசேக ரப் பாவலர் என்னும் புனைபெயரில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். தமிழ்த்தாய் என்ற பெயரில் காலாண்டு இதழ் ஒன்றையும் நடத்தினார். சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் உருவாகத் துணைநின்றவர். தமிழ்க்கலைச் சொல்லாக்க முயற்சியில் ஈடுபட்டவர். தமிழ்மொழியின்மீது இவர் வைத்த பற்று அளவற்றது. தமிழ் மொழி உலக மொழி, தமிழரே உலகின் முதல் மக்கள், சைவசமயமே தமிழரின் முதல் சமயம் என்று நம்பினார். இராமாயணத்தில் ஆபாசம் இவரது முக்கியமான நூல் (1929). வடமொழிப் புராணங்கள் இராமன் பிறக்கக்காரணமாகக் கூறும் கதைகள் திருமாலின் தகாத வாழ்வைச் சித்திரிப்பவை. இராமனின் பிறப்பு புனிதமற்ற ஒன்றே யாகும். ஆனால் இராமனை நாம் புனிதனாக வழிபடுகிறோம். தசரதன் யாகம் புரிவதில் யாகத்தின்போது முனிவர்களுக்குத் தன் மனைவிகைளக் கொடுக்கிறான். அதனாலேயே இராமன் சகோதரர்கள் பிறக்கிறார்கள். இராமாயண பாரதக் கதைகள் தமிழர்களுடைய தன்மான வாழ்வைக் கெடுப்பன..

     கைவல்ய சாமியார்,          பெரியாரின் குடிஅரசு இதழில் கடவுள் புராணம் வேதம் சாத்திரம் மூடநம்பிக்கை போன்றவற்றைப் பற்றித் தொடர்ந்து எழுதிவந்தார். மதங் களைக் ‘கட்டுடைத்’துள்ளார். சைவ வைணவ இலக்கியங்களெல்லாம் உயர்ந்த நோக்க மின்றி எழுதப்பட்டவை என்கிறார். பௌத்த சமண சமயங்கள் நமதுநாட்டில் தழைத்த பொழுது அச்சமயங்களை அழிக்க நமது மக்கள் உள்ளத்தில் மோக உணர்வை எழுப்பக்கூடிய நூல்களை எழுதினர். பாமர மக்கள் எதைச் சொன்னால் நம்புவர் என்பதை அறிந்து அதற்கேற்ப இலக்கியங்களைப் படைத்தனர்.

     பெண்களைச் சிறையெடுக்காத தெய்வங்கள் உண்டா? ஒழுக்கத்துடன்

     நடந்த     ரிஷிகள் உண்டா? இப்பொழுது பக்தியோடு அவைகளைப் படிக்

     கிறார்கள். இலக்கிய இலக்கணத்துடன் பிரசங்கமும் செய்கிறார்கள். இவை

     யெல்லாம் பௌத்த சமண மதங்களைத் தொலைக்க ஏற்பட்டனவே.

என்று திராவிட நாடு இதழில் எழுதினார். குடிஅரசு இதழில் எழுதியது இது:

     புராணங்களிலுள்ள கதைகளில் தெய்வாம்சம் இருக்கிறது என்றும் நீதி

     இருக்கிறது என்றும் ஜனங்களிடையே பார்ப்பனர்கள் கூறிவருகிறார்கள்.

     இராமன் பூமியில் பிறப்பதற்கான காரணங்களைப் புராணங்கள்

     சொல்வதை அவர்கள் படித்துப்பார்க்கவேண்டும். அந்நியப்பெண்ணை

     (துளசி என்பவளை) அனுபவித்ததற்காக விஷ்ணுவுக்குக்கிடைத்த தண்ட

     னையே இராமாவதாரம். இது பிராமணரின் ஆதிக்கம் எங்கும் தடை

     யில்லாமல் நிலைநிறுத்திக் கொள்ள எழுதப்பட்டதாகும்.

தமிழ் இலக்கியத்தின் உள்ளடக்கத்தை அவர் முற்றாக நிராகரித்தார்.

     இராமாயணக் கதைள், பாரதக்கதைகள், சைவவைணவ புராணங்கள் எல்லா வற்றிலும் காணப்படும் கதைகளை விமரிசிக்கிறார்.

     இராமாயணம் காட்டும் வீரத்தினால் நாம் கற்றுக்கொண்டவை யாவை?

     இராம பஜனை, நாமசங்கீர்த்தனம், துளசிமாலை, உண்டியல், பெருமாள்

     பிரசாதம் இவைகளெல்லாம் சேர்ந்த மோட்சம். மேலும் அந்நியரால் அடியும்

     உதையும் குத்தும்பட்டு அங்குமிங்கும் ஓடி ராமா அரங்கா எனக்கூப்பாடு

     போட்டுக் கட்டியழுவதற்கு வீரத்தன்மை வந்ததே யல்லாமல் மனிதனுக்கு

     மனிதன் சமமாக நிற்கும் வீரம் வரவில்லை.

     இன்று நாட்டார் வழக்காற்று விமரிசனம் எழுதுபவர்களுடைய அடிப்படைக் கூறுகள் இவரிடம் உள்ளன.

     அகத்தியர் தெய்வத்திடமிருந்து தமிழைக் கற்றுக்கொண்டு அதை உருவாக்கி

     னார் என்ற கதை ஏற்புடை யதன்று. ஒரு மொழி என்பது சமூகத்தின்

     வெளிப்பாடு. தனிமனிதர் ஒருவர் ஒருமொழியை எக்காலத்திலும் உருவாக்க

     இயலாது.

என்று அறிவியல்பூர்வமாக வாதிடுகிறார்.

     இந்துமதமும் தமிழரும், பெரியபுராண ஆராய்ச்சி போன்ற நூல்களை எழுதியவர் ஈழத்தடிகள். திராவிட நாடு, குடி அரசு இதழ்களில் கட்டுரைகள் வரைந் துள்ளார். திராவிட இயக்கத்தின் வழக்கமான கருத்துகளே இவரிடமும் எஞ்சியுள்ளன.

     வெ.சு. சுப்பிரமணிய ஆச்சாரியார், சிலப்பதிகாரமும் ஆரியக்கற்பனையும் என்ற நூலை 1951இல் எழுதினார். “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஐயர் ஒருவர் புகழ, அவரைப் பின்பற்றிய போலித்தமிழரும் புகழ்வாராயினர். ஆரியப் பண்பாட்டினைப் பரப்பும் நூலை அவர்கள் புகழாது வேறு யார்தான் புகழ்வது?” என்று கேட்கிறார் அவர்.

     இப்படிப்பட்டஆராய்ச்சிகளைப் பெரியாரே தோலுரித்துக்காட்டியிருக்கிறார்.

     இது சாதிக்கேற்ற ஆய்வு. சுப்பிரமணிய ஆச்சாரியார் பொற்கொல்லர் வகுப்பைச்

     சேர்ந்தவர் என்பதால் சிலப்பதிகாரத்தை வெறுக்கிறார், ஆர்.கே. சண்முகம் செட்டி

     யார் வணிக வகுப்பைச் சேர்ந்தவர் ஆதலின் சிலப்பதிகாரத்தைப் பாராட்டுகிறார் என்கிறார் பெரியார்.

     பாரதிதாசன்(1891-1964) கட்டுரைகள் ‘மானுடம் போற்று’ என்னும் தலைப்பில் வெளி வந்துள்ளன. ‘பாரதிதாசன் பேசுகிறார்’ என்ற நூலிலும் அவரது கட்டுரைகள் உள்ளன. தாம் நடத்திய குயில் இதழுக்காகவும் பல கட்டுரைகள் எழுதி வெளி யிட்டார். திருக்குறளின் ஒரு பகுதிக்கு திராவிட இயக்கநோக்கில் உரை எழுதினார். பலவேறு திராவிட இயக்க இதழ்களிலும் எழுதிவந்தார். குயில் போன்ற பத்திரிகை களை நடத்தினார். வழக்கமான திராவிட நோக்கு எழுத்துதான் இவருடையது. தமிழ்ப் புலவர்கள் புதிதாக இலக்கியம் படைப்பதில்லை. எதையாவது மொழிபெயர்ப்பது, பிற நூல்களைக் குறைசொல்வதுமட்டுமே தம்வேலையாகக் கொண்டுள்ளனர். கம்பராமாய ணத்தையும் பெரிய புராணத்தையும் விட்டால் அவர்களுக்கு வேறு ஒன்றுமில்லை என்று கடிந்து கொள்கிறார்.

     தமிழ் இலக்கியத்தில் ஜாதியும் மதமும் ஆரியரால் புகுத்தப்பட்டவை.

     இதனால் தமிழ்மொழியும் இலக்கியமும் அழிந்து கொண்டிருக்கின்றன.

     சமயச்சார்புடைய கதைகளும் இலக்கியங்களும் கலை அல்ல. இழிவான

     கதைகளை எங்ஙனம் கலை என்று கூற இயலும்? தென்னகத்தவரை

     அரக்கராக, குரங்கினமாகக் குறித்த இராமாயணம் நம்மை இழிவு

     படுத்துகிறது.

     திருக்குறளில் அந்தணர் என வரும் சொல்லிற்குத் துறவறத்தார் எனப்பொருள் தருகிறார். அந்தணர் என்போர் பார்ப்பனர் அல்ல. ஆதி பகவன் என்ற தொடரில் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முப்பண்புகளின் ஒன்றுபட்ட நிலைதான் ஆதி எனப் படுவது. பகவன் என்பது பகல் எனப் பொருள்படும். இதற்கு மதச்சாயம் பூசுவது தவறாகும்.

     பகுத்தறிவு நோக்கிற்கேற்ப, காலத்திற்கேற்ப, பழைய இலக்கியங்களை பாரதி தாசன் மாற்றி வாசித்து நாடகங்கள் இயற்றியுள்ளார். திறனாய்வு என்ற முறையில் அவர் அதிகமாகப் பணிசெய்யவில்லை. இம்மாதிரி மாற்றி வாசிக்கும் இலக்கியப் படிப்பு இன்று பின்னமைப்பியர்கள், பெண்ணியவாதிகள் போன்றோரால் மிக முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. வெறுமனே புராணக்கதைகளைக் கண்டிக்கும் நோக்கினைவிட இது மேம்பட்ட நோக்காகும்.

     திராவிடச் சார்பாளர்கள் அனைவரும் கம்பராமாயணத்தை எதிர்த்தனர். பாரதி தாசனும் அவ்வாறே என்றாலும் தமிழ்க்கவிஞன் என்ற முறையில் அவர் மனநிலை வேறாக இருக்கிறது. டி.கே.சி.யின் கம்பராமாயணப் பதிப்பைப் பற்றி அவர் கவலைப் படுவதைப் பாருங்கள்.

     கோவையிட்ட கம்பனது  செய்யுளிலே முக்காலும்  கோணல் என்றே

     கம்பனார் பதினோரா யிரம்பாட்டில் முக்காலும்  கழித்துப்போட்டு

     நம்பினால் நம்புங்கள்  இவைதான்கம்பன் செய்யுள்என அச்சிட்டு

     வெம்புமா றளிக்கையிலும்  மேவாத செயல்இதனைச் செய்ய இந்தக்

     கொம்பன்யார் எனக்கேட்க ஆளிலையா புலவர்கூட்டந் தன்னில்

எனக் கேட்கிறார் பாரதிதாசன்.

     பாரதிதாசனைப் பாராட்டி எழுந்த நூல்களில் கா. கோவிந்தனின் இலக்கிய வளர்ச்சி (1955), சாமி.பழநியப்பனின் குழந்தை இன்பம் (1956) ஆகியவை குறிக்கத் தக்கவை. இவற்றுக்குப் பின்னர்தான் சாலை இளந்திரையனின் திறனாய்வு நூலான ‘புரட்சிக்கவிஞர் கவிதைவளம்’ வெளிவந்தது.

     குத்து£சி குருசாமி, குடிஅரசு, ரிவோல்ட், இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். உலகத்திலேயே மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பவை சமயஇலக்கியங்களே. முன்னேற்றத்தின் முதற்படியில் காலெடுத்து வைக்கும்போதே சமய இலக்கியம் எனும் பேய் காலைத் தள்ளிவிடுகிறது. மத இலக்கியங்களால் ஒழுக்கமோ ஒழுங்குமுறையோ அன்போ அறிவோ வளர்வ தில்லை. பகுத்தறிவையும் தன்னம்பிக்கையையும் சமத்துவஅறிவையும் அடிப்படை யாகக் கொண்டு அடைய வேண்டிய ஒன்றை மூடநம்பிக்கையாலும் தன்னம்பிக் கையில்லாத் தன்மையாலும் பெற இயலாது. வடமொழிக்கதைகளையும் புராணங் களையும் நமது சமய இலக்கியத்திலிருந்து தள்ளிவிட்டால் அதில் மிஞ்சுவது எதுவுமில்லை என்று 1929 அளவிலேயே குடிஅரசு இதழில் கருத்து வெளியிட்டவர்.

     அ. பொன்னம்பலனார், 1928ஆம் ஆண்டுமுதல் திராவிட இயக்கத்தில் பங்கேற்றவர்.

     நமது இலக்கியங்கள் ஜாதியத்தையும் மதத்தையும் மதவெறியையும் து£ண்டி

     யுள்ளன. எண்ணாயிரம் சமணர்களைக் கொன்ற மதம் உண்மையான மத

     மில்லை. அதன் இலக்கியம் நல்ல இலக்கியமாக இருக்கமுடியாது. கல்வி

     யறிவு, ஆராய்ச்சியறிவு ஊட்டுவ தற்கு பதிலாக மூடநம்பிக்கையையும் வீண்

     பக்தியையும் வளர்க்கிறது. சமண பௌத்த மதக்கொள்கைளை அழிக்கவே

     சைவ வைணவ இலக்கியங்கள் தோன்றின. சமணர்கள் பாரதமக்களே.

     வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. பாரதத்தில் அஹிம்சையை நிலை

     நாட்ட ஆரியரோடு போராடியவர்கள். ஆரிய வேதங்களையும் வேள்வியையும்

     உயிர்க் கொலையையும் எதிர்த்து நின்றவர்கள்.

     சேக்கிழார் பல உண்மைகளை மறைத்து பொய்யைப் பரப்பியுள்ளார். சிவன்

     ஒரு சமூகத்தின் தலைவனாக நின்று மற்றொரு சமூகத்தை அழிக்கநினைப்பது

     கடவுள் தன்மையாக இல்லை. அநபாய மன்னன் சமண சாதுக்களை ஆதரித்த

     தால் சேக்கிழார் தாம் இயற்றியதை சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்

     தார் என்று பொய்க்கதை கூறி மன்னனை மயக்குகிறார்.

     திருநாவுக்கரசர் சமணத்திற்கு எதிராகச் சூழ்ச்சி செய்தவர் என்கிறார். மதுரை மன்னனுக்கு நோய் ஏற்படும்படி செய்ததும் சிவபெருமானால் நோய் நீங்கியது என்பதும் சம்பந்தர் மங்கையர்க்கரசி செய்த சூழ்ச்சியாகும்.

     எல்லா இன மக்களையும் சைவத்திற்கு இழுக்க சம்பந்தர் சிறு தெய்வ வழி பாட்டை ஆதரிக்கிறார். கோயில்களில் பலியிடல், வழிபாடுகள் நடக்கின்றன. நாவுக் கரசர் இதனை எதிர்க்கிறார். ‘தில்லைக்கோயிலில் பலியிடுதல் நடக்க ஏற்பாடு நடந்தது. நாவுக்கரசர் எம்பெருமானுக்கு பலியிட்டு வழிபாடா? நான் சென்று தடுப்பேன்Õ என்று தில்லை செல்கிறார். கோயிலினுள் அவரைக் கொலை செய்கிறார் ஞானசம்பந்தர். மக்களிடம் இவர் உயிரோடு மேலுலகம் எய்தினார் எனக் கதைகட்டிவிடுகின்றனர். இதைத்தான் சிதம்பர ரகசியம் என்றார்கள். சம்பந்தர் மணக்கோலத்தில் இருக்கின்ற போது சமண முனிவர்கள் அவர் வீட்டைச்சுற்றி நெருப்பு வைக்கின்றனர். அதனால் சம்பந்தர் மணக்கோலத்தில் மேலுலகம் சென்றார் எனக் கூறப்படுகிறது.

இவைபோன்று பெரிய புராண நிகழ்ச்சிகளுக்குத் தம் மனம்போனபோக்கில் பொன் னம்பலனார் விளக்கம்கூறியுள்ளார்.

     பொதுவாகப் பழங்காலத்தில் ஒவ்வொரு மொழியையும், இனத்தையும் சார்ந்தே தேசியத்தன்மை (அப்பெயரால் அப்போது அறியப்படாவிட்டாலும்) சார்ந்த சிந்தனை இருந்தது. விவிலியத்திலும் எகிப்தியர்களை வென்று, அவர்களிடமிருந்து இஸ்ரேலியர் கள் தப்பிவந்தனர் என்ற கதையையும், அவர்களுக்குக் கடவுள் உதவி செய்தார் என்ற கற்பனையையும் காணலாம். இங்கும் சமணர்கள் என்ற வேற்றினத்தாரை அழிக்கக் கடவுள் உதவிபுரிந்துள்ளதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.

     புலவர் குழந்தை (1906-72), இராவண காவியம் படைத்தவர். தொல்காப்பியக் காலத் தமிழர், யாப்பதிகாரம், தொடையதிகாரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். பாரதிதாசன் செய்தது போன்ற ஒரு மறுவாசிப்பையே புலவர் குழந்தையும் இராமா யணக் கதையில் செய்துள்ளார் என்ற அளவில் இது பாராட்டத்தக்கது. ஆனால் இராவணன் திராவிடர் தலைவன் என்பதற்கோ, தாடகை தமிழ்ப்பெண் என்பதற்கோ தக்க ஆதாரங்கள் இல்லை.

     திராவிடர்களை வெற்றிகொண்ட ஆரியர்கள் தஸ்யூக்கள் என்று அவர்களை அழைத்தனர். இராவணன் சூர்ப்பநகை முதலிய புராணப் பாத்திரங்களுக்கு இக்கருத் தைப் பொருத்திப் பார்த்தல் இயலாது. ஓர் இனம் இன்னொரு இனத்தை வெற்றி கொள்ளும்போது அவர்கள் சார்பாகக் கதைகள் படைக்கப்படுகின்றன என்ற பொது நோக்கில் மட்டுமே இவற்றைப் பார்க்கவேண்டும். தனித்த மனிதர்களைச் சார்த்தி நோக்குவதற்கு வரலாற்று ஆதாரங்கள் தேவை. ‘திருக்குறளும் பரிமேலழகரும்’ என்ற நூலில் வர்ணாசிரமக் கொள்கைகளுக்குத் திருக்குறள் உடன்பாடானதல்ல என்பதை விளக்கியுள்ளார்.

     கா. அப்பாத்துரை (1907-89), தென்னாட்டுப் போர்க்களங்கள், தென்மொழி, தென்னாடு, உலக இலக்கியங்கள், மொழி உரிமை போன்ற நூல்களைப் படைத்துள் ளார். கலை, இனம், நாகரிகம், வரலாறு, சமயம், தத்துவம் முதலியவை குறித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அப்பாத்துரையின் தென்மொழி, உலக இலக்கியங்கள் ஆகிய நூல்களில் சில மதிப்பீடுகள் உண்டு.

     உலக நாகரிகத்தின் முன்னோடிகள் தமிழர்களே ஆவர். உலக வரலாற்றில் வேறுஎந்த மொழிக்குமில்லாத இளமை, தமிழுக்கு உண்டு. மனித இலக்கியமாகவும் உலகிலுள்ள எல்லாச் சமயங்களின் பொது இலக்கியமாகவும் திகழ்கிறது தமிழ் இலக்கியம். சங்க இலக்கியம் கண்ட தமிழகம் இன்றைய தமிழகத்திலிருந்து மிக உயர்ந்திருந்தது. யாருக்கும் அடிபணியா இலக்கியமாக விளங்கியது சங்க இலக்கியம்.

     அன்றைய தமிழர்கள் வெறும் உழவர்களாகவும் நாட்டுப்புறத்தவராகவும் இல்லாமல் சிறந்த செல்வந்தர்களாக விளங்கினர். சங்கத்தமிழருடைய இசைக் கருவிகள் இன்று நாம் காணும் இசைக்கருவிகளைவிட உயர்ந்தவை. அவர்களுடைய ஆடைஅணிகளும் உயர்ந்தவைகளே. இடைக்காலத்தில் இருந்ததுபோல் அன்று அடிமை     யாக இருக்கவில்லை. கடற்கோளினால் நம் பழம் இலக்கியங்கள் பல அழிந்துவிட சிலப்பதிகாரம் நமக்குக் கிடைத்திருப்பது நாம் பெற்ற பேறு. தமிழக மறுமலர்ச்சிக்கு உதவிய ஏடுகளில் தலை சிறந்தது சிலப்பதிகாரமே. தொல்காப்பியம், சங்கஇலக்கியம், திருக்குறள் இவைகளை விட சிலப்பதிகாரத்தில் மறுமலர்ச்சிக் கருத்துகள் மிகுந்துள்ளன. புதுமலர்ச்சிக்கு உரிய பல விதைகள், து£ண்டுதல்கள் சிலப்பதி காரத்தில் உள்ளன. கம்பராமாயணமும் பெரிய புராணமும் நமக்கு அமிழ்தமாகவோ மருந்தாகவோ அமையவில்லை. இரண்டும் இருவேறு வகையில் நமக்கு ஊறு செய்பவையாகும்.

     சங்ககாலம் பற்றிய பொற்காலப் பார்வையை இவ்வாறு பிறரைவிட காத்திரமாக அப்பாத்துரை முன்வைப்பதைக் காணலாம். அதேபோலச் சிலப்பதி காரத்தைப் பற்றிய இவரது கருத்தும் மாறுபட்டிருப்பதைக் காணலாம்.

     கம்பரிடம் சொற்சுவை பொருட்சுவையைக் காணலாம். அவை பாமர மக்களி டமிருந்து கவிதையைப் பிரிக்கின்றன. ஆனால் சிலப்பதிகாரம் அப்படியன்று. குடிமக் களைக் காப்பியத்தோடு இணைக்கிறது. சிலப்பதிகாரம் நாகரிகத்தின் ஊன்று கோலாக வும் பண்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்கிறது. கம்பராமாயணத்திற்கு முற்பட்ட இலக்கியப் பெருமையை மக்கள் அறிந்துவிடக் கூடாது என்பதற்காக இராமாயணம் புகுத்தப்பட்டது. சிந்தாமணி, கம்பராமாயணத்தைவிட எளிதாகக் கேட்பவர்களைப் பிணிக்கக்கூடியது.

     10ஆம் நூற்றாண்டில் சிந்தாமணிக்கு இருந்த புகழைக்கண்டு கம்பராமா யணத்தையும் பெரியபுராணத்தையும் படைத்தனர். சிந்தாமணி மக்களிடையே பரவாத தாலேயே இவ்விரண்டும் தனிப்பெரும் நூல்களாகத் திகழ்ந்தன.

     பெரியபுராணம், கம்பராமாயணத்தைப்போல ஆரியமாயைக்கு இடம்தர வில்லை. தமிழுக்குச் சிறுமையை அளிக்கவில்லை என்று கூறும்போது பிற திராவிட இயக்கத் திறனாய்வாளர்களுக்கு முரண்படுகிறார்.

     இராவணன் இராமனின் எதிரி மட்டுமல்ல, ஆரிய முனிவர்களின் எதிரியும்

     கூட. காரணம், வேள்விகளுக்கு இராவணன் எதிர்ப்புத் தெரிவித்தான்.

     சி. இலக்குவனார், 1910ஆம் ஆண்டு பிறந்து 67 ஆண்டுகள் வாழ்ந்தவர். பள்ளிகளிலும் கல்லு£ரிகளிலும் பணியாற்றியுள்ளார். தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுக் கொண்டவர். குறள் நெறி என்ற தனித்தமிழ் இதழை நடத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைசென்றார். பழந்தமிழ், தொல்காப்பிய ஆராய்ச்சி, தமிழ்மொழி, போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

     தமிழரின் வாழ்க்கை மரபுகளையும் இலக்கிய மரபுகளையும் காப்பதற்காகவே தொல்காப்பியம் படைக்கப்பட்டது. ஆரியரின் ஆதிக்கம் தொல்காப்பியத்தில் தெரிகி றது. சிவனை முதற்கடவுளாகக் கொண்ட வழக்கம் தொல்காப்பியர்காலத்தில் இல்லை. தொல்காப்பியரின் காலத்தை இலக்கியத்தின் பொற்காலம் எனலாம். இடைக் காலத் தில் இலக்கியங்கள் புராணங்களாக மாறிவிட்டன. கடவுட்பாடல்களே இலக்கிய மாயின. இதனால் மக்கள் பக்தர்களாக மாறினர். தொல்காப்பியரின் அறிவியல் சிந்த னை மறைந்து மூடநம்பிக்கைகளும் வீண்பக்தியும் தோன்றின.

     ஓதலும் து£தும் உயர்ந்தோர் மேன என்ற நூற்பாவுக்கு உரையாசிரியர்கள் சிலர் முதலிரு வருணத்தாரே என்று கூறுவர். வேளாளர் ஒழிந்தோர் என நச்சினார்க் கினியர் கூறுவர். காரணம் உரையாசிரியர்கள் காலத்தில் நால்வகை வருணம் செல் வாக்குப் பெற்றது. தொல்காப்பியர் காலத்தில் இல்லை. எனவே தொல்காப்பியர் வேளாளரைத் தாழ்ந்த குலத்தவர் என்று ஒதுக்கியிருக்க இயலாது முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை என்று கூறக்காரணம் பெண்ணை அடிமைப்படுத்துவதன்று. ஆண்கள் பெண்களுடன் வெளியூர் சென்றுவிட்டால் சொந்த நாட்டிற்குத் திரும்பிவர மாட்டார்கள். பெண்கள் வீட்டிலிருந்தால்தான் சொந்தநாட்டிற்கு வருவர். அதற்கா கவே தொல்காப்பியர் இவ்வாறு கூறியுள்ளார். .

     தொல்காப்பியர்காலச் சிந்தனையெல்லாம் மறைந்து மூடப்பழக்கவழக்கம் மலர, இடைக்கால பக்தி இலக்கியங்கள் காரணமாயின என்று சி. இலக்குவனார் கூறுகிறார்.

     ஞா. தேவநேயப்பாவாணர் (1902-81) மொழிஞாயிறு எனச் சிறப்பிக்கப்படுப வர். இவரும் தனித்தமிழ் இயக்கத்திற்கு ஊக்கமளித்தவர். தமிழ்மொழி இலக்கணம், சொல்லாராய்ச்சியில் ஈடுபட்டு எண்ணற்ற கட்டுரைகளைப் படைத்தவர். .

     தமிழரின் கொடைமடத்தைப் பாவாணர் இகழ்கிறார். கொடைமடப்பண்பினால் தான் தமிழர்கள் ஆரியர்க்கு அடிமையாயினர். ஆரியர்கள் தமிழரின் பண்பைப் பயன் படுத்திக் கோயில்களில் இடம்பெற்றுவிட்டனர். பல காணி நிலங்களைத் தானமாகப் பெற்றனர்.

     சிலப்பதிகாரத்தில் ஆரியத் தாக்கம் உள்ளது. பார்ப்பனியத்தைப் பரப்புவதற் கென்றே சிலப்பதிகாரம் படைக்கப்பட்டது என்கிறார். மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிடக் கண்ணகி கோவலன் திருமணம் நடந்தது. கண்ணகியின் தோழி தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண்ணாவாள். மாதவியிடம் கௌசிகன் வசந்தமாலை என் னும் பார்ப்பனர் பணிபுரிந்தனர். மாடல மறையோன் செல்வாக்கு சிலம்பு முழுவதும் உள்ளது. பாண்டியன் நெடுஞ்செழியன் திருட்டுத்தொழில் புரிந்த வார்த்திகன் என்னும் பார்ப்பனனைச் சிறையிலிட, பூசாரி கோயிலைப் பூட்டினான். பார்ப்பனர் போராடி னர். இறுதியில் பாண்டியன் வார்த்திகனை விடுதலைசெய்தான். அவன்காலில் விழுந் தான். எனினும் பார்ப்பனர் கோபம் தணியவில்லை. இச்சம்பவத்தினால் பார்ப் பனரின் செல்வாக்கு புரிகிறது. கண்ணகி மதுரையை எரித்தாள் என்பது தவறு. பார்ப்பனரே மன்னன்மீது உள்ள கோபத்தில் மதுரையை எரித்தனர் எனப் பாவாணர் கூறுகிறார்.

     மு. அண்ணாமலை திராவிட இயக்கம் சார்ந்த சிந்தனையாளர்களில் குறிப் பிடத்தக்கவர்.    பேராசிரியராகப் பணியாற்றியவர். 1928ஆம் ஆண்டு செட்டிநாடு கொத்தமங்கலத்தில் பிறந்தவர். அலை, இமயவரம்பன் என்னும் புனைபெயர்களில் எழுதியவர். நல்ல கவிஞர். மலரும் புனலும், தாமரைக் குமரி, அதிசயக் காதலி போன்ற கவிதைத் தொகுதிகளாக அவர் கவிதைகள் வெளிவந்தன. பொன்னி இதழ் வழி எழுதத் தொடங்கிய இவருடைய சிறிய, ஆனால் சிறந்த நூல், நச்சினார்க்கினியர் என்பதாகும். இதுவே உரையாசிரியர்கள் பற்றித் தமிழில் எழுந்த முதல் திறனாய்வு. குற்றம்-நிறை இரண்டையும் சீர்து£க்கிப் பார்க்கும் நூல். மறைமலையடிகளும் திராவிட இயக்கம் சார்ந்தவர்களும் நச்சினார்க்கினியரை அவர்தம் வடமொழிச் சார்புடைய கருத்துகளுக்காகக் கண்டித்துவந்துள்ளனர்.

     நச்சினார்க்கினியரை முழுக்க முழுக்கத் தள்ளிவிட வேண்டும்

     என்று தொடங்குவது அறிவுலகிற்கு ஒவ்வாத செயலாகும்.

     காணும் எல்லாவற்றையும் Ôநன்று நன்றுÕ என அப்படியே வாங்

     கிக் கொள்ளும் சிந்தனையற்ற வறட்டுக்கும்பலையும் நான் சேர்ந்

     தவனல்லன். அவர்கருத்துகள் அத்தனையையும் அப்படியே நான்

     ஏற்றுக்கொள்ள நான் என்ன மொத்த வியாபாரியா? அதற்காக

     Ôநச்சினார்க்கினியர் தமிழைக் கெடுத்துவிட்டார்Õ என்ற பல்லவி

     யைத் திருப்பித் திருப்பிப் பாடும் உதவாக்கரைக்கூட்டத்தைச்

     சேர்ந்தவனும் நானல்லன்.

     இந்த மேற்கோள் இவரது நடுநிலைப்பாங்கான விமரிசனத் தன்மையைக் காட்டக்கூடியது. நச்சினார்க்கினியரின் உரைச்சிறப்புகளை விளக்குகின்ற அதே நேரத் தில், ÔÔஒரு விமரிசகர் உரையாசிரியர் வடிவில் வெளிப்படுமபோது எப்படித் தடுமாற் றம் நிகழ்கிறது என்பதைக் காட்டியுள்ளேன்ÕÕ என்கிறார். Ôவள்ளுவர் தனித்தன்மைÕ என்ற நூலையும் ‘கம்பன் கெடுத்த காவியம்’ என்னும் நூலினையும் எழுதியுள்ளார். அநுமன் து£தன் எனக் கூறப்படுது பொருந்துவதாக இல்லை. து£தனுக்குரிய வேலை களைச் செய்யாது சீதையைத் திருட்டுத்தனமாகச் சந்தித்தல், இராவணனைச் சந்திக்காமை, இலங்கையை அழித்தல் இவையெல்லாம் து£தனுக்குரிய செயல் அல்ல. இராவணன் அம்புபட்டு இறந்துகிடக்கிறான். உடல் முழுக்க காயம். சீதைமேல் கொண்ட காதல் அவனுடலில் எங்கும் தங்கிவிடக்கூடாது என்பதற்காகவே இக் காயங்கள். இவ்வுவமை பொருத்தமானது. ஆனால் இவ்வுவமையைக் கூறுவது இராவ ணன் மனைவி. அவள் தன் கணவன் இறந்திருக்கும் நேரத்திலும் சீதையின் அழகை வருணிக்கிறாள். இராமனை ஒரு வார்த்தைகூட இகழவில்லை. இந்நிகழ்ச்சிகள் யாவும் பொருத்தமுடையவையாகத் தோன்றவில்லை.

     கைகேயியை அனுதாபத்துக்குரியவளாக முதலில் படைத்த கம்பர் இறுதியில் அவளை வெறுப்பதுபோல் அமைக்கிறார். இது கம்பரின் நடுநிலையற்ற தன்மையைக் காட்டுகிறது. கம்பர் சில பாத்திரங்களை உயர்த்தியும், சில பாத்திரங்களைத் தாழ்த்தி யும் காட்டுகிறார். அளவுக்கதிகமான கற்பனைப் பாடல்களால் வாசகரைச் சலிப்படை யச் செய்கிறார். தேவையான இடங்களில் கற்பனை வளத்தைக் கூட்டுவதை விட்டு விட்டு எல்லா இடங்களிலும் புனைவது அழகாக இல்லை. கம்பரின் யாப்பு வன்மை விருததப்பாக்களை அமைத்த முறை, புதுமையிலும் புதுமையாக உள்ளது. கம்பர் ஒருசில குறையுடையவராயிருப்பினும், கவித்திறத்தால் உயர்ந்து நிற்கிறார்.

     1940களின் இறுதியில் வெளியான கலையும் வாழ்வும் (க. அன்பழகன்), புதிய பாதை (இரா. நெடுஞ்செழியன்), விருந்து (மு. அண்ணாமலை), புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் (முல்லை முத்தையா), கவிஞரின் கதை (மணி) போன்ற நூல்களில் பாரதிதாசன் கவிதைகள் பற்றிய நலம் பாராட்டல்கள் இடம்பெற்றன. திராவிட இயக்கம் சார்ந்த இதழ்களான, பொன்னி, திராவிடநாடு, உண்மை போன்ற இதழ் களிலும் இலக்கியம் பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன.

     திராவிடஇயக்கப்பார்வை பன்முகப்பட்டது என்பதற்கு அப்பாத்துரை, மு. அண்ணாமலை போன்றோரின் பார்வைகள் சான்றுதரும். பெரியார் சிலப்பதிகாரத் தையும், பெரியபுராணத்தையும் ஏற்கவில்லை. அப்பாத்துரை, இவையிரண்டையும் நல்லிலக்கியங்களாக ஏற்றுக் கொள்கிறார். அண்ணாதுரை முதற்கொண்டு திராவிட இயக்கத்தினர் கம்பராமாயணத்தை எதிர்த்தபோது அண்ணாமலை அதைப் பாராட்டி யிருக்கிறார்.

     ப. கண்ணன், பகுத்தறிவு என்ற மாதஇதழை நடத்தினார். வீரவாலி என்னும் நூலை எழுதியுள்ளார். வாலியை வீரமிக்கவனாகவும் இராமனைக் கோழையாகவும் காட்டி எழுதப்பட்டநூல் இது. இராமன் ஒளிந்துநின்று வாலியைக் கொன்றது சரியா என்ற கேள்வி உண்டு, வாலியை எதிர்ப்படுபவர்கள் தங்கள் பலத்தில் பாதியை இழந்துவிடுவர் என்ற புராணக்கதை உள்ளது. அதனால் இராமன் மறைந்து நின்று அம்பெய்தான். இதில் இராமனின் இயலாமை வெளிப்படுவதை உணரலாம். சுக்கிரீ வனுக்காக வாலியைக் கொலைசெய்த இராம அவதாரத்தை மனிதர்களை மீட்க வந்தவன் என்று கூற முடியுமா? இராமாயணம் என்பது ஆடுமாடு மேய்த்துவந்த ஆரியர்கள் நம் நாட்டில் நுழைந்தபொழுது திராவிடர்களுக்கும் அவர்களுக்கும் நடந்த போராட்டச் சித்திரிப்பே ஆகும். திருவாரூர் தங்கராசுவும் ஏறத்தாழ இதே போன்ற கருத்துகளைக் கூறியுள்ளார்.

     கலைஞர் கருணாநிதி, திராவிட இயக்கத்தின் தொடக்ககாலத்திலேயே அதிக ஈடுபாடு கொண்டு பெரியார் அண்ணா இவர்களோடு நெருங்கிப்பழகி, திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவராக இன்று வாழ்பவர். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திரைக் கதை என்று படைப்பிலக்கியத் துறையில் ஈடுபட்டவர். சங்கத்தமிழ் தொல்காப்பியப் பூங்கா முத்துக் குவியல் குறளோவியம் எனப்பல நூல்களைப் படைத்துள்ள போதிலும் திறனாய்வு நோக்கு இவற்றில் இல்லை. இவரும் சில மறு வாசிப்புகளை வைத்துள்ளார். குறளோவியத்தில் தாழ்ந்தமக்களைத் தலைவர்களாகக் கொள்ளுகிறார். சிலப்பதிகாரக் கதையையும் பகுத்தறிவு முறையில் மாற்றி அமைத்துள் ளார். சான்றாக, மதுரையை எரித்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு சரிந்து விழுந்து குடிசை பற்றிக் கொள்வதாக அமைப்பதைக் காட்டலாம்.

     முடியரசன் (1920-1998), பாரதிதாசன் பரம்பரையில்வந்த கவிஞர். 1940இல் திராவிட இயக்கத்தில் இணைந்தவர். போர்வாள், கதிரவன், குயில் முதலிய இதழ் களில் எழுதினார். வீர காவியம், பூங்கொடி, காவியப் பாவை என்னும் நூல்களை இயற்றியுள்ளார். கவிதையில் வரும் சொல்லழகை அது தரும் அழகுநோக்கி மூன்று வகையாகப் பகுக்கலாம். ஏற்ற இடத்தில் ஏற்ற சொல்லை அமைப்பத ஒருவகை. இதனைச் சொல்லாட்சி என்பர். சொல்லும் சொல்லால் பிற குறிப்புகளும் பெறுமாறு அமைட்பபது மற்றொரு வகை. இதைச் சொல்நயம் என்பர். ஒரு சொல் பல பொருளை உணர்த்தி நிற்பது மூன்றாம் வகை. இதனை இரட்டுற மொழிதல் என்பர். முதல் இரண்டு வகையாகிய சொல்லாட்சியும் சொல்நயமுமே கவிதக்கு மிகச் சிறந்தன என்று கவிதை இன்பம்-சொல்லழகு என்னும் கட்டுரையில் கூறுகின்றார்.

     இடைக்காலப் புலவர்கள் இயற்றியவையெல்லாம் சமயக்காப்பியங்களே. அவை களால் எப்பயனும் இல்லை. மணிமேகலை தமிழ் உணர்வை வளர்க்கிறது. அறிவையும் நீதியையும் தர்மத்தையும் வலியுறுத்துகிறது. தொல்காப்பிய அமைப்பு முறை வேறு எந்த மொழி நூலிலும் இல்லாத அளவு சிறப்பானது.

     வீண் தமிழ்ப்பற்று கொண்டு முழங்குபவரைத் தமிழ் வாணிகர் எனக் குறிப்பிடு கிறார். இலக்கண வரையறைகளுக்கு உட்படாத புதுக்கவிதைகளை அடியோடு வெறுக் கிறார். பழமையைப் பாராட்டுபவர், இடைக்கால இலக்கியங்களை வெறுப்பவர். நவீன இலக்கியங்களில் கனவுத்தன்மை சார்ந்த-ரொமாண்டிக் படைப்புகளை மட்டுமே இவர் போற்றுகிறார்.

     இரா. நெடுஞ்செழியன் (1920-2000), திராவிட இயக்கக் கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். உரிமைப்போர், மதமும் மூடநம்பிக்கையும், திராவிட இயக்க வரலாறு போன்ற நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளில் உவமைநயம், பகுத்தறிவு நெறியே பண்பட்ட நெறி போன்ற இலக்கியக் கட்டுரைகளை மன்றம், திராவிட நாடு, உண்மை, இதழ்களில் எழுதினார். மொழிப்பற்றும் இலக்கியப் பற்றும் கொண்டவர்.

     நாகரிகத்தின் தோற்றமாக வளர்ந்த மொழி தமிழ். வேகமாக முன்னேறிய

     தமிழனின்அறிவு இரண்டாம் நூற்றாண்டுக்குப்பின் நின்றுவிடக் காரணமாக

     அமைந்தது மூட நம்பிக்கையும் குருட்டு பக்தியுமே. அவற்றைப் போதித்தவைகள்

     பக்தி இலக்கியங்களும் புராணங்களும். போர், காதல், என்ற வாழ்க்கை முறை

     மாறி தவம், வரம், என்ற நிலை உருவாகி யாகத்திலும் யோகத்திலும் தன்

     சிந்தனையைச் செலுத்தத் து£ண்டியது புராணங்களே.

     சங்க இலக்கியங்கள் மனிதநலச் சிந்தனையின் முழு வளர்ச்சியாய் உள்ளன.

     ஐம்பூதங்களின் வழியாகத்தான் உலகம் இயங்குகிறது என்பதை வலியுறுத்துகிறது

     சங்க இலக்கியம், உயிரும் ஆன்மாவும் அழிவற்றது என்ற மதவாதிகளின் கூற்றை

     சங்க இலக்கியம் மறுக்கிறது. மூடப் பழக்கவழக்கத்திற்கு எதிரானது சங்க

     இலக்கியம், தொல்காப்பியம் உலகம் கடவுளால் உருவாக்கப்பட்டது என்பதை

     ஏற்பதில்லை. திருக்குறளும் இதே கருத்துகளையே வலியுறுத்துகிறது. பதினெண்

     கீழ்க்கணக்கு நூல்களுள் சிற்சில இடங்களில் ஆன்மிகம் தலைது£க்கினாலும்

     பகுத்தறிவையே வளர்க்கின்றன. சித்தர்களின் பாடல்கள் பொதுஅறிவையும்

     பகுத்தறிவையும் ஊட்டி ஜாதி, மதம், கடவுளை கண்டிக்கின்றன.

     பெரியபுராண அடியார்களில் அதிகத்துன்பத்திற்குள்ளான அடியார்கள் பிரா மணர் அல்லாதாரே. பிராமணர் மேம்போக்காகவே சோதிக்கப்பட்டு பரமபதம் அடைந்துள்ளனர். தாழ்ந்த சாதியினர் கடுந்துன்பப் பட்டுள்ளனர். திருவிளையாடல் புராணத்தில் தாயைப் புணர்ந்து அதுகண்டு சகியாத தந்தையைக் கொன்ற பார்ப் பனனின் பாவம் தீர்ந்துவிடுகிறதாம். மனிதத்தன்மையற்ற செயலையும் பார்ப்பனன் செய்தால் அவனுக்கு மன்னிப்பு உண்டு என்பதைத்தான் புராணங்கள் வலியுறுத்து கின்றன என்பது அன்பழகனின் நோக்கு. புராணக்கதைகளைப் பற்றி அன்பழகன் எழுப்பும் வினாக்கள் சுவையாக உள்ளன. இவற்றில் வெளிப்படும் பகுத்தறிவு நோக்கினை நாம் இரசிக்கலாம். மேலும் இன்றைய தலித்திய விமரிசன நோக்கிற்கு ஆதாரமான சில பார்வைகள் அவரிடம் உள்ளன.

     புலவர் ந. இராமநாதனின் கவிஞரும் காதலும் என்ற நூல் பாரதிதாசன் பற்றிய திறனாய்வு நூல். பாரதிதாசன் கவிதைகளில் மரபும் புதுமையும் என்னும் நெல்லை ந. சொக்கலிங்கத்தின் நூலும் நன்கு அமைந்தது. மு. அண்ணாமலையின் இலக்கிய மேடையிலும் பாரதிதாசன் பற்றிய மதிப்பீடு உண்டு.

     பகுத்தறிவியக்கம் சார்ந்த பிற திறனாய்வாளர்களில் பெருஞ்சித்திரனார் போன் றோர் தென்மொழி இதழில் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. வெ. வரத ராசனின், தமிழும் தேனும், வ. சுப்பிரமணியனின் வாழ்வியற் கவிஞர்கள் ஆகிய வையும் பாரதிதாசன் பற்றியவை. புலவர் குழந்தையின் தொல்காப்பியர் காலத் தமிழர் என்ற நூலில் பகுத்தறிவாளர் கொள்கைச் சார்புத் திறனாய்வைக் காணலாம். தென்மொழி, குயில், உண்மை, தென்னகம், மன்றம், பகுத்தறிவு போன்ற இதழ்களில் பாரதிதாசன் பற்றிய இரசனைக் கட்டுரைகளைச் சிலர் வரைந்தனர்.

     வே. ஆனைமுத்து (1925), 1976இல் மார்க்சியபெரியாரிய-பொதுவுடைமைக் கட்சியையும் 1978இல் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையையும் அமைத்தார். சிந்தனையாளன் என்னும் இதழையும் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் ஆங்கில இதழை யும் நடத்தினார். பெரியார் களஞ்சியம் என்னும் பெருநூலைத் தொகுத்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்த வழக்கமான திராவிடப் பார்வையையே இவர் வலியுறுத் துகிறார்.

     சிலப்பதிகாரத்திலேதான் முதல்முதல் சமயக்கருத்துகள் புகுந்தன. மணிமேகலை யில் அது வளர்ந்தது. பெரும், சிறு காப்பியங்களில் மதக்கருத்துகள், தாராளமாகப் புகுந்தன. கம்பராமாயணம், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம் போன்றவை புண்ணிய நூல்களாகக் கருதப்படும் அளவுக்கு சமயவெறி நாட்டில் வளர்ந்துவிட்டது. இங்ஙனம் சமயம் கலந்த இலக்கியமாகத் தமிழிலக்கியம் மாறியதால் இலக்கியத்தின் உண்மைக் கருத்துகளை அறிஞர்கள் ஆய்ந்துகூறத் தயங்கினர். இதுபோன்ற நூல்களில் குறை காண்பது தம்குறை என ஏற்றுக்கொண்டனர். தழுவல் இயல்புகொண்ட உயிரினங்களே இன்றும் வாழ்கின்றன. இலக்கியமும் அவ்வாறே. திருக்குறளில் தழுவல் தன்மை சமயம், மொழி, நாடு கடந்து நிற்பதால், அழியா இலக்கியமாய் உள்ளது. சிலப்பதிகாரம் தொடங்கி எல்லா இலக்கியங்களும் மதப்பிடியில் சிக்கியுள்ளன என்பது போன்ற கருத்துகள் இவரிடம் வெளிப்படுகின்றன.

     கொண்டல் சு. மகாதேவன் 1925இல் கொண்டல்வட்டம் திடல் என்னும் ஊரில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக திராவிட மாணவர் செயலாளராக விளங் கினார். 1948இலேயே எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசியவர். கண்ணகியின் மணம் காதல் மணமாகும், குலமகளிர் கோவலனைப் பாராட்டும் முறை குலமரபு என்றே கொள்ள வேண்டும். கோவலன் ஒரு சமூக அடிமையாகக் காட்டப்பட்டுள்ளான்.

     கானல்வரிப் பாட்டு காதல் போட்டியல்ல, கலைப்போட்டியே ஆகும். கலையின் மீது ஆர்வம் கொண்ட கோவலனால் கலையை மதிப்பிடத் தெரியவில்லை. கலைவழி மாதவியின் கண்கள் அசைய, அவ்வசைவைக் காதல்வலையாகப் புரிந்து கொண்டான். இறுதியில் காதலால் அவள்அழும்போது இது கலையினால் வரும் உணர்ச்சியற்ற கண் ணீர் என நினைக்கிறான். செங்குட்டுவன் இமயம் நோக்கிப் படையெடுத்தது, கண்ண கிக்காக அல்ல, கனகவிசயர்மீது கொண்ட பகைமைநோக்கியே என்பன போன்ற கருத்

துகளை வழங்கியுள்ளவர் இவர்.

     ஏ.பி. ஜனார்த்தனம்    அண்ணாதுரை படைப்புகள் பற்றிய ஆய்வினை முதன் முதலில் தொடங்கி வைத்தவர். அண்ணாவின் நாடகங்கள் பற்றிய ஆய்வு இவரது முனைவர்பட்ட ஆய்வாக அமைந்தது. அண்ணாவின் நடை பற்றி விரிவாக எழுதி யுள்ளார்.

     ந. சஞ்சீவி, சிலம்புத்தேன், சிலப்பதிகாரப் பெண்டிர், ஆராய்ச்சிக் கட்டுரைகள் போன்ற பல நூல்களை எழுதியவர். மருதிருவர் பற்றிய நூலும் குறிப்பிடத்தக்கது. முதன்முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வரங்குகள் நடத்தி, பல்கலைப் பழந்தமிழ், தெய்வத்தமிழ், சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள் போன்ற பல நூல்களையும் வெளியிட்டவர். இலக்கிய இயல் அ-ஆ என்பது இவரது கோட்பாட்டு நூல். மா.கி. தசரதன், வேதங்களும் புராணங்களும் மக்களைப் பிரித் தாளுகின்றன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழுணர்வை ஊட்டுகின்றன. சங்க இலக்கியம் ஒரு சில மேட்டுக்குடியினர் கையில் உள்ளது. பழம்பாடல்களைப் பாராட் டினால் மட்டும் தமிழ் வளராது. சிவன் படைத்த மொழி எனப் பேசிக்கொண் டிருப்பதாலும் குமரிக்கண்டம், சிந்து சமவெளி நாகரிகச் சிறப்பு, மன்னர்களின் வெற்றி போன்றவைகளைப் பேசினால் தமிழ் வளராது என்கிறார்.

     சங்க இலக்கியம் முழுதுமே மனித வாழ்வுக்குத் தேவையான உயர்ந்தகொள்கை களை உடையதாக உள்ளது. சங்க காலத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத் தப்பட்டனர். ஆண்களின் அறிவை மயக்கி, தீயவழி செலுத்தும் இயல்புடையவர்கள் பெண்கள்-மாயப்பிசாசு என்றெல்லாம் இடைக்காலத்திலேதான் பெண்கள் இகழப் பட்டனர். தமிழ்மண்ணில் வேற்றுநாட்டு மொழியோ பண்போ பரவாமல் தமிழ்ப் பண்பு தன் தனித்தன்மையுடன் விளங்கிய நாட்களில் ஆணுக்கு இருந்த உரிமையும் உயர்வும் பெண்ணுக்கும் சமுதாயத்தில் இருந்துவந்தது. ஆனால் வடவருடைய கூட் டுறவு ஏற்பட்ட பின்னர்தான் பெண்ணடிமைத்தனம் என்ற புன்மை ஏற்பட்டது. பரிமேலழகர் ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் என்ற குறளுக்குப் பொருள் எழுதும்போது-தன் மகனைச் சான்றோன் எனப் பிறர்கூறக்கேட்ட தாய் என்று எழுதுகிறார். காரணம் பெண் இயல்பாய்த் தானாக உணரும் ஆற்றல் அற்றவள் என்ற சிந்தனை பரவியிருந்த காலம் அது. இடைக் காலத்தில் எழுந்த புராணங்கள் எல்லாம் பெண்களை ஆபாசமாகவும் இழிவாகவும் அடிமையாகவுமே படைத்துள்ளன.

திராவிட இயக்கச் சார்பும் பிற சார்புகளும் கொண்ட சில அறிஞர்கள்

சாமி. சிதம்பரனார் (1900-1961)

     மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் 1923ஆம் ஆண்டு பண்டிதர் பட்டம் பெற்றவர். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ஓராண்டுக்காலம் பணியாற்றினார். பெரியாரின் குடிஅரசு இதழைப் படித்துப் பகுத்தறிவுக் கொள்கையில் பெரும் ஈடுபாடுகொண்டார். சுயமரி யாதை இயக்கத்திலும் நீதிக்கட்சியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 1928 முதல் குடிஅரசு இதழில் கடவுள் மதம் ஜாதி புராணம் சாத்திரம் மூட நம்பிக்கை போன்றவற்றைக் கண்டித்துஎழுதினார். தொல்காப்பியத் தமிழர், ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன், பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், வள்ளுவர் வாழ்ந்த தமிழகம், பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை போன்ற எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்.

     சாமி. சிதம்பரனார், சரஸ்வதியிலும், இன்னும பல ஏடுகளிலும் எழுதிவந்த பகுத்தறிவியக்கம் சார்ந்த முற்போக்குத் தமிழ் அறிஞர். இவர் பிற திராவிட இயக்கத்தி னர் செய்ததுபோல கம்பராமாயணம் போன்ற பழைய இலக்கியங்களைக் கண்மூடித் தனமாகச் சாடவில்லை. வடிவ அடிப்படையிலான இலக்கியப் பார்வையுடன் எழுதி னார். வள்ளுவர் காட்டிய வைதீகம், சிலப்பதிகாரத் தமிழகம், மணிமேகலை காட்டும் சமுதாய நிலை, என்றாற்போல சமூகப் பின்னணிக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதினார். ஆழ்வார்கள் அருள்மொழி, சங்கப்புலவர் சன்மார்க்கம், இலக்கியம் என்றால் என்ன, சித்தர்கள் கண்ட விஞ்ஞான தத்துவம் போன்ற இவரது நூல்கள் சிறப்பானவை. இவர் தம் இரசனைச் சிறப்புக்கு இவரது கம்பராமாயணப் பதிப்பு எடுத்துக்காட்டு. பிற நூல்களை சமூகப்பார்வைகள் என்று சொல்லலாம்.

     மொழி என்பது ஒருநாட்டின் மக்கள் அறிவு வளர்ச்சி பெறுவதற்கும் நாகரிகமடை வதற்கும் முதன்மையான காரணமாக இருப்பது. தமிழ்மொழியை மட்டும் படித்த ஒருவர் குறுகியஅறிவுகொண்டு மதவேற்றுமை வகுப்பு வேற்றுமை பாராட்டுகின்றார்.

     தொல்காப்பியத்தில் சாதி என்னும் சொல் மக்களைக் குறிக்கவில்லை. தண்ணீரில் வாழும் உயிரினங்களைத்தான் குறிக்கிறது. பிற்காலத்தில்தான் இச்சொல் மனிதப் பிரிவுகளைக் குறித்தது. தொல்காப்பியர் ஆண் பெண் சமத்துவத்தை விரும்ப வில்லை. ஆண்கள் பல பெண்களை மணந்துகொள்ளலாம், விலைமாதருடன் கூடி வாழலாம் என்பது சங்க இலக்கியத்திலும் உண்டு. ஆண்பெண் வேறுபாட்டைப் பழம் இலக்கியங்கள் போற்றியதையே இது எடுத்துக்காட்டுகிறது.

     பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பயனற்ற செய்திகள் பல உள்ளன. திருக்குறள் நாலடியார் தவிர மற்ற அறநூல்களினால் எந்தப் பயனும் இல்லை. சோம்பேறி வேதாந்தங்களையே அவை போதிக்கின்றன. ஐம்பெரும் காப்பியங் கள் சமண புத்த மதத்தை போதிக்கும் கதைகளே. தமிழ்மொழியிலுள்ள இலக்கி யங்கள் புராணங் களாகவும் சமயநூல்களாகவும் நீதிநூல்களுமாகவே உள்ளன. ஒருநூல் அந்நாட்டு மக்களுக்குப்பயன்படும் விதத்தில் நாட்டு மொழியில் வெளி வந்தாலொழிய அந்நூலினால் எந்தப் பயனுமில்லை. இம்மாதிரி திராவிட இயக்கத்தின் கருத்துகளை அப்படியே எடுத்துரைத்தாலும், கண்மூடித்து£ற்றுவதையோ போற்றுவதையோ இவரது நூல்களில் காணமுடியாது. மேலும் இவரது இலக்கியப் பார்வையும் நடையும் திராவிட இயக்கத்தின் பார்வை, நடையைவிட மார்க்சிய இலக்கிய நோக்கிற்கு அணுக்கமானது.

சாலை. இளந்திரையன்

     புரட்சிக் கவிஞர் கவிதைவளம் (1964) என்ற நூல் அக்கால எல்லை வரை வெளிவந்த பாரதிதாசன் திறனாய்வுகளில் முக்கியமானது. புதுமையானது. பகுப்பு முறைத் திறனாய்வும் பதிவுநவிற்சித் தன்மையும் கலந்தே காணப்படுவது. நிறைகளை யும் குறைகளையும் ஒரு விரிந்த பார்வையில் இயம்பி மதிப்பீடு செய்வது. இந்நூல் சாலை. இளந்திரையனை ஒரு முக்கியமான திறனாய்வாளராக நிறுவியது.

     அடுத்து இரு ஆண்டுகளில், இவருடைய தமிழில் சிறுகதை, சிறுகதைச் செல்வம் ஆகிய இரண்டும் வெளிவந்தன. முன்னது சிறுகதை பற்றிய அறிமுக நூல். இலக்கிய உலகில் நுழைய விரும்பும் இரசிகனுக்கு ஒரு தக்க வழிகாட்டி. பின்னது, இருபது எழுத்தாளர்களின் சிறுகதைகளை அறிமுகம் செய்யும் பாராட்டு நூல். இந்நூல் முன்னுரையில் சாலை. இளந்திரையன் கூறுகிறார்:

     சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் நமது வாசகர்களில் பெரும்பாலோர்க்கு இன்னும் சரிவரப் பிடிபடாததால், எது நல்ல சிறுகதை என்ற கேள்விக்கு அவர் களால் சரியானபதில் தெரிந்துகொள்ளமுடியவில்லை. இந்தநிலை நீடித்தால், அவசர கால வாழ்வின் து£துவனாகிய திருவாளர் பத்திரிகை, எதையெதையோ சிறுகதைகள் என்று மக்களிடம் கூறி நிலைநாட்டி விடுவார். அப்படி அவர் செய்து விட்டால், அதன்பிறகு நமது மக்களை நல்ல இலக்கிய ரசிகர்களாக்குவது முடியாத காரிய மாகவே போய்விடக்கூடும்.

     இந்நூலின் தோரணவாயில்என்ற முன்னுரை, 1966 வரை தமிழ்ச் சிறுகதைத் திறனாய்வின் வரலாற்றையும் அளிக்கிறது. இந்நூல் முதல் வரிசைத்தரம் உள்ள இருபது சிறு கதைகளின் அறிமுக விமர்சனக் குறிப்புகள் என்கிறார் சாலை. மேற்குறிப்பிட்ட மூன்று நூல்களின் பின்னணியில் பார்க்கும்போது தர நிர்ணயம் செய்யும் நல்ல மதிப்பீட்டாளராகச் சாலை மலர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. அவர் ஒரு புலமையாளராக இருப்பினும் நல்ல திறனாய்வாளராகியிருக்கிறார்.

      புதுத்தமிழ் முதல்வர்கள், புதுத்தமிழ் முன்னோடிகள் என எழுதிய இரு நூல்க ளும் தற்கால இலக்கிய வரலாற்றுப் பாங்கானவை என்றாலும் அவற்றில் திறனாய்வுக் குறிப்புகள் மிகுதியாக உண்டு.

ம.பொ. சிவஞானம்

     ம.பொ.சி. 1945 அளவில் எழுதத்தொடங்கியவர். இவருடைய முதல் இலக்கிய நூலான சிலப்பதிகாரமும் தமிழரும் 1947இல் வெளிவந்தது. இதன்பின் ஏறத்தாழ இலக்கியம் பற்றிய நாற்பது நூல்களை ம.பொ.சி. வெளியிட்டுள்ளார். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூல் பாராட்டுமுறைத் திறனாய்வு. இளங்கோவின் சிலம்பு, உலக மகாகவி பாரதி. இவ்வளவு நூல்கள் எழுதினாலும் அவரை ஒரு ஆழமான திறனாய்வாளராக எண்ணமுடியவில்லை. காரணங்கள் இரண்டு. ம.பொ.சி யின் நூல்களில் சொற்கள் வீணாக்கப்படுகின்றன. ஒரு தொடரில் சொல்லவேண்டிய கருத்தினை, ஒரு அத்தியாயம் எழுதிச் சொல்வார். இரண்டாவது, இவருடைய ஆய்வு, மரபுவழிவந்த பாராட்டுத் திறனாய்வு குணம் காணல் மட்டுமே. பெரும்பாலும் நவீன விளக்கவுரை எழுதிப் பாராட்டிவிட்டுச் சென்றுவிடுவது இவரது இயல்பு. கம்ப ராமா யண ரசனைக்கு ஒரு டி.கே.சி. என்பதுபோல, சிலப்பதிகார ரசனைக்கு ஒரு ம.பொ.சி. என்று பேசப்படும் நிலை சாதாரணப் படிப்பறிவு உடையோர்இடையே சிலப்பதிகார ரசனை வளர்வதற்கு ம.பொ.சி. எவ்வளவு உதவிசெய்தார் என்பதை விளக்குகிறது.

     1945ஆம் ஆண்டிலிருந்து ம.பொ.சி. பல இலக்கிய ஆய்வுநூல்களை எழுதியுள்ளார். 1950களில் மட்டும், கண்ணகி வழிபாடு, வள்ளுவர் வகுத்தவழி, இலக்கியச் செல்வம், இளங்கோவின் சிலம்பு ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. 1960களில் பாரதியும் ஆங்கிலமும், எங்கள் கவி பாரதி, வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, வள்ளலாரும் பாரதியும், உலகமகாகவி பாரதி போன்றவை வெளிவந்தன. 1970களில் இலக்கியங் களில் இனஉணர்ச்சி, கலிங்கத்துப்பரணி திறனாய்வு, திருக்குறளில் கலைபற்றிக் கூறாததேன், சிலப்பதிகார யாத்திரை, சிலப்பதிகாரத் திறனாய்வாளர், சிலப்பதிகார ஆய்வுரை, சிலப்பதிகார உரையா சிரியர்கள் சிறப்பு, திருவள்ளுவரும் கார்ல் மார்க்சும் போன்ற நூல்களை எழுதி யுள்ளார். விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, தமிழகத்தில் பிறமொழியினர் போன்ற பிற நூல்களையும் எழுதியுள்ளார்.

     தொல்காப்பியப்பொருளதிகாரம் வறட்டு இலக்கணமாக இல்லாமல் தமிழினத் தவரின் வாழ்க்கைநெறியை இலக்கியமாக்கிக் காட்டுகிறது. தொல்காப்பியம் தொகுப்பு நூலே அன்றிப் படைப்புநூல் அல்ல. புதிதாக எதுவும் எழுதப்படவில்லை. முன்னி ருந்த வகைகளைத் தொகுத்துள்ளார். தொல்காப்பியக் களவியல் வெறும் நாடகவழக் கேயன்றி நாட்டு நடப்பல்ல. தொல்காப்பியர் வடபுலத்திலிருந்து வந்தவரா அல்லது தமிழராஎன்ற வினாவுக்குத் தொல்குடியைச்சேர்ந்த தமிழர் என்று சொல்கிறார். வீடு பேறு பற்றிய சிந்தனை வடக்கிலிருந்து வந்ததே. சங்க இலக்கியத்தில் இச்சிந்தனை இல்லை.

     சிலப்பதிகாரம் முதன்மையாக ஒரு பிரச்சார இலக்கியம் எனலாம். அதுவும் அரசியல் பிரச்சாரமாகும். அந்தஅரசியல், தமிழினவழிப்பட்டது. மணிமேகலை மக்கள் இலக்கியமாக இல்லாது மதஇலக்கியமாக உள்ளது. மணிமேகலை சிலப்பதிகாரத்திற்கு இணை நூலன்று, தனி நூல். களப்பிரன் காலத்தில் தமிழ்ப்பண்பாட்டை போதிக்க இனஒருமைப்பாட்டை வளர்க்க சமயவேற்றுமை கடந்த சமுதாய உறவை வலியுறுத்தத் தோன்றிய நூல் முத்தொள்ளாயிரம். நந்திக்கலம்பகத்தில் நந்திவர்மனை ஓட்டிய வர லாற்றுச் செய்திகள் முலாம் பூசப்பட்டுள்ளன. அது வரலாற்று இலக்கியமன்று. அது கட்டுக் கதையே.

     நந்திக்கலம்பகம் பண்ணோசையும் பொருள் செறிவும் உடைய சிறந்த

     இலக்கியமாகும். ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு ஒருசிறிதும் அது உதவி

     புரியவில்லை. என்றாலும், தமிழ்மொழி வளர்ச்சியற்றுக்கிடந்த பல்லவர்

     ஆட்சிக்காலத்தில் பிறந்த ஒரேஒரு சமூகஇலக்கியம் என்ற வகையில் அதற்கு

     வரலாற்றில் தனி இடம் உண்டு.

என்பது நந்திக்கலம்பகம் பற்றி இவரது கருத்தாகும். கலிங்கத்துப் பரணி சிலப்பதி காரத்துக்குப் பின் தோன்றிய வரலாறு தழுவிய இலக்கியமாகும். தமிழர் என்ற இனக் கண் கொண்டு பார்த்தால் தமிழினத்திற்குத் தேவையற்ற இலக்கியமாகும்.

     கலிங்கத்துப்பரணியில் கடைதிறப்பு காமரசம் நிறைந்தததாக உள்ளது. கடவுள் வாழ்த்தை அடுத்துக் காமத்தை ஊட்டும் கடைதிறப்பு தேவையற்றது. இதனை சுடு காட்டுப் புராணம் என்றும் செயங்கொண்டாரை காமரசம்வழங்கிய முதற்புலவர் என்றும் கூறலாம். பக்தி இலக்கியமான திருப்புகழிலும் நாயகநாயகி பாவனையில் பாடப்பட்டுள்ள பிரபந்தங்கள் சிலவற்றிலும் காம உணர்வூட்டும் செய்திகளே இடம் பெறுகின்றன.

     ம.பொ.சி.யின் திறனாய்வில் மிக நீண்ட விளக்கங்கள், செறிவின்மை, மரபுவழி வந்த பாராட்டுமுறை போன்ற குறைபாடுகள் உள்ளன. இவை தன்மை ரீதியானவை. சமயக்கருத்துகளையும், அரசியல் கருத்துகளையும் இலக்கியத்தில் பொருத்திப்பார்த்தல், ஆகியவை உள்ளடக்க ரீதியானவை. அவருடைய இலக்கியக் கண்ணோட்டம், இன வுணர்வு, தமிழ்ப்பற்று, சமுதாய விழிப்புணர்ச்சி ஆகிய தளங்களின்மீது அமைந்தது. வெறும் இலக்கிய அழகுக்காக மட்டுமன்றி, சமுதாயத்தை உயர்த்தும் கருத்தாக்கம் இருந்தால் மட்டுமே அவர் ஒரு நூலைப் பாராட்டுகிறார்.

     பல்வேறு வகையான இலக்கியங்களையும் திறனாய்வு செய்ததில் இவர் திராவிட மரபில் தனித்தன்மைபெற்றவராக உள்ளார். பாரதியார் நூல்கள், சிலப்பதி காரம், வள்ளலார் பாக்கள் ஆகியவற்றைத் திறனாய்வு செய்தவர்களில் முக்கியமானவ ராக இருக்கின்றார். குறிப்பாகச் சிலப்பதிகாரத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டதால் சிலம்புச் செல்வர் என்ற சிறப்பு இவருக்கு வாய்த்து.

மயிலை. சீனி. வேங்கடசாமி

     1925முதல் திராவிடன் இதழாசிரியராகப் பணியாற்றியவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். குடிஅரசு, திராவிடன், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்ப்பொழில் இதழ்களில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களை எழுதியுள்ளார். சங்ககால அரசியல், பத்தொன்பதாம் நூற்றாண்டுத்  தமிழ் இலக்கியம், தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள், இறையனார் களவியல் ஆராய்ச்சி, சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும் போன்றவை அவரது சில முக்கிய நூல்கள். சிறந்த வரலாற்றாசிரியராகவும் வரலாற்று நெறிப்பட்ட திறனாய் வாளராகவும் திகழ்ந்துள்ளார்.

     முச்சங்கங்கள் வெறும் கற்பனையே என்று ஸ்ரீனிவாசய்யங்கார், வையாபுரிப் பிள்ளை போன்றோர் கூறுவதை இவர் மறுக்கிறார். பொய் என்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் இவை பற்றிக் கூறப் படும் ஆண்டுக்கணக்குகளே. இவற்றில் கூறப்படும் மன்னர்கள் எண்ணிக்கை, அவர் களது ஆட்சிக்காலம் முதலியனவும் நம்பக்கூடியனவாக இல்லை. மன்னராட்சிக் காலத்தை வைத்துச் சங்கத்தைப் பொய் என்பது சரியன்று என்பது இவர் கருத்து.

     முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்னும் நூற்பாவுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் மாறுபட்ட உரைகள் தருகின்றனர். இளம்பூரணர் கடல்வழி என்று கூற, நச்சினார்க்கினியர் மூன்று தன்மையில்-அதாவது ஓதல், தூது, பொருள் காரண மாகப் பிரியும்போது பெண்ணுடன் செல்வதில்லை என்று பொருளுரைக்கிறார். நச்சினார்க்கினியர் உரை தவறெனக்கூறுகிறார் வேங்கடசாமி.

     பத்தினிச்செய்யுள் என்று ஒரு பழங்கதைச் செய்யுள் உள்ளது. சிலப்பதிகாரத் திற்கு இதுவே மூலம் என மு.இராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் கூறினர். இதை மறுத்து இரண்டிற்கும் தொடர்பில்லை எனக் காட்டியுள்ளார். பத்தினிச்செய்யுள், வீரன் ஒருவன் கையில் மணிக்கடகத்துடனும் கட்டாரியுடனும் இறந்துகிடப்பதைக் காட்டுகிறது. சிலப்பதிகாரக் கோவலன் கையில் ஆயுதம் எதுவும் இல்லை. மதம்கொண்டயானையை அடக்கியபோதும் கோவலன் கையில் ஆயுதம் இல்லை. நகர் என்றால் அரண்மனை என்றபொருளும் உண்டு. மதுரை நகரம் எரிந்தது எனச் சிலம்பில் கூறுவது முழுநகரத்தைக் குறிக்கவில்லை, அரண்மனை எரிந்தது என்பதையே இது குறிக்கிறது.

     செங்குட்டுவன் தன் தாயை கங்கைக்கு நீராட்டச்சென்ற செய்தி பொய் என நீலகண்ட சாஸ்திரி கூறுவதை வேங்கடசாமி மறுத்துள்ளார். தன் தாயின் உருவச் சிலையை அல்லது எலும்பைக் கையில்கொண்டு நீராட்டச் சென்றான் என்று பொருள் கொள்ளலாம். முழுதும் இச்செய்தி பொய்எனக் கூறவியலாது.

     சங்கப்பாக்களில் ஒரு முலை இழந்த பெண் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. வேறெங்கும் இத்தொடர் பயன்படுத்தப்படவில்லை. கண்ணகி தன் மார்பைச் சிதைத் தாள் என்ற கதை பொருத்தமாக இல்லை. இது ஒரு வழக்கிறந்த நிகழ்வாகலாம்.

     நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் தன் காதல் கைகூடாதபோது தன் கொங்கையைப் பிய்த்தெறிந்தாள் என வருகிறது. இதன்பொருள் கணவனோடு அனுபவிக் கும் இன்பவாழ்வு அழிந்துவிட்டது என்பதே. எனவே முலை குறைத்தல் வழக்கு கணவன் இல்லாமையையும் இன்பவாழ்வு போனது என்பதையும் குறிப்பிடும் வழக்கே என்கிறார்.

     திராவிடஇயக்கம் சார்ந்த நோக்கில் ஆய்வுகளைச் செய்துவந்தவர், பிறகு கருத்தியல் நிலையில் மாற்றம் எய்தியிருக்கிறார் என்பதை வேங்கடசாமியின் எழுத்துகள் வாயிலாக நன்கு காணமுடிகிறது.

     திராவிட இயக்கப் பார்வைகள் எதிர்மறையாக இருந்த காரணத்தினால் அப் பார்வைகள் மதிப்புப் பெறாமல் போயின. அதனால் அவ்வியக்கத்தின் பங்களிப்பும் பாராட்டப்படாமல் போயிற்று. இலக்கிய வரலாற்று நூல்களில் திராவிட இயக்கப் பங்களிப்பு பெரும்பாலும் சேர்க்கப்படுவதில்லை. அந்த அளவுக்கு இன்னும் மதம் நமது மனங்களில் ஆட்சிசெய்கிறது என்று காணலாம். மறைந்த சி.சு. செல்லப்பா, இன்று திறனாய்வுகள் எழுதும் ஜெயமோகன் போன்றோர் ஒரு கையசைப்பில் திராவிட இயக்கச் சார்பாளர்களைப் புறந்தள்ளிவிடும் அளவில் ஆழமற்ற எழுத்து களைக் கொண்டிருந்தது திராவிட இயக்கம்.

     திராவிட இயக்கக் கருத்துகள் பல எதிர்வினைகளை உருவாக்கின. சான்றாக, இராமாயணத்தில் வருணிக்கப்படும் அரக்கர்கள் தமிழரே என்ற கருத்து பரவலாயிற்று. இதை மறுத்து, அரக்கர் தமிழரா என்ற நூலை இரா.பி. சேதுப்பிள்ளை எழுதினார். இராவணன் பிரமனுடைய மரபில் வந்த பார்ப்பனன் என்றும், இராமன் அரச குலத்தவன் ஆனதால் சத்திரியன் என்றும் அவர் வாதிடுகிறார். இதற்கு சூர்ப்பநகை இராமனுடன் செய்யும் விவாதம் சான்றாக அமைகிறது என்கிறார். கம்பராமாயணம் பற்றிய விரிவான விவாதம் உருவாக திராவிட இயக்கம் காரணமாக அமைந்தது.

     திராவிட இயக்கத்தினர் இலக்கியத்தில் மேற்கொண்ட அணுகுமுறை மிக எளிமையானது. குறுக்கல்வாதம், எளிமைப்படுத்தல் ஆகியவை திராவிட இயக்க எழுத்துகளின் குறைகள். சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் பாராட்டுதல், காப்பியங்கள்-புராணங்களிலுள்ள கட்டுக்கதைகளின் ஒவ்வாமையையும், தீங்குகளை யும் எடுத்துரைத்தல், பாரதிதாசன், புலவர் குழந்தை, போன்ற திராவிட இயக்கக் கவிஞர்களைப் பாராட்டுதல் என்பவற்றில் அது அடங்கிவிடும். இவற்றை மீறிச் செயல் பட்டவர்கள் மிகவும் குறைவு.

     சமூகத்தில் சாதி ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள் திராவிட இயக்கத்தினர். சாதிமுறைக்கு அடிப்படை சமயமே என்பதனால், சமயம், கடவுள் போன்ற கருத்தாக்கங்களையும், இவற்றை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் என்ற முறையில் பார்ப்பனியத்தையும் எதிர்த்தனர். மூடநம்பிக்கைகளும் பார்ப்பனியக் கருத்துகளும் எந்த இலக்கியத்தில் இடம்பெற் றிருந்தாலும், எதிர்த்தனர். செல்வாக்குப் பெற்ற நூல் என்ற வகையில் கம்ப ராமாயணம் மிகுதியான தாக்குதலுக்கு உள்ளாயிற்று. பாரதியாரையும் ஒரு பார்ப்பனக் கவிஞன், வைதிகக் கவிஞன் என்று நோக்கியதால், அவரையும் புறக்கணித்தனர்.

     மதமும் மூடநம்பிக்கைகளும் ஆட்சிசெய்யும் ஒருசமூகத்தில் மதத்தைத் தோலுரித் துக்காட்டினர் என்பது முதன்மையாக திராவிட இயக்கம் செய்த நன்மை. பலசமயங்களில் சமூகவியல், மானிடவியல் நோக்குகளில் மதத்தையும் மதம்சார்பான நூல்க ளையும் நோக்கியுள்ளனர். இவை ஆரம்ப நிலையின என்றாலும், பின்னால் பெண்ணிய, தலித்திய, வரலாற்றியத் திறனாய்வுகள் வளர்வதற்குப் பயனுள்ளவையாக இருந்தன.

     இலக்கியக்கட்டுரைகள் என்னும் கட்டுரைவகையினை மிகுதியாகக் கையாண்டவர்கள் இவர்கள். உரைநடை வளர்ச்சியிலும், பத்திரிகைத் தமிழ் வளர்ச்சியில் திராவிட இயக்கத்தினரால், பெரும்பாலும் வடமொழிகலவாத எளிய து£ய தமிழ்நடை ஒன்று பத்திரிகைகளுக்கு இசைவாக உருவாயிற்று. அதேசமயம், திராவிட இயக்கத் தினரிடம் காணப்பட்ட மிகைஉணர்ச்சிப்பாங்கு இந்த நடையைச் சிறுமை கொண்ட தாக்கியது. நாடகம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் திராவிட இயக்கத்தினரின் பங்கினைக் குறைத்து மதிப்பிடஇயலாது. திராவிடஇயக்கத்தினர் முன்னெடுக்கவில்லை என்றால் பம்மல் சம்பந்தமுதலியாரின் நாடகங்களோடு தமிழ்நாடக வளர்ச்சி நின்று போயிருக்கக்கூடும்.

     புலவர்கள், தமிழாசிரியர்களிடம் திராவிட இயக்கத்தின் தாக்கம் மிகுதியாகக் காணப்பட்டது. தமிழ் ஆய்வில், ஏற்புநிலையில் சில இருமைஎதிர்வுகளை திராவிட இயக்கம் உருவாக்கியது. பதிப்புத்துறையில் சி.வை.தாமோதரம் பிள்ளை X உ.வே.சாமி நாதையர் என்ற இருமை செயல்பட்டது. சங்கஇலக்கியம் X கம்பராமாயணம், பாரதிதாசன் X பாரதியார் என்ற விதமாக எதிர்முனைகள் முக்கியமாகச் செயல்பட்டன. திராவிட இயக்கம் சார்ந்தோர், சமூகப் பார்வை நோக்கில் பாரதியைப் புறக்கணித்து, பாரதிதாசனை உயர்த்திப் பிடித்தனர். மார்க்சிய முற்போக்கு அணியினர், பாரதியை அவருடைய முற்போக்குப் பார்வைகளுக்காகவும், தேசிய நோக்குக்காகவும் பாராட்டினர். குறுகிய இன, மொழிப் பார்வையில் இலக்கியம் படைத்தவர் என்று பாரதிதாசனைப் புறக்கணித்தனர். பாரதிதாசன் மறைவுக்குப் பின்னர், 1970 அளவில் இம்முரண் பாடுகள் மறைந்தன. எனினும் இன்றும் தனித்தமிழாளர்களால், தமிழ்ப் பற்றாளர் களால் பாரதிதாசனே பாரதியைவிடச் சிறந்த கவிஞர் என மதிக்கப்படுகிறார். இரச னையாளர்களால் பாரதி உயர்ந்தவர் என மதிப்பிடப்படுகிறார்.

     பல்கலைக்கழகங்களில் மிகமுக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திய பேராசிரியர்கள் மு. வரதராசனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகிய இருவரும். இவர்கள் பொதுநோக்கில் திறனாய்வு செய்வதுபோல் தோன்றினாலும், இருவருடைய நூல் தேர்வு என்பதன் வாயிலாகடச் சார்புகள் வெளிப்படுவதைக் காணலாம். சான்றாக, மு.வ., ஒருபோதும் கம்பராமாயணம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டதில்லை. (அதேசமயம் நேரடியாகக் குறைகண்டதும் இல்லை. தனிப்பட்ட முறையில் பாராட் டியும் இருக்கிறார்.)

     தெ.பொ.மீ.யும் கம்ப ராமாயணத்தைப் புறக்கணிக்கவில்லை. என்றாலும் சிலப்பதிகார ஆய்வில் ஈடுபட்டது போன்று விரிவாக அதில் ஆய்வில் இறங்கவில்லை. சங்கஇலக்கியச் சார்பானவர்கள், கம்பராமாயணச் சார்பானவர்கள் என்ற பிரிவுகள் கல்வியாளர்களிடையே இன்றுவரை காணக்கிடப்பதற்கு இந்நோக்கு காரணமாகிவிட்டது. திராவிடக் கருத்துகளை மறைமலையடிகள் போன்ற சைவர்கள் ஓரளவு ஏற்ற துண்டு. இவர்களிடமும் தேவாரம் X திவ்யபிரபந்தம் என்ற எதிர்நிலை செயல்பட்டது. இந்த மரபும் இன்றுவரை ஆய்வாளர்களிடம் தொடர்கிறது.

     பொதுவாக, திராவிட இயக்க ஆராய்ச்சியாளர்களிடம் நாம் காணக்கூடிய குறைகள் பல உள்ளன. இயங்கியல் முறையில் அவர்கள் ஆய்வு செய்யவில்லை. மதம் என்பதை ஓர் அழிவுச் சக்தியாகவும் மூடநம்பிக்கையாகவும் மட்டுமே கண்டனர். சிற்சில கருத்துபேதங்கள் இருந்தாலும், தமிழ் இலக்கியம் பற்றி அவர்களுடைய கருத்துகள் ஒரே மாதிரியாகக் காணப்படுகின்றன. உள்ளடக்கத்தை நோக்குதல் மட்டு மே அவர்களிடம் உள்ளது. உருவஆய்வில் அறவே ஈடுபடவில்லை. உள்ளடக்கத்திலும் அறநோக்கத்தை முதன்மைப்படுத்திக் காணும் நோக்கு உள்ளது.

     கொச்சையான மார்க்சியப் பார்வை, இலக்கியத்தை வர்க்க அரசியலாக மட்டும் நோக்கியதை ஒத்த ஒரு பார்வையே திராவிடப் பார்வையும். திராவிட இயக்கத்தில் சாதிய அரசியலின் இடமும் மார்க்சிய இயக்கத்தில் வர்க்க அரசியலின் இடமும் ஏறத் தாழ ஒரேமாதிரியானவை.

     திராவிட இயக்கம் சார்நத ஆய்வுகள், எதிர்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாலும், உள்ளடக்கத்தை முதன்மைப்படுத்தியதாலும், திறனாய்வுக்கான சிறந்த நிலையை எட்ட முடியவில்லை. நேர்முகமாக எழுந்த திறனாய்வுகளும் வெறும் பாராட்டுகள் என்ற அளவில் நிற்கக்கூடியவையே. எனினும் அதனால் தனித் தமிழ்க் கொள்கை வலுப்பெற்று, து£ய தனித் தமிழ்ப் பண்பாட்டையும், மொழியையும் பிரதி பலிப்பவை என்ற நிலையில் சங்க இலக்கிய ரசனை வளர்ச்சி பெற்றது.

     1960-70 காலப்பகுதியிலேயே பகுத்தறிவாளர் திறனாய்வு பாரதிதாசன் நூல்களின் திறனாய்வு என்ற நிலைக்கு ஒடுங்கிவிட்டது. பிற கவிஞர்கள், எழுத்தாளர்கள் மதிப்பிடப்பட்டது மிகவும் குறைவு. 1970-80 காலப்பகுதியிலும் இந்நிலையே நீடித்தது. 1971இல் பல இதழ்கள் பாரதிதாசன் நினைவு சிறப்பு மலர்கள் வெளியிட்டன. 1980-2000 காலப்பகுதியில் தனித்த திராவிட இயக்கத் திறனாய்வு என்பதை வே. ஆனை முத்துவும் அவருடைய கருத்தியலோடு தொடர்புடைய ஒரு சிலரும் மட்டுமே செய்து வந்தனர். மற்றப்படி திராவிட இயக்கத் திறனாய்வு என்பது இல்லாமற்போய், அதன் கொள்கைகளை மார்க்சிய இயக்கத்துடன் சேர்த்துப் பார்க்கும் நிலை உருவாயிற்று. மூடநம்பிக்கை சார்ந்தனவற்றை எதிர்க்கும் பகுத்தறிவுத் திறனாய்வு கைவிடப்பட்டு, சாதி பற்றிய, பெண் அடிமைத்தனம் பற்றிய பெரியாரின் கொள்கைகள் மட்டும் ஏற்கப்பட்டு, பெரியாரியம் என்று நோக்கப்படும் நிலை உருவாயிற்று.

     திராவிட இயக்கத்தின் எழுத்தும் பேச்சும் எல்லாநிலையிலும் மக்களைச் சிந்திக்க வைத்துள்ளன. ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பெரும்பாலானோர் நேரடியாக இயக்கப்பணி ஆற்றாவிடினும் இயக்கத்தாக்கம் பெற்று அதனைத் தம் எழுத்தில் காட்டியுள்ளனர். வெளி அரசியலில் மட்டுமன்றி, மக்கள் உள்ளத்திலும் மிக நுட்பமான நிலையில் திராவிட இயக்கத் தாக்கம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது.

     திராவிட இயக்கத் தாக்கம் பெற்ற பேராசிரியர்கள் 1960-90 காலப்பகுதியில் மிகுதியாகப் பல்கலைக்கழகங்களிலும் கல்லு£ரிகளிலும் பணியாற்றிவந்தனர். முதல் தலைமுறையைச்சேர்ந்த சி. இலக்குவனார் முதலாக, க. த. திருநாவுக்கரசு, இரா. தண்டாயுதம், பொன். கோதண்டராமன் போன்றவர் வழியாக, எழில் முதல்வன், தா.வே. வீராசாமி, மெ. சுந்தரம் எனப் பலரைப்பட்டியலிடஇயலும். தமது இளமைப் பருவத்தில் திராவிட இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டுப் பிறகு தமிழ் படித்துப் பேராசிரி யர்களாகவும் ஆசிரியர்களாகவும் ஆன அனைவரும் இப்பட்டியலில் வருவர். ஆனால் இவர்களது திறனாய்வுமுறை கல்வித்துறைசார் திறனாய்வாகும்.

     வானம்பாடி இயக்கத்தினராக-மார்க்சியச் சார்பானவர்களாக வெளிப்பட்ட கவிஞர்களும் திராவிட இயக்கத் தாக்கம் பெற்றவர்களே. அவர்களது கவிதைகளில் எல்லாம் திராவிட இயக்கச் சிந்தனைகள் வெளிப்படுவதைக் காணலாம். சான்றாக அப்துல் ரகுமான், முடியரசன், மீரா, புவியரசு, சிற்பி, மேத்தா, தமிழன்பன் போன்றோ ரைக் குறிப்பிட முடியும். தலித் இயக்கங்களின் பேச்சும் எழுத்தும்கூட திராவிட இயக்கத்தின் தாக்கம் பெற்ற ஒன்றாகப் பலசமயங்களில் அமைந்துள்ளது.

     அறுபதுகளின் இறுதிக்குள் திராவிட இயக்கத்தின் கருத்துகள் பின்பற்றுவோர் இன்றி வெறும் முழக்கங்களாக எஞ்சி இற்றுப்போயின. பொதுவாக, அமைப்பியம் முதலான இயக்கங்கள் தோன்றியதிலிருந்து ஆசிரியன் இறந்துபோனான், ஆசிரியனுக் கும் நூலுக்கும் தொடர்பில்லை போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கோஷங்கள் ஒருவகையில் உண்மையானதை திராவிட இயக்கம் காட்டுகிறது. தமிழ் நாட்டில் அதீதமான பிம்பங்களின் கலாச்சாரத்தினை உருவாக்கியதும் திராவிட இயக்கமே. பெரியார் ஒருவரைத் தவிர, திராவிட இயக்கச் சார்பான கொள்கைகளை உருவாக்கியவர்கள், அவற்றைப் பரப்புவதற்கான நூல்கள் எழுதியவர்கள், அவற்றைப் பின்பற்றுவதில் சற்றும் அக்கறை காட்டவில்லை. ஆகவே ஆசிரியன் வேறு, நூல்கள் வேறு என்பது உண்மையாகிவிட்டது. திராவிட இயக்க நூல்களைப் பொறுத்தவரை ஆசிரியன் இறந்து போனான் என்பது முற்றிலும் உண்மை. தாங்கள் கூறியவற்றைத் தாங்களே நம்பாதவர்களை-தங்கள் வாழ்க்கை வேறு, தங்கள் கொள்கை வேறு என்று ஆனவர்களை, வேறு என்ன பெயர் சொல்லி அழைப்பது?


திருக்குறளின் முதல் அதிகாரம்

thirukkural-1
உலகப்பொதுமறை என்று பாராட்டப்படுகின்ற ஒரு தலையாய இலக்கியம், திருக்குறள். திருக்குறளின் பகுப்புமுறை, அதிகாரங்களுக்குத் தலைப்புத் தந்துள்ள முறை போன்றவை யாரால் எப்பொழுது செய்யப்பட்டவை என்பதெல்லாம் சரிவரத் தெளிவாகவில்லை. இப்பொழுது நாம் காணும் அதிகாரப் பகுப்பு, அதிகாரத் தலைப்புகள், இயல் பகுப்பு போன்றவை எல்லாம் திருவள்ளுவரே செய்ததாகத் தோன்றவில்லை. சான்றாக, திருக்குறளின் முதல் நான்கு இயல்களைப் பாயிரம் என்று பகுத்துள்ளனர் சில ஆசிரியர்கள். பரிமேலழகர் போன்ற செல்வாக்குள்ள உரையா சிரியரும் இதனை ஏற்றுக் கடைப்பிடிப்பதால் இது பெரும்பாலும் ஏற்கக்கூடிய கருத்தாகி விட்டது. இப்பகுப்பு சரியானது என நிறுவப்படவில்லை. இயல்பகுப்பு உரையாசிரியருக்கு உரையாசிரியர் மாறுபடுகிறது. அதிகாரத்தலைப்புகளும் அவ்வாறே. மணக்குடவர் மக்கட்பேறு எனக்கூறும் அதிகாரத்தைக் காலத்தால் பிற்பட்டவராகிய பரிமேலழகர் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்.
இவற்றையெல்லாம் இங்கு நினைவுகூறக் காரணம், திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதன் தலைப்பே பொருத்தமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்டத்தான். பொதுவாக, திருக்குறளில், அதிகாரத் தலைப்பாக அமைந்த சொல், பெரும்பாலும் அந்த அதிகாரத்திலுள்ள ஓரிரு குறட்பாக்களிலேனும் இடம் பெறுவது வழக்கம். இதற்கு மிகச்சில விதிவிலக்குகளே உண்டு. அந்த விதிவிலக்குகளில் ஒன்று, கடவுள் வாழ்த்து. கடவுள் என்ற சொல்லோ, வாழ்த்து என்ற சொல்லோ கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எங்கும் இடம்பெறவேயில்லை.
இந்தச் சொற்களை முக்கியமாக ஆராய்வதற்குக் காரணம் உண்டு. ஏனென்றால் கடவுள் என்ற கருத்தும், வாழ்த்துதல் என்ற கருத்தும் திருவள்ளுவருக்கு உடன் பாடானவை என்று தோன்றவில்லை. இன்று இறைவன், தெய்வம், கடவுள் என்ற மூன்று சொற்களும் ஏறத்தாழ ஒரே அர்த்தத்தில் கையாளப்படுகின்றன. ஆனால் திருவள்ளுவருடைய ஆளுகையில் இம்மூன்று சொற்களுக்கும் பொருள் வேறு. கடவுள் என்ற சொல்லை அவர் திருக்குறளில் கையாளவே இல்லை. கட+உள் என்று இச்சொல்லைப் பிரித்து நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று நமக்கு உள்ளும் நம்மைக் கடந்தும்(அப்பாலும்) இருக்கிறது என்று இச்சொல்லுக்குப் பொருள் கூறுவர். அல்லது கடவுதல் (இயக்குதல், செலுத்துதல்) என்ற சொல் அடியாகப் பிறந்தது இச் சொல் என்ற கருத்தும் உண்டு. உயிர்களுக்கெல்லாம் அப்பால் நின்று ஒரு சக்தி அவற்றைக் கடவுகின்றது என்ற கருத்து இதில் இருக்கிறது. இப்படிப்பட்ட, உயிர்களுக்கும் மனிதருக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியில்(transcendent force) திருவள்ளுவருக்கு நம்பிக்கை இல்லாததனால்தான் அவர் இச்சொல்லைத் தமது நூலில் எங்குமே பயன்படுத்தவில்லை என்று கருதமுடியும்.

thirukkural-3

பழங்காலத்தில் வைதிக சமயத்தினர் தமக்கு அப்பாற்பட்ட சக்தியான கடவுள் ஒன்றில் நம்பிக்கைகொண்டவர்கள். வைதிகசமயத்தினர்க்கு மாறான சார்வாகர், சாங் கியர், பௌத்தர், சமணர் போன்ற மரபுகளைச் சார்ந்தவர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கை அற்றவர்கள். திருக்குறளை ஆழ்ந்து நோக்கும்போது திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கக்கூடும் என்பதை நாம் உணரமுடியும்.
இறைவன்-தெய்வம் என்ற சொற்கள் கடவுள் என்ற கருத்துக்கு மாறானவை. தேவன் அல்லது தேவ என்ற சொல்தான் தெய்வம் என்ற வடிவத்தில் தமிழில் வழங்குகிறது. இச்சொல்லுக்கு மனிதனைவிட உயர்உலகம் ஒன்றில் வாழும் (மனிதனைவிட அதிகமான, ஆனால் எல்லைக்குட்பட்ட சக்தியுடைய) உயர்பிறவிகள் என்பது அர்த்தம். வள்ளுவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று சொல்கிறார். மனிதர்கள் தங்கள் நிலையில் உயரும்போது தெய்வம் ஆகிறார்கள்.
இறை என்ற சொல் ஆதி என்ற சொல்லுக்கு எதிரானது. மனிதனால் ஆதி (யாவற்றிற்கும் முற்பட்ட நிலை)யையும் சிந்திக்க முடிவதில்லை, அந்தம் (இறை, இறுதி) என்ற நிலையையும் சிந்திக்க முடிவதில்லை. இறைவன் என்ற சொல்லை அரசன் என்ற அர்த்தத்தில்தான் வள்ளுவர் மிகுதியும் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால், மனிதர்களுக்குள் இறுதியான தலைமைநிலையில் இருப்பவன் அரசன்தான். இறு (வேர்ச்சொல் ‘இற்’) என்ற சொல்லிலிருந்துதான் இறையன், இறைவன், இறுதி, இற்றுப் போதல், இறுத்தல், இறப்பு போன்ற சொற்கள் உருவாகின்றன. இறத்தல் என்பதற்கு ஒரு எல்லையைக் (இங்கே மனித வாழ்க்கை எல்லை) கடந்து செல்லுதல் என்று பொருள். எனவே இறைவன் என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லன்று.
கடவுள் என்ற சொல் திருக்குறளில் எங்கும் இடம்பெறவேயில்லை என்ப தையும், காரணம் அது நமக்கு அப்பாற்பட்ட அதீத சக்தியைக் குறிக்கின்ற ஒன்று என்பதையும் முன்பே கூறினோம். கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவனைக் குறிப்பதாக இடம் பெறும் சொற்கள் அனைத்தும் மனிதநிலையிலிருந்து உயர்ந்த சான்றோர்களைக் (இவர்களை நாம் சமண முன்னோரான துறவிகளாகக் கொள்ள வாய்ப்பு உண்டு) குறிப்பவைதான்.
மனிதநிலைக்கு அப்பாற்பட்ட ஒரு கடவுளைக் கருத்தில் ஏற்றுக்கொள்ளாததால் திருவள்ளுவருக்கு அத்தகைய கடவுளை வாழ்த்துவது என்ற எண்ணமும் தோன்றவில்லை. திருக்குறள் கடவுள் வாழ்த்தின் பத்துச் செய்யுட்களையும் நன்கு கவனித்துப் பாருங்கள் – எந்தச் செய்யுளாவது, கடவுளை வாழ்த்துவதாக அமைந் துள்ளதா? எல்லாச் செய்யுட்களுமே – பத்துக்குறட்பாக்களுமே உயர்ந்த மானிடர்களின் பத்து இயல்புகளைக் குறிப்பிடுவனவாகத்தான் அமைந்துள்ளன. நம் சிந்தனையையும் மனத்தையும் கடந்த ஒன்றிற்கு இயல்புகளைச் சொல்வது எப்படி?
முதல் குறட்பாவைப் பார்ப்போம். அகரமுதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு என்பது குறள். இது சொல்வது என்ன? எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டிருப்பதுபோல, இந்த உலகம் ஆதிபகவனை முதலாகக் கொண்டிருக்கிறது என்பதுதானே? இதில் உள்ள இரு பகுதிகளும் நாம் கவனிக்க வேண்டியவை.
ஒன்று, எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாக உடையவை.
இரண்டு, (அதுபோல) உலகம் ஆதிபகவனை முதலாக உடையது.
முதல் பகுதியைக் கவனிப்போம். எழுத்துகள் அகரத்தை முதலாக உடையன என்றால் என்ன? இறைவன் உயிர்களை ஆக்குவது போல, எல்லா எழுத்துகளையும் (உயிர், மெய்) அகரம் ஆக்குகிறது, படைக்கிறது என்றா அர்த்தம்? முதல் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. மண்ணிலிருந்து குடம் ஆகிறது என்றால் மண் காரண முதல் என்போம். குயவனால் குடம் ஆகியது என்றால் குயவனைக் கர்த்தா முதல் என்போம். இந்த அர்த்தங்கள் எதுவும் இங்கு இல்லை.
பெரும்பாலான மொழிகளில் அகரம் முதல் எழுத்து. பிறகு மற்ற எழுத்துகளின் வரிசை தொடர்கிறது. ஒரு கியூ வரிசையில் முதலில் நிற்கும் ஆள், கியூவை உண்டாக்குபவரா? அதாவது காரணமுதலா? கர்த்தா முதலா? இரண்டும் அல்ல, அவர் வரிசை முதல். அவ்வளவுதான். அதுபோல எழுத்துகள் வரிசையில் அகரம் முதன்மையாக நிற்கிறது. வரிசை முதல். அதுபோல உயிர்களின் வரிசையில் ஆதிபகவன் முதலில் நிற்கிறார். அவ்வளவுதான். ஆதி என்றசொல்லும் குணங்களில் முதன்மையானவர் என்பதைத்தான் குறிக்கிறது.

thirukkural-2

இரண்டாவது, பகவன் என்ற சொல்லைப் பார்ப்போம். இது பகவான் என்ற வட சொல் அடிப்படையிலானது அல்ல. தமிழில் முற்றும் துறந்த முனிவர்களை-மனிதர்களை பகவன் என்று கூறினார்கள். கலித்தொகையில் ஒரு செவிலித்தாய் தலைவனுடன் போய் விட்ட தன் மகளைத் தேடிவருகிறாள். அவளுக்கு முக்கோல் பகவர்கள் (அதாவது திரிதண்டம் என்னும் கோலை உடைய பகவர்கள் சிலர்) ஆறுதல் சொல்கிறார்கள். இங்கு முக்கோல் பகவன் என்ற சொல்லுக்கு கடவுள், பகவான் என்றா அர்த்தம்? முனிவன் என்பதுதான் பொருள். அதே பொருளில் – அதாவது முற்றும் துறந்த முனிவன் என்ற பொருளில்தான் பகவன் என்ற சொல்லை இங்கும் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். ஆனால் இவர் நீண்ட காலத்துக்கு முன்னாலிருந் தவர் (ஒருவேளை அருகதேவராக இருக்கலாம்). அதனால் ஆதி பகவன்.
எனவே இந்த முதற்குறள் கூறுவது என்ன? மனித வரிசையிலே குணங்களால் உயர்ந்த, காலவரிசையில் முற்பட்ட ஒரு முனிவர் – ஆதி பகவன் – அவரை உதாரணமாகக் கொண்டது இவ்வுலகு என்பதுதான்.
இனி வரும் குறட்பாக்களும் அந்த ஆதி பகவனின் – அதாவது மனிதராக இருந்து உயர்ந்த நிலை அடைந்த – வள்ளுவர் வாக்கில், தெய்வநிலை அடைந்தவர் களின் பண்புகளைப் பற்றித்தான் பேசுகின்றன. இரண்டாவது குறட்பாவில் ‘வால் அறிவன்’ என்கிறார். அதாவது  தூய்மையான அறிவுடையவன். மூன்றாவது குறட்பா இன்னும் தெளிவானது. மலர்மிசை ஏகினான். இது புலனறிவைக் கடந்த கடவுளைக் குறிக்கும் சொல்லே அன்று என்பது மிக வெளிப்படை. மலரின்மீது நடந்தவன். இங்கு மலர் என்பது உருவகமாக பூமியைக் குறிக்கிறது. (மலர் தலை உலகம் என்று வருணிப்பதை நோக்குக). எனவே இந்தப் பூமியின்மீது வாழ்ந்த ஒரு தெய்வப் பண்புடைய ஒருவன் என்பது இச்சொல்லின் பொருள்.
அடுத்த குறள் வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறது. அதாவது அந்த நிலைகளைக் கடந்தவன். அதற்கடுத்த குறளில் இறைவன் என்றசொல் வருகிறது. அதாவது நாம் அடையவேண்டிய இறுதிநிலையாக இருப்பவன், அல்லது அந்த இறுதிநிலையை அடைந்தவன். பத்தாம் குறளும் இறைவன் என்ற சொல்லையே பயன்படுத்துகிறது. (இறைவன் அடி சேராதார், பிறவிப்பெருங்கடல் நீந்தார்).
அடுத்த குறள் இன்னும் தெளிவானது. பொறிவாயில் ஐந்து அவித்தான். எல்லாவற்றையும் கடந்த கடவுளுக்குப் பொறிவாயில்கள் (அதாவது புலன்நுகர்ச்சி உறுப்புகள் – கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) என்பன ஏது? இப்பொறிவாயில்கள் ஒருவனுக்கு உண்டு, அவற்றை அவித்தவன் (கட்டுப்படுத்தியவன்) என்றாலே கடவுள் என்ற அர்த்தமா வருகிறது? எந்தக் கடவுளும் புலன்களை அவிக்கத் தேவையில்லை. சாதாரண மனிதநிலையில் இருந்து, புலனுணர்வுகளைக் கட்டுப்படுத்தி, தெய்வ நிலையை அடைந்த சான்றோன் என்னும் பொருள் அல்லவா இந்தச் சொல்லுக்கு வருகிறது? அப்படிப்பட்ட சான்றோனுடைய பொய்தீர் ஒழுக்கநெறியில் நின்றவர்கள் நீடுவாழ்வார் என்பதில் கடவுளுக்கு எங்கே இடம்?
அடுத்த குறளில் வரும் சொல் தனக்குவமை இல்லாதான். பொறிவாயில் அவித்த ஒருவனுக்கு உலகிலுள்ள சுகபோகங்களில் ஈடுபட்ட யாரை அல்லது எதை உவமை சொல்ல முடியும்? அடுத்த சொல் அறவாழி அந்தணன் அறக்கடலாக விளங்குகின்ற அந்தணன். அந்தணன் என்பது பார்ப்பனச் சாதியைக் குறிக்கும் சொல் அல்ல. அந்தணர் என்போர் அறவோர் – திருவள்ளுவரைப் பொறுத்தமட்டில். அறவோனாக இருப்பவன் அந்தணன். அறக்கடலாகவே விளங்கும் முதன்மையான அந்தணன் இந்த பகவன்.
ஒன்பதாம் திருக்குறள் மிகமிக முக்கியமானது. ஏனென்றால் இதுவரை இறைவனுடைய பண்புகளாகக் குறிப்பிட்டவற்றைத் தொகுத்துரைக்கிறது. கோளில் பொறியில் குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. எண்குணத்தான் என்ற சொல்லுக்கு நம் மனங்களில் எண்ணப்படுகின்ற நல்ல குணங்களையெல்லாம் உடையவன் என்று சமத்காரமாகப் பொருள்சொல்லலாம். எட்டு குணங்களை உடையவன் என்பதும் பொருள். அதாவது, இதற்கு முன்னுள்ள எட்டுகுறட்பாக்களில் சொல்லப்பட்ட எட்டு குணங்களையும் உடையவன். அதனால் தான் பத்தாம் குறளில் வேறு எந்தப் பண்பையும் புதிதாகச் சேர்க்காமல், ஐந்தாம் குறட்பாவில் ஆண்ட இறைவன் என்ற சொல்லையே திரும்பவும் பயன்படுத்தி விடுகிறார்.
இக்காலத்தில் தமிழ் இலக்கியம் படிப்போர் சொற்களுக்கு இக்காலப் பொருளையே கொண்டுவிடுகின்றனர் என்பது ஒரு குறைதான். அது சிலவித இலக்கிய ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடியதே என்றாலும், மிகப் பழங்கால இலக்கியங்களைப் படிக்கும்போது ஒரு சொல்லைக் கண்டால் அது அக்காலத்தில் எப்பொருளில் பயன்பட்டிருக்கும் என்று ஓரளவேனும் ஆராய்ந்தே பொருள்கொள்ளவேண்டும். அவ்வாறில்லாவிட்டால் குழப்பம்தான் ஏற்படும். பரிமேலழகர் போன்ற உரையாசிரி யர்களிடம் உள்ள குறைபாடு, அவர்கள் அவ்வக்காலத்திற்கேற்ற பொருளைக் கொண்டமையே ஆகும். அதனால் சமணசமயம் மேலோங்கியிருந்த – நீதி இலக்கிய காலத்தில், அறச்சிந்தனைக் காலத்தில் இயற்றப்பட்ட திருக்குறளுக்குச் சைவசித்தாந்த, வைணவசித்தாந்தப் பொருள் கூறி இடர்ப்பட்டனர். சான்றாக எண் குணத்தான் என்றசொல்லுக்குச் சைவம் என்ன அர்த்தங்களைத் தருகிறது, வைணவம் என்ன அர்த்தங்களைத் தருகிறது என்றெல்லாம் குறித்துள்ளனர். மாறாக, சமணசமயத்தில் எண்குணம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று நோக்கினால் பொருத்தமாக இருக்கும்.
எனவே திருவள்ளுவர் பாடிய கடவுள் வாழ்த்து கடவுளைப் பற்றியதும் அல்ல, அது வாழ்த்தாக அமைந்ததும் அல்ல என்று சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாம்.


அப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)

640px-SatyajitRay

அப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க இயலாது. அவருடைய முதல் திரைப்படம் பதேர் பாஞ்சாலி 1955இல் வெளிவந்தது. தொடர்ந்து அபராஜிதா என்ற படம் 1956இலும், அப்பு சம்சார் என்ற படம் 1959இலும் வெளிவந்தன. இந்த மூன்று படங்கள்தான் அப்பு மூவரிசை (அப்பு டிரைலஜி) என்று அழைக்கப்படுகின்றன. மூன்றிலும் கதாநாயகன் ஒருவனே-அபூர்வகுமார் ராய், சுருக்க மாக அப்பு.
1975இல் திருச்சியில் பணிக்குச் சென்ற நான், அங்கே உள்ள சினிஃபோரம் என்ற திரைப்படக் கழகத்தில் 1978இல் சேர்ந்தேன். அங்கே முதன்முதலாக நான் பார்க்க வாய்ப்புக் கிடைத்த படங்களில் ஒன்று பதேர் பாஞ்சாலி. பிறகு இரண்டு மூன்றாண்டுகளுக்குள் திரைப்பட விழாக்களில் பிற இரண்டு படங்களையும் பார்த்துவிட்டேன். பதேர் பாஞ்சாலியின் கதையைச் சுருக்கமாகச் சொன்னால், ஹரிஹர் என்ற வங்காளி பிராமணனின் கதை. அவனுக்கு இரண்டு குழந்தைகள்- அப்பு, துர்க்கா. இந்த இரண்டு குழந்தைகளையும் சத்யஜித் ராய் படைத்திருக்கும் விதம் மனதை உலுக்கும். எத்தனையோ காட்சிகள் ஓவியம் போல நினைவில் நிற்கின்றன. உதாரணமாக மழைக்காட்சி, இரயிலைப் பிள்ளைகள் ஓடிச் சென்று பார்க்கும் காட்சி என.
ஒரு விஷயம்-இந்த மூன்று படங்களையுமே சத்யஜித் ராய், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயில் எடுத்தார் என்கிறார்கள். பதேர் பாஞ்சாலிக்கு ஆன செலவு ஏறத்தாழ முப்பதாயிரம் ரூபாய் மட்டுமே. இன்றைக்கு நூறு மடங்கு விலைவாசி உயர்ந்திருப்பதாக வைத்துக்கொண்டாலும் இன்று முப்பது லட்சம் ரூபாயில் ஒரு திரைப்படம் எடுப்பதற்குச் சமம் இது. நம் தமிழ்த் திரைப்படக் காரர்கள் ஒரு காட்சிக்கு ஒருகோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தாலும் இந்தப் படம்போல ஒரு காவியத்தை உருவாக்க முடியவில்லை.
அபராஜிதா என்றால் வெல்லமுடியாதவன் என்று அர்த்தம். இது அடுத்த திரைப்படம். முன் கதையில் பிழைப்புக்காக வாரணாசிக்குச் சென்ற குடும்பம் மறுபடியும் வங்காள கிராமத்திற்கே திரும்பிவருகிறது. எப்படியோ அப்பு நன்றாகப் படித்து முன்னேறுகிறான். அவன் தாய் இறந்துவிடுகிறாள்.
மூன்றாவது திரைப்படம், அப்பு சம்சார் (அப்புவின் திருமணபந்தம்). தொடர்ந்து அப்பு ஓர் எழுத்தாளனாக முயலுவதையும், ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிவருவதையும், குழந்தைப் பேற்றின்போது அவள் இறந்துவிடுவதையும், துறவுமனப்பான்மையோடு குழந்தையை விட்டுச் செல்லும் அப்பு, பின்னர் திரும்பிவந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதையும் காட்டுகிறது.
உலகின் சிறந்த கலைத்திரைப்படங்களின் வரிசையில் இடம்பெறும் இந்தப்படங்கள், திரைப்படக் கல்லூரிகளில் பயில்பவர்களுக்குப் பாடங்களாகவும் வைக்கப்படுகின்றன.
மூன்று படங்களையும் பார்க்கமுடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பதேர் பாஞ் சாலியை மட்டுமாவது பாருங்கள். அரியதோர் வாய்ப்பு என்றே அதனை நான் நினைக்கிறேன். (ஒரு குறிப்பு-சத்யஜித் ராய், ஒரு திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல, நல்ல சிறுகதை எழுத்தாளரும்கூட. அதைப் பற்றி இன்னொரு சமயம்.)

 


மொழிபெயர்த்த நூல்கள்

20050311002109802
1. குழந்தையின் வாழ்க்கையில் முதல் 365 நாட்கள்
2. மனித உரிமைகள் பற்றிய ஐ.நா. அறிக்கை
3. சிறார் உரிமை பற்றிய ஐ.நா. அறிக்கை
இவை மூன்று நூல்களும் தொடக்கத்தில் (1980களில்) தன்னார்வாக் குழுக்களின் பயன்பாட்டிற்கெனச் செய்யப்பட்டவை.

1. விஷன்ஸ் கையேடு-மனித உரிமைகளும் குடியுரிமையும்
2. விஷன்ஸ் கையேடு-உள்ளூர் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள்
இவையும் தன்னார்வக் குழுக்களுக்கெனச் செய்யப்பட்டவையே. இவை இப்போது அடையாளம் பதிப்பகத்தில் கிடைக்கும்.

1. உலகமயமாக்கல்
2. நீட்சே
3. இறையியல்
4. பயங்கரவாதம்
5. சமூகவியல்
6. இசை
இவை யாவும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்த மிகச்சுருக்கமான அறிமுகம் என்ற வகையைச் சேர்ந்தவை. அடையாளம் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டவை.)

1. சிறைப்பட்ட கற்பனை (வரவர ராவ்)
2. பொறுப்புமிக்க மனிதர்கள் (மனு ஜோசப்)
3. நள்ளிரவின் குழந்தைகள் (சல்மான் ருஷ்தீயின் மிட்நைட்ஸ் சில்ட்ரன்)
4. காந்தியைக் கொன்றவர்கள் (The men who killed Gandhiநூலின் தமிழாக்கம்)
இவை யாவும் எதிர் பதிப்பகத்தின் வெளியீட்டிற்கெனச் செய்யப்பட்டவை.

1. நொறுங்கிய குடியரசு (அருந்ததி ராயின் The Broken Republic)
2. ஊரடங்கு இரவு (பஷரத் பீர்)
இவையிரண்டும் காலச்சுவடு பதிப்பகத்திற்கெனச் செய்யப்பட்டவை.

1. டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள் (பெண்கள் மருத்துவ நூல்)
2. பேற்றுச்செவிலியர் கையேடு
இவை இரண்டும் முக்கியமான மருத்துவ நூல்கள். டாக்டர் இல்லாத இடத்தில் என்று முதன்முதலாக க்ரியா வெளியிட்ட வரிசையில் வருபவை. ஹெஸ்பீரியன் ஃபவுண்டேஷனின் நூல்கள்.

பிற மருத்துவ நூல்கள்
1. இணை மருத்துவம், மாற்றுமருத்துவம், உங்கள் உடல்நலம்
2. தலைமுடி இழப்பு-மருத்துவம்
3. மூல வியாதி
4. ஐம்பது உடல்நலக் குறிப்புகள்
5. இயற்கை ஞானம்
6. மரபணு மாற்றிய உணவுகள்

பிற நூல்கள்
1. இரண்டாம் சரபோஜி ஆட்சியின்கீழ் தஞ்சாவூர்
2. கீழையியல் தத்துவம்
3. பின்நவீனத்துவம்
4. புவி வெப்பமயமாதல்
5. நிலத்தோற்றமும் கவிதையும் (தனிநாயகம் அடிகளுடைய Landscape and Poetry)
6. மவுலானா அபுல்கலாம் ஆசாத்
மொத்தம் 32 நூல்கள். தத்துவம், வரலாறு முதல் இலக்கியம், மருத்துவம் வரை பல்வேறு வகைகளிலும் இவை உள்ளன என்பதைப் பெருமையுடன் கூறமுடியும்.